Wednesday 29 April 2015

இசை ராட்சஷன் - 9 ( The Musical Legend )


                                             திரையிசையின்  முதல் நவீனம்

                                              பண்ணைப்புரத்து  புல்லாங்குழல்

                                              தென்னகத்து வடக்கு இசை மோகத்தை

                                               புரட்டிப்போட்டு  நமது

                                                கிராமியத்தையும் பாரம்பரியத்தையும்
           
                                                திரட்டிக் கொடுத்த அகத்தியன்

                                                இசை மாணாக்கர்களின் பல்கலைக்கழகம்

                                               ' பாக் 'கையும்  'பீத்தொவனை'யும் தமிழுக்கு

                                                 பரிச்சயம் செய்த பாவலன்

                                                 திரையிசையின்  திருவண்ணாமலை

                                                 அவரின் ஆயிரம் படங்கள்

                                                  இன்னிசையின் காலடித் தடங்கள்

                                                  அவரின் ஒரு வாசகம்

                                                   எங்களின் திருவாசகம்

                                                   குருபரனும் ஒருபரனுமாகிய  இசைஞானி !

ஒரு விழாவில் இளையராஜாவை விளிப்பதற்காக  வாசிக்கப்பட்ட கவிதை .
இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ; மிகையானதல்ல.
                                               

                                 

                          பாரம்பரிய  கர்னாடக  இசையை மட்டும் சினிமாவில் கொடுத்து வந்தபோது அதை அதிகம் கொண்டாடாத மக்கள் கூட்டம் மெல்லிசையாக மாற்றப்பட்டபோது  அதிகம் கொண்டாடவும் வரவேற்கவும் செய்தார்கள் . இளையராஜாவிற்கு முன்னால் இருந்த எத்தனையோ இசை விற்பன்னர்கள் மெல்லிசையை சினிமாவிற்கான அழகான திரையிசையாக உருமாற்றினார்கள் .  மக்களை தங்களின் இசையாலும் பாடல்களாலும்  அழவும் சிரிக்கவும் உருகவும் வைத்தார்கள் . ஏனென்றால் அந்தப் பாடல்கள் எல்லாம் மக்களின் எளிய வாழ்க்கையையும் அனுபவங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவையாய் இருந்தன. ஆனாலும் மக்கள் அந்தப் பாடல்களையெல்லாம் நடிகரின் பாடல்கள் என்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.    இசையமைப்பாளர்கள் மறைக்கப்பட்டிருந்தார்கள்.


                       இளையராஜாவின் வருகைக்கு பின்பு  நடிகரின் பாடல்கள் என்று பேசப்படுவது மறைந்துபோய்  இசையமைப்பாளரின் பாடல்கள் என்று பரவலாய் பேசப்பட்டது . 1978 இல் வந்த பாடல்களே அந்த நிலையை அடைந்தன என்பது கண்கூடு.  78 இல் வந்த திரைப்படங்களில் '   முள்ளும் மலரும்' என்ற படம் இசையிலும் இயக்கத்திலும் ஒரு மறுமலர்ச்சியை  ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

                                                             
                                     

                        ' முள்ளும் மலரும்  ' ரஜினி நடிப்பில் மகேந்திரன் அவர்கள் இயக்கிய வெற்றிப் படம். தமிழ்த் திரைப்படக் காவியங்களுள் ஒன்று . ரஜினி வித்தியாசமான முரட்டு அண்ணன் பாத்திரமேற்று நடித்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்திற்கென்று சொல்லப்படும் குறிப்பிடத்தகுந்த படங்களுள் இதுவும் ஒன்று . இளையராஜா இப்படத்தில் ஒரு இசை யாகம் நடத்தியிருப்பார். படம்  முழுவதும்  ஆங்காங்கே அவருடைய  முத்திரை பதிக்கும் அக்மார்க் இசைத்துணுக்கு இசைக்கப்பட்டு வந்திருக்கும். கதாபாத்திரங்களோடு  நாம் ஒன்றிப்போகுமளவிற்கு கதை மட்டுமல்ல , இசையும் நம்மைத் தூண்டும் .

                                             

                         அப்போதெல்லாம் ஊரில் ஒரு தியேட்டரில் மட்டுமே படம் ரிலீசாகி ஓடும். இன்னொரு தியேட்டருக்குச் செல்ல வேண்டும் என்றால் இன்னொரு ஊருக்குத்தான் போக வேண்டும் காசு கொழுத்தவர்கள் அப்படிச் செய்யலாம் ; சிலர் செய்தார்கள் . நான் வெறும் ஒரு ரூபாய் பத்து பைசாவை கையில் வைத்துக்கொண்டு ஆறு கிலோமீட்டர் நடந்தே வந்து படம் பார்த்துவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்தேன் . குடும்பத்தோடு சேர்ந்து படம் பார்த்த நிகழ்வுகள் அப்போது குறைந்து போனது . பிறகு அடியோடு நின்றும் போனது. முதலில் அண்ணன் படம் பார்த்துவிட்டு வந்து  கதை சொல்லுவார். அப்பா வெளியூர் போனாரென்றால் படம் பார்த்து கதை சொல்லுவார். நான் அம்மாவை நச்சரித்து படத்திற்குக் கூட்டிப் போகச் சொல்லுவேன் . 'நீ தனியாக பார்த்துவிட்டு வா'  என்று ' சுருமாட்டு காசு ' கொடுப்பார்கள். சினிமா டிக்கெட் எடுக்க மட்டுமே கொடுப்பார்கள். பக்கத்தில் போகச் சொல்லி கொடுப்பதை கையில் வைத்துக் கொண்டு நான் நடந்தே அவ்வளவு தூரம் சென்று படம் பார்ப்பேன்.


                         சினிமா பார்க்கும் ஆசைக்கு அப்போது அளவேயில்லை . இளையராஜாவின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் போதும் , அந்தப் படத்தை பார்த்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவேன் . அதில் நிறைய ' மொக்கை ' படங்களும் உண்டு. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது. என்  10 வயதில் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகரில் ' மாங்குடி மைனர் ' என்ற படம் பார்ப்பதற்கு தனியாக டவுன்பஸ் ஏறிப்போய் படம் பார்த்துத் திரும்பியிருக்கிறேன் . திருட்டுபயம். கடத்தல் பயம் எதுவுமே இருந்ததில்லை. அதைச் சொல்லி யாரும் பயமுறுத்தியதுமில்லை. பிரயாணங்கள் , தனி அனுபவங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தன . ஆனால் இன்று நம் பிள்ளைகளை தனியாக அனுப்ப பயப்படுகிறோம், தயங்குகிறோம் . காலமாற்றம் கண் முன்னே தெரிகிறது.


                     அப்படி தேடிப்போய் பார்த்த முள்ளும் மலரும் படத்தில் ' செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் '  என்ற கண்ணதாசனின் கவித்துவ வரிகளில் ஜேசுதாசின் குரலில் கேட்ட காவியப் பாடல் கொடுத்த சுகாபனுபவம் இப்போதும் இனிக்கிறது . பௌலி ராகம் ஆதி தாளத்தில் என்றென்றும் அழியாத அந்தப் பாடல் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் இனிய சங்கீதம் . இயற்கை அழகின் கட்டுக்குள் மயங்கி ரசிக்கும் நாயகனின் கற்பனையாக பாடல் ஒலிக்கும் . படத்தில் மலைப்பாதையில் வண்டி வளைந்து வளைந்து செல்லும்போது எதிர்ப்படும் இயற்கைக் காட்சிகளை நயந்து நயந்து வர்ணிக்கும் அழகான இசையை இளையராஜா கொடுத்திருப்பார். அவர் இசையே ஒரு கவிதைதான் ! மூன்று சரணங்கள், மூன்று வெவ்வேறு இடையிசை , மனது வருடும் சுகமாய் ஜேசுதாசின் தேன் குரல்,  சிக்காத வார்த்தைகளில் திகட்டாத கவிதை என்று எதைச் சொல்வது , எதை விடுவது என்று தெரியவில்லை. மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்பது தெரியாத அளவிற்கு கனகச்சிதமாக இரண்டும் பொருந்தியிருக்கும் . ஜேசுதாசின் பல பாடல்களில் இதற்கு தனி முத்திரை உண்டு.

                                                                                                   

                ஜேசுதாசின் ஹம்மிங்கோடு  பாடல் ஆரம்பிக்கும்போதே நம் மனதும் ரீங்காரமிட ஆரம்பித்து விடும். குழலையும் வயலினையும் பிரதானமாய்க்  கொண்டே பின்புல இசையில் நமை மயக்குவார் ராஜா.  காட்சியோடு பாடலை கேட்டால் நாமும் பறவைகளாகிப் போகுமளவு மனசும் இளகிப் போகும்.  மலைகளின் மேடு பள்ளங்களைப் போல் சிலர் உள்ளங்களையும் ஏன் படைத்தாய் இறைவா என்று இயற்கை  வர்ணனைகளோடு வாழ்க்கைத்  தத்துவத்தையும் போகிற போக்கில் சாதாரணமாக கவிஞர் சொல்லிவிட்டுப் போவார்.
கிளாசிக் ...!


                       '  ராமன்  ஆண்டாலும்  ராவணன் ஆண்டாலும்  எனக்கொரு கவலையில்லே '  என்ற  கங்கைஅமரன்  பாடலுக்கு எஸ்.,பி. பி அவர்களின் குரல் கச்சிதம். திமிர்த்தனம், அகம்பாவம், ஆணவத்தோடு பாடப்படும் பாடலுக்கு அவரை விட பொருத்தமான உணர்ச்சிகளை யாராலும் கொடுத்துவிட முடியாது. மலை சாதியினரோடு குடித்துவிட்டு நாயகன் ஆடிப்பாடுவது போன்ற காட்சி . எவரையும் துச்சமாக எடுத்தெறிந்து பேசும்  பாத்திரத்தில் ரஜினி பிரமாதமாக நடிக்க , எஸ்.பி.பி அதைவிட பொருத்தமாய் பாட ,  இருவரையும் மிஞ்சும் அளவிற்கு பாடலுக்கான  இசையை இளையராஜா அற்புதமாக கொடுத்திருப்பார்.   அந்தோலிகா  என்ற ராகத்தின் அடிப்படையில்  நாடோடிப் பாடலாக கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்னால்  இளையராஜாவின் இசை முன்னோர்கள் மலை ஜாதியினர் ஆடிப்பாடும்  பல பாடல்களை அழகாக கொடுத்துள்ளார்கள். இளையராஜா அவர்களுக்கு சளைக்காத வகையில் இந்தப் பாடலை இன்னும் அழகாக கொடுத்திருப்பதாகவே நான் உணர்ந்தேன்.
                                             
                                                       

                      அட்டகாசமான தாள நடை, மணி ஒலியுடன் ஷெனாய்  மற்றும்   பெண்களின் குரலிசையோடு பாடல் ஆரம்பிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிந்து விடும் . கோரஸ் இடையில் தாள நடையும் மாறும். வித்தியாசமான இசைக் கருவிகளின் நாதம் ஒலிக்கும் .  'லே...லேலேலேலே ...' என்று கோரசாக பாடிவிட்டு அதையே  "அம்மனை கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குதே " என்ற  வார்த்தைகள் கொண்டும் பாடப்படுவது புதுமையாக இருக்கும். பல்லவி முடிந்து தாளநடை மாறி  மீண்டும் பழைய நடைக்குத் திரும்பி சரணம் பாடப்படும் இடங்கள் எல்லாம் இளையராஜாவின் தனி முத்திரை .  பறை ஒலியுடன் இந்தப் பாடல் முழுமையுமே வித்தியாசமான முயற்சி  மற்றும் புதுமை . நான் அதுவரை அப்படியொரு இசையை கேட்டதில்லை.

               
                             இன்னொரு சுவையான செய்தி பகிர வேண்டும் . ராமன் ஆண்டாலும் பாடல் எழுதப்பட்ட விதத்தை ஒரு நண்பர் அழகாக விவரித்துள்ளார்.

                              முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.
அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.
கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை
அதனால் கங்கை அமரனையே எழுதவைக்கலாம் என்று முடிவெடுத்து கங்கை அமரன் எழுதினார்..
"உலகம் அது ஒரு கழுதைய மாதிரி தினசரி சுழலுதடா
பொதிதானே அந்தக் கழுதையும் தூக்குது
சரிதானே பூமி பலரையும் தாங்குது
டேய் கழுத கண்டதத் திங்குது
பூமியே மனுஷனத் திங்குதடா"
இதைப் படித்துவிட்டு இளையராஜாவும், இயக்குனர் மகேந்திரனும், இல்லை இதுபோல வேண்டாம் "நாயகன் உலகத்தையே தூக்கி எறிந்து விட்டு I don’t care" என்று பாடுவது போல இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின் எழுதிய வரிகள் தான்..
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”
  
                         மத்யமாவதி ராகத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் ஜென்சி பாடிய மற்றுமொரு துள்ளலான பாடல் , 'அடி பெண்ணே ...பொன்னூஞ்சல் ஆடும் இளமை ' . ஜென்சிக்கு அவர் பெயர் சொல்லும் அழகான பாடல்.  ஆசிரியையாக பணி  புரிந்து கொண்டிருந்தபோது  இளையராஜா அவருக்கு பல பாடல்கள் பாட வாய்ப்பு கொடுத்தார்.  வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர பாடகியாக வரும்படி இளையராஜா கேட்டுக்கொண்டபோது அதை உதாசீனப்படுத்தினார். ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். நிறைய வாய்ப்புகளை இழந்தார். இப்போது அதைக் குறித்து வருத்தப்படுவதாக ஒரு பேட்டியில் ஜென்சி குறிப்பிட்டிருந்தார்.
நல்ல பாடகியாக வலம் வந்திருக்க வேண்டியவர்.
             
                                                 

                       திரைப்படத்தில்   தன் அண்ணனின் மேலதிகாரி தன்னை மணம் புரிய விருப்பம் தெரிவித்ததைக் கேட்டவுடன் நாயகிக்கு ஏற்படும் இனம் புரியா கனவு கற்பனையோடு  எல்லையில்லா சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக பாடல் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும் . இயக்குனர் கேட்டதற்கு மேல் இளையராஜா கொடுத்திருப்பார்.  பெண்ணின் மனது கிடந்து தவிக்கும் தவிப்பை இசையில் கொண்டு வந்திருப்பார்.  ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஐந்து நிமிடப் பாடலில் படைத்திருக்கும் இளையராஜாவின் இசைக் கற்பனை  அபாரம் .



                          அதே படத்தில்  ' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ...நெய் மணக்கும் கத்திரிக்கா ...'  என்றொரு மணமணக்கும் பாடல் உண்டு. வாணி ஜெயராமின் அழுத்தந்திருத்தமான குரலில் கங்கை அமரனின் கை வண்ணத்தில் கேட்கும்போதே மனதில் வந்து ஒட்டிக் கொண்ட பாட்டு. படத்தில் பார்த்தவுடன் காட்சியும் பிடித்துப் போனது.  படத்தில் நாயகி ஒரு போஜனப் பிரியை . சுருக்கமாக  ' சாப்பாட்டு ராமி ' . முதலிரவில் ஒரு பாட்டு பாடச் சொல்லி ரஜினி கேட்கப் போக படாபட் ஜெயலக்ஷ்மி பாடுவதாக சூழல் காட்டப்பட்டிருக்கும் . நாவில் சுவையூறும் பதார்த்தங்களைக் கொண்டு பாடல் எழுதப்பட்டிருக்க அந்தச் சூழலுக்கு வெகு பொருத்தமான இசையை இளையராஜா கொடுத்திருப்பார்.


                         நெல்லுச் சோறு பற்றி அதிசயம் போல் பாடல் எழுதப்பட்டிருக்கிறதே, மிகைப்படுத்துகிறார்களோ என்று சந்தேகித்து என் தந்தையிடம் அது பற்றி கேட்டேன் . ஏனென்றால் எங்கள் வீட்டில் தினமும் அதுதானே சாப்பாடு. பாடலில் பெரிய விஷயம் போல காட்டியுள்ளார்களே என்று கேட்டபோது அவர் சொன்னார்: " எங்கள் காலத்தில் நெல்லுச் சோறு அதிசயம்தான்! ஏதாவது பண்டிகை விஷேசங்கள் வரும்போது மட்டுமே சோறு சாப்பிடுவோம் . இட்லி தோசை கூட தீபாவளி , கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் மட்டுமே செய்வார்கள். மற்றபடி தினமும் கம்பு, கேழ்வரகு ,சோளம்  கூழாகவோ கஞ்சியாகவோ சாப்பிடுவோம் . காய்கறி எல்லாம் கிடைக்காது . வெங்காயம், மிளகாய் , ஊறுகாய் , துவையல் இதுதான் தொட்டுக்கிறதுக்கு ! நீ சாப்பிடும் சோறு எங்களுக்கு அபூர்வம் . "

                                                   

                            கிராமத்து மண்ணின் யதார்த்த வாழ்க்கை நடைமுறையின் வெளிப்பாடுகள் பாடலாக அரங்கேற்றப்படும்போதேல்லாம்  அது வெற்றிப்பாடலாக வலம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்தப் பாடலும் அதில் அடக்கம்.  தினசரி சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொண்டு பாடல் எழுதி அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை எளிய கருவிகள் மூலம் நாடோடி பாடலாக அழகான இசையோடும் கிராமத்து வாசனையோடும் இளையராஜா கொடுத்திருப்பார்.
கடம், மோர்சிங் போன்ற கருவிகளின் ஆதிக்கம் அதிகம் தெரியும் . படம் பார்க்கும்போது பக்கத்தில் இருந்த ' பெரிசுகள் ' கொடுத்த கமெண்ட் இன்னும் சுவாரசியாமனது . ' அடடா... பிரமாதம் ...ஸ் ....' என்று ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டவர்களை எல்லாம் சந்தித்தேன்.  சில நேரங்களில் திரைப்படங்களில் வரும் நகைச்சுவைகளை  விட பொது மக்களிடமிருந்து வரும் ஜோக்குகளுக்கு
தியேட்டரே சிரிக்கும். அந்த அனுபவங்கள் இப்போது இல்லை . காலாவாதியாகிப் போனது.


                                  அதே 78 இல்  '  சட்டம் என் கையில்  '  என்ற திரைப்படம் வெளிவந்தது. கமல்ஹாசன் இரட்டை வேடம் . படம் காரம் மணம் கலந்த மசாலா . அந்த வயதுக்கு பிடித்தமானதாக இருந்தது.  இப்போது பார்க்கும்போது  பிடிக்கவில்லை. ஆனால் இளையராஜாவின் இசை. அப்போதும் இப்போதும் அப்படியே புத்தம் புதிதாய் அதன் பரிமாணம் மாறாமல் சுகந்த மணம் மாறாமல் இருக்கிறது.  ஆழ்ந்து அனுபவித்து  சுகித்தவர்களுக்கு  அது புரியும் .

                                                   


                                 ' சொர்க்கம் மதுவிலே ...சொக்கும் அழகிலே  ' என்ற இளமைத் துள்ளலான பாடல் கேட்ட மாத்திரத்தில் அசரடித்தப் பாடல். கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பி பட்டை கிளப்பிய பாடல்.  சிலோன் வானொலியில் இசைச் செல்வம் நிகழ்ச்சியில் அதிக நாட்களாய் முதல் தரம் பிடித்தப் பாடல்.  மேலைநாட்டு இசையை தமிழிசைக்கேற்றாற்போல் மாற்றி அமைக்கப்பட்ட பாடல் . இன்னும் தமிழகத்தின் பல இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ' அங்கிங்கு ' இசைக் குழுவினர் எங்கு சென்றாலும்  இந்தப் பாடலை பெரும்பாலும் தங்கள் நிகழ்ச்சியில் இப்போதும்  அப்படியே கொடுக்கிறார்கள்.  கேட்கும் கூட்டம் பரவசமடைவதையும்    பார்த்திருக்கிறேன் .  அந்தப் பாடலின் கிரேஸ் இன்னும் தீர்ந்தபாடில்லை .

                                               

                                கிடார் கார்ட் ஆரம்பித்து ட்ரம்பெட் சேர்ந்து பெண்களின் கோரஸ் ஒலியுடன் பல்லவி அட்டகாசமாக ஆரம்பிக்கும்போதே வினோத இசை உலகுக்குள் சென்றுவிடுவோம் . மோனோ ரெக்கார்டிங்கில் பாடல் ஒலிக்கும்போதே இசைக் கருவிகளின் மாயாஜாலம் அற்புதமாக இருந்தது . இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் அதே பாடல் இசைக்கப்பட்டால் இன்றுள்ள இளைஞர் பட்டாளங்களுக்கு மேனாட்டு இசைக்கலப்பின் அதிசயம் புரியும் .  இடையிசையில் பெண்கள் கோரஸின் காட்டுக் கூச்சலும் எஸ்.பி.பி யின் கர்ஜிக்கும் பின்னணியும் அப்போது திரையில் பார்த்தபோது பரபரவென பற்றிக்கொள்ளும் உற்சாக உணர்வு கிளம்பியது. படத்தில் கமல் பெண்களை கொஞ்சுவார்;  பாடலில் எஸ்.பி.பி வார்த்தைகளை கொஞ்சுவார்; இளையராஜா இசையில் எல்லோரையும் மிஞ்சுவார்.  ( 37 வருடங்கள் ஆச்சு ! இப்போதும் லண்டனில் நடந்த சூப்பர் சிங்கர் world tour 2015 என்ற நிகழ்ச்சியில் SPB அவர்கள் வெற்றி பெற்ற குழந்தைகளோடு சேர்ந்து பாடுகையில்  அதில் சொர்க்கம் மதுவிலே என்ற  பாடலை அட்டகாசமாக பாடினார் . லண்டன் வாழ் தமிழ் மக்களே மறக்கவில்லை . அப்படி ரசித்தார்கள் . நாம் எப்படி மறப்பது? )


                             ' ஆழக்கடலில் தேடிய முத்து...ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு    '  என்ற பாட்டு  வித்தியாசமான தாலாட்டுப்  பாட்டு.  இந்தப் பாடல் மட்டுமன்றி  படத்தின் பாடல்கள்  அனைத்தும் கண்ணதாசன் . மலேசியா வாசுதேவன் , ஜானகி அவர்களின் குரலில் சுகமான பாடல் . முதல் சரணம் முடிந்து இடையிசையில் 'ஏ..ஏ....ஏ ...னா ....   ' என்று தூரத்தில் கேட்பதுபோல்  நீட்டி முழங்கும் ஒரு ஆண் குரலின் ஹம்மிங் ஒலி இனம் புரியா  சுகமான இம்சையை ஏற்படுத்தும். இளையராஜாவின்  தனித்துவம் இப்படிப்பட்ட குரலிசையில் தனியே தெரியும். அது ராஜாவின் ட்ரேட் மார்க் !
             
                                                         

                               ' கடைத்தேங்காயோ...வழிப்புள்ளை  யாரோ ..' என்றொரு குத்துப்பாடலில் தாரை தப்பட்டையும் டிரம்ஸும் கொண்டு  கிராமிய நடையும்  மேனாட்டு இசை நடையும்  கலந்து கொடுக்கப்பட்டிருக்கும்.  சேரியில் வளரும் நாயகனுக்கும் பணக்கார நாயகனுக்கும் ஒரே நாளில் நடக்கும் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதாக காட்டப்பட்டிருக்கும் சூழலுக்கு இசைக்கப்பட்ட பாடல் என்பதால் இளையராஜா இரண்டும் கலந்து அழகாக பின்னிக் கொடுத்திருப்பார்.  வாசுவும் கம்பீரமாக பாடியிருப்பார்.

                                                   
         
                                     ' ஒரே  இடம் ...நிரந்தரம் .. இதோ உன் துணை ...இதோ என் இசை..'  என்ற பாடலுக்கு மறைமுகமாக தன்  இசையைத்தான் இளையராஜா குறிப்பிடுகிறாரோ என நினைக்கத் தோன்றும் அளவிற்கு அசத்தலான இசையை வழங்கியிருப்பார்.  சுசீலா அவர்களின் மயக்கும் குரலில் ட்ரம்பெட் ஒலியுடன் பாடல் கேட்டால் மனசும் மயங்கும் . இடையிசையில் மேனாட்டு இசைக் கலப்பில்  ஆண்  குரலில் வரும் ஹம்மிங் வேறுலகம் கூட்டிச் செல்லும் .

                                                   

                                  ராஜா   ஜானகிக்கு அதிக வாய்ப்புகள்  கொடுத்திருந்தாலும் சுசீலாவும் இளையராஜாவின் இசையில் நல்ல பல பாடல்கள் பாடியிருக்கிறார்.  ராஜா இசையமைப்பாளராய்  ஆவதற்கு முன் ஜி .கே. வெங்கடேஷின் உதவியாளராய் வேலை செய்தார் . ஒரு சமயம் வெங்கடேஷின் இசையில் சுசீலா பாடும்போது அபஸ்வரமாய்  ஓரிடத்தில் பாட  கிடார்  இசைத்துக் கொண்டிருந்த இளையராஜா அதைச் சுட்டிக் காட்டினார்.  சுசீலா ராஜாவின் கிடார் வாசிப்பில்தான் தவறு என வாதிட்டார். ராஜா ஏற்றுக் கொள்ளவில்லை . சுசீலாவிற்கு தன்மானப் பிரச்சனை . ராஜா கூடத்தை விட்டு வெளியேறினால்தான் தொடர்ந்து பாடுவேன் என அடம் பிடித்தார்.  ராஜா மெளனமாக வெளியேறினார். பிறகே ஒலிப்பதிவு  நடந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன் .  ஆனாலும் இளையராஜா சுசீலாவிற்கு தன் முதல் படத்திலேயே  பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகும் அவரிசையில் சுசீலா  பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
                                     

                                  '  சொன்னது நீதானா  ' என்ற படத்தில் ஜெயச்சந்திரன் குரலில்   ' வெள்ளி  நிலாவினிலே ..தமிழ் வீணை வந்தது '

                                 ' திருக்கல்யாணம் '  என்ற படத்தில் ஜெயச்சந்திரன், ஜானகி குரலில்   ' அலையே கடல் அலையே '

                                    ' வாழ நினைத்தால் வாழலாம் ' என்ற படத்தில்  ஜானகியின் குரலில்  ' வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா ...'

                                 ' வட்டத்துக்குள் சதுரம் ' என்ற படத்தில்  ஜானகி மற்றும் சசிரேகா குரலில் ' இதோ இதோ என் நெஞ்சிலே ...ஒரே பாடல்.. ' ,  ஜிக்கி அவர்களின் குரலில்  ' காதலென்னும் காவியம் ...கன்னி நெஞ்சின் ஓவியம் ..'


                              மேற்குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் நான் இலங்கை வானொலியில் மட்டுமே கேட்டு இன்புற்றிருக்கிறேன் .  ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைத்  தரும். வெள்ளி நிலாவினிலே என்ற பாடலை ஒரு பாட்டுப் போட்டியில் நான் பாடியது நினைவிருக்கிறது.  இதோ இதோ என் நெஞ்சிலே என்ற பாடல் இப்போதும் டி வி களில் ஒலிபரப்பப்படும்போது  பால்ய கால நினைவுகள் அலைகளாய் வந்து நெஞ்சில் மோதுகின்றன.


                      வெவ்வேறு சூழலுக்கு வெவ்வேறு விதமான மெலடி வெவ்வேறு பின்னணி இசை , வெவ்வேறு ஜானர் . ஆனால் எல்லாமே ஒரே ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படுகிறது எனும்போது இளையராஜாவை  பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியாது . ஒரு பாட்டில் உள்ள எல்லாவற்றையும் அவரே ஆள்கிறார் ; அவரே முடிவு செய்கிறார் ; அவரே படைக்கின்றார் . ஆனால் தனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது என்று தாழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறார்.

                   
                       சமீபத்தில் ஒரு திரைப்படப் பாடல்  வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியது : -  "  எனக்கு இசையைத் தவிர எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் எப்படி இசையமைத்தேனோ   அதுபோலதான் இப்போதும் அமைக்கிறேன் .  பாடல்களை கம்போஸ் செய்ய நேரம் எடுப்பேன். ஆர்கெஸ்ட்ராவை  ஒருங்கிணைக்க அரை மணி நேரம் போதும். எனக்கு இசை தெரியவில்லை. அதனால்தான் இசையமைக்க இன்னும் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறேன் . எனக்கும் உங்களுக்கும் தெரியாத இசை நிறைய இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் அது வந்து கொண்டே இருக்கிறது. ' ருத்ரம்மாதேவி ' என்ற படத்திற்காக லண்டனில் உலகப் புகழ் பெற்ற சிம்பொனி இசைக் குழுவுக்கு நான் அனுப்பிய நோட்ஸ்களைப் பார்த்துவிட்டு எங்களால் வாசிக்க முடியவில்லை என்றார்கள். நான் இப்படிதான் படைக்கிறேன். இது இறைவன் கொடுத்த வரம்.  " . அவர் நிறைய பேசியிருப்பார். பத்திரிக்கையில் பேச்சின் சாராம்சத்தை சுருக்கமாக கொடுத்துள்ளார்கள்.



.........................தொடர்வேன்......................
                                               

                                               
                                                 
                                               

23 comments:

  1. அனைத்தும் மனம் கவர்ந்த இனிய பாடல்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  3. அருமைையாாான. பதிிவுு. இசைைஞாானிி குுறிித்த கவிிதை வரிிகள் அபாரம்.

    ReplyDelete
  4. சால்ஸ் எனது கைபேசியில் ஏற்பட்ட கோளாறா அல்லது தொடர்பற்றுக் கிடைக்கும் இணையத் தொடர்பா என்று தெரியவில்லை .நான் தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் தவறாகவே பதிவாகின்றன .எழுத்துப்பிழைகளுக்கு வருந்துகிறேன் .நல்லதோர் பதிவை தந்தமைக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. சால்ஸ்,

    எதற்காக யார் யாரோ சொன்னதையெல்லாம் மேற்கோள் காட்டி உங்கள் சுயத்தை இழக்கிறீர்கள்?

    ரயில் புறப்படத் துவங்கும் போது மிக நன்றாக இருக்கும். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு அலுப்பு வரும் பார்த்தீர்களா? அதுபோல எதோ ஒன்று இந்தப் பதிவில் தலை காட்டுகிறது... ஒருவேளை இந்தத் தொடர் முழுதும் ஒரு தனிமனித துதி பாடலாக இருப்பதால் இருக்கலாம். ஒருவரையே அதிகமாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தால் விரைவில் பலருக்கும் இது போல தோன்றலாம். அதுசரி நான் சொல்லியா நீங்கள் கேட்கப் போகிறீர்கள்? உங்கள் தளம் பிளந்து கட்டுங்கள்....

    மாங்குடி மைனர் படம் சந்திர போஸ் இசை அமைத்தது என்று நினைவு. இரா இல்லை.

    ஜென்சி ஏன் மற்ற இசை அமைப்பாளர்களிடம் பாடவில்லை? இரா வுக்கெனவே அவர் என்ன பிறந்தவரா? அல்லது இரா மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தாரா? அல்லது அவர் ஒரு பாடகியாகவே யாரும் கருதவில்லையா இராவைத் தவிர? யாராவது சினிமா பாடல் வாய்ப்பை விட ஒரு சராசரி ஆசிரியர் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்களா? இராவே அவரை ஒதுக்கிவிட்டிருக்கலாம்.. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு.. மேலும் தான் பாடிய பாடலை அவர் ஒரு முறை கூட நன்றாக இருப்பதாக சொன்னதில்லை என்று ஜென்சியே குறிப்பிட்டிருக்கிறார்.

    வீணை மீட்டும் கைகளே மாலை சூட வா என்ற பாடலுக்கு வீணை இசைத்தது அப்போது இராவிடம் அதிகம் வாசித்த ... (காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா ... கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் வரி.) ..வீணை காயத்ரி.. நீங்களாகவே எதையாவது புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல....

    சொர்க்கம் மதுவிலே பாடல் ஒரு மகா கேவலம். எதோ அப்போது கேட்க துடிப்பாக இருந்தது என்பதோடு சரி... அதையெல்லாம் இன்னும் சிறப்பான பாடல் என்று சொல்வது நீங்கள் இன்னும் வளரவில்லை என்று காட்டுகிறது...

    ---வெவ்வேறு சூழலுக்கு வெவ்வேறு விதமான மெலடி வெவ்வேறு பின்னணி இசை , வெவ்வேறு ஜானர் . ஆனால் எல்லாமே ஒரே ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படுகிறது எனும்போது இளையராஜாவை பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியாது . ஒரு பாட்டில் உள்ள எல்லாவற்றையும் அவரே ஆள்கிறார் ; அவரே முடிவு செய்கிறார் ; அவரே படைக்கின்றார் . ----

    என்ன ஒரு அபத்தமான கருத்து? அப்ப மற்ற இசை அமைப்பாளர்கள் மட்டும் என்ன அப்பளமா சுட்டுக்கொண்டிருக்கிறார்கள் ? அவர்களும் இது போல பல விதமான பின்னணியில் genre வில் பாடல்கள் போடவில்லையா?

    -- ' ருத்ரம்மாதேவி ' என்ற படத்திற்காக லண்டனில் உலகப் புகழ் பெற்ற சிம்பொனி இசைக் குழுவுக்கு நான் அனுப்பிய நோட்ஸ்களைப் பார்த்துவிட்டு எங்களால் வாசிக்க முடியவில்லை என்றார்கள்.---

    இதற்குப் பெயர் தன்னடக்கமாம்.. குண்டக்க மண்டக்க எதையாவது நோட்ஸ் என்று எழுதினால் அவர்கள் என்ன செய்வார்கள்? இதுவெல்லாம் மியுசிக் நோடஷனே இல்லை என்று அதைப் பார்த்ததுமே வெள்ளைக்காரன் சொல்லியிருப்பான்.. இவர் வேறு கதை விடுகிறார்... வாசிக்க முடியாத இசைக் குறிப்பை குறித்து பெருமை பேசுவது மடத்தனம்...அதிலும் சுய தம்பட்டம் ....? நீங்கள் இராவை புகழ்வதாக நினைத்துகொண்டு அவரது காலை வாரி விட்டீர்களோ என்று நினைக்கிறேன்....

    ReplyDelete
  6. ஆஹா ....வந்துட்டார்யா ...காறி..கன்... சாரி ...காரிகன் ....உங்கள் பெயரைச் சொல்லும்போதே கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுத்து...

    ஏனென்றால் இளையராஜா என்றால் காறித் துப்பிக் கொண்டே இருப்பீர்கள் . அதனால்தானோ என்னவோ காறி...கன் வந்துவிட்டது .

    ///ரயில் புறப்படத் துவங்கும் போது மிக நன்றாக இருக்கும். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு அலுப்பு வரும் பார்த்தீர்களா? அதுபோல எதோ ஒன்று இந்தப் பதிவில் தலை காட்டுகிறது...///

    அது சரி . உங்கள் பதிவிலும் அதே ரயில் பயணம் ...அதே அலுப்பு இல்லாமலா இருக்கிறது!? வாசிக்க ஆரம்பிக்கும்போதே தெரிந்துவிடும், இளையராஜாவை மட்டப்படுத்தி எழுதும் துவேசம் தலை காட்டிவிடும் என்று! உங்களின் எல்லாப் பதிவுகளும் அப்படித்தானே! இளையராஜா பற்றி எழுதாவிட்டால் உங்கள் பதிவை படிக்க யாரும் வரமாட்டார்கள் . அதனால் நீங்களும் அமுதவனும் அவரை இகழ்ந்து ஒரு வரியாவது வரும்படி பார்த்துக் கொள்வீர்கள் சரியா?

    ///மாங்குடி மைனர் படம் சந்திர போஸ் இசை அமைத்தது என்று நினைவு. இரா இல்லை. ///

    நான் இரா என்று சொல்லவில்லை . 10 வயதில் தனியாக சினிமாவிற்கு சென்றேன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.

    ///ஜென்சி ஏன் மற்ற இசை அமைப்பாளர்களிடம் பாடவில்லை? இரா வுக்கெனவே அவர் என்ன பிறந்தவரா? அல்லது இரா மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தாரா? அல்லது அவர் ஒரு பாடகியாகவே யாரும் கருதவில்லையா இராவைத் தவிர? ///

    மற்ற இசையமைப்பாளர்களிடமும் பாடியிருக்கிறார். இணையத்தில் செய்தி உண்டு.

    ///மேலும் தான் பாடிய பாடலை அவர் ஒரு முறை கூட நன்றாக இருப்பதாக சொன்னதில்லை என்று ஜென்சியே குறிப்பிட்டிருக்கிறார். ///

    இளையராஜா எஸ்.பி.பி அவர்களையே நன்றாக பாடியிருப்பதாக சொன்னதில்லை என்று எஸ்.பி.பி யே சொல்லியிருக்கிறார். யு டியுபில் பேட்டி இருக்கிறது . பார்த்ததில்லையா?

    ///வீணை மீட்டும் கைகளே மாலை சூட வா என்ற பாடலுக்கு வீணை இசைத்தது அப்போது இராவிடம் அதிகம் வாசித்த ... (காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா ... கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் வரி.) ..வீணை காயத்ரி.. நீங்களாகவே எதையாவது புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல....///

    பொதுவாக தமிழனின் மனப்பான்மை, இரண்டு பிரபலங்கள் ஆண் , பெண்ணாக இருந்தால் , அவர்களை இணைத்து அசிங்கப்படுத்திக் கொள்ளும் ...உங்களைப் போலவே! நீங்களும் அசிங்கமான வார்த்தைகள் உள்ள பாடல்களாக தேர்ந்தெடுத்து நிறைய பதிவுகள் எழுதி இருக்கிறீர்கள். அகத்தில் உள்ளது புறத்தே வருகிறது. உங்கள் மனசு துர்நாற்றம் வீசுகிறது. ராஜா இசைக்கு சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. சுத்தம் செய்யுங்கள் .


    ///சொர்க்கம் மதுவிலே பாடல் ஒரு மகா கேவலம். எதோ அப்போது கேட்க துடிப்பாக இருந்தது என்பதோடு சரி... அதையெல்லாம் இன்னும் சிறப்பான பாடல் என்று சொல்வது நீங்கள் இன்னும் வளரவில்லை என்று காட்டுகிறது...///

    நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒரு பாட்டு சொல்லுங்கள் பார்ப்போம்!? உங்கள் வளர்ச்சியை நான் சொல்கிறேன் .

    ///இதற்குப் பெயர் தன்னடக்கமாம்.. குண்டக்க மண்டக்க எதையாவது நோட்ஸ் என்று எழுதினால் அவர்கள் என்ன செய்வார்கள்? இதுவெல்லாம் மியுசிக் நோடஷனே இல்லை என்று அதைப் பார்த்ததுமே வெள்ளைக்காரன் சொல்லியிருப்பான்.. இவர் வேறு கதை விடுகிறார்... வாசிக்க முடியாத இசைக் குறிப்பை குறித்து பெருமை பேசுவது மடத்தனம்...அதிலும் சுய தம்பட்டம் ..///

    ஐயோ பாவம் நீங்கள்! உள்ளுக்குள்ளே எரிகிறது . இசை உலகில் இளையராஜா 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர் என்று வெளிநாட்டுக்காரனே சொல்லிவிட்டான். நீங்கள் யார் சுண்டைக்காய்...அவர் நோட்ஸ் பற்றி கருத்து சொல்ல!? மியுசிக் நோடஷன் பற்றி பேச தகுதி என்று ஒன்று வேண்டுமல்லவா !

    ReplyDelete
  7. அருமை சார்லஸ்,

    உங்கள் பதிவு படிக்கும் போது எனக்கும் சிறிய வயது நிகழ்வுகள் வராமல் போவதில்லை. நினைக்க நினைக்க நெஞ்சம் நிறைந்த பால்ய கால நிகழ்வுகள் இளையராஜா அவர்கள் இசை போல் என்றும் இனிமை. இரண்டே படங்களின் பாடல்களின் தொகுப்பு அருமை.

    அமைதியாக போய் கொண்டிருக்கும் நதியில் கல்லெறியும் கூட்டம் ஒன்று வரும். அவர்களின் பிதற்றல்களை துப்பிய தங்களின் இடத்திலிருந்து இங்கே வந்தும் துப்புவார்கள். அவர்களுக்கு எவ்ளோ சொன்னாலும் இன்னும் திருந்துவேனா? என்கிற ரீதியில் மறுபடியும், மறுபடியும் கொட்டுவார்கள். அவர்களுக்கு இசைஞானியை இகழ்ந்து எங்கேயாவது பதிவு செய்ய மாட்டமா? என்று அலைபவர்கள். அதில் என்ன குருரம் என்பது விளங்கவில்லை?. நல்ல பாடல்கள் ஆயிரம் இருந்தாலும் சில காம பாடல்கள் (இவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணியும் பிரமசாரிகளோ என்னவோ) வைத்து கொண்டு அவரை மட்டம் தட்டுவது..சின்ன புண்ணை நொண்டி நொண்டி பெருசக்கும் ஒரு வகையான புத்தி உள்ளவர்கள் போல. கேட்டால் நல்ல பாடல்களையும் நாங்களும் நல்ல இருக்கு என்று சொல்கிறோம் என சொல்லி சாப்பிடும் இலையில் மலத்தை வைக்கும் கதையாக தங்களின் பதிவில் இகழ்ந்து செய்து விட்டு செல்வர். சிற்றின்ப பாடலை ராஜா சார் இசையமைத்து ஹிட் ஆகிவிட்டதே என்கிற கோபத்தில் இகழ்கிறார்கள். இவர்கள் என்னவோ தமிழ் சமுதாயத்தை, இலக்கியத்தை தூக்கி நிறுத்தி, அவர் வந்து கெடுத்துவிட்டு சென்றது போல திட்டுகிறார்கள். ராஜா சார் அந்த வகையான பாடல்கள் தான் தந்திருக்கார் என்றால் இந்நேரம் தமிழ்நாடே பெட்ரூமில் தான் இருக்கும், இன்றைய கலாசாரம் எப்பவோ சீரழிந்து இன்றைய நிலை மிக மோசமாக போயிருக்கும். தமிழ் இசையை சீரழித்த கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள், அவர்களின் பதிவுகளில் தெரியும் குருரம் கண்கூடு.

    ReplyDelete
  8. இதற்குப் பெயர் தன்னடக்கமாம்.. குண்டக்க மண்டக்க எதையாவது நோட்ஸ் என்று எழுதினால் அவர்கள் என்ன செய்வார்கள்? இதுவெல்லாம் மியுசிக் நோடஷனே இல்லை என்று அதைப் பார்த்ததுமே வெள்ளைக்காரன் சொல்லியிருப்பான்.. இவர் வேறு கதை விடுகிறார்... வாசிக்க முடியாத இசைக் குறிப்பை குறித்து பெருமை பேசுவது மடத்தனம்...அதிலும் சுய தம்பட்டம் .//

    அவர்கள் வாசிக்காமலா? சென்று விட்டார்கள். உங்களுக்கு தம்பட்டம் அடிக்க ஒன்று மில்லை. அதனால தன்னடக்க குஞ்சுகளா இருக்கீர்கள்? நீங்கள் எல்லாம் சுயதம்பட்டம் உங்கள் வாழ்க்கையில் அடிக்கவே இல்லை பாருங்கள். வாசிக்க முடியாத இசை குறிப்பு, அந்தளவுக்கு இசை ஞானம் அவருக்கு. உங்கள் கண்ணுக்கு, அறிவுக்கு இதில் எல்லாம் இடம் இல்லை. கொஞ்சம் தூர போய் விளையாடுங்கள்.

    ReplyDelete
  9. ஆஹா ....வந்துட்டார்யா ...காறி..கன்... சாரி ...காரிகன் ....உங்கள் பெயரைச் சொல்லும்போதே கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுத்து... //

    டங் ஸ்லிப் ஆகவே வேண்டாம், எனக்கெல்லாம் அப்படியே.

    ReplyDelete
  10. ரயில் புறப்படத் துவங்கும் போது மிக நன்றாக இருக்கும். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு அலுப்பு வரும் பார்த்தீர்களா? அதுபோல எதோ ஒன்று இந்தப் பதிவில் தலை காட்டுகிறது //

    உங்கள் பதிவை காட்டிலுமா? அலுத்துக்கொண்டே படித்தால் அப்படித்தான் தோன்றும்.

    ReplyDelete
  11. குமார் சார்

    என்ன இப்படி பொரிந்து தள்ளிவிட்டீர்கள் . கல்லெறிந்தாலும் பரவாயில்லை . இளையராஜாவின் சாதனைகளை ஏற்றுக் கொள்ள மனமில்லாவிட்டாலும் பரவாயில்லை . அவரைப் பற்றி பொய்யான செய்தியை உண்மை போல் பரப்பக் கூடாதில்லையா ! வருங்கால சந்ததிகளில் சிலர் இதைப் படித்து ராஜா பற்றி தவறாக புரிந்து கொண்டால் இசை உலகுக்கே அது கேடு . உண்மைக்காகதான் நான் நீங்கள் , விமல் போன்ற பலர் ஆதாரத்தோடு பதில் எழுத வேண்டியிருக்கிறது. காரிகன், அமுதவன் இருவரும் ராஜாவின் சிம்பொனி பொய் என்று தவறாக சித்தரிப்பது , ராஜாவின் பின்னணி இசை பற்றிய அஞ்ஞானம் , இடையிசை பற்றிய தவறான பிதற்றல் எல்லாவற்றையும் பதிவாக போட்டு அவரை கேவலப்படுத்த நினைக்கின்றனர் . அதற்கு நாம் பதில் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் .

    ReplyDelete
  12. இதையே இரண்டு மூன்று பதிவுகளாகப் போட்டிருந்தால் நலம்

    ReplyDelete
  13. சார் வாங்க

    தமிழ் மணம் போன்ற தளங்களில் பதிவேற்ற முடியாததால் நிறைய பேர் பார்க்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை. நீங்களாவது வருகிறீர்கள் நன்றி. இரண்டு மூன்று பதிவுகளாக இதைப் பிரித்தால் நீண்ட காலம் நீண்ட தூரம் ஆகிப் போகும் . 38 வருடங்களாக இசைச் சாதனை செய்து வரும் இளையராஜாவின் இசை பற்றிப் பகிர இன்னும் செய்திகள் நிறைய உண்டு. 1979 க்கு இப்போதுதான் வருகிறேன். இந்த அளவாவது எழுத வேண்டாமா?

    ReplyDelete
  14. http://songsofage.blogspot.in/2015/05/42-25.html

    ஒரு பாட்டு ... ஒரு பதிவு.... நல்லா இருந்திச்சி ... அதான் சொன்னேன்.
    ஏன் தமிழ்மணத்தில் சேரவில்லை?

    ReplyDelete
  15. தமிழ் மணத்தில் register செய்தும் உள்ளே நுழைய முடியவில்லை. activation code அனுப்பப்படவும் இல்லை. உள் நுழைவது எப்படி என்பது புரியவில்லை. நண்பர் ஒருவர் சொல்கிறார் டாட் காம் பதிவுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று! சரிதானா?

    ReplyDelete
  16. https://twitter.com/AmmU_MaanU/status/600294678869647360?t=1&cn=cmVjb3NfbmV0d29ya19kaWdlc3RfYWI%3D&sig=84adbf85274d9048f289be56c8d3c82d5a63beb6&al=1&refsrc=email&iid=0c40f0f32f3742b0b92e8f55faa03626&autoactions=1431970467&uid=15483242&nid=244+592+20150516

    ReplyDelete
    Replies
    1. நம்மில் பலருக்கு இளையராஜாவின் அருமை தெரியவில்லை. உலகத்தின் பற்பல மூலைகளில் உள்ள இசை விற்பன்னர்கள் அவரை அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் - உலக இசை நாயகன் என்று!

      Delete
  17. தமிழ்மணத்தில் சேர திண்டுக்கல் தனபாலன் உதவ முடியும் என்று நினைக்கிறேன். தொடர்பு கொள்ளுங்களேன். இன்னொரு நண்பரும் மதுரையில் உண்டு = தமிழ்வாசி

    ReplyDelete
  18. முயற்சிக்கிறேன் சார் . மிக்க நன்றி.

    ReplyDelete
  19. பல நாட்களுக்கு பிறகு வலைப்பக்கம் வந்த போது இந்த பதிவை பார்த்தேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. "செந்தாழம் பூவில்", "வீணை மீட்டும் கைகளே", என்று பல முத்துக்களை இளையராஜா கொடுக்க ஆரம்ப்பித்திருந்த நேரம். எம்.எஸ்.வியா இளையராஜாவா என்று பல முறை நண்பர்களிடையே வாக்குவாதம் கூட ஏற்படும். (ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் மேதைகள் என்ற பக்குவம் பிற்பாடு ஏற்பட்டது). அருமையான நினைவுகளை கிளறிவிட்டதற்கு நன்றி சார்லஸ். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நீங்கள் புதிதாக ஒரு பதிவை எழுதும் போது மின் அஞ்சலில் வரும் விதமாக வசதி செய்து கொடுங்களேன்.

    Youtube பாடலை எப்படி embed செய்தீர்கள்?

    ReplyDelete
  20. வாங்க குறு

    இந்தப் பக்கம் நீங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சந்தோசம் . மின் அஞ்சலில் வருமாறு வசதி செய்து தருவது எப்படி என்பதை கற்றுக் கொண்டு முயற்சிக்கிறேன். யு டியூப் பாடலை ஏற்றுவது எளிதானது.
    புதிய பதிவை எழுதுகையில் மேலே நிறைய ஐகான்கள் தெரியும் . கர்சரை நகர்த்தி அதன் மேல் விரவினால் ...insert a link, insert image , insert video என்று காட்டப்படும் . கிளிக் செய்தால் from you tube என்று ஒரு option இருக்கும் . ஏற்கனவே தேர்ந்தெடுத்த யு டியூப் URL ஐ காப்பி செய்து பேஸ்ட் செய்தால் தேவையான இடத்தில் பதிவேற்றலாம் .

    ReplyDelete
  21. சார்ல்ஸ்
    காரிகனுக்கும் சங்கீதத்திற்கும் காத தூரம்.அவருக்கு பல விஷயங்கள் புரிகிற மாதிரி தெரியவில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் சொல்லியிருக்கிறேன்

    ஜென்சி வேறு இசையமைப்பாளர்களிடம் பாடவில்லையாம்." பணியும் நானே மலரும் நீயே " என்ற சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல் இவர் காதில் விழவில்லை போலும்.!!

    இவரை நினைக்க பரிதாபமாக இருக்கிறது

    இவரை நினைக்க பரிதாபமாக இருக்கிறது
    எல்.ஆர் ஈஸ்வரியையும் ஒரு இசையமைப்பாளரையும் பற்றி தமிழ்சினிமா வட்டாரத்தில் பேச்சை அமுதவன் கொஞ்சம் நமக்கு எடுத்துரைக்கலாம்.அத்தோடு ரத்னமாலாஎன்ற பாடகிக்கும் ஒரு திலகத்திற்கும் கிசு கிசு பற்றி அமுதவன் நமக்கு பாடம் நடத்தலாம்

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்