Tuesday 21 July 2015

ஓய்ந்த மெல்லிசைக்கு அஞ்சலி




                                           






மெல்லிசை மன்னனே

இன்னிசை வேந்தனே

இசையின் இமயமே

இனிய தமிழர்களின் இதயமே !

இன்னுயிரை இசைக்குள்ளே  இங்கீந்து

எவ்வுலகம் பறந்தாய்!?

படைப்பாற்றல் கொண்டு

தேனருவியாய் தெள்ளமுத

கானங்கள் தந்த உனக்கு

படைக்கின்றேன் கவி அஞ்சலி !


'மூன்று வயதில் பாடுவேனாம் '

 உதித்தது எண்ணத்தில்

 உதிர்த்த அம்மாவின்  வார்த்தைகள்

பின்னாளில் தெரிந்தேன்

பாடியதெல்லாம் உன் பாட்டன்றோ  !

இசை கேட்க விரும்பி

திசை சுற்றி திரும்பிய

கணங்கள் காலங்கள் 

கண்ணாமூச்சி  ஆடும் கண்ணுக்குள் !

எனக்குள் எழுந்த

இசை என்னும் விருட்சம்

 நீ போட்ட முதல் விதையால் !

சிறு வயது சினிமா ரசிகனாய்

பெரிய திரையில் உன் பெயர் கண்டு

கூட்டத்தோடு  கைகள் தட்டியதும்

களிப்பூட்டிய கானங்கள் கேட்டு

குதூகலத்தின் உச்சியை எட்டியதும்

கூட்டம் கூடி பாட்டுப் பாடி

உன் இசை உன் புகழ் பேசியதும்

மூடிய விழியில் வந்து போகும்

வர்ண ஜாலங்கள்!

நெஞ்சம் விட்டு நீங்காது

வேறெங்கும் போகாது

காலத்தால் தீராது

நீ கொடுத்த இனிய ராகங்கள்!

ஆயிரமாயிரம் பாடல்களை

அழியாத கோலங்களாய்

அள்ளித் தெளித்துவிட்டு

ஆறடிக்குள் அடங்கிப் போனாயே!

காலன் உடல் கொண்டு போனால் என்ன

உன் உயிர் தந்து போனானே

காவியமாய் நீ படைத்த

கானங்கள் விட்டுப்  போனானே!

ஒவ்வொரு முறை உன் ராகம்

காற்றுவெளியில் தவழும்போதும்

காதுகளில் தேனாய் தடவும்போதும்

இனி உயிர்த்தெழுந்து  நிற்பாயே!

உடலுக்குதான்  வயது எண்பத்தேழு

உயிருக்கு வயது எண்ணில்  ஏது !? 

உன் பாட்டு உன் கானம்

ஊரெல்லாம் தாலாட்டும்

உன் தூக்கம் உன் உறக்கம்

உன் பாட்டே தாலாட்டும் !









Thursday 2 July 2015

இசை ராட்சஷன் - 11 ( The Musical Legend )


                                                     

                                       

                              இளையராஜாவின் பாடல்களை இப்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்கிறார்களே , இளையராஜா இதுபோல பழைய இசை அமைப்பாளர்களின் பாடல்களை செய்ததுண்டா ?

                                  ஒரு வார பத்திரிக்கையில் ஒரு வாசகரின் கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் கீழே .

                            

       "  இளையராஜாவைப் போல சென்சிபிலான கலைஞரை காண்பது அரிது. கதைக்குத்  தேவைப்படாத எதையும்  சும்மா பரபரப்புக்காக செய்ய மாட்டார் . 1986 இல் சிவாஜி, பத்மினி ஜோடி நடித்த  படம்  ' தாய்க்கு ஒரு தாலாட்டு  ' . அந்த ஜோடியின் கடைசி டூயட்டுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அட்டகாசமான பாட்டு அது.   டி. எம். எஸ் , சுசீலா பாடியிருந்தார்கள் . இணையத்தில் கிடைத்தால் தேடி கேளுங்கள்.

                                         இந்தப் பாடலை கேட்டு முடித்ததுமே  அப்படியே ' புதிய பறவை '  படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன்  இசையில் ' உன்னை ஒன்று கேட்பேன் ' பாடலையும் கேளுங்கள். எம்.எஸ்.வி. க்கு எவ்வளவு  கௌரவமான tribute செய்திருக்கிறார் என்பதும் , இளையராஜா ஏன் மேஸ்ட்ரோ என்பதும் புரியும்.

                                            ரீமிக்ஸ் என்றால் இடையிடையே மேற்கத்திய கத்தல்களை செருகுவது மட்டுமல்ல என்கிற பாடத்தை இளையராஜாவிடமிருந்து  இன்றைய இளம் இசை அமைப்பாளார்கள் கற்றுக் கொள்ள வேண்டும். "

                                           இதை வாசித்தவுடன் எனக்கும் அது மிகச் சரியெனவே பட்டது . எத்தனையோ ஜனங்கள்  பழைய பாடல்களில், உள்ளம் உருகி உயிர் உருகி , தன்னையே மறந்து தவித்து லயித்து  ரசித்துக் கேட்டதை , அதன் ஆன்மா சிதைத்து ரீமிக்ஸ் செய்து கற்பழித்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இசையமைப்பாளர்கள்.   ரீமிக்ஸ் செய்வதில் இளையராஜாவின்  பெருமை என்னவெனில் தான் இசையமைத்த பாடல்களை தானே ரீமிக்ஸ் செய்து கொடுப்பதுதான் .  சமீபத்தில் ' மேகா '  என்ற படத்தில் 'புத்தம் புது காலை ', ஷமிதாப்  என்ற படத்தில் ' ஆசைய  காத்துல தூது விட்டு ' என்பதின் ஹிந்தி வடிவமும் எடுத்துக்காட்டுகள்.  இளையராஜாவே ஆனாலும் அந்தப்  பழைய பாடல்களில் இருந்த ஜீவன் இப்போது கொடுத்த பாடல்களில் இல்லாதது போல என் மனதில் பட்டது.  குரல்களும் இசைக் கருவிகளும் மாறியது காரணமாக இருக்கலாம் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அவரே  நமக்குச் சொன்னவர்தானே!  ' நான் கடவுள் ' படத்தில் பாடப்பட்ட 'மாதா உன் கோவிலில் ' என்ற பாடல் விதிவிலக்கு.


                                     கர்னாடக இசை புரியாத மக்கள் கூட்டம் மெல்லிசை என்ற சினிமா இசைக்கு அடிமையாகிப் போனதின் விளைவு , கர்னாடக இசை பண்ணவும் பேணவும் தெரிந்த சில மேல் தட்டு மேதைகளுக்கு எரிச்சலை மூட்டியதால் , இளையராஜாவிற்கு முந்தைய இசை அமைப்பாளர்களையும் 
இளையராஜாவையும் கீழ்மைப் படுத்தவே முனைந்தார்கள்.  பக்திக்காக மட்டுமே பயன்பட்டு வந்த கர்னாடக இசையை சினிமாவின் இசைக்குள்ளும் சிலர் புகுத்தியதை கடவுளுக்கு விரோதமாக பார்த்தார்கள். கர்னாடக இசை தனித்துவமிக்கதாகவும் மெல்லிசை சுயம் இழந்த தனித்துவமற்ற இசையாகவும் அவர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் கர்னாடக இசையே நாடோடிப் பாட்டுகளிலிருந்து திருடப்பட்டு உருமாற்றம் அடைந்ததாக பல இசை ஆய்வாளர்கள் உண்மை எடுத்தியம்புகிறார்கள்.  அது மறைக்கப்பட்டு வந்துள்ளது.


        மெல்லிசை ஒரு கலவை இசை என்பதில் ஐயமில்லை என்றாலும் , அதிலும் கர்நாடக இசையின் ராகத்தில் அமைத்து மேனாட்டு சங்கீதம் கலந்து அழகிய கலவையாக கொடுக்கப்படும்போது , மக்களுக்கு புரிந்த மொழியில் எளிய இசையாக அது போற்றப்படுகிறது.  மக்களின் மனசுக்குள் நர்த்தனமாடுகிறது. உணர்வுகளில் ஊறி கலந்து உற்சாகப்படுத்துகிறது.  இளையராஜாவின் இசை அதில் முக்கியப் பங்கெடுத்திருக்கிறது . ராகம் ஏதும் அறியாத ஜனங்கள் அவ்வளவு ரசிக்கையில் , ராகங்கள் புரிந்து தெளிந்த இசை வல்லுனர்கள் இளையராஜாவின் இசையின் அழகுகளை இன்னும் இன்னும் வியந்து ரசிக்கிறார்கள் . மேலோட்டமாக கேட்பவர்களே இன்புறும்போது  ஆழ்ந்து ரசிப்பவர்கள் பிரமிப்பதில் வியப்பில்லை. அவர்களுக்குத் தெரியும் ....'அவர்' யார் என்று?      

                                       உதாரணத்திற்கு ஒரு காணொளியில் , ஒரு இசைக் கலைஞர் ஒருவர்  ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த மொசார்ட் இசை வல்லுனரின் சிம்பொனி இசையிலிருந்து ஒரு பகுதியை வயலினில் வாசிக்க எல்லோரும் ரசிப்பதும் ,  வாசித்துக்கொண்டே அந்த சிம்போனியை அகத்தூண்டலாக எடுத்து இளையராஜா இசைத்திருக்கும் ஒரு பாடலை விடாமல் தொடர ,   அங்குள்ள எல்லோரும் அதைவிட உற்சாகமடைவதும் , மீண்டும் அவர் அந்த சிம்பொனிக்கு வருவதும் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.  இது இளையராஜாவின் படைப்பாற்றலுக்கு சரியான சான்று என்று எடுத்துக் கொள்ளலாம்.
                 
                                                   


                 'ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை ' என்று அவரே எழுதி இசையமைத்துப் பாடியது இங்கு நிரூபணமாகிறது.  ' ஏற்கனவே எங்கெங்கோ இருப்பதைத்தான் நான் மீண்டும் படைக்கிறேன். புதிதாய் இசைக்க ஒன்றுமில்லை '  என சொல்லாமல் சொல்கிறார் இளையராஜா.  ஆனால் நமக்கோ அவரின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொன்றாக தனித்துத் தெரிகிறது.


                                      சரி மீண்டும் 1979 க்கு வருவோம் . ' அன்பே சங்கீதா ' என்ற படத்தில் ' கீதா...சங்கீதா.. சங்கீதமே... சௌபாக்யமே .. ஜீவ அமுதம் உன் மோகனம் .. ' என்றொரு மனசு மயக்கும் காதல் கீதம் மோகன கல்யாணி ராகத்தில் இசைக்கப்பட்டிருக்கும். ஜெயச்சந்திரனும் ஜென்சியும் இணைந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள்.   ' லால..லலலா  லால..லலலா ' என்ற ஹம்மிங்குடன் ஜென்சி ஆரம்பிக்க மௌத் ஆர்கன் சப்தத்தில் அதே மெலடி ஒலிக்க , கேட்க ஆரம்பிக்கும்போதே உடலை விட்டு மனசு பறக்கும் சுகானுபவம் தோன்றும்.   மீண்டும் ஹம்மிங் மீண்டும் இசைப் பின்னணியோடு வயலின்களில் ஆலாபனை செய்து கிடாரை வீணை போல இசைத்து,  ஜெயச்சந்திரன் 'கீ..தா...' என்று பல்லவி ஆரம்பிக்க  மனசு இன்னும் உயர பறக்கும் .

                 
                                அப்போது படம் பார்க்கவில்லை. தயவு செய்து பார்த்து விடாதே என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு வாரம்தான் தியேட்டரில் ஓடியது. பாட்டு மட்டும் காதுகளில் அடிக்கடி ஒலித்தது. பாடல் கேட்கும்போதெல்லாம் மனசு கிடந்து தவிக்கும்.  இளையராஜாவின் பாட்டுக்காக  படம் பார்ப்போமா என்று நினைப்பேன் . அப்படி நிறைய படங்கள் பார்த்ததில் நொந்து போக வேண்டி வந்தது. இளையராஜாவின் சில பாடல்களுக்காக  படம் முழுவதும் உட்கார வேண்டியிருக்கும் . பாட்டு ரசிக்கலாம் ; படம் ரசிக்க முடியாது.  இளையராஜா அற்புதமாய் இசைக் கோர்வை செய்திருக்கும் இடங்களில் எல்லாம் படம் பிடித்திருக்கும் லட்சணம் கண்றாவியாக இருக்கும்.  அதை சகிக்க முடியாது.  அதனால் போகப் போக பாடல்கள் மட்டுமே கேட்டுப் பழகினேன் . இளையராஜாவின் இசைக்கு நான் செய்யும் கற்பனை எனக்கு திருப்தியாக இருந்தது.  


                                        முதல் இடையிசையில்  வயலினில் கேள்வி கேட்க குழலால் பதில் சொல்வது போல் ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை பிரமாதம் . கூடவே கிடாரிலும் அழகு மீட்டிக் கொடுக்க பின்னனியில் பாஸ் கிடாரின் இசைக் கோர்வையும் சேர  ,  ' பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் ...மதனோற்சவம் ' என ஸ்பஷ்டமாக ஜெயச்சந்திரன் சரணம் பாடும்போது வார்த்தைகளின் தெளிவில் கூடுதல் இனிமை சேர்த்தது போல இருக்கும்.  கூர்ந்து கேட்டால் இரண்டாம் இடையிசையிலும் பாஸ் கிடாரின் ஆட்சி தனித்துத் தெரியும் . பெண் குரலில் வார்த்தை சுத்தம் கொஞ்சம் குறைவே ! காட்சியை விட பாடல் கேட்பது சுகம்.


                                               

                                  அதே படத்தில் அடுத்த பாடல் சூப்பர் ஹிட் !  ரேடியோவில் ஒலி  பரப்பாத நாளே இல்லை என்று சொல்லுமளவிற்கு  அவ்வளவு பிரபலம். எஸ்.பி பி.யின் மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.  படத்தில் தேங்காய்  சீனிவாசன்   பாடுவது போல் காட்சி.  காட்சியை பார்த்தவுடன் அதிர்ச்சி .  உயிர் உருக பாடும் எஸ்.பி.பி யின் குரலுக்கு அவர் பொருத்தமானவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பாடலை அண்ணன் தங்கையான எஸ்.பி.பி மற்றும் சைலஜா சேர்ந்து பாடியிருப்பார்கள். சைலஜாவிற்கு முதல் பாடல். ஹம்மிங் மட்டுமே கொடுத்திருப்பார். பாட்டின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் சைலஜாவின் குரல் இனிக்கும்.


                                சிறு வயதில் இந்தப் பாட்டைக் கேட்டு நெக்குருகி போயிருக்கிறேன்.  பாட்டின் மெலடி மனசை பிசைவது போல ஒரு சிறு வலியை ஏற்படுத்தியது . பாட முயன்று தோற்றிருக்கிறேன் . பாட்டை கேட்டு பல சந்தர்ப்பங்களில் அசையாமல் நின்றிருக்கிறேன் . சில நேரங்களில் அழுதுமிருக்கிறேன் . ஒரு சில பாடல்கள் என்னை இம்சைக்கு உள்ளாக்கும் . அதில் இந்தப் பாடலும் ஒன்று என்பதை உளப்பூர்வமாக நான் சொல்ல வேண்டும்.  எஸ்.பி. பி யின் குரலில் இழையோடும் சோகம் கேட்பவர் யாரையும் தாக்கும் .  எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் இப்போதும் பசுமையாய் இருக்கும் இந்தப் பாடலுக்காக இளையராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

         
                              '  சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது ..... '  என்ற  வாலி அவர்கள்  எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது.  இப்போதும் அப்படியே ஒலிக்கிறது.     இரண்டு  சரணம் ,  இரண்டு  வேறுபட்ட  இடையிசையோடு  உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய்  எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின்  ஹம்மிங்  கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும் .  இது போன்ற பாடல்களை இளையராஜாவே மீண்டும் கொடுக்க இயலுமா என்று  சொல்ல முடியாது.  அந்த இசை வரம் அவருக்கு அவர் வணங்கும் இறைவனால் கொடுப்பட்டது.  அதை ராஜா நமக்குக் கொடுத்திருப்பது நமது பாக்கியம் என்றே கருதுகிறேன்.   


                                         

                                 இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பீதோவன், மொசார்ட், பாக் போன்ற மேனாட்டு இசை அறிஞர்களைப் பற்றி பேச்சு பரவலாயிற்று . அதற்கு முன்னர் ஒரு சிலரே அவர்களை அறிவர்.   அந்த இசை மேதைகளோடு ராஜாவின் இசையை ஒப்பீடு செய்யும் மன நிலையை இசை ரசிகர்கள் பலருக்கும் ஏற்படுத்தியதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். என்னுடைய இசை நண்பர் ஒருவர் இளையராஜாவின் இசை பற்றிய பேச்சு வந்தபோது , ' பல இசை அமைப்பாளர்களின்  இசை  RHYTHM  BASED ,  ராஜாவின் இசை INSTRUMENTAL BASED . மேனாட்டுக்காரன் இசையெல்லாம் அப்படிப்பட்டதே ! அதனால்தான் இளையராஜா அவர்களோடு ஒப்பிடப்படுகிறார்  '  என்றார்.  மேலே கண்ட பாடல்களை கேட்கின்றபோது அது உண்மை என்பதை அறிகிறேன்.


                              பாஸ் கிடாரின் உபயோகம் பெரும்பாலும் எல்லா இசை அமைப்பாளார்களின் பாடல்களிலும் இருக்கும் .  ஆனால்  இளையராஜாவின் பாஸ் கிடார் தனித்துவம் மிக்கது.  கூர்ந்து கேட்கும்போது நம்மை குதூகலத்தில் ஆழ்த்தும் . ஒரு ஆனந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அவர் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாஸ் கிடாரின் பங்களிப்பை அதன் நாதத்தை  எத்தனை பேர் கவனித்திருக்கப் போகிறார்கள்?  உண்மையான இசைக் கலைஞர்கள் அதன் மகத்துவத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அதில் ஒருவர் விக்கி என்ற இசைக் கலைஞர் . ' சொல்வனம் ' என்ற இணைய இதழில் ' பாஸ் கிடார் தில்லானா ' என்ற தலைப்பில் இளையராஜா பாஸ் கிடாரை  எந்தப் பாடல்களில் எல்லாம் பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார் என்பதையும் அதற்கு உடனுழைத்த இசைக் கலைஞர்கள்  பற்றிய விபரத்தையும் தன் இனிய இசை அனுபவங்களோடு அழகாக பரிமாறியிருக்கிறார்.  கீழ்க் கண்ட பதிவில் அதை பார்த்தீர்கள் என்றால் பாஸ் கிடார் இசையை சுகித்துச் செல்லும் இனிய  அனுபவம் கிட்டும். 

           
                                http://solvanam.com/?p=23134




..............................தொடர்வேன் .................................