Sunday 2 October 2016

இசை ராட்சஷன் - 17 ( The Musical Legend )


நாற்பது ஆண்டுகளாக இசைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் இசை ஆளுமையை இசைஞர்கள்  மட்டுமல்ல என் போன்ற  இசை ரசிகர்களும் எவ்வாறு  பார்க்கிறார்கள்  என்பதை அவர்களின் முகநூல் பதிவிலிருந்து எடுத்தியம்ப விழைகின்றேன் .

                                               


***மார்கழியில் ...குளிர்பதன அரங்குகளில்...முன்பதிவு செய்த இருக்கைவாசிகளுக்காக இசைக்க கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
இவற்றில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கனவே எழுதப்பட்டவை.
இதன் ராகம், தாளம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை.  இது 
ஒருவிதத்தில்  காலங்காலமாக பிரதியெடுக்கிற வேலை.    நவீன 
இசைக்கருவிகளுடன் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுகின்ற பாடகனின் 
வேலையை விட,  கொஞ்சம் கூடுதல் லாவகத்துடன், நேர்த்தியுடன் செய்கிற வேலைதான்!

இது  இரண்டுமே முன்தீர்மானம் உடையவை.   ஒத்திகை செய்யப்படுபவை. பாடப்படும் விஷயங்களை பொறுத்து உள்ளடக்க ரீதியான வித்தியாசம் இருக்கும்.  இரண்டுமே பிரதியெடுக்கிற செயலைத்தான் செய்கிறது.


இவ்வாறு பிரதியெடுக்கிற சங்கீதப்பாடகன், தனது அதிகபட்ச படைப்பாக கல்பனாஸ்வரங்கள் பாடுகிறான்.   அதில் அவன் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும் அசைப்பது குறித்து சிலாகிக்கின்ற இசைவிமர்சனங்கள், திரைத்துறையில் நிகழ்கின்ற உண்மையான இசை முயற்சிகளை கண்டு கொள்வதில்லை.




சிறந்த இசைமுயற்சிக்கு இணையான ஒன்று திரைப்படத்தில் நிகழும்போது அது எப்படி கவனிக்கப்பட முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்ததாகும் ?    மூன்றாம்தரமான வழிபாட்டுப்பாடல்  சபாக்களில் ஒலிப்பதால் மட்டும் அது எப்படி விமர்சனத்திற்கு உண்டான தகுதியைப்பெறுகிறது ?திரைப்படப்பாடலில் பயன்படுத்தப்படும் இசை மலிவானது, மேலோட்டமானது என்று எப்படி தீர்மானிக்கமுடியும் ?


இவ்வாறான தீர்மானங்களை உடைத்து, உயர்ந்த இசைக்கு ஈடான பல 
பரிசோதனைகளை இளையராஜா திரைப்படத்தில் நிகழ்த்தி இருக்கிறார்.


இளையராஜா போன்ற தேர்ந்த இசைப்படைப்பாளி தன் ஆழ்ந்த புலமை கொண்டு ஒரு ஸ்வரக்கோவையை எழுதி,அதனை எந்த இசைக்கருவியில் வாசித்தால் உயிர்ப்பாக இருக்கும் என்று யோசித்து எழுதிய...ஒரு பாடலின் வயலின் இசைக்கு...எந்த யோசிப்புமற்று படத்தின் நாயகி தன் பின்புறத்தை ஆட்டுவாள்.


இது எவ்வளவு அபத்தமானது. ஒரு கலைஞனின் படைப்பு  அவன் சார்ந்த ஊடகத்தின் உள்ளாகவே கேலி செய்யப்படுகிறது.


ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் 
மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க 
வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ,  ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது.


நம் அருகில், நாம் பேசுகிற மொழியில் பாடுகிற கலைஞன் என்பதாலேயே நமக்கு நேரும் அலட்சிய உணர்வு கண்டிக்கத்தக்கது.
எழுதியவர் : செழியன்
நூல்: பேசும்படம்




***இசை­ய­மைப்­பாளர்,  கம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்  யார்?
-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா
யூ டியூப்பில் இசை சம்­பந்­த­மான பழைய நிகழ்ச்­சி­யொன்றைப் பார்க்கும் சந்­தர்ப்பம் எதேச்சையாக  ஏற்­பட்­ட­போது மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்­தது. அதே நிகழ்ச்­சியை சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நேர­டி­யாக தொலைக்­காட்­சியில் பார்த்­த­போது இதே மனக்குடைச்சல் அன்றும் எனக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.. பாடகர் ஒரு­வரால் நடத்­தப்­பட்­டி­ருந்த அதில் பங்கு பெற்றவர்  ஒரு தமிழ் இசை­ய­மைப்­பாளர்.

அந்தப் பாடகர் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த அந்த இசை­ய­மைப்­பா­ள­ரிடம் மிகவும் பவ்வியமாக, கூனிக் குறுகி உரை­யா­டிக்­கொண்­டி­ருந்தார். அது பர­வா­யில்லை.  சினிமா உலகில் இப்­ப­டி­யான மரி­யா­தையை எல்­லோ­ருமே எதிர்­பார்க்­கி­றார்கள் போலும்!   இங்கே அது­வல்ல  பிரச்­சினை. எனக்குள் ஏற்­பட்ட கேள்­விக்குக் காரணம் பாடகர் அந்த இசை­ய­மைப்­ப­ாளரை வார்த்­தைக்கு வார்த்தை Legend (மேதை) என்றும் கம்­போசர் என்றும் கூறிக் கொண்­டி­ருந்­த­துதான். அதுதான் தவறு. அங்கு வந்­தி­ருந்­த­வரை இசையமைப்­பா­ள­ராக வேண்­டு­மானால் யாரும் அழைத்துக் கொள்­ளுங்கள்.  ஆனால் அவர் நிச்­ச­ய­மாக ஒரு கம்­போசர் (Composer) அல்ல. இதை என்னால் உறு­தி­படக் கூற முடியும்.

ஆங்­கி­லத்தில் இசை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அவர்­களின் செயற்­பா­டு, திற­மை, புலமை,  அனு­ப­வம், சாத­னை  போன்ற இன்னும் பல கார­ணங்­களை அள­வு­கோ­லாகக் கொண்டு பல உப பெயர்­களில் பிரித்­துள்­ளார்கள். அப்­ப­டி­யான இரண்டு திறமைசாலிகளின் பெயர்தான் Music Director மற்றும் Music Composer ஆகும். பொது­வாக நோக்­கும்­போது இரு­வ­ருமே ஒரே தொழி­லைத்தான் செய்­வ­தாகத் தோன்றும். ஆனால் அது தவறு. 



இதனை விளங்கிக் கொள்­வ­தற்கு அந்த இரு­வ­ருக்கும் இடை­யி­லுள்ள வித்தியாசத்தையும் தனித்­த­ன்­மை­க­ளையும் புரிந்து கொள்ளல் வேண்டும்.


பாடல் ஒன்­றுக்­கான மெட்டை அல்­லது காட்சி ஒன்­றுக்­கான மெட்­டைப்­போட்டு அதை பாட­லா­சி­ரி­ய­ரிடம் காட்­டு­ப­வரை இசை­ய­மைப்­பளர் என்று அழைக்­கலாம். அதா­வது அவர் ஒரு பாட­லுக்­கான மெட்டை அமைக்­கிறார். இதை யார் செய்­தாலும் அவர் இசை­ய­மைப்­பா­ளரே!


அதன் பின் அந்த மெட்டும் பாடல் வரி­களும் இன்­னொ­ரு­வ­ரிடம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. அவ­ரது தொழிற்­பெயர் Arranger (அரேஞ்சர்)

(An arrangement is the adaptation of a previously written musical composition for presentation. It may differ from the original form by reharmonization, paraphrasing or development of the melodic, harmonic, and rhythmic structure)

இவர்தான் அந்­தப்­பா­ட­லுக்­கான வயி­லின்கள் எத்­த­னை­யென்­ப­தையும் எங்கு வாசிக்க வேண்டும் என்­ப­தை­யும் என்ன தாள­வாத்­தியம் எப்­படி வாசிக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தை­யும் Brass Section எனப்­படும் ஊதும்­வாத்­தி­யங்­க­ளை­யும் கிட்­டார் மற்றும் Beats. களையும் எவ்­வாறு எங்கு வர­வேண்டும் என்­ப­தைப்­போன்ற பின்­னணி இசை­களை எழு­து­பவர் அல்­லது கோர்ப்­பவர். ஒரு பாடலின் தரத்தை இவரின் இசை­ய­றிவும் இசை அனு­ப­வமும் தீர்­மா­னிக்­கி­றது. இவரின் இசை­ய­றிவும் அனு­ப­வமும் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட்ட­தாக இருக்­கு­மாயின் அதை இவர் அரேஞ் செய்யும்  பாடல்­களில் புரிந்து கொள்­ளலாம்.


இத­னால்தான் சில இசை­ய­மைப்­பா­ளர்­களின் பாடலைக் கேட்கும் போது பாடலின் மெட்டு புதி­தாக இருந்­தாலும் அதைத் தாங்கிச் செல்லும் பின்­ன­ணி­யி­சையை ஏற்­க­னவே எங்கோ கேட்­டதைப் போன்று உண­ர்­கின்றோம். காரணம் அரேஞ்சர் என்­ப­வ­ருக்கு அது ஒரு தொழில் அவ்­வ­ள­வுதான். அதில் அவரின் பெயர் வெளியே தெரியப் போவ­தில்லை. எனவே பத்­தோடு பதி­னொன்­றாக ஒரு பாடலை உரு­வாக்­கி­விட்டால் அவரின் கடமை முடிந்­து­விடும். ஒரு இசை­ய­மைப்­பா­ளரின் மெட்டை முழு­மை­யான பாட­லாக மாற்­று­பவர் Musical Arranger. ஆனால் இசை­ய­மைப்­பாளர் அந்தப் பாடல் உரு­வாகும் போது அதை மேற்­பார்வை செய்­து­கொள்வார்.


இசை­ய­மைப்­பாளர் தேவாவின் அரே­ஞ்­ச­ராக அவரின் தம்­பிகள் மற்றும் இப்­போ­தைய இசை­ய­மைப்­பாளர் தினா ஆகியோர் இருந்­துள்­ளார்­கள்.   டி.ராஜேந்­தரின் அரேஞ்­ச­ராக வைத்­ய­நாதன் என்­பவர் இருந்­துள்ளார்.   எஸ்­.ஏ.ராஜ்­கு­மாரின் அரேஞ்­ச­ராக வித்­யா­சாகர் இருந்­துள்ளார் என்று கேள்­விப்­பட்­டுள்ளேன். ( மன­சுக்குள் மத்­தாப்பு படத்தின்  பாட­லான பொன்­மாங்­குயில் பாடலைக் கேட்­டுப்­பா­ருங்கள்.  அதில் ஒரு வித்­தி­யா­ச­மான வித்­தி­யா­சத்தை உண­ரலாம். )


பொது­வாக இசை­ய­மைப்­பாளர் எனப்­ப­டு­ப­வ­ருக்கு இசைக்­க­ரு­விகள் வாசிக்­கத்­தெ­ரி­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

எம்மில் பலர் நினைப்­ப­தைப்­போல தமிழ்த்­தி­ரை­யி­சை­யில், இரு இசை­ய­மைப்­பா­ளர்­களின் பாடல்­க­ளைத்­த­வி­ர, நாம் கேட்­டு­வ­ளர்ந்து சிலா­கித்துப் பாராட்­டிய பல பாடல்­களின் இனி­மைக்கு முழுச்­சொந்­தக்­காரர் அந்தப் பாட்டின் இசை­ய­மைப்­பா­ள­ரல்ல. அவர் அந்தப் பாட்டின் மெட்­டுக்கு வேண்­டு­மானால் உரிமை கோரலாம் அவ்­வ­ள­வுதான்.

சரி, இனி Composer என்று அழைக்­கப்­படக் கூடிய தகுதி யாருக்கு இருக்­கின்­றது?

ஒரு பாடலை அல்­லது இசையை அதன் சூழ்­நி­லைக்கு ஏற்ப மெட்­டாகப் போட்டு, தான் உரு­வாக்­கிய அந்த மெட்­டுக்கு தானே பார்த்துப் பார்த்து இசை அரேஞ்­மெண்ட்­டுக்­கான இசைக்­கு­றிப்­புக்­களை எழு­தி, அந்­தப்­பா­ட­லுக்கு ஜீவனைக் கொடுக்­கக்­கூ­டிய இசை­களை தானே உரு­வாக்­கி, அந்த இசைக் குறிப்பை இசைக்­க­லை­ஞர்­க­ளுக்கு விளங்­க வைத்து , அந்த மெட்­டிற்குள் ஜீவனைக் கொடுத்­து, கலை­ஞர்­களின் வாசிப்பில் தடங்கல் ஏற்படும்போது சரி செய்யக்­கூ­டிய திற­மையைத் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்­து, பாட­லையும் எழுதக் கூடிய வல்­ல­மை­யுடன் பாட­லை பாடும் திற­மையுடன் மிக முக்­கி­ய­மான ஒரு தன்­மையைக் கொண்­டி­ருக்­க­ வே­ண்டும்.


அதா­வது, இசையை இழை இழை­யா­க, அணு அணு­வாக, அறிந்­து­வைத்­து, ஒரு பாட­லுக்கு அல்­லது இசைக் கோர்­வைக்கு சேர்க்கும் இசையை ஒன்று ஒன்­றாக ரசித்து ரசித்து தானே கோர்க்­க­வேண்டும். புதிது புதி­தாக உரு­வாக்­க­வேண்டும். தான் எதிர்­பார்ப்­பதை கலை­ஞர்­க­ளி­ட­மி­ருந்து அட்­சரம் பிச­காமல் வெளிக்­கொ­ணரத் தெரிய வேண்டும்.

உலக இசை வர­லாற்றில் இந்தத் திற­மை­களை தம்­ம­கத்தே கொண்­டி­ருந்த சிலரைப் பட்­டி­ய­லி­டு­கின்றேன்.

Johann Sebastian Bach,
Wolfgang Amadeus Mozart ,
Ludwig van Beethoven
Richard Wagner ,
Franz Schubert

நான் மேலே குறிப்­பிட்ட ஐவ­ரை­விட இன்னும் பலர் இருக்­கின்­றார்கள்.
ஒருவர் வெள்­ளை­வெ­ளே­ரென்ற நீள நஷனல் ஷர்ட்டும் வெள்ளை குர்தா போன்ற பாண்டும் வெள்ளைக் கால­ணியும் நெற்­றியில் குங்­குமப் பொட்டும் வைத்­து­விட்டு பந்தாவாக வந்தால் அவரை மிகப்­பெரும் இசை­மேதை என எண்­ணு­வது எங்­களின் வழக்கமாகிப்  ­போய்­விட்­டது.


எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்­த­வ­ரையில் தமிழ்த் திரை­யி­சையில் கம்­போ­சர்  ­என அழைக்கக் ­கூ­டிய தகுதி இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வுக்கு இருக்­கின்­றது.


மெல்­லிசை மன்­னர்கள் இசை­மே­தைகள். ஆனால் அவர்கள் மெட்டை மட்டும் போடு­வார்கள். அதை வைத்துக் கொண்டு அரேஞ்மெண்ட் மற்றும் மேலைத்­தேய முறையில் இசைக்­கு­றிப்­புக்­களை கால­கா­ல­மாக எழு­தி­வந்­த­வர்கள் அவர்­களின் உத­வி­யா­ளர்­க­ளான ஹென்றி டானியல். ஜோசப் கிருஷ்ணா, மற்றும் ஷியாம் போன்றவர்கள்.


இதில் இசைஞானியை ஒரு கொம்போசர் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அதற்கான சான்றுகளில் இது ஒன்று:

வா பொன்மயிலே ..நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது !

உலகின் பிரசித்தமான கம்போசர்களில் ஒரு ஒற்றைப் புல்லாங்குழலையும் அதற்குப் பக்கத்துணையாக வயிலின் கூட்டணியையும் மிக அழகாக, மனித உணர்வுகளை கன கச்சிதமாக வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகப் பயன்படுத்தியுள்ளவர்களில் முதல் ஐவரைப் பட்டியலிடச் சொன்னால் கண்டிப்பாக ராசையாவை அங்கே முன்னணியில் வைப்பேன். ராசையா அளவுக்கு அந்த ஒற்றைப் புல்லாங்குழலை பாடல்களுள் மிக அழகாக எவரும் பயன்படுத்தியிருப்பார்களா என்பது சொல்லத் தெரியவில்லை.

80 களில் வெளிவந்த இந்தப்பாடலை அதன் ஆரம்ப இசையை அந்த ஆரம்ப இசைக்குள் தட்டுத் தட்டாக புல்லாங்குழல் பாவிக்கப்பட்டுள்ள விதத்தை.. அந்தப் புல்லாங்குழலுடன் வயிலின் கூட்டணி இணைக்கப்பட்டுள்ள லாவகத்தை அவற்றின் சேர்க்கையானது பாலு என்ற ஒப்பற்ற பாடகனுக்குள் ஏற்படுத்தியுள்ள கிளு கிளுப்பைக் கேட்டுத்தான் பாருங்களேன். மனம் அப்படியே இலேசாகிப்போவது திண்ணம்.


இந்தப்பாடலை எழுதியிருக்கும் பஞ்சு அருணாசலம் அதன் ஆரம்ப இசைக்குள் புல்லாங்குழல் பாவிக்கப்பட்டுள்ள விதத்திற்கு ஏற்றாற்போல ( குயிலின் கூவலை ஒத்த வாசிப்பது ) பொன் மயிலே என்பதற்குப்பதிலாக குயிலே என்று எழுதியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ ????
உலகின் சிறந்த இசைக்கோர்வைகளில் புல்லாங்குழலை மிகச் சிறந்தமுறையில் பயன்படுத்தியவர்களாக:
பிரான்சின் பிலிப் போடின்,
இங்கிலாந்தின் அனா கிளின்
ஆர்ஜண்டீனாவின் மார்சல்லோ கொனோலஸ்
அமெரிக்காவின் அந்தோனி கொமிசெல்லோ
ஐரிஷின் ஜெறாட் பஃறி
அவுஸ்திரேலியாவின் ஆன் போய்ட்

போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள் ஆனால் இவர்களின் இசைகளைத் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான விதத்தில் புல்லாங்குழலைப் பயன்படுத்தியிருப்பது ஞானியாராகத்தான் இருக்க முடியும்.

உன் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றார் நபிகள்
இங்கே....
ஞானியார் அந்த ஒற்றைப் புல்லாங்குழலுடன் வயிலின் கூட்டணியை கவித்துவமாகப் பயன்படுத்தியுள்ள விதத்தால் உந்தப்பட்டு, அந்தப்பாட்டுக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு பாடும் பாலுவின் குரலையும் அவருக்கேயுரித்தான சில்மிஷ சங்கதிகளுடன் கூடிய பாடும் பாணியையும் கேட்டுக் கிறங்கும் போது
சொர்க்கம்......
இங்கேயும் ஞானியின் இசைக்குள்ளும் இருக்கிறது !!


இந்த இடத்தில் இன்னுமொரு மிக முக்கியமான விசயம் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது கடந்த 35 வருடங்களாக ஞானியாரின் புல்லாங்குழல்  கலைஞர்களாக இந்தத் தமிழ் இனத்துக்கு அரும்பணியாற்றிய அவரின் முதல்  புல்லாங்குழல்  கலைஞரான திரு. குணசிங் தொடங்கி  தற்போது அவருடன் பணிபுரிபவரும் நீண்ட நாட்களாக ஞானியின் கலைஞராக இருப்பவருமான  திரு.நெப்போலியன் வரை அசாதாரணக் கலைஞர்கள்.   இவர்களும் இசையில்  Creaters  என்பது இவர்களின் வாசிப்புக்களைக் கூர்ந்து கேட்போரால் புரிந்து கொள்ள முடியும்.


இந்த மகா கலைஞர்களும் இசையில் அவர்களின் பங்களிப்புக்களும் பாடல்களின் பெயர்களுடன் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.

இளையராஜாவின் இசையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றிரண்டு அல்ல ஆயிரமாயிரம் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.  அதில் சொற்ப செய்திகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன். 



மீண்டும் 1979 ஆம் ஆண்டுக்குச் சென்றால்,  ' நல்லதொரு குடும்பம் ' என்ற படத்தின் பாடல்கள்  நினைவிற்கு வருகிறது .  அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள்இருந்தாலும்  இரண்டு பாடல்கள் எல்லோராலும் அதிகம் பேசப்பட்ட பாடல்கள்.  






' செவ்வானமே  பொன் மேகமே '  என்ற பாடல் இளமை துள்ளலுடன் இனிமையாக இருக்கும் .  டி . எல் . மகாராஜன்,  சசி ரேகா ,ஜெயச்சந்திரன், கல்யாணி மேனன்  ஆகிய நான்கு பாடகர்கள் பாடியிருப்பார்கள்.  இரண்டு ஜோடிகள்  ஆடிப்பாடி மகிழ்வதை ராஜா இசையில் அழகாக கொண்டு வந்திருப்பார்.  கண்ணதாசன் வரிகளுக்கு கொடுக்கப்பட்ட இசை சுகம் தரும். ' ஹம்சத்வனி  ' ராகத்தில் உற்சாகமூட்டும் பாடலுக்கு கிடார், வயலின், குழல் கொண்டு மயக்கும் இசையை கொடுத்திருப்பார். இந்தப் பாடல் ஒலிக்கும்போதெல்லாம்   கூடவே சேர்ந்து பாடிக் கொண்டு திரிந்தது  இப்போது நினைத்தாலும்  இனிக்கிறது.  

                                                   

                            அதே படத்தில் '  சிந்து நதிக் கரையோரம் '  என்ற டூயட் பாடல் அதிகம் வானொலியில் இசைக்கப்பட்ட பாடல்.  டி . எம். எஸ்  , சுசீலாஇருவரும் இணைந்து  கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு உடல் அமைத்திட ஆபேரி ராகத்தில்  ராஜா அதற்கு உயிரூட்டியிருப்பார்.   இசையில் ராஜாவின் முன்னோர் பிரதிபலித்தாலும்  பின்னணி இசையில் ராஜாவின் கை  வண்ணம்தெளிவாகத் தெரியும் . சிவாஜி கணேசனுக்கு என்றே தனியொரு இசையை  கற்பனை செய்து வைத்திருப்பாரோ என நினைக்கத்  தோன்றும்.  நாற்பதை தாண்டியவர்கள்  இந்தப் பாடலை நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை.  நடுத்தர வயதில் ஏற்படும் காதல் ரசனைகளை பிரபலிக்கும் பாடலாக அமைந்து விடும் என்பது அந்த வயதில் புரியவில்லை.  இப்போது கேட்கும்போது  இனம் புரியாத எண்ண அலைகள் அலை மோதுவதை தவிர்க்க முடிவதில்லை.   இந்தப் பாடலை பாடியவர்கள் , பாடலுக்கு நடித்தவர்கள் , இசையமைத்தவர் என்று எல்லோருமே நடுத்தர வயதில் இருந்தார்கள்.  அதனால்தான் அந்த அலைநீளம் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் மனதை வருடும் பாடலாக அமைந்து போனது . 



                                         

                           நாற்பது வருடங்களாய் கொஞ்சமும் அசராமல் இசைக்காக தன்னையே அர்ப்பணித்துக்  கொண்டிருக்கும்  இசை ஞானியின் இந்தப் பாடல்கள்  எல்லாம் இன்னும் நாற்பது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் அதன்  இனிமை மாறாமல் இருக்கும்.  எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்த போதிலும் குறைவான தொழில் நுட்பத்தில் மிகவும் விரைவாகவும் தரமாகவும் ஆயிரக்கணக்கான பாடல்கள் ஆத்மார்த்தமாக படைத்திருக்கும் அந்த இசைப் பிரம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . 


                            பொருள் சேர்த்து விருது வாங்க நினைக்கும் மனிதரல்ல.  கொடுக்கப்பட்ட விருது சரியான அளவுகோலுக்கானது  அல்ல எனத்  தெரிந்து  அந்த விருதை நிராகரித்தவர்.  அதற்காக அவர் வெட்கப்படவில்லை. அவரைச் சென்று சேராமைக்காக விருதுகள்தான் வெட்கப்பட வேண்டும் . 


............................தொடர்வேன்..............................