Sunday 18 January 2015

இசை ராட்சஷன் - 6



                                                      இசை ராட்சஷன் - 6

                                                        ( The Musical Legend  )        


                                  1978 இல் இளையராஜா இசையமைத்த பாடல்களின் மெருகு கூடிக்கொண்டே சென்றது . தமிழகத்து மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து இசையைக் கொடுப்பதில் வல்லவராக அவர் உருமாறினார் . ஒரு பாடலைப் போல இன்னொரு பாடல் இருந்தது என்று எவரும் கூறிவிட முடியாதபடிக்கு அவருடைய இசைத் தேர்வு பாராட்டும்படி அமைந்தது. பாட்டுக்கும் மெட்டமைத்தார். மெட்டுக்கும் பாட்டு எழுத வைத்தார். காலப் போக்கில் மெட்டுகளுக்கு பாடல் அமைக்கப்படும் யுக்தி அதிகமானது. எதிர்காலத்தில் தன்னுடைய    அண்ணன்  பாவலர் வரதராஜன் அவர்களின் பாட்டுகளுக்கு மெட்டு கட்டி அதையும் ஹிட் ஆக்கியவர்  இளையராஜா.

                                     


                                அவர் இசையில் இசைக்கருவிகளின் நாதம் வித்தியாசமாய் ஒலித்தது . ரசிக்கும்படி இருந்தது. மற்ற இசையமைப்பாளர்களும் இசைக்கருவிகள் பயன்படுத்தி பாடல் அமைத்தார்கள்.  ராஜாவின் பாடல்களில் மட்டும் ஏன் அந்த வித்தியாசம் தெரிந்தது என்பதற்கு அப்போது என்னிடம் விடையில்லை . ஆனாலும் தெரிந்தது. அதுவே இளையராஜாவின் சிறப்பு , மகிமை, திறமை , புதுமை. புதியதொரு புத்துணர்வூட்டும் இசையை கொடுப்பதில் இளையராஜாவிற்கு நிகராக அப்போது யாருமேயில்லை.


                                   அதே காலகட்டத்தில் அவருடைய இசை முன்னோர்களும் இசையமைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அதிகமாகவோ கூட இசையமைத்தார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. சொற்ப படங்களின் பாட்டுகள் வெற்றியடைந்தன. தமிழகத்து  மூலை முடுக்குகளில் எல்லாம் ராஜாவின் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன . ஒவ்வொரு  படத்திலும்  இரண்டு மூன்று பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்ததை காண முடிந்தது. சில பாடல்கள் நெஞ்சைத் தாலாட்டின ,  சில  நெஞ்சில் தீ மூட்டின . சில பாடல்கள் பன்னீர் தெளித்தன , சில கண்ணீர் வரவழைத்தன .  சில பாடல்கள் போதையைத் தந்தன, சில பாதையைக் காட்டின . சில பாடல்கள் ஆனந்தம் தந்தன , சில ஆர்ப்பரிப்பைத் தந்தன.  தொடர்ந்து அவரிசை கேட்கும் ஆர்வத்தைத் தந்தன .  வார்த்தை ஜாலங்களுக்காய்  வெற்றி பெற்ற பழைய பாடல்கள் உண்டு. வார்த்தைகள் எப்படி இருந்தாலும் இசைக்காக வெற்றி பெற்ற ராஜாவின் பாடல்கள் அதிகம் .


                             சிறு வயதில் இத்தனை விஷயங்கள் புரிபடாமல் இருந்தது. இப்போதுதான் அவர் பாடல்களுக்கிருந்த வரவேற்பு  , அதற்கான காரணங்கள்
தெளிவாக தெரிகின்றன .  1978 இல் ' சிட்டுக் குருவி ' என்ற படத்தில் ' என் கண்மணி உன் காதலி '  என்றொரு புதுமையான பாடல் கேட்டு பிரமித்துப் போனேன். வித்தியாசமான பாடல் . இளமை ததும்பும் இனிமையான பாடல். ஒரு குரல் பாடும்போதே அதே குரல் அதன் மேல் விரவி வருவது போன்ற அமைப்பு.  இரண்டு டியூன்கள் பின்னி வரும் . இருவித  மெலோடியும்  ஒன்றை ஒன்று குறுக்கிடும் . அந்த வகை புதுமைப் பாடல் counter point வகையில் இசைக்கப்பட்ட பாடல் என்பது அப்போது தெரியாது . இளையராஜா பேட்டியில்
சொன்ன பிறகு புரிந்தது . இணைய தளத்தில் பல இசை ரசிகர்கள் பகிரும் செய்திகளின் அடிப்படையில் இப்போது அதன் பரிமாணம் புரிகிறது.


                         கேள்விக்கு பதிலாய்  இரு வேறு மெட்டுகளை ஒரே பாட்டில் சேர்ப்பது இந்த வகை. ஒரு குரல் ஒரு மெட்டில் பாடும்போது அவரின் மனசாட்சிக் குரல் வேறு மெட்டில் அதைத் தொடர்வது  கவுன்ட்டர் பாயிண்ட்
என்று இளையராஜா சொல்லி தெரிந்தது .  பாலுவும் சுசீலாவும் கேள்வியாக ஒரு மெட்டில் பாடிக்கொண்டே வர  இன்னொரு மெட்டில்  அவர்களது குரலே பதில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் . இது வித்தியாசமானதொரு முயற்சி . இதற்கு முன்னர் தமிழ்த் திரையிசையில் இளையராஜாவின் இசை முன்னோர்கள்  இதைச் செய்திருப்பதாக நான் கேள்வியுற்றதில்லை . மேலைநாட்டு இசை பிரபலங்கள் செய்திருக்கிறார்கள்.  அதை அகத் தூண்டலாக எடுத்துக்கொண்ட இளையராஜா புதிய முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இசைத்து வெற்றியும் கண்டார்.  இயக்குனர்கள்  தேவராஜ்- மோகன்  இருவருமே இந்தப் பாடலமைப்புப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லாததால் பாடலை மாற்ற முடிவெடுத்தார்கள் . இளையராஜாவிற்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர்கள் என்ற முறையில் ராஜா அப்பாடலை நிராகரிக்காமல்  அவர்களை சமாதானப்படுத்தி  இசையமைத்துக் காண்பித்தார்.  பாடலை ஹிட் ஆக்கினார்.


                         உற்சாகமாய் ஒலிக்கும் அந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.  எஸ்.பி. பி அவர்களுக்கு இந்த மாதிரி பரிசோதனை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல! அழகாகப்  பாடி அசத்தியிருப்பார். சுசீலா அவர்களும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார்.  காரணம் இளையராஜாவின் இசை அந்த அளவிற்கு அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கவேண்டும் .  ஒரு டவுன் பஸ் பயணத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே வரும்போது அவர்களின் உடலிலிருந்து உருவங்கள் பிரிந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே பாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும் . கண்டக்டரின் குரல் அவ்வப்போது இடைமறிக்கும் . நாமும் பஸ்ஸில் பயணம் செய்வது போலவே பாடல் இசைக்கப்பட்டிருக்கும் . அப்போது  திரையோடு  நாமும் சங்கமிக்கும் அளவிற்கு திரைப்படங்களும் திரையிசையும்  இருந்தன. இப்போது பெரும்பான்மையான படத்தோடும் பாடலோடும் ஒன்றிக்க முடிவதில்லை.  மனதில் ஒட்டுவதில்லை.

         
                         என் கண்மணி என்ற பாடல் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இளையராஜா அவர்களே ஒரு பேட்டியில் சொன்னதை ராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் அழகான பதிவு ஒன்றில்  தந்திருக்கிறார்.  ராஜா நேரடியாக சொல்வதை காணொளியிலும் காணலாம்.

                         http://isaignanibakthan.blogspot.in/2010/12/blog-post.html


                                 


                              அதே படத்தில் ' உன்னை நம்பி நெத்தியிலே'  என்றொரு  சுசீலா பாடும்  கிராமத்து வாசனை தடவிய  நாடோடிப் பாடல் . நாடோடிப் பாட்டு போல தெரியாதவாறு இளையராஜா அற்புதமாகக் கொடுத்திருப்பார். சோகமான சுகராகத்தில் அமைந்த பாடல் . பிரிந்துபோன காதலன் எப்போது திரும்பி வருவான் என ஏங்கித் தவிக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் மனக்குமுறலாய் அப்பாடல் ஒலிக்கும்.  கேட்ட மாத்திரத்தில் இனம் புரியா சோகம் வந்து நம் இதயத்தை அப்பிக் கொள்ளும் . படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் தலைவனைப்  பிரிந்த தலைவியின் புலம்பலை அழகாக
பாட்டெல்லாம் பாடி செய்யுள் விளக்கித்  தந்தபோது  புரியாதது  இந்தப் பாட்டைக் கேட்டவுடன் புரிந்தது.  போதிக்கும்போது புரியாததெல்லாம் பாதிக்கும்போது புரிந்தது.


                        வெள்ளைக் குயில் சுசீலா அதை அழகாக பாடியிருப்பார்.  இனம் புரியா சோகம் இதயத்தைக் கவ்வும் வண்ணம் பாடலும் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டிருக்கும்.  அழகிய வனத்து  ஆலமரத்தின் நிழலில்  நின்று கொண்டு  நாயகன் விட்டுப் போன திசையைத் தொட்டுவிடும் தூரம்வரை பார்வையிட்டு  பாடும் பாடலுக்கு  ஏற்றாற்போல உணர்வுகளை வயலினில் இழையோட வைத்திருப்பார் இளையராஜா . புல்லாங்குழலிலும் அதை நமக்கு புரிய வைத்திருப்பார் . பாட்டிடையே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருப்பவனின் ' ஓ........ஹ ' என்ற  மேய்ச்சல் ஒலியும் ஆடுகளின் பதில் ஒலியும்  சோகத்திற்கு கட்டியம் கூறும் சுருதியுடன்  சேர்த்திருப்பார்.  கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த கலைஞனின் கற்பனை ஊற்று இசையிலேயே கிராமத்துப் பின்னணியை கொண்டு வந்துவிட்ட உணர்வு அலாதியானது.

                                                  

       
  
     ' அடடடா ...மாமரக்கிளியே   உன்னை இன்னும் நான் மறக்கலையே ' என்ற பாடலும் இருமுறை ஒலிக்கும் .  பால்ய வயதில் நாயகனும் நாயகியும் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்த காலத்தில் பாடிய பாட்டை வாலிபத்தில் நாயகனை சந்திக்கும் வேளையில் நாயகி மீண்டும் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும் . சூழலுக்கு ஏற்றாற்போல பாடலின் இசை  பாந்தமாய் அமைத்திருக்கும் . சிறுவர்கள் விளையாடிக் கொண்டே பாடும் பாடல்கள் போலவே  அந்தப் பாடல் ஒலிக்கும் . கேட்டவுடன் மனசுக்குள் புகுந்து கொண்ட பாடல். கதையோட்டத்தோடு கலந்த பாடல்களை அனாயசமாக இளையராஜா கையாள்வார். தேவராஜ், மோகன் இருவருக்கும் தன் நன்றியை தெரிவிக்கும் முகமாக அத்தனைப் பாடல்களையும் தித்திக்கும் பாடல்களாக ராஜா கொடுத்திருப்பார். இப்போதும் தித்திக்கின்றது. ஜானகி அவர்களின் குரலில் அற்புதமான பாடல் .

  

        
                     ' தியாகம் '  என்ற நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவந்த நேரத்தில் எங்களது குடும்பம் மதுரைக்கு குடி பெயர்கிறது. கிராமத்து வாழ்க்கை முடிந்து நரக வாழ்க்கைக்கு ...இல்லை ....நகர வாழ்க்கைக்கு  காலம் இட்டுச் சென்றது .  முழுமையாக  குடிபெயருமுன் மதுரையில் உள்ள ஒரு கிறித்துவப் பள்ளியில் என் தந்தை என்னைச் சேர்த்தார் . குடும்பம் இன்னும் மதுரை வராததால் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன் . ஹாஸ்டல் அப்போது நரகமாய் தெரிந்தது. அடிக்கடி வீட்டு நினைவும் அம்மாவின் நினைவும் வந்து கண்கள் குளமாகி ஒரு மூலையில் சென்று அழுதுகொண்டிருப்பேன். கிராமத்தில் சுதந்திரப் பறவையாய் படபடத்து பறந்துகொண்டு திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு பாடல்கள் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த என்னை கூண்டுக்குள் கொண்டு வந்து அடைத்ததைப் போல் உணர்ந்தேன். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு ,பள்ளிக்கூடம், விளையாட்டு, தூக்கம் என அட்டவணை போட்டபடி எல்லாம்  நடக்கும். எல்லோரும் அதை ஒழுங்குடன் தொடரவேண்டும். ஒழுங்கு தவறினால் உதை  விழும்.  
                         
            காலை 5 மணிக்கு மணியடித்து எழுப்பி விட்டு முகம் கழுவி உடை மாற்றியோ மாற்றாமலோ ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ளவேண்டும்.  கிராமத்தில் 8 மணிக்கு எழுந்து 10 மணிக்கு பள்ளிக்கூடம் போனதெல்லாம் மாறிப்போனது. சுதந்திரம் சுக்குநூறாய் போனதை நினைத்து கவலை கொண்டிருந்த காலத்தில் ஒரே ஆறுதல் இசைதான்!
                        
               மதியச் சாப்பாடு வேளையில் மட்டும் ஒலிப்பேழை  மூலம் பாடல்கள் ஒலிக்கப்படும். அப்போதுதான் ' தியாகம் '  படத்தின் பாடல்கள் கேட்க நேரிட்டது. இளையராஜாவின் இசையில் இனிமையான பாடல்கள் என் மனசுக்குள் மழைச்சாரலை உணரவைத்தன . முகத்தில் புன்னகைப் பூக்களை மலர வைத்தன. இப்போதும் அந்தப் படத்தின் பாடல்கள் காற்றில் தவழும்போது மனசுக்குள் வலி ஏற்படுத்திய ஹாஸ்டல் நினைவு மயிலிறகு வருடும் அனுபவ சிலிர்ப்பு தருவதை உணர முடிகிறது. அன்று வெறுப்பை ஏற்படுத்திய ஹாஸ்டல் அனுபவங்கள் இன்று கட்டுப்பாடு ஒழுக்கம் கற்றுத் தந்த பாடங்களாய்  பார்க்கத் தோன்றுகிறது.  அன்றைய வலிகள் இன்று  முன்னேற்றப் பாதையின் வழிகளாய் தெரிகின்றன. தியாகம் படத்தின் பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் இந்த சுகமான நினைவுகள்  இப்போது அந்தப் பாடல்களைக் கேட்டாலும் எனக்குள் அலை போல எழுந்து அடங்கும். 
                    
            ' வசந்த கால கோலங்கள் ' என்று ஜானகி அவர்களின் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் தேன் கூட்டைப்  பிழிந்தெடுத்த தேன் மழை . சிலுசிலுவென முகத்தில் மோதும் தென்றல் காற்று. சோகத்தை சுகமாய் மாற்றித் தரும் அற்புதப் பாடல்.  கண்ணதாசனின் வரிகளில் பாடல் மக்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்றது . நாயகன் ஒழுக்கக் கேடானவன் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் நாயகி தன் விதி நினைத்து நொந்து பாடும் சூழலில் ' நல்லவேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் ...நன்றி நன்றி தேவா உன்னை மறக்கமுடியுமா '  என்று சிறிய அழுகையோடு  ஜானகி கொடுக்கும் சங்கதி எனக்கும் மறக்க முடியாது . நல்ல இசையை நல்ல பாடகரிடம் கொடுக்கும்போது அவர்கள் மென்மேலும் மெருகு சேர்ப்பது நம்மை எப்படியெல்லாம் பரவசப்படுத்துகிறது என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். 
                           
              
 அதே படத்தில் இன்னுமொரு  ஹிட் பாடல் 'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ' என்ற  டி .எம் எஸ் அவர்களின் கணீர்  குரலில் வந்த பாடல். ஒருமுறை அவருடைய புதல்வரிடம் ' அப்பாவின் பாடல்களில் எந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் '  என கேட்டபோது  இந்தப் பாடலை குறிப்பிட்டுச் சொன்னார் .  எனக்கும் இந்தப் பாடலின் மீது  அளவிட முடியாத பிரியம்  உண்டு. தனித்திருக்கும்போதோ  கவலை கொள்ளும்போதோ வாய்விட்டுப்  பாடுவேன்.  எம்.எஸ்.வி யின் இசைச் சாயலில் பாடல் இசைக்கப்பட்டிருக்கும் . சிவாஜி படம் என்றால் சோகப்பாடல் இல்லாமல் இருக்குமா!? பெரும்பாலும் அவருடைய படங்களில் சோக கீதங்கள் காலத்தால் அழிக்க முடியாத  எந்தக் காலத்திலும்  அளிக்க முடியாத இனிய கீதங்கள். இளையராஜாவும் அதன் தன்மையோ குணமோ மாறாமல் கொடுத்திருப்பார்.  சாதாரண வார்த்தைகள் கொண்டு அழகான தத்துவம் சொன்ன கண்ணதாசனின் வரிகளுக்கு  உயிரோட்டம் இசையில் இருக்கும் . ' மனிதனம்மா மயங்குகிறேன் ...தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே  ' என்ற வரிகள் பாடல் கேட்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.  இப்போது பாடல் கேட்டாலும் ஹாஸ்டல் வாழ்க்கை ஞாபகம் மலரும் நினைவுகளாய் மனதுக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது . 
                       
        அதே படத்தில்  ' தேன் மல்லி பூவே ' என்றொரு தேனிசைப் பாடலும் கேட்க சுகமானது.  டி .எம்.எஸ் , ஜானகி  டூயட்டில் இனிய கானம் . இதிலும் எம்.எஸ்.வி தெரிவார். ஆனால் பாடலுக்கான பின்னணி இசை அது இளையராஜா என்று காட்டிக் கொடுத்துவிடும் . 
 
                           ' காற்றினிலே வரும் கீதம் ' என்ற திரைப்படம் அம்மாவோடு பார்த்த ஞாபகம் . எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் மீரா படத்தில் பாடிய மிகவும் பிரபலமான பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து முத்துராமன் ,கவிதா நடிப்பில் உருவான படம் . அந்த நேரத்தில் கவிதாவிற்கு ரசிகர் மன்றம் மதுரையில்தான் வைத்தார்கள் .  மதுரையில் படம் ஓடினால் அந்தப் படம் ஹிட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை சினிமாக்காரர்களிடம் அப்போது இருந்தது. 
ஏன் இப்போதும் கூட சிலரிடம் உண்டு . மதுரையை மையமாக வைத்து காட்சி அமைத்தால் படம் ஓடும் என்று நினைக்கிறார்கள். 
           
                 'கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் ' பாடலைக் கேட்டு படம் பார்த்தபோதே அசந்து போனேன். அந்தப் படத்தில் இதைவிட ஹிட் பாடல் இருந்தாலும் இந்தப் பாடல் எனக்குள் ஏற்படுத்திய பரவசம் வார்த்தைகள் கொண்டு வடிக்க முடியாதது.  ஒரு தேவலோக கானம் போன்றே ஒலிக்கும் . படத்தின் காட்சியிலும் நாயகி தேவதையைப் போலவே தோன்றுவார் . நேரடியாகவும் ஆவி போலவும் வந்து  பாடுவதாய் இருமுறை படத்தில் பாடல் ஒலிக்கும் . படம் முழுவதும் இந்தப் பாடலின் ஹம்மிங் ஒலித்துக்  கொண்டேயிருக்கும் . பாடல் ஆரம்பிக்கும்போது ஜானகி அவர்களின் குரலில் எந்த இசைக் கருவியும் இல்லாமல் ஹம்மிங் ஆரம்பிக்கும் . ஏதோ ஒரு மாய உலகத்திலிருந்து ஒலிப்பது போலவே கேட்கும் அந்த ஹம்மிங் முடிந்து வயலினோடு சலங்கையும் சேர்ந்து இசை எழும்பும் . அப்போதே மனசு இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. முதல் BGM  முடிந்து மென்மையாக ஜானகி அவர்கள் கண்டேன் எங்கும் என்று ஆரம்பிக்க அத்துடன் தபேலா சேர்ந்து கொள்ள அந்த சுகானுபவத்தை என்னவென்று சொல்லத் தெரியவில்லை . 
                       
        இரண்டாம் சரணத்திற்கு முன்பு  BGM வித்தியாசமான பாதையில் சென்று  வேறு ஒரு ஹம்மிங் கொடுத்து மீண்டும் அதே பாதைக்குத் திரும்பி வருவது நான் அதுவரை கேட்டிராத புதிய பாணியாக தெரிந்தது. இதற்கு முன்னர் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் கேட்டிராத இசை   இளையராஜாவிடம் தெரிந்தது. இப்போது அந்தப் பாடல் கேட்டாலும் தென்றல் தாலாட்டும்  சுகமும் காலைப் பணியுணரும் சிலிர்ப்பும்  ஏற்படுகிறது . இரண்டாம் முறை அதே பாடல் வாணி ஜெயராமின் குரலில் வித்தியாசமான பின்னணி இசையோடு கொடுக்கப்பட்டிருக்கும் .  மறைந்து போன நாயகி மீண்டும் அதே பாடலை பாடிக்கொண்டிருப்பதைக் காணும் நாயகனின் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் இசையிலேயே இளையராஜா அழகாக கொடுத்திருப்பார். இரு வேறு பின்னனி   இசையோடு ஒரே பாடல் இசைப்பதை இளையராஜாவின் இசை முன்னோர்களும் செய்திருக்கிறார்கள் .
முகநூல் நண்பரின் செய்தி .

பிருந்தாவனசாரங்கா ,மத்யமாவதி போன்ற ராகங்களுக்கு நெருக்கமான "ஸ்ரீராகத்தில்" யாராலும் இது போலதொரு ஒரு பாடல் அமைக்க முடியுமா? எங்கள் ராஜாவைத் தவிர.இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம், ஜானகியின் தேனான குரலும் ராஜாவின் இனிய இசையும் எப்பொழுதும் என்னை என் பால்ய நாட்களுக்குக் கொண்டு சென்று விடுகிறது. Thank you Raja.










                            அதே படத்தில் ' சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் '  என்று ஜெயச்சந்திரனின் மயக்கும் மந்திரக் குரலில் பாடல் கேட்டபோது மனசெல்லாம் மத்தாப்பு. ஒரு படகோட்டி பாடல் பாடினால் 'ஐலசா ' என்ற ஓசை வரும்  குரலிசையோடுதான் இதுவரை பாடல் கேட்டிருந்திரிப்பேன்.  ' தய்யரத் தய்யா ' என்ற ஓசை ஒலிக்கும் பாடல் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது . பாடலின் ஆரம்பமே 'தய்யரத் தய்யா ' என்றே குரலிசையோடு ஒலிக்கும் . இந்தப் பாடலுக்கான இசை எங்கிருந்து வந்தது என்பது தெரியாவிடினும் என்னை எங்கோ கூட்டிச் சென்றது உண்மை . பாடலின் ஒவ்வொரு வரிக்கும் 'தய்யரத் தய்யா ' என்ற குரலிசை கூடவே வந்து நம்மை குதூகலமாக்கும்.  '  ஏ ..குரிய ஏலவாலி தண்டேல வாலி  தய்யரத் தய்யா ' என்று பல்லவியின் முடிவிலும் சரணத்தின் முடிவிலும் ஒலிக்கும் வார்த்தைகள் எந்த மொழி என்று தெரியவில்லை .  ஆனால் கேட்க சுவையாக இருக்கும். பாடலின் கடைசி பல்லவியில்   'தய்யரத் தய்யா' என்ற கோரசோடு  'ஆ..ஹா ' என்ற குரலிசையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே வருவது இன்னும் சிறப்பு.   ஒரு நாடோடிப் பாடலை எல்லோரும் இன்றுவரை முணுமுணுக்கும் வண்ணம் அம்சமாக கொடுத்திருக்கும் இளையராஜாவின் கற்பனை வளம் வார்த்தைகளால் அளவிட முடியாதது .  என்னுடைய ஹாஸ்டல் வாழ்க்கையில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியின்போது இந்தப் பாடலை நான் பாடிய ஞாபகம் இருக்கிறது. 
                         
            ' ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் ' என்ற பாடல் மிக மென்மையாக ஆரம்பிக்கும் பாடல் . ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி அவர்களின் குரலில் வந்த தேவ கானம் என்று சொல்லலாம் . இந்தப் பாடல் அப்போதைய சிலோன் வானொலியில் ஒலிக்காத நாளில்லை. பாடலின் கடைசி பல்லவியில் ஆண் குரல் பாட பெண் ஹம்மிங் கொடுப்பதும் பெண் குரல் பாட ஆண் ஹம்மிங் கொடுத்து முடிப்பதும் நமக்கு மயக்கம் ஏற்படுத்தும்.  படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல் . இளையராஜாவின் மணிமகுடத்தில் இதுவும் ஒரு வைரக்கல் . கிடார், வயலின், புல்லாங்குழல் மூன்றையும் முக்கிய கருவிகளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடல் . ராஜாவின் பின்னணி இசைக்கு பயன்படுத்தப்ப்பட்டிருக்கும் இசைக் கருவிகள் மீது அப்போது என் பார்வை விழுந்தது . அதற்கு முன்னால் அப்படியெல்லாம் யோசித்ததேயில்லை.  பாடலைக் கேட்டு ரசித்ததோடு சரி.  இளையராஜாவின் இந்தப் படத்தின்  பாடல்களை கேட்ட பிறகே அவர் பயன்படுத்திய இசைக்கருவிகள் மீது ஒரு ஆர்வம் உருவானது.  அதற்கு முன்னர் எந்த இசையமைப்பாளரும் அந்த ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியதில்லை . இளையராஜாவை கவனித்தபிறகே மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன் . ஒரு சில பாடல்கள் தவிர இளையராஜா ஏற்படுத்திய  பிரமிப்பை அவர்கள் எனக்கு ஏற்படுத்தவில்லை. 
                   
                     
                        http://play.raaga.com/tamil/album/Kaatrinile-Varum-Geetham-T0001299
                
                   
                                
              கர்னாடக இசையின் பிதாமகனாக போற்றப்படும் செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் இளையராஜாவின் இசை ஞானம் பற்றி சுருங்க அழகாக பேசியிருக்கிறார். கர்னாடக சங்கீதத்தில் அதிக ஞானம்                            
                 
                               
இருந்தால்தான்  சினிமாவிற்கான மெல்லிசையில் திறம்பட செயல்பட முடியும் என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார் .  இளையராஜாவிற்கு கர்னாடக சங்கீதம் தெரியுமா என சந்தேகம் கொள்வோர்  சிலருக்கு இவர் விளக்கம் தேவைப்படுவதால் இந்த காணொளி இங்கே அரங்கேறியிருக்கிறது. 
 
                   
    திரைப்படங்களில் இளையராஜா இசைத்திருக்கும் பலவிதமான இசைத் துணுக்குகளை ஒரு தொகுப்பாக ரசிகர் ஒருவர் கொடுத்திருப்பதை கேட்கும்போது  ' இளையராஜா இசை கேட்பதற்கு ராகம் , தாளம், பல்லவி தெரிந்திருக்கவேண்டும் என்று  அவசியமில்லை. தான் உணருவதை மற்றவர்களையும் உணர வைத்துவிடுவார் ' என்று ஒரு இளைய இயக்குனர் சொல்லியிருப்பதை உறுதி செய்கிறது. இளையராஜாவின் இசைக்கோலங்கள் கேட்கக் கேட்க ஆனந்தக்கடலில் மிதந்து கொண்டிருக்கும் அழகிய அனுபவம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. 
...................................தொடர்வேன்..................................
                                  

43 comments:

  1. சால்ஸ். புத்தாண்டில் புதுப்பொலிவுடன் தங்கள் அற்புத பதிவை வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள் .இசைஞானியைப் போலவே எல்லோரும் புரிந்தின்புறும் வகையில் எளிய நடையை கையாண்டமைக்கு நன்றி .#வார்த்தை ஜாலங்களுக்காய் வெற்றி பெற்ற பழைய பாடல்கள் உண்டு .வார்த்தைகள் எப்படியிருந்தாலும் இசைக்காக வெற்றி பெற்ற இளையராஜாவின் பாடல்கள் அதிகம் .#எவ்வளவு நிதர்சனமான உண்மையிது !காலத்தால் அழியாத ,அழிக்க முடியாத பாடல்கள் தந்த மாமனிதனின் சிறப்பைத் தொடர்ந்து எடுத்தியம்புங்கள் .வளரட்டும் இசைஞானியின் புகழ் !

    ReplyDelete
  2. ஹலோ அருள்ஜீவா

    முதல் வருகை . தொடர்ந்து என்னோடு நீங்கள் பயணிப்பதற்கும் கருத்துப் பரிமாற்றங்கள் புரிவதற்கும் நன்றி. எளிய நடை இளையராஜா இசை போலவே இருப்பதாகச் சொல்வதில் மகிழ்ச்சி . இளையராஜா இசையில் புரிய வைப்பதை எழுத்தில் புரிய வைப்பது கடினமாகத்தான் உள்ளது . மனது நிறைய சொல்ல துடித்தாலும் அவர் இசையை எடுத்தியம்ப வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படுகிறது. முடிந்தவரை சொல்ல முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. சால்ஸ்,

    புதிய பதிவுக்கு பாராட்டுக்கள். தடம் மாறாத பயணம்.

    படித்ததும் தோன்றியது ஒன்றுதான். ரொம்பவும் மெனக்கெட்டு எழுதப் பட்ட பதிவு போல தோன்றுகிறது. இளையராஜாவைப் பற்றி பலரும் சொன்னதையே எந்தவித தனித்தன்மையும் இல்லாமல் உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள். மேலும் counter point இசை வடிவத்தை உங்களுக்குத் தோன்றிய விதத்தில் விவரித்து உங்களின் இசை ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இளையராஜா என்றாலே எல்லா யதார்த்தங்களும் ஓடி ஒளிந்து கொண்டுவிடும் என்பதை அறிவிக்கும் எழுத்தாக இருக்கிறது இந்தக் கட்டுரை.

    இதில் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பாடல்களும் என் மனதை ஆட்கொண்டவையே. குறிப்பாக தியாகம் படத்தின் நல்லவெர்க்கல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் மிகவும் அருமையானது. நான் இன்றும் ரசிக்கும் பாடல். கண்ணதாசனின் கவிதை இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். கண்ணதாசன் இருந்தவரை ஒன்றும் செய்யமுடியாமல் ஒழுங்காக எழுதிய வைரமுத்துவையும் சில வருடங்களுக்குப் பின் ஓரங்கட்டியதும் இ.ராஜா படைத்ததெல்லாம் மலிவான இசை ரசனைக்கானது. பலரும் இன்று அதையே நினைவில் வைத்திருக்கிறார்கள். நீங்களும் விதிவிலக்கல்ல. பார்க்கத்தானே போகிறோம்.

    ReplyDelete
  4. வாங்க காரிகன்

    கண்ணதாசன் , வைரமுத்து நல்ல கவிஞர்கள்தான்! அவர்களின் வார்த்தைகளுக்கு உயிரூட்டியது இளையராஜாவின் இசை . கவிதையில்லா இசையை ரசிக்கலாம் . இசையில்லா கவிதையை ரசிக்க முடியாது. பாரதியாரின் கவிதைகள் கூட பாமர ஜனங்களாலும் ரசிக்கப்பட்டது சினிமா இசை வடிவில் கொடுக்கப்பட்ட பின்னரே என்பதையும் மறுக்க இயலாது. கண்ணதாசன், வைரமுத்துவிற்கு பிறகு இளையராஜாவின் இசையில் எந்த சரிவும் இல்லை என்பது என் பதிவில் போக போகத்தான் உங்களுக்கு புரிபடப் போகிறது.

    ReplyDelete
  5. நல்ல பதிவு நண்பரே..இனிய தகவல்கள்..

    ReplyDelete
  6. வாங்க நண்பா

    நன்றி நண்பா ! தொடர்ந்து வாங்க .

    ReplyDelete
  7. It should not be the musical legend but the music giant.

    ReplyDelete
    Replies
    1. அனானி

      நீங்கள் பள்ளி மாணவரா!? அப்படியே மொழி பெயர்க்கிறீர்கள்.

      Delete
  8. காரிகன். தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி .#இளையராஜா என்றாலே எல்லா யதார்த்தங்களும் ஓடி ஒளிந்து விடும் .#யதார்த்தங்கள் மறைக்கப்பட்ட இடத்தை தெளிவு படுத்தினால் நல்லது .தனித்துவம் இல்லாத கட்டுரை போல் உள்ளதென அங்கலாய்க்கிறார் .வார்த்தை ஜாலங்களோடு எழுதப்படுவதுதான் தனித்துவமோ ?நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல் தன்னைக் கவர்ந்தமைக்கு கண்ணதாசனின் கவித்துவத்தைக் காரணம் காட்டுபவர் இளையராஜாவின் சிற்சில பாடல்களை எடுத்துக்காட்டி தமிழிசையைச் சீரழித்தவர் என்றரைப்பது ஏனோ?இதுதான் இவரது நடுநிலை ரசனை போலும் .எது எப்படியாயினும் மங்காத இசைதந்த இசை சாம்ராஜ்ஜியம் குறித்த தகவல்களை வாரிவழங்க சார்லஸை கேட்டுக்கொள்கிறேன் .

    ReplyDelete
  9. சார்ல்ஸ்
    அலங்காரமற்ற எழுத்தில் அழகாக வடித்துள்ளீர்கள்.அதற்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.

    தனித்தன்மை இல்லாமல் எழுதிருப்பதாக புலம்பல்.அப்படியென்றால் என்ன இட்டுக்கட்டுவதா ..? நான் வாடா இந்தியாவில் இருந்த போது பஸ்ஸில் ஒரு பாடல் கேட்டு திடுக்கிட்டேன் ......? என்ற வகையா தெரியவில்லை.

    "நல்லவர்கெல்லாம் " பாடலை விட "கண்டேன் எங்கும் " பாடல் மிக அற்புதம்.ராஜாவின் இசைகோலம் புதுமை மிஞ்சி நிற்கும் பாடல் காலம் பல கடந்து இன்று கேட்டாலும் இனிமை மாறாத பாடல்.அதில் வரும் பின்னணி Isai ராஜாவின் பெருமையை காட்டிவிடும்.மற்ற பாடல்களும் நாம் மிக ரசித்தவை தான் !

    ராஜா கர்னாடக இசையில் " துறை போகியவரல்ல " என்றொரு "இசைஞானமிக்கவர்" முன்பு ஒருமுறை திருவாய் மலர்ந்தருளியிருந்தார்.செம்மங்குடியை அவருக்கு நினைவுபடுத்தியது நல்ல செயல்.சிலவேளை செம்மங்குடி பின்னணி பாட வாய்ப்புக் கேட்டு தான் அப்படி சொன்னார் என்றும் அவர் வாதிட்டாலும் ஆச்சர்யப்பைடுவதர்க்கில்லை.அவருக்கு பக்க வாத்தியம் வாசிக்க சிலர் வருவார்கள்.

    வைரமுத்து தான் ராஜாவை ஏற்றி விட்டது போல ஒரு பிரமை இங்கே ஆரம்பிக்கப்பார்க்கிறது கவனம்.

    வாழ்த்துக்கள் சார்ல்ஸ்.

    ReplyDelete
  10. A GOOD BEGINING CHARLES JI KEEP IT UP

    ReplyDelete
  11. A GOOD BEGINING CHARLES JI KEEP IT UP

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார் . உங்களின் கூகுள் பிளஸ் பக்கம் வந்தால் நீங்கள் பெரிய இசை ரசிகராய் இருப்பீர்கள் போலிருக்கிறதே ! 50 களில் ஆரம்பித்து இப்போது வரை உள்ள எல்லா பாடல்களையும் ரசிக்கிறீர்கள். நல்ல இசை ரசிகர்.

      Delete
  12. வாங்க விமல்

    ///வைரமுத்து தான் ராஜாவை ஏற்றி விட்டது போல ஒரு பிரமை இங்கே ஆரம்பிக்கப்பார்க்கிறது கவனம். ///

    நீங்கள் சொல்வது உண்மையே ! ஒரு பொய்யான தகவலை புடமிடப் பார்க்கும் வினோதம் அரங்கேறுகிறது. வைரமுத்து இல்லையென்றால் இளையராஜா இல்லாமல் போயிருப்பார் என்று திரிக்கப் பார்க்கும் அவலம் நுழையப் பார்க்கிறது. வைரமுத்து வருகைக்கு முன்னரே நூறு பாடல்கள் ஹிட் கொடுத்தவர் இளையராஜா என்ற உண்மையை நம்மைப் போன்றோர் எடுத்துச் சொன்னால்தான் புரியும். உண்மையில் இளையராஜாவின் இசையினால்தான் வைரமுத்துவே வெளிச்சத்திற்கு வந்தார் . ஏறிய பிறகு ஏணியை தள்ளி விடப் பார்த்தார். ஏணி அவரை புறம் தள்ளியது.

    ReplyDelete
  13. //ஏறிய பிறகு ஏணியை தள்ளி விடப் பார்த்தார். ஏணி அவரை புறம் தள்ளியது. //- super

    ReplyDelete
  14. https://www.youtube.com/watch?v=xg9ejSC3fMM

    ReplyDelete
  15. ஹலோ விமல்

    அந்த லிங்க் உள்ளே சென்று பார்த்தேன் . இசைஞானி பற்றி இன்னொரு இசைக் கலைஞனின் ஆத்மார்த்தமான பேட்டி அருமையிலும் அருமை.

    ReplyDelete
  16. எந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்றால்....? சொல்லத் தெரியவில்லை... அனைத்து பாடல்களும் ரசிக்கத்தக்கவை... இனிமை... தொடர வாழ்த்துக்கள்...

    தங்களின் கருத்துரை மூலம் தான் உங்களின் தளம் தெரியும்... நன்றி... நன்றி...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  17. தனபாலன் சார்

    தங்களின் வருகைக்கு நன்றி . உங்களைப் போன்ற பிரபல வலைப் பதிவர் என் தளத்திற்குள் வருவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது . தமிழ் வெளி அடைக்கப்பட்டுள்ளது . தமிழ் மணம் உள்ளுக்குள் நுழைய முடியவில்லை . நிகண்டு ஒன்றைத் தவிர வேறு தளம் தெரியவில்லை . அதனால் என் பதிவு பலரைச் சென்றடையவில்லை. உங்கள் பதிவு வாசித்து mp 3 பிளேயர் எப்படி சேர்ப்பது என்று தெரிந்து கொண்டேன். அதை இந்தப் பதிவில் சேர்த்துமிருக்கிறேன் . மீண்டும் நன்றி . தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  18. சார்ல்ஸ்

    காரிகன் தளத்தில் " ஓரம்போ பாடல் " பற்றி அண்டப்புளுகு ஒன்றை வழமை போல அவிழ்த்து விட்டிருக்கிறார்.அவருக்கு நான் இட்ட பின்னூட்டம.என்னை கண்டாலே அவர்களுக்கு குலை நடுக்கமாக இருக்கிறது.

    காரிகன்
    அமுதவனதும் உங்களதும் திரையிசை குறித்த அறிவை எண்ணி எண்ணி வியக்கிறேன் .
    "ஓரம் போ " பாடலா முதன்முதலில் தடை செய்யபட்டது.?1953 லேயே ஒரு பாடல் தடை செய்யபட்டது.

    என்ன பாடல் என்று கண்டுபிடித்து சொன்னால் 1000 பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்.
    விபரம் தெரியாமல் உங்கள் புளுகுகளை எல்லால் அவிழ்த்து விட வேண்டாம்

    ReplyDelete
  19. விமல்

    அப்படியா ! புதிய செய்தி . நாம் சொன்னால் பொய் என்பார்கள் . அவர்கள் சொன்னால் சரியான செய்தியாக இருக்கும் என நம்ப வைப்பார்கள் . ஓரம்போ கதை கேட்டீர்களா ? இப்படித்தான் எல்லாவற்றுக்கும் கதை வைத்திருப்பார்கள்.

    ReplyDelete
  20. சார்ல்ஸ் அவர்களே
    காரிகனும் அமுதவனும் [ ஓடி ஒளித்தவர்] சொல்லும் புரளிகலைத் தாங்க முடியல ..!காரிகனுக்கு இட்ட பின்னூட்டம்.தங்கள் பார்வைக்கு.என்னைக் கண்டாலே ஓடி ஒளிக்கிரார்கள் பாவம்.

    முடிந்தால் தங்கள் மின்னஞ்சலை தாருங்கள்.

    பின்னூட்டம் :


    அப்பாடி என்னமாய் ஜமாய்க்கிறார்கள் காரிகனும் அமுதவனும்! எவ்வளவு இசை ஞானம்,மேதமை..எத்தனை உண்மை ! ஆகா ,,ஆகா !

    இவர்களுடன் இன்னுமொருவரலடாறு அறிஞராக சேகரும் சேர்ந்திருக்கிறார பாருங்கள் அது தான் பிரமாதம்.பாரதி ராஜா வீ . குமார் அவர்களை ஒப்பந்தம் செய்தாராம்.இசை தலை கீழாகியிருக்கும் என்கிறார் காரிகன்.

    குருடன் வழி காட்ட செவிடன் ஆமோதிக்க , ஊமை பொழிப்புரை சொன்னானாம் ..!வீ .குமாரை எந்த படத்தில் பாரதிராஜா ஒப்பந்தம் செய்தார் ?
    16 வயதினிலே கதையை தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவுக்கு சொன்ன பொது அவர் பாரதி ராஜாவுக்கு சொன்னதே " எதையாவது எடு ,படத்தில் இளையராஜா இருந்தால் ஓகே !!" இந்த செய்தி அந்த நேரத்திலேயே பேசப்பட்டது.

    " ,,,நம்மைப் பொறுத்தவரை சாதி, இனம் என்ற அடிப்படையில் ஒரு கலைஞனை அணுகக் கூடாது என்பதுதான். திறமை, படைப்பாற்றல் என்ற கோணம்தான் நமக்கானது.." என்ற அருமையான தத்துவ முத்தை உதிர்த்திருப்பவர் வேறுயாருமல்ல ,,அமுதவன். இவர் தான் தனது பக்கத்தில் " சிவாஜி கண்ணதாசனை என்ன செட்டியாரே என்று அழைப்பதாக " பெருமையாக எழுதினார

    இசைக்கு வெளியே ராஜாவின் தனிப்பட்ட வீட்டு விவகாரனகளை எழுதுவதும் ,அவரை பார்ப்பன அடிவருடி என்று எழுதுவதும் எந்த வகை இசையில் சேர்க்கிறது ?வழிபாடு என்பது தனிப்பட்ட சுய விருப்பம் ! எம் எஸ் வியின் நெத்தியில் இருக்கும் பட்டையை யாரவது குறை சொல்ல முடியுமா ? சொல்லியிருக்கிறார்களா ..? கண்ணதாசன் அப்பட்டமாக இந்து புகழ் பாடவில்லையா ? அதைவிடவா ராஜாவின் செயல் மோசம் ?

    தமிழ் நாட்டில் சாதிக்கலவரங்களை பார்ப்பன சாதியினரா செய்கிறார்கள் ? ஒரு தாழ்ந்த சாதிக்காரன் வந்து விட்டானே ..!!அவனை எல்லோர்ரும் மறந்து கொண்டாடுகிறார்களே ..என்பது தான் அமுதவனின் ஆதங்கம் போலுளுள்ளது !!

    இல்லாத பொய்களுக்கு பொழிப்புரை எழுதுகி றார் காரிகன்

    *****எப்படி ஒரு பெரிய இசை சாம்ராஜ்யம் சரிந்தது என்பதை வரலாறு பதிவு செய்தே வைத்திருக்கிறது..******
    எங்கே சரிந்தது ? ரோஜா படம் வந்த போது " கிரிக்கட் மச் நடக்கும் போது சினிமா நடிகை புகுந்த கலவரம் தான் நடந்தது என்பது தான் பேச்சு.

    *****--பாரதி ராஜாவினால்தான் இளையராஜா முன்னேறினார் என்று சொல்கிறீர்களா?-- என்ற திரு சால்ஸ் அவர்களின் கேள்விக்கு பதில் நேரடியாக இல்லாவிட்டாலும் ஒரு விதத்தில் ஆம் என்பதே.***** காரிகன் ..இது தான் இந்த வருட நகைச்சுவை !!

    அந்த பாரதி இப்போ எங்கே ?
    ஹேராம் படத்தில் ஏன் எல்.சுப்பிரமணியம் நீக்கப்பட்டார் காரிகன் ? இன்னும் பல கெள்விகள நிலுவையில் உள்ளன

    ReplyDelete
  21. விமல்

    பொங்கி எழுந்து விட்டீர்கள். எவ்வளவு புரூடா, உடான்ஸ் , பொய் கலந்து எழுத முடியுமோ அவ்வளவும் கலக்கிறார்கள் . அதில் பெருமையும் பேசிக்கொள்கிறார்கள் . இளையராஜா பற்றி எவ்வளவு இழிவாக கதை திரிக்க முடியுமோ அவ்வளவும் செய்கிறார்கள் . நாம் இருவர் மட்டுமே அவர்களோடு வாதாட முனைகிறோம் . அதிலும் உங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். இளையராஜா ரசிகர்கள் பலர் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்நேரம் புகுந்து விளையாட வேண்டாமா ?

    நானும் ஒரு பின்னூட்டம் போட்டேன் . நிராகரிக்கப்பட்டது. 'இளையராஜாவின் சாதியை வைத்தா அவரை மதிப்பிடுகிறீர்கள் . படைப்பாற்றலை பார்க்கவில்லையா ? ' என்று கேள்வி கேட்டிருந்தேன் . இதற்கு பதில் சொல்ல முடியாதில்லையா ! இல்லாவிட்டால் சேகரைப் போல 2 லட்சம் பந்தயம் கட்டுங்கள் சொல்கிறேன் என்று சொல்லியாவது சமாளித்திருக்கலாம். பார்ப்போம். இன்னும் எவ்வளவு தூரம் போகிறதென்று!?

    ReplyDelete
  22. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்துகொண்டு பேசுங்கள்.

    சில விசயங்களை வார்த்தைகளில் புரியவைக்க முடியாது நேரடியாகக் கேட்டறிந்தால் மட்டுமே உணரமுடியும். ஈரோடு வாருங்கள் என் அலுவலகத்தில் உங்களுக்கு நிரூபிக்கிறேன் போக்குவரத்து செலவுகளை நானே தந்துவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சேகர் சார்

      வாதம் செய்வதற்காகவாவது வருகிறீர்களே! நன்றி. நேரடியாக வருவதால் என்ன சொல்லப் போகிறீர்கள் ? பத்திரிக்கைகளில் எழுதுவதை வைத்துத்தான் எல்லா செய்திகளும் நமக்குத் தெரியும் . திரை மறைவுச் செய்திகள் , மறைக்கப்பட்ட உண்மைகள் என்பது எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும் ?

      மேல் வர்க்கத்து இசையமைப்பாளர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து கிளம்பி வந்த ஒரு தமிழன் அவர்களுக்குச் சமமாகவோ அல்லது அவர்களை விட மேலாகவோ இசை சாம்ராஜ்யத்தை ஆண்டது , ஆண்டு கொண்டிருப்பது தனிப்பட்ட ஞானம், திறமை . அந்தத் திறமையைத்தான் நான் மெச்சுகிறேன் . சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணம் நின்று போகும் என்பது போல் பேசுகிறீர்கள் . பாரதிராஜா இல்லையென்றால் இளையராஜா இல்லை என்று நீங்கள் சொல்வதைத்தான் குறிப்பிடுகிறேன் .

      Delete
    2. பாரதிராஜா விவகாரம் ஒரு செய்தியாகவே எழுதினேன்.
      ........................................................................................................
      என்னுடைய வாதம் இளையராஜா இசையமைத்த பாடல்களின் தரம் பற்றியது . அந்த பாடல்கள் பாடும் பொழுது சுட்டிக்காட்டினால் மட்டுமே புரியும். அதற்கு மேல் உங்கள் விருப்பம்.

      Delete
  23. புரியவில்லை . அவர் பாடல்களின் தரம் குறைவானதாக இருந்தால் அவர் இவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்க மாட்டார். அவர் எல்லா பாடல்களையும் 'வேதா' போல் கொடுத்திருந்தால் எப்போதோ களத்திலிருந்து கழன்று போயிருப்பார். ஆனால் எப்படி இத்தனை காலம் நீடித்திருக்க முடியும் ?

    ReplyDelete
  24. சார்ல்ஸ்

    கட்டுக்கதைகள் , புராணக்கதைகள் எல்லாம் விடுபவர்கள் காரிகன் தளத்தில நின்று கூவட்டும்.
    பொய்களுக்கு பொழிப்புரை அவர்கள் எழுதுவது ஒன்றும் புதிதில்லையே ! தாண்டிய கதையை அமுதவனுக்கு மண்டையில் உறைக்கும் படி சொன்னோம்.பிறகு ஏதோ கிளாசிக்கல் என்று தனக்கு சம்பந்தமில்லாததை பற்றி மேதாவி போல எழுதத் தொடங்கினார்.
    அமுதவன் கோழைத்தனமாகக் காட்டும் வன்மம் ராஜா மீதிருக்கும் சாதியம்
    சார்ந்ததாகவே நான் கருதுகிறேன். அவர் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள் வெறுப்பின் உச்சம்.

    காரிகனும் ,அமுதவனும் உண்மையாகவோ , நேர்மையாகவோ ஒரு போதும் விவாதம் புரிவதில்லை.அதற்க்கான தகுதியும் நேர்மையும் அவர்களிடமில்லை.எங்காவது எழுத்து பிழை பிடித்து அதில் தொங்குவார்கள்.

    எத்தனை கேள்விகள் இன்னும் விடை சொல்லப்படாமல் நிலுவையில் உள்ளன.சில கேள்விகளுக்கு 5 வருடம் கெடுவும் கொடுத்துள்ளேன்.

    ராஜாவின் தனிப்பட்ட விவகாரங்களை பேசும் அமுதவன் ,அவர் தெய்வமாகப் போற்றும் சிவாஜி பற்றி , கண்ணதாசன், விசுவநாதன் பற்றிப் பேசுவாரா..?
    மேற்க் குறித்த புகழ் பெற்ற மேதைகள் குறித்த தனிப்பட்ட வாழ்க்கை / ஒழுக்க விபரணம் நமக்கு தேவையா ..?அதற்கும் அவர்களது கலைக்கும் நாம் ஏதும் தொடர்பு பேசுகின்றோமா?
    இளையராஜா கோவில் கட்டட்டும் , வீட்டில் கொலு வைக்கட்டும் ,அதற்கும் அவரது இசைக்கும் என்ன சம்பந்தம் ?

    தாழ்ந்த சாதியிலிருந்து ஒருவன் இப்படி உலக மேதைகள் வரிசையில் இடம் பெற்றுவிட்டானே என்று அமுதவன் கொதிக்கிறார் போலிருக்கிறது .

    காரிகன் இன்னுமொரு அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்கள் அதுதான் இந்த மாதத்தின் மிகப்பெரிய நகைச்சுவை.இளையராஜா இனம் தெரியாத இயக்குனர்களுக்கு இப்போது இசையமைக்கிறாராம்.அவர் பதிவுகளை இது போன்ற நகைச்சுவைகள் தானே நிரபுகின்றன .

    பாரதிராஜா , மணிரத்தினம் , ஆர் சுந்தரராஜன் , மணிவண்ணன் , மனோ பாலா , இப்படியே இன்னும் எத்தனையோ இனம் தெரியாத நபர்கள் எல்லாம் இளையாராஜாவின் இசையால் தானே வெளிச்சத்திற்கு வந்தார்கள்.

    காரிகனின் புலன் ஆய்வு மூளைக்கு இதெல்லாம் ஏறாது. குமுதம் சாவியால் அறிமுகப்படுத்தப்பட்ட , திரை உலகின் மர்மங்கள் தெரிந்த மேதாவியின் கண்களுக்கு இதெல்லாம் புலப்படாது.

    சேகர் சொல்லும் தொழில் நுட்பக் கோளாறைப் பற்றி பேசுபவர்கள் , இப்போ வருகிற டிஜிட்டல் [வெட்டி ஒட்டும் ] முறைகளைத் தான் பலரும்குறை சொல்கிறார்கள்.

    ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ...அந்தக் குறையோடு ராஜாவின் பாடல்கள் இவ்வளவு சிறப்பாக இருக்கிறதென்றால் ......!

    ReplyDelete
    Replies
    1. விமல்

      ப்ரியா படத்திலிருந்துதான் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது . அதற்கு முன்னரே இளையராஜா நூறு பாடல்களை தரத்துடன் கொடுத்திருக்கிறார் . தொழில் நுட்பத்தால்தான் இளையராஜா முன்னேறினார் என்று ஒரு தவறான போதனை புகுத்தப்படப் பார்க்கிறது. நாம் தெளிவான விளக்கங்கள் கொடுத்தாலொழிய மக்கள் அதை உண்மை என நம்பி விடக்கூடும் அபாயம் உள்ளது. இன்னும் சில இளையராஜா ரசிகர்கள் சரியான விளக்கங்களோடு வந்தால் பொய்யுரை பரப்பும் நண்பர்களுக்கு சவாலாக இருக்கும் .

      Delete
  25. sekarjis comment about ilayarajas musical quality is very unfortunate..the fact isilayaraja had the divine blessings of the almighty when he had scored music to many immortal songs.all music directors had reservations. msv had sidelined amraja ilayaraja did not encourage lr eswari... one cold quote manyincidents.... let us admit the immense musical talents of our music directors right from dhakshinamoorthyji to present aniruddh.... best wishes to all

    ReplyDelete
    Replies
    1. I think you always accept all music directors and their creativity. Like you , I appreciate the legends and all the seniors of Ilayaraja and their creativities in music . But I wonder Ilayaraja's musical representation more than that of all. Because he only touches my soul with his music. But some people wrongly deny his creativity and blindly say some false concepts against Ilayaraja . I can't afford it.

      Delete
  26. சார்ல்ஸ்

    தங்கள் பதிவு அருமை.எத்தனை விதம் விதமான பாடல்களை இசைஞானி நமக்குத் தந்துள்ளார்.அத்திப்பூ நிகழ்ச்சி பற்றிய தங்கள் குறிப்பும் நன்று.எத்தனையோ நல்ல பாடல்கள் கேட்காமல் மறக்கப்பட்டன. எத்தனையோ அருமையான பாடல்களைத் தந்த தந்த இசைஞானிக்குத் தான் நன்றிகள்.

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ?தங்களுக்கு யார் என்று புரியும் .

    விமல் போடுற போட்டிலே இவங்க திருந்துவாங்கன்னு நம்புவோம்.

    தொடருங்கள்.என் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிவா

      இளையராஜாவின் மற்றொரு ரசிகர் . வருகைக்கு நன்றி. இளையராஜா தமிழிசையை கெடுத்தவர் என்று ஒருவரும் சாதியைக் குறித்து பேசும் ஒருவரும் ராஜாவின் பாடல்கள் தரமற்றவை என்று மற்றொருவரும் பேசும் பேச்சை கேட்டிருப்பீர்கள் . தொடர்ந்து இதைப் போன்ற பொய்யுரைகளை பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு சிலரைப் பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். இளையராஜா இசை கேட்டு அவர்களை மன்னிப்போம். ஏனென்றால் அவர் இசை நமக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது.

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. சால்ஸ்,

    ரஹ்மானின் வெற்றிக்கு அப்போதைய தொழில் நுட்பம் பெரியதாக உதவியதாக ராஜா ரசிகர்கள் சப்பைக் கட்டு கட்டுவதுண்டு. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 80களில் சாத்தியப்பட்ட தொழில் நுட்பத்தால் இளையராஜாவுக்கும் அதே வெற்றி ஏன் உதவியிருக்கக்கூடாது என்பதே இங்கு எழுப்பப்படும் கேள்வி. உங்கள் இரா மட்டும் சொந்த திறமையினால் புகழ் பெற்றார். ரஹ்மானுக்கு அறிவியல் தொண்டு செய்தது என்ற உங்களின் புனைவுக்கு உங்கள் நண்பர் --அவர் யாரென்று சொல்லவே வேண்டியதில்லை-- மட்டுமே தலையாட்டுவார். மேலும் வேறு பெயர்களில் வந்து தான் சொன்னதை குறித்து ஆர்ப்பரிப்பார்.

    தரமில்லாத தொழில் நுட்பத்தால் தான் இழந்த பல லட்ச ரூபாய் பற்றி சேகர் கூறுவதை பற்றிய உங்கள் கருத்து என்ன? அவர் கூறும் உண்மையை நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க காரிகன்

      ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள் . வருக!

      ரகுமான் அவர்கள் ஒரு பாட்டிற்காக பல நாள் செலவழிப்பவர் . வெட்டி ஒட்டி பிரித்து சேர்த்து ஏற்றி கொஞ்சம் கொஞ்சமாக தொழில் நுட்ப உதவியுடன் பாடலை பதிவு செய்பவர் . ஆண் பாடகர் ஒரு நாளும் பெண் பாடகர் இன்னொரு நாளும் கோரஸ் குழு வேறொரு நாளும் சில வாத்தியக்காரர்கள் மற்றொரு நாளும் வந்து அவர்கள் வேலையைச் செய்து கொடுத்துவிட்டு போவார்கள். அந்த மாதிரி உருவான பாடலில் என்ன உயிர் இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

      இளையராஜா காலை 7 மணிக்கு ஆரம்பித்து பகல் ஒரு மணிக்குள் எல்லா இசைக் கலைஞர்களையும் ஒருசேர வைத்து ஒரு பாடலை பதிவு செய்பவர். யார் யாருடன் சேர்ந்து பாடினோம் சேர்ந்து இசையமைத்தோம் என்று தெரியும் . அப்படி உருவாக்கப்பட்ட பாடலில் உயிர் இருக்கும் . தொழில் நுட்பம் பயன்படுத்தினாலும் 80 களில் அதன் வீச்சு மிகக் குறைவு . ராஜாவை விட ரகுமான் அதிக அளவில் தொழில் நுட்பம் பயன்படுத்தியவர் என்றால் அது மிகையில்லை.

      ராஜாவின் பாடல்கள் ரகுமானின் பாடல்களை விட அதிக காலம் நீடித்திருக்கிறதே ! ரகுமான் வந்து 22 வருடங்கள் . 90 படங்கள் . ராஜா வந்து 38 வருடங்கள் . 1000 க்கும் மேற்பட்ட படங்கள் . யார் சாதனை அதிகம் ?

      Delete
  29. காரிகன்

    தரமில்லாத தொழில் நுட்பத்தால் சேகருக்கு என்ன செலவு எப்படி செலவு ஆனது என்பதை அவர் விவரமாக எடுத்துச் சொன்னால்தான் புரியும். பூடகமாகவே பேசிக் கொண்டிருந்தால் என்ன புரியும்? ராஜா அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்று சொல்கிறாரா? எப்படி?ராஜா பாடல்களை நல்ல தரத்தோடுதான் நாங்கள் கேட்டு வருகிறோம். உங்களுக்கு மட்டும் எப்படி தரமில்லாமல் போகும்? ராஜாவை வைத்து இசைப் பதிவு செய்தாரா? ஒலிப்பதிவுக் கூடம் நடத்தி நட்டம் அடைந்தாரா? இப்போது யார் நடத்தினாலும் நட்டம்தான் . இணையத்தில் எல்லாம் கிடைக்கிறதே!

    ReplyDelete
  30. உங்கள் கருத்து அபாரம். எனக்குத் தெரிந்த சிலவற்றை சொல்கிறேன்.

    70கள் வரை இசை அமைப்பு முறை வேறுமாதிரி இருந்தது. அனைத்து வாத்தியக்காரர்களும் ஒரு பாடலுக்கான இசையை அப்போதே அமைப்பார்கள்.பாடகர்கள் அங்கேயே பாடவேண்டும். இதில் ஒரு இழை பிழையானாலும் back to square one. மீண்டும் முதல் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். நீங்கள் குறிப்பிடும் உயிர் இதில் இருந்தது. இளையராஜாவின் வருகைக்கு பின்னும் இந்த நிலைதான். எண்பதுகளில் (என்று நினைக்கிறேன்) புதிதாக track சிஸ்டம் வந்தது. ஒரு பாடகர் பாடலைப் பாடுவார். மற்றொரு பெரிய பாடகர் அதே பாடலை தன் குரலில் பாட பாடல் பதிவு செய்யப்படும். இது தொழில்நுட்பத்தின் அடுத்த பரிமாணம். இது இளையராஜா காலத்தில் வந்த மாற்றம். அதை அவர் திறம்படவே செய்தார். அப்போதும் பாடல்களில் உயிர் இருந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அறிவியல் நீட்சி ரஹ்மான் காலத்தில் ஒரு பாடலை பாடகர்களும் வாத்தியக்காரர்களும் ஸ்டூடியோவுக்கு வராமலே பதிவு செய்யக்கூடிய வசதியை அளித்தது. ரஹ்மான் இந்த தொழில் நுட்பத்தை கையாள்கிறார். இப்போது உயிர் போய்விட்டது என்று புலம்புகிறீர்கள். உயிர் எங்கேயும் போகவில்லை. அதை கண்டுகொள்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் போனது உங்கள் இ ரா தான். அதனால்தான் இத்தனை ஆதங்கம், அழுகை, பொறாமை, கோபம்..எல்லாம் பொங்குகிறது.

    அடுத்து --- ரகுமான் வந்து 22 வருடங்கள் . 90 படங்கள் . ராஜா வந்து 38 வருடங்கள் . 1000 க்கும் மேற்பட்ட படங்கள் . யார் சாதனை அதிகம் ?-----என்ற மிக மடத்தனமான வாதம். ஆயிரம் படங்களுக்கு இசை அமைப்பது சாதனைதான். எம் எஸ் விஸ்வநாதன், சங்கர் கணேஷ் போன்றவர்கள் ஏற்கனவே இதை செய்திருக்கிறார்கள். ரஹ்மானின் சாதனைகள் வெறும் பட எண்ணிக்கையால் எழுதப்படக்கூடியதல்ல. இரா வின் களம் தளம் வேறு. அங்கே அவர் சாதித்தார். ரஹ்மான் அலைவரிசை வேறு விதம். அங்கு அவர் சாதித்துக்கொண்டிருக்கிறார். நான் இப்படித்தான் இதைப் பார்க்கிறேன். மேலும் இ ரா காலத்தில் பல விதமான இசை அமைப்பாளர்கள் வர முடியாத சூழல் இருந்தது. ரஹ்மான் வந்த பிறகே இந்த சர்வாதிகாரப் போக்கு மாறியது. இ ரா போன்று எல்லா படங்களையும் கையில் எடுத்திருந்தால் இந்நேரம் ரஹ்மான் ஆயிரம் நோக்கி போய்க்கொண்டிருப்பார்.

    உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை கொஞ்சம் பரிதாபப்படக்கூடியதுதான். இ ரா வை பாதுகாக்க இன்னும் இது போன்ற அபத்தமான சில்லுவண்டுக் கருத்துக்களை தேடி, தோண்டி எடுத்துக்கொண்டு வாருங்கள்.

    ReplyDelete
  31. ஹலோ காரிகன்

    இளையராஜா காலத்தில் ஏராளமான இசையமைப்பாளர்கள் இருந்தார்கள் ; இசைத்தார்கள் . யாரையும் இளையராஜா தடுக்கவில்லை . ஆனால் ராஜா இசைச் சுனாமி முன்னே அவர்கள் யாரும் எடுபடவில்லை . சுருண்டு போனார்கள். இன்னொரு காரணம் அவர்களுக்கென்று தனித்த பாணி இல்லாமல் போனது . ராஜாவின் பாதிப்பு எல்லோரது இசையிலும் இருந்தது. அதனால் மக்கள் அவர்களை அதிகமாய் வரவேற்கவில்லை .


    தனக்கு வந்த நிறைய வாய்ப்பை ராஜா நிராகரித்ததோடு தேவாவை பரிந்துரை செய்திருக்கிறார் . இந்த விஷயம் எல்லாம் தெரியாதது போல் நடிப்பீர்களே! ராஜாவின் சர்வாதிகாரம் இசையிலும் ஒரு பாடலை உருவாக்குவதிலும் மட்டுமே இருந்தது . அடுத்த மனிதரை கெடுத்துப் பிழைப்பதில் இருந்ததில்லை . திரைப் படத்திற்கு நீ இயக்குனர் இசைக்கு நான்தான் இயக்குனர் . எனக்கு விளக்கம் தேவையில்லை என்ற அவரது கொள்கையை நீங்கள் சர்வாதிகாரத்தனமாக பார்க்கிறீர்கள். ஆனால் சில நேரங்களில் சில துறைகளில் அது தேவைப்படுகிறது . அப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். வரலாறும் படைத்திருக்கிறார்கள் . இளையராஜாவின் முழுமையான இசைஞானம் அதனால்தான் வெளிப்பட்டது.

    ரகுமான் இசையில் திரைப்பட எண்ணிக்கையை வைத்து அளவிடுவது மடத்தனம் என்று சொல்லும் நீங்கள் இன்னொரு பின்னூட்டத்தில் ' வத வதவென்று பன்னிக்குட்டிகள் போல ' படங்கள் கொடுத்தவர் ராஜா என்று அவரைச் சாடியிருந்தீர்கள். உங்கள் வாதப்படி அது எம்.எஸ்.வி , சங்கர் கணேசுக்கும் பொருந்தும் . சரக்கு இல்லாததால்தான் ரகுமான் ஒரு படத்திற்கு ஆறு மாதம் எடுக்கும் மாயாஜாலம் காட்டுகிறார். காஸ்ட்லி இசையமைப்பாளர் என்று மாயை உருவாக்கிக் கொண்டார். அதிக பணம் செலவழித்து எடுப்பவர் மட்டுமே ரகுமானை அணுக முடியும் என்ற யதார்த்தம் இருப்பதால் இதையும் சர்வாதிகாரப் போக்கு என்று எடுத்துக் கொள்ளலாமா?



    ReplyDelete
  32. //ரஹ்மான் வந்த பிறகே இந்த சர்வாதிகாரப் போக்கு மாறியது. இ ரா போன்று எல்லா படங்களையும் கையில் எடுத்திருந்தால் இந்நேரம் ரஹ்மான் ஆயிரம் நோக்கி போய்க்கொண்டிருப்பார்.
    /// காரிகன்

    " சர்வாதிகாரப் போக்கு .."

    நல்ல கட்டுக்கதை.உங்களைப் போல ஒருவர் கிட்லருக்கு கிடைத்திருந்தால் அவர் இந்த உலகத்தயே பிடித்திருப்பார்! பாபம் என்ன செய்ய...! அவரது துரதிஸ்டம் ..!ஹிட்லருக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத ஒருவர்க்கு இப்போ நீங்க கிடைத்திருக்கிறீர்கள்.

    அது சரி காரிகன் ,நீங்க எந்த உலகத்திலிருந்து வந்தீர்கள்? சௌந்தர்யன் , மனோஜ் கியான் , சிவாஜிராஜா , ஏ ஏ ராஜ் , சங்கர் கணேஷ் , எம் எஸ் விஸ்வநாதன் , மரகதமணி , ரவீந்திரன் ,தேவேந்திரன் ..என்ன பூப்பறித்துக் கொண்டிருந்தார்களா ?

    இதை சொன்னதற்காக பழையவர்களை இழிவு படுத்தி விட்டான் என்று முறைப்பாடு வைக்க வேண்டாம்.மின்னஞ்சல் போட்டு உங்கள் படையணிகளை கொண்டுவர தேவையில்லை.

    ஒட்டு மொத்த திரையுலகமே ராவின் கையிலா இருந்தது?உங்கள் சில்லூண்டித்தனமான கருத்துக்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளவும்.

    இன்னுமொரு அண்டப்புளுகை உங்கள் தளத்தில் கூறி உங்கள் அறியாமையையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள், இளையராஜா பெயர் தெரியாத இயக்குனர்களுக்கு ஹிந்தியில் இசையமைப்பதாக ....
    பாரதிராசா , மணிரத்தினம் தொடங்கி இன்று மிகப்பெரிய இயக்குனர்கள் பலரும் ராஜாவிடம் பெயர் தெரியாதவர்களாகத்தான் வந்தார்கள்.இதொன்றும் ராஜாவுக்கு புதிதல்லவே.

    உங்கள் நிலைமை சிரிப்புக்கிடமாகவே இன்னும் இருக்கிறது. பல கேள்விகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

    ரகுமான் காப்பி சக்கரவர்த்தி !
    ராஜா உலகின் தலை சிறந்த 26 இசையமைப்பாளர்களில் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. விமல்

      உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் 9 வது இடத்தைப் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை இளையராஜாவிற்கு உண்டு .

      Delete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. நன்றாக சொன்னீர்கள் விமல்.

    இ ரா போன்று எல்லா படங்களையும் கையில் எடுத்திருந்தால் இந்நேரம் ரஹ்மான் ஆயிரம் நோக்கி போய்க்கொண்டிருப்பார். //

    எல்லா படங்களுக்கும் தான்தான் இசையமைக்கவேண்டும் என்று ராஜா சார் யாருக்கும் ஆணையிடவில்லை. அவரை தேடி வந்துதான் அவர் இசை கிடைக்காதா? என்று ஏங்கி வேற இசையமைப்பாளர் நோக்கி போன படங்களே ஆயிரம் மேல் இருக்கும். ரகுமானை தேடி இங்கே எந்த சிறிய தயாரிப்பாளரும் தயார் இல்லை, நம் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் தான் எடுக்கப்படுவதில்லை. அப்படி ஒன்று நடந்தாலும் ரகுமான் ஐநூறு கூட தாண்டமுடியாது. ஏனென்றால் அவரிடம் அந்தளவுக்கு இசை கைவசம் இல்லை. இன்னும் பத்து பிறவி எடுத்து வந்தாலும் ராஜா சார் பட எண்ணிக்கையை ரகுமான் தொட முடியாது. காரிகன் அவர்கள், நீங்கள் இன்னுமும் கண்கள் மூடியே வாழ்கிறீர்கள். இனிமேலும் அப்படித்தான் வாழ்வீர்கள். ஒருமுறை இயக்குனர் பால்கியிடம் ''உங்களுடன் சேர்ந்து படம் செய்ய வேண்டும்'' என்று நேரிடையாகவே வாய்ப்பு கேட்டர்வர் தான் ரகுமான். ராஜா சாரிடம் அவர் இருப்பது கண்ணுக்கு உறுத்துகிறது போல. மணிரத்னம், ஷங்கர் மட்டும் படம் எடுப்பதை நிறுத்திவிட்டலோ அல்லது ரகுமானை கலட்டிவிட்டலோ ரகுமான் வீட்ல தன்னுடைய பழைய பாடல்களை கால் ஆட்டி கொண்டு கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இது தான் உண்மை. ரஜினி, ரவிக்குமார் எல்லாம் ஏதோ வெளிநாட்டு வியாபாரத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அதையும் கோச்சடையன், லிங்கா தோல்வியில் பார்த்து விட்டனர். மணிரத்னம் வேற யாரிடமும் போக தயக்கம். ஷங்கர் விட்டால் போய் விடுவது போல இருக்கிறார். முத்து கவிஞர் வைத்து ஷங்கரை தக்க வைத்துகொண்டு இருக்கிறார் ரகுமான் டைமன்ட் தான் எல்லோரையும் ஒன்றிணைக்கும் தரகு வேலை பார்ப்பவர். இது அவர்கள் படவிழாவில் நன்றாக தெரியும்..அவர்கள் பேசும் பேச்சில். ஒன்றுமில்லாததை ஏதோ சாதனை போல ஒருவருக்கொருவர் பாராட்டி பேசுவது, ஒருத்தருக்கொருத்தர் காலை பிடித்துகொண்டு தான் இருக்கின்றனர் என்று. யாராவது காலை இழுத்து கொண்டு விட்டால் அதில் பாதிக்க போவது டைமொண்டு கவியும், ரகுமானும் தான். இது இன்னும் கொஞ்ச நாளில் நடக்க போகுது. சரித்திரம் திரும்பும் அப்போது தெரியும் யார் உண்மையான கலைஞன், இசை என்று.

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்