Wednesday 29 April 2015

இசை ராட்சஷன் - 9 ( The Musical Legend )


                                             திரையிசையின்  முதல் நவீனம்

                                              பண்ணைப்புரத்து  புல்லாங்குழல்

                                              தென்னகத்து வடக்கு இசை மோகத்தை

                                               புரட்டிப்போட்டு  நமது

                                                கிராமியத்தையும் பாரம்பரியத்தையும்
           
                                                திரட்டிக் கொடுத்த அகத்தியன்

                                                இசை மாணாக்கர்களின் பல்கலைக்கழகம்

                                               ' பாக் 'கையும்  'பீத்தொவனை'யும் தமிழுக்கு

                                                 பரிச்சயம் செய்த பாவலன்

                                                 திரையிசையின்  திருவண்ணாமலை

                                                 அவரின் ஆயிரம் படங்கள்

                                                  இன்னிசையின் காலடித் தடங்கள்

                                                  அவரின் ஒரு வாசகம்

                                                   எங்களின் திருவாசகம்

                                                   குருபரனும் ஒருபரனுமாகிய  இசைஞானி !

ஒரு விழாவில் இளையராஜாவை விளிப்பதற்காக  வாசிக்கப்பட்ட கவிதை .
இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ; மிகையானதல்ல.
                                               

                                 

                          பாரம்பரிய  கர்னாடக  இசையை மட்டும் சினிமாவில் கொடுத்து வந்தபோது அதை அதிகம் கொண்டாடாத மக்கள் கூட்டம் மெல்லிசையாக மாற்றப்பட்டபோது  அதிகம் கொண்டாடவும் வரவேற்கவும் செய்தார்கள் . இளையராஜாவிற்கு முன்னால் இருந்த எத்தனையோ இசை விற்பன்னர்கள் மெல்லிசையை சினிமாவிற்கான அழகான திரையிசையாக உருமாற்றினார்கள் .  மக்களை தங்களின் இசையாலும் பாடல்களாலும்  அழவும் சிரிக்கவும் உருகவும் வைத்தார்கள் . ஏனென்றால் அந்தப் பாடல்கள் எல்லாம் மக்களின் எளிய வாழ்க்கையையும் அனுபவங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவையாய் இருந்தன. ஆனாலும் மக்கள் அந்தப் பாடல்களையெல்லாம் நடிகரின் பாடல்கள் என்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.    இசையமைப்பாளர்கள் மறைக்கப்பட்டிருந்தார்கள்.


                       இளையராஜாவின் வருகைக்கு பின்பு  நடிகரின் பாடல்கள் என்று பேசப்படுவது மறைந்துபோய்  இசையமைப்பாளரின் பாடல்கள் என்று பரவலாய் பேசப்பட்டது . 1978 இல் வந்த பாடல்களே அந்த நிலையை அடைந்தன என்பது கண்கூடு.  78 இல் வந்த திரைப்படங்களில் '   முள்ளும் மலரும்' என்ற படம் இசையிலும் இயக்கத்திலும் ஒரு மறுமலர்ச்சியை  ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

                                                             
                                     

                        ' முள்ளும் மலரும்  ' ரஜினி நடிப்பில் மகேந்திரன் அவர்கள் இயக்கிய வெற்றிப் படம். தமிழ்த் திரைப்படக் காவியங்களுள் ஒன்று . ரஜினி வித்தியாசமான முரட்டு அண்ணன் பாத்திரமேற்று நடித்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்திற்கென்று சொல்லப்படும் குறிப்பிடத்தகுந்த படங்களுள் இதுவும் ஒன்று . இளையராஜா இப்படத்தில் ஒரு இசை யாகம் நடத்தியிருப்பார். படம்  முழுவதும்  ஆங்காங்கே அவருடைய  முத்திரை பதிக்கும் அக்மார்க் இசைத்துணுக்கு இசைக்கப்பட்டு வந்திருக்கும். கதாபாத்திரங்களோடு  நாம் ஒன்றிப்போகுமளவிற்கு கதை மட்டுமல்ல , இசையும் நம்மைத் தூண்டும் .

                                             

                         அப்போதெல்லாம் ஊரில் ஒரு தியேட்டரில் மட்டுமே படம் ரிலீசாகி ஓடும். இன்னொரு தியேட்டருக்குச் செல்ல வேண்டும் என்றால் இன்னொரு ஊருக்குத்தான் போக வேண்டும் காசு கொழுத்தவர்கள் அப்படிச் செய்யலாம் ; சிலர் செய்தார்கள் . நான் வெறும் ஒரு ரூபாய் பத்து பைசாவை கையில் வைத்துக்கொண்டு ஆறு கிலோமீட்டர் நடந்தே வந்து படம் பார்த்துவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்தேன் . குடும்பத்தோடு சேர்ந்து படம் பார்த்த நிகழ்வுகள் அப்போது குறைந்து போனது . பிறகு அடியோடு நின்றும் போனது. முதலில் அண்ணன் படம் பார்த்துவிட்டு வந்து  கதை சொல்லுவார். அப்பா வெளியூர் போனாரென்றால் படம் பார்த்து கதை சொல்லுவார். நான் அம்மாவை நச்சரித்து படத்திற்குக் கூட்டிப் போகச் சொல்லுவேன் . 'நீ தனியாக பார்த்துவிட்டு வா'  என்று ' சுருமாட்டு காசு ' கொடுப்பார்கள். சினிமா டிக்கெட் எடுக்க மட்டுமே கொடுப்பார்கள். பக்கத்தில் போகச் சொல்லி கொடுப்பதை கையில் வைத்துக் கொண்டு நான் நடந்தே அவ்வளவு தூரம் சென்று படம் பார்ப்பேன்.


                         சினிமா பார்க்கும் ஆசைக்கு அப்போது அளவேயில்லை . இளையராஜாவின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் போதும் , அந்தப் படத்தை பார்த்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவேன் . அதில் நிறைய ' மொக்கை ' படங்களும் உண்டு. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது. என்  10 வயதில் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகரில் ' மாங்குடி மைனர் ' என்ற படம் பார்ப்பதற்கு தனியாக டவுன்பஸ் ஏறிப்போய் படம் பார்த்துத் திரும்பியிருக்கிறேன் . திருட்டுபயம். கடத்தல் பயம் எதுவுமே இருந்ததில்லை. அதைச் சொல்லி யாரும் பயமுறுத்தியதுமில்லை. பிரயாணங்கள் , தனி அனுபவங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தன . ஆனால் இன்று நம் பிள்ளைகளை தனியாக அனுப்ப பயப்படுகிறோம், தயங்குகிறோம் . காலமாற்றம் கண் முன்னே தெரிகிறது.


                     அப்படி தேடிப்போய் பார்த்த முள்ளும் மலரும் படத்தில் ' செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் '  என்ற கண்ணதாசனின் கவித்துவ வரிகளில் ஜேசுதாசின் குரலில் கேட்ட காவியப் பாடல் கொடுத்த சுகாபனுபவம் இப்போதும் இனிக்கிறது . பௌலி ராகம் ஆதி தாளத்தில் என்றென்றும் அழியாத அந்தப் பாடல் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் இனிய சங்கீதம் . இயற்கை அழகின் கட்டுக்குள் மயங்கி ரசிக்கும் நாயகனின் கற்பனையாக பாடல் ஒலிக்கும் . படத்தில் மலைப்பாதையில் வண்டி வளைந்து வளைந்து செல்லும்போது எதிர்ப்படும் இயற்கைக் காட்சிகளை நயந்து நயந்து வர்ணிக்கும் அழகான இசையை இளையராஜா கொடுத்திருப்பார். அவர் இசையே ஒரு கவிதைதான் ! மூன்று சரணங்கள், மூன்று வெவ்வேறு இடையிசை , மனது வருடும் சுகமாய் ஜேசுதாசின் தேன் குரல்,  சிக்காத வார்த்தைகளில் திகட்டாத கவிதை என்று எதைச் சொல்வது , எதை விடுவது என்று தெரியவில்லை. மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்பது தெரியாத அளவிற்கு கனகச்சிதமாக இரண்டும் பொருந்தியிருக்கும் . ஜேசுதாசின் பல பாடல்களில் இதற்கு தனி முத்திரை உண்டு.

                                                                                                   

                ஜேசுதாசின் ஹம்மிங்கோடு  பாடல் ஆரம்பிக்கும்போதே நம் மனதும் ரீங்காரமிட ஆரம்பித்து விடும். குழலையும் வயலினையும் பிரதானமாய்க்  கொண்டே பின்புல இசையில் நமை மயக்குவார் ராஜா.  காட்சியோடு பாடலை கேட்டால் நாமும் பறவைகளாகிப் போகுமளவு மனசும் இளகிப் போகும்.  மலைகளின் மேடு பள்ளங்களைப் போல் சிலர் உள்ளங்களையும் ஏன் படைத்தாய் இறைவா என்று இயற்கை  வர்ணனைகளோடு வாழ்க்கைத்  தத்துவத்தையும் போகிற போக்கில் சாதாரணமாக கவிஞர் சொல்லிவிட்டுப் போவார்.
கிளாசிக் ...!


                       '  ராமன்  ஆண்டாலும்  ராவணன் ஆண்டாலும்  எனக்கொரு கவலையில்லே '  என்ற  கங்கைஅமரன்  பாடலுக்கு எஸ்.,பி. பி அவர்களின் குரல் கச்சிதம். திமிர்த்தனம், அகம்பாவம், ஆணவத்தோடு பாடப்படும் பாடலுக்கு அவரை விட பொருத்தமான உணர்ச்சிகளை யாராலும் கொடுத்துவிட முடியாது. மலை சாதியினரோடு குடித்துவிட்டு நாயகன் ஆடிப்பாடுவது போன்ற காட்சி . எவரையும் துச்சமாக எடுத்தெறிந்து பேசும்  பாத்திரத்தில் ரஜினி பிரமாதமாக நடிக்க , எஸ்.பி.பி அதைவிட பொருத்தமாய் பாட ,  இருவரையும் மிஞ்சும் அளவிற்கு பாடலுக்கான  இசையை இளையராஜா அற்புதமாக கொடுத்திருப்பார்.   அந்தோலிகா  என்ற ராகத்தின் அடிப்படையில்  நாடோடிப் பாடலாக கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்னால்  இளையராஜாவின் இசை முன்னோர்கள் மலை ஜாதியினர் ஆடிப்பாடும்  பல பாடல்களை அழகாக கொடுத்துள்ளார்கள். இளையராஜா அவர்களுக்கு சளைக்காத வகையில் இந்தப் பாடலை இன்னும் அழகாக கொடுத்திருப்பதாகவே நான் உணர்ந்தேன்.
                                             
                                                       

                      அட்டகாசமான தாள நடை, மணி ஒலியுடன் ஷெனாய்  மற்றும்   பெண்களின் குரலிசையோடு பாடல் ஆரம்பிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிந்து விடும் . கோரஸ் இடையில் தாள நடையும் மாறும். வித்தியாசமான இசைக் கருவிகளின் நாதம் ஒலிக்கும் .  'லே...லேலேலேலே ...' என்று கோரசாக பாடிவிட்டு அதையே  "அம்மனை கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குதே " என்ற  வார்த்தைகள் கொண்டும் பாடப்படுவது புதுமையாக இருக்கும். பல்லவி முடிந்து தாளநடை மாறி  மீண்டும் பழைய நடைக்குத் திரும்பி சரணம் பாடப்படும் இடங்கள் எல்லாம் இளையராஜாவின் தனி முத்திரை .  பறை ஒலியுடன் இந்தப் பாடல் முழுமையுமே வித்தியாசமான முயற்சி  மற்றும் புதுமை . நான் அதுவரை அப்படியொரு இசையை கேட்டதில்லை.

               
                             இன்னொரு சுவையான செய்தி பகிர வேண்டும் . ராமன் ஆண்டாலும் பாடல் எழுதப்பட்ட விதத்தை ஒரு நண்பர் அழகாக விவரித்துள்ளார்.

                              முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.
அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.
கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை
அதனால் கங்கை அமரனையே எழுதவைக்கலாம் என்று முடிவெடுத்து கங்கை அமரன் எழுதினார்..
"உலகம் அது ஒரு கழுதைய மாதிரி தினசரி சுழலுதடா
பொதிதானே அந்தக் கழுதையும் தூக்குது
சரிதானே பூமி பலரையும் தாங்குது
டேய் கழுத கண்டதத் திங்குது
பூமியே மனுஷனத் திங்குதடா"
இதைப் படித்துவிட்டு இளையராஜாவும், இயக்குனர் மகேந்திரனும், இல்லை இதுபோல வேண்டாம் "நாயகன் உலகத்தையே தூக்கி எறிந்து விட்டு I don’t care" என்று பாடுவது போல இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின் எழுதிய வரிகள் தான்..
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”
  
                         மத்யமாவதி ராகத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் ஜென்சி பாடிய மற்றுமொரு துள்ளலான பாடல் , 'அடி பெண்ணே ...பொன்னூஞ்சல் ஆடும் இளமை ' . ஜென்சிக்கு அவர் பெயர் சொல்லும் அழகான பாடல்.  ஆசிரியையாக பணி  புரிந்து கொண்டிருந்தபோது  இளையராஜா அவருக்கு பல பாடல்கள் பாட வாய்ப்பு கொடுத்தார்.  வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர பாடகியாக வரும்படி இளையராஜா கேட்டுக்கொண்டபோது அதை உதாசீனப்படுத்தினார். ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். நிறைய வாய்ப்புகளை இழந்தார். இப்போது அதைக் குறித்து வருத்தப்படுவதாக ஒரு பேட்டியில் ஜென்சி குறிப்பிட்டிருந்தார்.
நல்ல பாடகியாக வலம் வந்திருக்க வேண்டியவர்.
             
                                                 

                       திரைப்படத்தில்   தன் அண்ணனின் மேலதிகாரி தன்னை மணம் புரிய விருப்பம் தெரிவித்ததைக் கேட்டவுடன் நாயகிக்கு ஏற்படும் இனம் புரியா கனவு கற்பனையோடு  எல்லையில்லா சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக பாடல் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும் . இயக்குனர் கேட்டதற்கு மேல் இளையராஜா கொடுத்திருப்பார்.  பெண்ணின் மனது கிடந்து தவிக்கும் தவிப்பை இசையில் கொண்டு வந்திருப்பார்.  ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஐந்து நிமிடப் பாடலில் படைத்திருக்கும் இளையராஜாவின் இசைக் கற்பனை  அபாரம் .



                          அதே படத்தில்  ' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ...நெய் மணக்கும் கத்திரிக்கா ...'  என்றொரு மணமணக்கும் பாடல் உண்டு. வாணி ஜெயராமின் அழுத்தந்திருத்தமான குரலில் கங்கை அமரனின் கை வண்ணத்தில் கேட்கும்போதே மனதில் வந்து ஒட்டிக் கொண்ட பாட்டு. படத்தில் பார்த்தவுடன் காட்சியும் பிடித்துப் போனது.  படத்தில் நாயகி ஒரு போஜனப் பிரியை . சுருக்கமாக  ' சாப்பாட்டு ராமி ' . முதலிரவில் ஒரு பாட்டு பாடச் சொல்லி ரஜினி கேட்கப் போக படாபட் ஜெயலக்ஷ்மி பாடுவதாக சூழல் காட்டப்பட்டிருக்கும் . நாவில் சுவையூறும் பதார்த்தங்களைக் கொண்டு பாடல் எழுதப்பட்டிருக்க அந்தச் சூழலுக்கு வெகு பொருத்தமான இசையை இளையராஜா கொடுத்திருப்பார்.


                         நெல்லுச் சோறு பற்றி அதிசயம் போல் பாடல் எழுதப்பட்டிருக்கிறதே, மிகைப்படுத்துகிறார்களோ என்று சந்தேகித்து என் தந்தையிடம் அது பற்றி கேட்டேன் . ஏனென்றால் எங்கள் வீட்டில் தினமும் அதுதானே சாப்பாடு. பாடலில் பெரிய விஷயம் போல காட்டியுள்ளார்களே என்று கேட்டபோது அவர் சொன்னார்: " எங்கள் காலத்தில் நெல்லுச் சோறு அதிசயம்தான்! ஏதாவது பண்டிகை விஷேசங்கள் வரும்போது மட்டுமே சோறு சாப்பிடுவோம் . இட்லி தோசை கூட தீபாவளி , கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் மட்டுமே செய்வார்கள். மற்றபடி தினமும் கம்பு, கேழ்வரகு ,சோளம்  கூழாகவோ கஞ்சியாகவோ சாப்பிடுவோம் . காய்கறி எல்லாம் கிடைக்காது . வெங்காயம், மிளகாய் , ஊறுகாய் , துவையல் இதுதான் தொட்டுக்கிறதுக்கு ! நீ சாப்பிடும் சோறு எங்களுக்கு அபூர்வம் . "

                                                   

                            கிராமத்து மண்ணின் யதார்த்த வாழ்க்கை நடைமுறையின் வெளிப்பாடுகள் பாடலாக அரங்கேற்றப்படும்போதேல்லாம்  அது வெற்றிப்பாடலாக வலம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்தப் பாடலும் அதில் அடக்கம்.  தினசரி சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொண்டு பாடல் எழுதி அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை எளிய கருவிகள் மூலம் நாடோடி பாடலாக அழகான இசையோடும் கிராமத்து வாசனையோடும் இளையராஜா கொடுத்திருப்பார்.
கடம், மோர்சிங் போன்ற கருவிகளின் ஆதிக்கம் அதிகம் தெரியும் . படம் பார்க்கும்போது பக்கத்தில் இருந்த ' பெரிசுகள் ' கொடுத்த கமெண்ட் இன்னும் சுவாரசியாமனது . ' அடடா... பிரமாதம் ...ஸ் ....' என்று ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டவர்களை எல்லாம் சந்தித்தேன்.  சில நேரங்களில் திரைப்படங்களில் வரும் நகைச்சுவைகளை  விட பொது மக்களிடமிருந்து வரும் ஜோக்குகளுக்கு
தியேட்டரே சிரிக்கும். அந்த அனுபவங்கள் இப்போது இல்லை . காலாவாதியாகிப் போனது.


                                  அதே 78 இல்  '  சட்டம் என் கையில்  '  என்ற திரைப்படம் வெளிவந்தது. கமல்ஹாசன் இரட்டை வேடம் . படம் காரம் மணம் கலந்த மசாலா . அந்த வயதுக்கு பிடித்தமானதாக இருந்தது.  இப்போது பார்க்கும்போது  பிடிக்கவில்லை. ஆனால் இளையராஜாவின் இசை. அப்போதும் இப்போதும் அப்படியே புத்தம் புதிதாய் அதன் பரிமாணம் மாறாமல் சுகந்த மணம் மாறாமல் இருக்கிறது.  ஆழ்ந்து அனுபவித்து  சுகித்தவர்களுக்கு  அது புரியும் .

                                                   


                                 ' சொர்க்கம் மதுவிலே ...சொக்கும் அழகிலே  ' என்ற இளமைத் துள்ளலான பாடல் கேட்ட மாத்திரத்தில் அசரடித்தப் பாடல். கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பி பட்டை கிளப்பிய பாடல்.  சிலோன் வானொலியில் இசைச் செல்வம் நிகழ்ச்சியில் அதிக நாட்களாய் முதல் தரம் பிடித்தப் பாடல்.  மேலைநாட்டு இசையை தமிழிசைக்கேற்றாற்போல் மாற்றி அமைக்கப்பட்ட பாடல் . இன்னும் தமிழகத்தின் பல இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ' அங்கிங்கு ' இசைக் குழுவினர் எங்கு சென்றாலும்  இந்தப் பாடலை பெரும்பாலும் தங்கள் நிகழ்ச்சியில் இப்போதும்  அப்படியே கொடுக்கிறார்கள்.  கேட்கும் கூட்டம் பரவசமடைவதையும்    பார்த்திருக்கிறேன் .  அந்தப் பாடலின் கிரேஸ் இன்னும் தீர்ந்தபாடில்லை .

                                               

                                கிடார் கார்ட் ஆரம்பித்து ட்ரம்பெட் சேர்ந்து பெண்களின் கோரஸ் ஒலியுடன் பல்லவி அட்டகாசமாக ஆரம்பிக்கும்போதே வினோத இசை உலகுக்குள் சென்றுவிடுவோம் . மோனோ ரெக்கார்டிங்கில் பாடல் ஒலிக்கும்போதே இசைக் கருவிகளின் மாயாஜாலம் அற்புதமாக இருந்தது . இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் அதே பாடல் இசைக்கப்பட்டால் இன்றுள்ள இளைஞர் பட்டாளங்களுக்கு மேனாட்டு இசைக்கலப்பின் அதிசயம் புரியும் .  இடையிசையில் பெண்கள் கோரஸின் காட்டுக் கூச்சலும் எஸ்.பி.பி யின் கர்ஜிக்கும் பின்னணியும் அப்போது திரையில் பார்த்தபோது பரபரவென பற்றிக்கொள்ளும் உற்சாக உணர்வு கிளம்பியது. படத்தில் கமல் பெண்களை கொஞ்சுவார்;  பாடலில் எஸ்.பி.பி வார்த்தைகளை கொஞ்சுவார்; இளையராஜா இசையில் எல்லோரையும் மிஞ்சுவார்.  ( 37 வருடங்கள் ஆச்சு ! இப்போதும் லண்டனில் நடந்த சூப்பர் சிங்கர் world tour 2015 என்ற நிகழ்ச்சியில் SPB அவர்கள் வெற்றி பெற்ற குழந்தைகளோடு சேர்ந்து பாடுகையில்  அதில் சொர்க்கம் மதுவிலே என்ற  பாடலை அட்டகாசமாக பாடினார் . லண்டன் வாழ் தமிழ் மக்களே மறக்கவில்லை . அப்படி ரசித்தார்கள் . நாம் எப்படி மறப்பது? )


                             ' ஆழக்கடலில் தேடிய முத்து...ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு    '  என்ற பாட்டு  வித்தியாசமான தாலாட்டுப்  பாட்டு.  இந்தப் பாடல் மட்டுமன்றி  படத்தின் பாடல்கள்  அனைத்தும் கண்ணதாசன் . மலேசியா வாசுதேவன் , ஜானகி அவர்களின் குரலில் சுகமான பாடல் . முதல் சரணம் முடிந்து இடையிசையில் 'ஏ..ஏ....ஏ ...னா ....   ' என்று தூரத்தில் கேட்பதுபோல்  நீட்டி முழங்கும் ஒரு ஆண் குரலின் ஹம்மிங் ஒலி இனம் புரியா  சுகமான இம்சையை ஏற்படுத்தும். இளையராஜாவின்  தனித்துவம் இப்படிப்பட்ட குரலிசையில் தனியே தெரியும். அது ராஜாவின் ட்ரேட் மார்க் !
             
                                                         

                               ' கடைத்தேங்காயோ...வழிப்புள்ளை  யாரோ ..' என்றொரு குத்துப்பாடலில் தாரை தப்பட்டையும் டிரம்ஸும் கொண்டு  கிராமிய நடையும்  மேனாட்டு இசை நடையும்  கலந்து கொடுக்கப்பட்டிருக்கும்.  சேரியில் வளரும் நாயகனுக்கும் பணக்கார நாயகனுக்கும் ஒரே நாளில் நடக்கும் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதாக காட்டப்பட்டிருக்கும் சூழலுக்கு இசைக்கப்பட்ட பாடல் என்பதால் இளையராஜா இரண்டும் கலந்து அழகாக பின்னிக் கொடுத்திருப்பார்.  வாசுவும் கம்பீரமாக பாடியிருப்பார்.

                                                   
         
                                     ' ஒரே  இடம் ...நிரந்தரம் .. இதோ உன் துணை ...இதோ என் இசை..'  என்ற பாடலுக்கு மறைமுகமாக தன்  இசையைத்தான் இளையராஜா குறிப்பிடுகிறாரோ என நினைக்கத் தோன்றும் அளவிற்கு அசத்தலான இசையை வழங்கியிருப்பார்.  சுசீலா அவர்களின் மயக்கும் குரலில் ட்ரம்பெட் ஒலியுடன் பாடல் கேட்டால் மனசும் மயங்கும் . இடையிசையில் மேனாட்டு இசைக் கலப்பில்  ஆண்  குரலில் வரும் ஹம்மிங் வேறுலகம் கூட்டிச் செல்லும் .

                                                   

                                  ராஜா   ஜானகிக்கு அதிக வாய்ப்புகள்  கொடுத்திருந்தாலும் சுசீலாவும் இளையராஜாவின் இசையில் நல்ல பல பாடல்கள் பாடியிருக்கிறார்.  ராஜா இசையமைப்பாளராய்  ஆவதற்கு முன் ஜி .கே. வெங்கடேஷின் உதவியாளராய் வேலை செய்தார் . ஒரு சமயம் வெங்கடேஷின் இசையில் சுசீலா பாடும்போது அபஸ்வரமாய்  ஓரிடத்தில் பாட  கிடார்  இசைத்துக் கொண்டிருந்த இளையராஜா அதைச் சுட்டிக் காட்டினார்.  சுசீலா ராஜாவின் கிடார் வாசிப்பில்தான் தவறு என வாதிட்டார். ராஜா ஏற்றுக் கொள்ளவில்லை . சுசீலாவிற்கு தன்மானப் பிரச்சனை . ராஜா கூடத்தை விட்டு வெளியேறினால்தான் தொடர்ந்து பாடுவேன் என அடம் பிடித்தார்.  ராஜா மெளனமாக வெளியேறினார். பிறகே ஒலிப்பதிவு  நடந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன் .  ஆனாலும் இளையராஜா சுசீலாவிற்கு தன் முதல் படத்திலேயே  பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகும் அவரிசையில் சுசீலா  பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
                                     

                                  '  சொன்னது நீதானா  ' என்ற படத்தில் ஜெயச்சந்திரன் குரலில்   ' வெள்ளி  நிலாவினிலே ..தமிழ் வீணை வந்தது '

                                 ' திருக்கல்யாணம் '  என்ற படத்தில் ஜெயச்சந்திரன், ஜானகி குரலில்   ' அலையே கடல் அலையே '

                                    ' வாழ நினைத்தால் வாழலாம் ' என்ற படத்தில்  ஜானகியின் குரலில்  ' வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா ...'

                                 ' வட்டத்துக்குள் சதுரம் ' என்ற படத்தில்  ஜானகி மற்றும் சசிரேகா குரலில் ' இதோ இதோ என் நெஞ்சிலே ...ஒரே பாடல்.. ' ,  ஜிக்கி அவர்களின் குரலில்  ' காதலென்னும் காவியம் ...கன்னி நெஞ்சின் ஓவியம் ..'


                              மேற்குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் நான் இலங்கை வானொலியில் மட்டுமே கேட்டு இன்புற்றிருக்கிறேன் .  ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைத்  தரும். வெள்ளி நிலாவினிலே என்ற பாடலை ஒரு பாட்டுப் போட்டியில் நான் பாடியது நினைவிருக்கிறது.  இதோ இதோ என் நெஞ்சிலே என்ற பாடல் இப்போதும் டி வி களில் ஒலிபரப்பப்படும்போது  பால்ய கால நினைவுகள் அலைகளாய் வந்து நெஞ்சில் மோதுகின்றன.


                      வெவ்வேறு சூழலுக்கு வெவ்வேறு விதமான மெலடி வெவ்வேறு பின்னணி இசை , வெவ்வேறு ஜானர் . ஆனால் எல்லாமே ஒரே ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படுகிறது எனும்போது இளையராஜாவை  பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியாது . ஒரு பாட்டில் உள்ள எல்லாவற்றையும் அவரே ஆள்கிறார் ; அவரே முடிவு செய்கிறார் ; அவரே படைக்கின்றார் . ஆனால் தனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது என்று தாழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறார்.

                   
                       சமீபத்தில் ஒரு திரைப்படப் பாடல்  வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியது : -  "  எனக்கு இசையைத் தவிர எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் எப்படி இசையமைத்தேனோ   அதுபோலதான் இப்போதும் அமைக்கிறேன் .  பாடல்களை கம்போஸ் செய்ய நேரம் எடுப்பேன். ஆர்கெஸ்ட்ராவை  ஒருங்கிணைக்க அரை மணி நேரம் போதும். எனக்கு இசை தெரியவில்லை. அதனால்தான் இசையமைக்க இன்னும் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறேன் . எனக்கும் உங்களுக்கும் தெரியாத இசை நிறைய இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் அது வந்து கொண்டே இருக்கிறது. ' ருத்ரம்மாதேவி ' என்ற படத்திற்காக லண்டனில் உலகப் புகழ் பெற்ற சிம்பொனி இசைக் குழுவுக்கு நான் அனுப்பிய நோட்ஸ்களைப் பார்த்துவிட்டு எங்களால் வாசிக்க முடியவில்லை என்றார்கள். நான் இப்படிதான் படைக்கிறேன். இது இறைவன் கொடுத்த வரம்.  " . அவர் நிறைய பேசியிருப்பார். பத்திரிக்கையில் பேச்சின் சாராம்சத்தை சுருக்கமாக கொடுத்துள்ளார்கள்.



.........................தொடர்வேன்......................
                                               

                                               
                                                 
                                               

Wednesday 1 April 2015

வாட்ஸ் ஆப்புகள்



                                                   
             
                      இசைப் பதிவுகளுக்கு இடையில் கொஞ்சம்  ரிலாக்ஸ் செய்துவிட்டு போகலாம் என்றுதான் இந்தப் பதிவுக்கு வந்தேன் .
                                   
                                           
         
                 வாட்ஸப்  இப்போது இளையோர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . வாட்ஸப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் நம்மை ஒரு மாதிரியாக மற்றவர்கள் பார்க்கிறார்கள் .
           

                   ஊடகங்கள்  இப்போது இதை பயன்படுத்தி உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை பெற முயல்கிறது.  யார் அநியாயம் செய்தாலும் எங்கு அக்கிரமங்கள் நடந்தாலும் அதை  யாராவது  வீடியோ எடுத்து    வாட்ஸப்பில் 
பரப்பி விடுகிறார்கள் .  ஊடகங்களும் ஒலி  பரப்புகின்றன .  அதை ஒரு சாட்சியாகக் கருதி நீதி மன்றமும் வழக்கை  எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன . வாட்ஸப்  சிலருக்கு கிலி ஏற்படுத்தி இருக்கிறது . 
                                               


                  என் மனைவியுடன் சேர்ந்து பணியாற்றுபவர் ஒருவர் அவர் கணவரிடம் சென்று  ' ஏங்க ...தடவுற போன் ஒன்னு வாங்கிக் கொடுங்க ...' என்று கேட்க அவர் சிறிது நேரங்கழித்து புரிந்து கொண்டு ' டச் போனா..? ' என கேட்டிருக்கிறார்.  ' ஆமா..மா ...அதேதான்  எல்லோரும்   வாட்ஸப்  பயன்படுத்துறாங்க எனக்கு ஒண்ணும் தெரியலைன்னு  கிண்டல் செய்றாங்க ..' என்று புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி கற்றுக் கொண்டுவிட்டார்.  வாட்ஸப்   கற்றுக் கொள்வதும் கையாள்வதும் எல்லோருக்கும் எளிதான விசயமாகிப் போனதால் எல்லா வயதினரும் பயன்படுத்துகிறார்கள் .

                           
                     வாட்ஸப்பில் பாட்டு,  போட்டோ, ஆடியோ , வீடியோ , கமெண்ட்   என்று எதை வேண்டுமென்றாலும் அனுப்பலாம் என்பதால் நக்கல், நையாண்டி , கிண்டல் , கேலி, ஆச்சரியம், அதிசயம் , அசிங்கம் ...etc  வருகிறது; போகிறது.  கட்டுப்பாடுகளே இல்லை .  வீட்டுக்குள் நுழைந்தால் பிள்ளைகள் எடுத்துப் பார்த்து விடுவார்களோ என்று பயப்பட வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு குஷியாக இருந்த  வாட்ஸப் விஷயங்கள் போகப் போக ,  'இன்னிக்கு எவன் என்னத்தை அனுப்பினானோ ...? ' என்று யோசிக்க வைக்க ஆரம்பித்து விட்டன .  இந்திய அரசாங்கம் தடை செய்த கொடூரமான மனிதத் தலையை வெட்டி எறியும் காட்சிகள் கூட பரப்பப்படுகிறது.  என் நண்பர் ஒருவருக்கு அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு மயக்கம் வந்து விட்டதாம் .  எப்படியோ சமாளித்துவிட்டார்.  இப்போது வாட்ஸப் உள்ளே செல்ல தயங்குகிறார்.  மனுசனை அது என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!?

             
                     சின்னப் பசங்கள் கையில் அது அதிகம் விளையாடுகிறது.  எதையாவது பார்த்துக் கொண்டே அலைகிறார்கள் . பத்து பேர் சேர்ந்து கொண்டு அரட்டை அடிக்கிறார்கள் வாயை திறக்காமலேயே! கேட்டால் 'குரூப் சாட் '  என்கிறார்கள்.   அவர்கள் பார்ப்பது மறுக்கப்பட்டால் கோபம் தலைக்கேறுகிறது. என்ன செய்ய?  உள்ளறையில் படுத்திருக்கும் என்னை என் மகள்  ' அப்பா டீ  குடிக்க  ஹாலுக்கு வாங்க ' என்று  வாட்ஸப்பில் செய்தி அனுப்புகிறாள்.  நானும் அந்த வாட்ஸப்பில் மேய்ந்து கொண்டிருப்பதால் உடனே செய்தி என்னை எட்டுகிறது.
                                                       

                       சில பேர் பக்கம் பக்கமாய் எழுதி அனுப்புகிறார்கள் . வாசிக்க பொறுமை இல்லை. ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் என் நண்பனுக்கு ஒரு பெரிய செய்தியை பகிர்வதற்காக அனுப்பினேன்.  எனக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துவிட்டான்.  ' வாட்ஸப்  சின்ன சின்ன செய்தி அனுப்பத்தானே ஒழிய இப்படி  ' எஸ்ஸே ' அனுப்புறதுக்கு இல்ல . அமெரிக்காவில் எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா ?....'  என்று வசை பாட ஆரம்பித்துவிட்டான் . வாட்ஸப்பினால் அமெரிக்காவிலிருந்து நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.  அதன் பிறகு,  '  ஹாய் ...நலமா ...பிள்ளைகள் நலமா ...ஹவ் ஆர் யூ ...ஹி ...' என்ற வார்த்தைகள் தவிர வேறு எதையும் அவனுக்கு அனுப்புவதே கிடையாது.


                      வாட்ஸப்பில் சிக்கிக் கொண்டு நிறைய பேர் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் . எனக்கு அந்த அளவுக்கு பைத்தியம் இல்லை. அளவோடு பயன்படுத்துகிறேன்.  அதனால் நிறைய விசயங்களை பார்க்காமலேயே அழிக்க ஆரம்பித்து விட்டேன்.  திறந்தால்  போதும்  நூறு விஷயங்கள் வந்து கொட்டும் .  அத்தனையும் பார்த்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே  ஆகும் . என் நேரத்தை  தின்று தீர்த்துவிடும் . நானே சென்சார் செய்து விடுகிறேன் .

                   சமீபத்தில்  ஆசிரிய நண்பர் ஒருவர் ,  ' சார் ...வேண்டியவங்களுக்கு பழைய வினாத் தாளை  வாட்ஸப்பில் அனுப்பக் கூட பயமாயிருக்கு ... எதுக்கு உள்ள தூக்கி வைப்பான் என்றே தெரிய மாட்டேங்குது  ' என்று அங்கலாய்த்தார் இப்படி நமது பின்னணியில்  ஒளிந்திருக்கும்ஏகப்பட்ட பிரச்சனைகளோடுதான்  வாட்ஸப்பிலும் நாம்  மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

               
                    அப்படி நான் ரசித்து மகிழ்ந்த விசயங்களில் சில ஆடியோப் பதிவுகள் நகைச்சுவையாக இருந்தன . பார்ப்போம்.



                                           ஆடியோப் பதிவு ஒன்று



(  ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து  ஒரு பெண் ஊழியர் பேசுகிறார் . எதிர் முனையில் ஓர் ஆண் பதில் சொல்கிறார். )

பெண் :     சார்   ரா.... சாருங்களா ?

ஆண் :      ஆமா ...நீங்க?

பெண் :    சார் ...நாங்க இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுறோம் ...ஏற்கனவே                  உங்களுக்கு சொல்லி இருந்தோம் இல்லியா ...நீங்க வாங்க         வரேன்னு     சொல்லி இருந்தீங்க இல்லியா ...

ஆண்  :   நான் ஆபிசில் இருக்கேன் ... நீங்க சொல்லுங்க .. என்ன இன்சூரன்ஸ்?

பெண் :  அப்புறம் பேசவா ...?

ஆண்  :  இல்ல ... சொல்லுங்க என்ன இன்சூரன்ஸ்ங்க ...?

பெண் :  லைப் இன்சூரன்ஸ்.. ஏற்கனவே சொல்லியாச்சு ..உங்க வீட்டில                                 அவங்களுக்கு ஒரு  லட்சம் மதிப்புள்ள பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  ஒரு லட்சம் cash ஷா மேடம் ?

பெண் :  இல்லை  இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  எங்க விழுந்துச்சுங்க ...?

பெண்  :  இன்சூரன்ஸ் ஆபிஸ்ல .. ஆயிரம் நம்பர் குலுக்கியதில அவங்களுக்கு                     இன்சூரன்ஸ் பாலிசி விழுந்திருக்கு சார் ..நீங்க வந்து
                  வாங்கிக்கறேன்னு சொன்னீங்க ...

ஆண்  :   அவர் உங்க ஆபீஸ்ல தெரியாம விட்டுட்டு வந்திருப்பாரு ...எடுத்து
                   வைங்க ...அவருகிட்ட சொல்றேன்

பெண் :     வருவாங்களா அவங்க ...ஏன்னா கவருமென்டுல இருந்து வந்து
                    கொடுக்கிறாங்க...மேனேஜர் வந்து கொடுப்பாரு

ஆண் :      மேடம் அவரு விட்டுட்டு வந்திருப்பாருன்னு
                சொன்னீங்கல்ல   எடுத்து வைங்க மேடம்...


பெண் :   அவர் விட்டுட்டு வந்தாருன்னு நான் சொல்லலை .

ஆண்  :   நீங்கதானே மேடம் விழுந்திருச்சுன்னு சொன்னீங்க

பெண் :     சார் நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்குங்க ..அவங்களுக்கு ஒரு                               லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி
                    விழுந்திருக்குன்னுதான் சொன்னேன் ..

ஆண்  :     ஒரு   லட்சம் மதிப்புள்ள  பிரிஜ்ஜா ....?

பெண்  :    பிரிஜ் இல்ல ... பாலிசி சார் ..

ஆண்  :      என்னது பால் பாக்கெட்டா ....?

பெண் :      வைங்க சார் போனை... பாலிசின்னு சொல்றேன் ...பிரிஜா ..பால்
                      பாக்கெட்டானு  கேட்டுகிட்டு ...ஆளைப் பாருங்க



                                       ஆடியோப் பதிவு இரண்டு


( எர்வா மாட்டின் என்ற ஒரு product விற்பனை சம்பந்தமான பரிவர்த்தனை )


பெண் :   அதை யூஸ் பண்ணீங்களா ?

ஆண்  :   நான் மூணு நாலு பாட்டில் யூஸ் பண்ணிட்டேன்.

பெண் :  ஒரு பாட்டில்தானே வாங்கியிருக்கீங்க .
                  ஒரு பாட்டில்தான் இருக்கு

ஆண் :   ஒண்ணுதான் இருக்கா ...என்கிட்டே நாலு பாட்டில் இருக்கே

பெண் :   ஒரு பாட்டில்தான் நீங்க வாங்கியிருக்கீங்கன்னு இருக்கு .

ஆண்  :  உங்க கம்ப்யூடரில் ஏதோ பிரச்னை ...நான் நாலு பாட்டில்
                   எர்வா மாட்டின் வாங்கினேன் .

பெண் :   இன்னொன்னு வேணுமா சார்

ஆண்  :   முதல் பாட்டில் வாங்கி யூஸ் பண்ணதுல கொஞ்சம் முடிதான்
                   போயிருந்துச்சும்மா

பெண்  :  எப்படி நீங்கயூஸ் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ...?

ஆண்  :    அவங்க எப்படி சொன்னாங்களோ அப்படிதான்மா யூஸ் பண்ணேன்
                    எனக்கு முதல்ல நல்லா முடி இருந்துச்சும்மா ...கொஞ்சம் முடி
                     போச்சு ...எல்லோரும் சொன்னாங்கன்னு  டிவியில பார்த்துட்டு
                     உங்க ஆயில் வாங்கி தேச்சேன் .. கூடுதலா முடி போச்சு ...

பெண் :    ஓ . கே  சார்

ஆண்   :    அடுத்தடுத்து வாங்கி தேச்சதுல எல்லா முடியும் கொட்டிப் போயி
                     இப்ப மொட்டை மண்டையா நிக்கிறேன் ...ஒரு போட்டோ
                      வேணுமின்னா எடுத்து அனுப்பட்டுமா ...?

பெண்  :    சார் புரோட்டின் ரொம்ப கம்மியா இருந்தா அப்படி கொட்டும் சார் ..
                    ஆனா எங்க பிராடெக்ட் யூஸ் பண்ணா வேரில போயி முடி நல்லா
                     வளரும் சார்..யூஸ் பண்ண பண்ண கண்டிப்பா உங்களுக்கு முடி
                       வரும் சார் ...

ஆண்  :      எப்ப வரும்னு சொல்றீங்க ...?

பெண் :   யூஸ் பண்ணிகிட்டே இருந்தா வரும் சார் ...

ஆண்  :   தேய்க்க தேய்க்க எல்லாம் கொட்டிப்   போச்சு..
                  போனதுக்கப்புறம் இனிமே தேய்ச்சா
                  முடி வருமா...?

பெண் :   கண்டிப்பா வரும் .

ஆண்  :  ஒருவேளை மழை பெய்ஞ்சா வருமோ...?  வெயில் காலம் அதனால
                   வர மாட்டீங்குதோ ..?


பெண் :    அப்படி இல்லை சார் ... கண்டிப்பா வளரும் சார்


ஆண்  :    ஒரு பாட்டில் தேச்சப்ப கொட்டிப் போச்சு ..  ரெண்டாவது மூணாவது
                      தேய்ங்கன்னு  சொன்னாங்க ...மொத்தமா போச்சேம்மா ...

பெண் :    முதல் பாட்டில் தேய்க்கும்போது  பொடுகு போகும் ...அடுத்தடுத்து
                   தேய்ச்சா வளரும்

ஆண்  :   இது எங்கிருந்து வருது ....பிரேசிலா ...:

பெண்  :   அமேசான் காட்டிலிருந்து மூலிகை மூலம் தயார் செய்றாங்க சார்

ஆண்  :   அமேசான் பிரேசிலில்தானே இருக்கு

பெண் :   ஒரு நிமிசம் ...( யாரிடமோ கேட்கிறார் )... சவுத் ஆப்பிரிக்காவில்
                   இருக்கு சார் .

ஆண்  :  அப்படியா ...?  அங்க இருக்கிறவங்களுக்கு இதை விக்கிறீங்களா ...?
                  அங்க இருக்கறவங்க தலை சொட்டையா இருக்குறதா என் பிரண்டு
                    சொல்றாரு .

பெண்  :  எல்லோரும் நல்ல ரிசல்ட் கொடுக்கிறாங்க ..யாரும் ராங் ரிசல்ட்
                   சொல்றதில்லை சார் ...

ஆண்  :   என் பிரன்ட்ஸ் நாலு பேரு இதே மாதிரி எல்லாம் கொட்டிப்
                  போச்சுன்னு சொல்றாங்க ...அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது நாலு                                 பாட்டில் வேஸ்ட் பண்ணிட்டேன் ...நாலாயிரம் போச்சு ..முடியும்
                    போச்சு

பெண் :   கண்டிப்பா நான் கம்பிளைன்ட் பதிவு பண்றேன்  சார் ..

ஆண்  :  என்னை கம்பிளைன்ட்  பண்றீங்களா

பெண் :   இல்ல சார் உங்க கம்பிளைன்ட்ட கம்பெனிக்கு சொல்றேன்

ஆண்  :  அது சரி ...போன முடிக்கு என்ன பதில் சொல்லப்  போறீங்க ...இதில
                  இன்னொரு பாட்டில் வாங்கச் சொல்றீங்க

பெண் :  ஆமா சார் யூஸ் பண்ணா கண்டிப்பா வளரும் சார் .. பொல்லுசன்
                ஏதாவது  இருந்ததுனா பிராபிலம் இருக்கும்

ஆண்  :  அப்ப  தேய்ச்சுட்டு  வீட்டுக்குளேயே கிடக்கச் சொல்றீகளா .. வேலை
                  வெட்டிக்கு போக வேணாமா ...?

பெண் :  இல்ல சார் கண்டிப்பா வளரும் சார் . கர்சீப் கட்டிக்கிட்டு ஹெல்மெட்
                  போடுங்க சார் .

ஆண் :    சொட்டை தலையாப் போச்சு ....அதுக்கு என்ன பதில் சொல்லப்                                     போறீங்க  ...நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு விக் வாங்கி கொடுங்கம்மா
                   வெளியில தலை காட்ட முடியில 


பெண் :  உங்க தரப்புல கம்பிளைன்ட் பண்றேன் சார் .. கால் வரும் சார்

ஆண்    :   கால் வந்து என்ன பண்ண... முடி வரணுமே  ...நாலாயிரம் ரூபா
                   திருப்பி தருவதா சொன்னா கூட எனக்கு முடி வளந்திரும்னு  
                   தோணுது ..அந்த  ஆறுதல்லேயே ...
 

பெண் :   யூஸ் பண்ணுங்க சார் ...உங்களுக்கு கண்டிப்பா வளரும் சார்

ஆண்  :   திரும்பவும் யூஸ் பண்ணவா ....அம்புட்டும் போச்சுன்னு
                 சொல்லிகிட்டு இருக்கேன் ...திரும்ப யூஸ் பண்ண சொல்றீங்களே