Wednesday 1 April 2015

வாட்ஸ் ஆப்புகள்



                                                   
             
                      இசைப் பதிவுகளுக்கு இடையில் கொஞ்சம்  ரிலாக்ஸ் செய்துவிட்டு போகலாம் என்றுதான் இந்தப் பதிவுக்கு வந்தேன் .
                                   
                                           
         
                 வாட்ஸப்  இப்போது இளையோர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . வாட்ஸப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் நம்மை ஒரு மாதிரியாக மற்றவர்கள் பார்க்கிறார்கள் .
           

                   ஊடகங்கள்  இப்போது இதை பயன்படுத்தி உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை பெற முயல்கிறது.  யார் அநியாயம் செய்தாலும் எங்கு அக்கிரமங்கள் நடந்தாலும் அதை  யாராவது  வீடியோ எடுத்து    வாட்ஸப்பில் 
பரப்பி விடுகிறார்கள் .  ஊடகங்களும் ஒலி  பரப்புகின்றன .  அதை ஒரு சாட்சியாகக் கருதி நீதி மன்றமும் வழக்கை  எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன . வாட்ஸப்  சிலருக்கு கிலி ஏற்படுத்தி இருக்கிறது . 
                                               


                  என் மனைவியுடன் சேர்ந்து பணியாற்றுபவர் ஒருவர் அவர் கணவரிடம் சென்று  ' ஏங்க ...தடவுற போன் ஒன்னு வாங்கிக் கொடுங்க ...' என்று கேட்க அவர் சிறிது நேரங்கழித்து புரிந்து கொண்டு ' டச் போனா..? ' என கேட்டிருக்கிறார்.  ' ஆமா..மா ...அதேதான்  எல்லோரும்   வாட்ஸப்  பயன்படுத்துறாங்க எனக்கு ஒண்ணும் தெரியலைன்னு  கிண்டல் செய்றாங்க ..' என்று புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி கற்றுக் கொண்டுவிட்டார்.  வாட்ஸப்   கற்றுக் கொள்வதும் கையாள்வதும் எல்லோருக்கும் எளிதான விசயமாகிப் போனதால் எல்லா வயதினரும் பயன்படுத்துகிறார்கள் .

                           
                     வாட்ஸப்பில் பாட்டு,  போட்டோ, ஆடியோ , வீடியோ , கமெண்ட்   என்று எதை வேண்டுமென்றாலும் அனுப்பலாம் என்பதால் நக்கல், நையாண்டி , கிண்டல் , கேலி, ஆச்சரியம், அதிசயம் , அசிங்கம் ...etc  வருகிறது; போகிறது.  கட்டுப்பாடுகளே இல்லை .  வீட்டுக்குள் நுழைந்தால் பிள்ளைகள் எடுத்துப் பார்த்து விடுவார்களோ என்று பயப்பட வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு குஷியாக இருந்த  வாட்ஸப் விஷயங்கள் போகப் போக ,  'இன்னிக்கு எவன் என்னத்தை அனுப்பினானோ ...? ' என்று யோசிக்க வைக்க ஆரம்பித்து விட்டன .  இந்திய அரசாங்கம் தடை செய்த கொடூரமான மனிதத் தலையை வெட்டி எறியும் காட்சிகள் கூட பரப்பப்படுகிறது.  என் நண்பர் ஒருவருக்கு அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு மயக்கம் வந்து விட்டதாம் .  எப்படியோ சமாளித்துவிட்டார்.  இப்போது வாட்ஸப் உள்ளே செல்ல தயங்குகிறார்.  மனுசனை அது என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!?

             
                     சின்னப் பசங்கள் கையில் அது அதிகம் விளையாடுகிறது.  எதையாவது பார்த்துக் கொண்டே அலைகிறார்கள் . பத்து பேர் சேர்ந்து கொண்டு அரட்டை அடிக்கிறார்கள் வாயை திறக்காமலேயே! கேட்டால் 'குரூப் சாட் '  என்கிறார்கள்.   அவர்கள் பார்ப்பது மறுக்கப்பட்டால் கோபம் தலைக்கேறுகிறது. என்ன செய்ய?  உள்ளறையில் படுத்திருக்கும் என்னை என் மகள்  ' அப்பா டீ  குடிக்க  ஹாலுக்கு வாங்க ' என்று  வாட்ஸப்பில் செய்தி அனுப்புகிறாள்.  நானும் அந்த வாட்ஸப்பில் மேய்ந்து கொண்டிருப்பதால் உடனே செய்தி என்னை எட்டுகிறது.
                                                       

                       சில பேர் பக்கம் பக்கமாய் எழுதி அனுப்புகிறார்கள் . வாசிக்க பொறுமை இல்லை. ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் என் நண்பனுக்கு ஒரு பெரிய செய்தியை பகிர்வதற்காக அனுப்பினேன்.  எனக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துவிட்டான்.  ' வாட்ஸப்  சின்ன சின்ன செய்தி அனுப்பத்தானே ஒழிய இப்படி  ' எஸ்ஸே ' அனுப்புறதுக்கு இல்ல . அமெரிக்காவில் எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா ?....'  என்று வசை பாட ஆரம்பித்துவிட்டான் . வாட்ஸப்பினால் அமெரிக்காவிலிருந்து நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.  அதன் பிறகு,  '  ஹாய் ...நலமா ...பிள்ளைகள் நலமா ...ஹவ் ஆர் யூ ...ஹி ...' என்ற வார்த்தைகள் தவிர வேறு எதையும் அவனுக்கு அனுப்புவதே கிடையாது.


                      வாட்ஸப்பில் சிக்கிக் கொண்டு நிறைய பேர் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் . எனக்கு அந்த அளவுக்கு பைத்தியம் இல்லை. அளவோடு பயன்படுத்துகிறேன்.  அதனால் நிறைய விசயங்களை பார்க்காமலேயே அழிக்க ஆரம்பித்து விட்டேன்.  திறந்தால்  போதும்  நூறு விஷயங்கள் வந்து கொட்டும் .  அத்தனையும் பார்த்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே  ஆகும் . என் நேரத்தை  தின்று தீர்த்துவிடும் . நானே சென்சார் செய்து விடுகிறேன் .

                   சமீபத்தில்  ஆசிரிய நண்பர் ஒருவர் ,  ' சார் ...வேண்டியவங்களுக்கு பழைய வினாத் தாளை  வாட்ஸப்பில் அனுப்பக் கூட பயமாயிருக்கு ... எதுக்கு உள்ள தூக்கி வைப்பான் என்றே தெரிய மாட்டேங்குது  ' என்று அங்கலாய்த்தார் இப்படி நமது பின்னணியில்  ஒளிந்திருக்கும்ஏகப்பட்ட பிரச்சனைகளோடுதான்  வாட்ஸப்பிலும் நாம்  மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

               
                    அப்படி நான் ரசித்து மகிழ்ந்த விசயங்களில் சில ஆடியோப் பதிவுகள் நகைச்சுவையாக இருந்தன . பார்ப்போம்.



                                           ஆடியோப் பதிவு ஒன்று



(  ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து  ஒரு பெண் ஊழியர் பேசுகிறார் . எதிர் முனையில் ஓர் ஆண் பதில் சொல்கிறார். )

பெண் :     சார்   ரா.... சாருங்களா ?

ஆண் :      ஆமா ...நீங்க?

பெண் :    சார் ...நாங்க இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுறோம் ...ஏற்கனவே                  உங்களுக்கு சொல்லி இருந்தோம் இல்லியா ...நீங்க வாங்க         வரேன்னு     சொல்லி இருந்தீங்க இல்லியா ...

ஆண்  :   நான் ஆபிசில் இருக்கேன் ... நீங்க சொல்லுங்க .. என்ன இன்சூரன்ஸ்?

பெண் :  அப்புறம் பேசவா ...?

ஆண்  :  இல்ல ... சொல்லுங்க என்ன இன்சூரன்ஸ்ங்க ...?

பெண் :  லைப் இன்சூரன்ஸ்.. ஏற்கனவே சொல்லியாச்சு ..உங்க வீட்டில                                 அவங்களுக்கு ஒரு  லட்சம் மதிப்புள்ள பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  ஒரு லட்சம் cash ஷா மேடம் ?

பெண் :  இல்லை  இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  எங்க விழுந்துச்சுங்க ...?

பெண்  :  இன்சூரன்ஸ் ஆபிஸ்ல .. ஆயிரம் நம்பர் குலுக்கியதில அவங்களுக்கு                     இன்சூரன்ஸ் பாலிசி விழுந்திருக்கு சார் ..நீங்க வந்து
                  வாங்கிக்கறேன்னு சொன்னீங்க ...

ஆண்  :   அவர் உங்க ஆபீஸ்ல தெரியாம விட்டுட்டு வந்திருப்பாரு ...எடுத்து
                   வைங்க ...அவருகிட்ட சொல்றேன்

பெண் :     வருவாங்களா அவங்க ...ஏன்னா கவருமென்டுல இருந்து வந்து
                    கொடுக்கிறாங்க...மேனேஜர் வந்து கொடுப்பாரு

ஆண் :      மேடம் அவரு விட்டுட்டு வந்திருப்பாருன்னு
                சொன்னீங்கல்ல   எடுத்து வைங்க மேடம்...


பெண் :   அவர் விட்டுட்டு வந்தாருன்னு நான் சொல்லலை .

ஆண்  :   நீங்கதானே மேடம் விழுந்திருச்சுன்னு சொன்னீங்க

பெண் :     சார் நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்குங்க ..அவங்களுக்கு ஒரு                               லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி
                    விழுந்திருக்குன்னுதான் சொன்னேன் ..

ஆண்  :     ஒரு   லட்சம் மதிப்புள்ள  பிரிஜ்ஜா ....?

பெண்  :    பிரிஜ் இல்ல ... பாலிசி சார் ..

ஆண்  :      என்னது பால் பாக்கெட்டா ....?

பெண் :      வைங்க சார் போனை... பாலிசின்னு சொல்றேன் ...பிரிஜா ..பால்
                      பாக்கெட்டானு  கேட்டுகிட்டு ...ஆளைப் பாருங்க



                                       ஆடியோப் பதிவு இரண்டு


( எர்வா மாட்டின் என்ற ஒரு product விற்பனை சம்பந்தமான பரிவர்த்தனை )


பெண் :   அதை யூஸ் பண்ணீங்களா ?

ஆண்  :   நான் மூணு நாலு பாட்டில் யூஸ் பண்ணிட்டேன்.

பெண் :  ஒரு பாட்டில்தானே வாங்கியிருக்கீங்க .
                  ஒரு பாட்டில்தான் இருக்கு

ஆண் :   ஒண்ணுதான் இருக்கா ...என்கிட்டே நாலு பாட்டில் இருக்கே

பெண் :   ஒரு பாட்டில்தான் நீங்க வாங்கியிருக்கீங்கன்னு இருக்கு .

ஆண்  :  உங்க கம்ப்யூடரில் ஏதோ பிரச்னை ...நான் நாலு பாட்டில்
                   எர்வா மாட்டின் வாங்கினேன் .

பெண் :   இன்னொன்னு வேணுமா சார்

ஆண்  :   முதல் பாட்டில் வாங்கி யூஸ் பண்ணதுல கொஞ்சம் முடிதான்
                   போயிருந்துச்சும்மா

பெண்  :  எப்படி நீங்கயூஸ் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ...?

ஆண்  :    அவங்க எப்படி சொன்னாங்களோ அப்படிதான்மா யூஸ் பண்ணேன்
                    எனக்கு முதல்ல நல்லா முடி இருந்துச்சும்மா ...கொஞ்சம் முடி
                     போச்சு ...எல்லோரும் சொன்னாங்கன்னு  டிவியில பார்த்துட்டு
                     உங்க ஆயில் வாங்கி தேச்சேன் .. கூடுதலா முடி போச்சு ...

பெண் :    ஓ . கே  சார்

ஆண்   :    அடுத்தடுத்து வாங்கி தேச்சதுல எல்லா முடியும் கொட்டிப் போயி
                     இப்ப மொட்டை மண்டையா நிக்கிறேன் ...ஒரு போட்டோ
                      வேணுமின்னா எடுத்து அனுப்பட்டுமா ...?

பெண்  :    சார் புரோட்டின் ரொம்ப கம்மியா இருந்தா அப்படி கொட்டும் சார் ..
                    ஆனா எங்க பிராடெக்ட் யூஸ் பண்ணா வேரில போயி முடி நல்லா
                     வளரும் சார்..யூஸ் பண்ண பண்ண கண்டிப்பா உங்களுக்கு முடி
                       வரும் சார் ...

ஆண்  :      எப்ப வரும்னு சொல்றீங்க ...?

பெண் :   யூஸ் பண்ணிகிட்டே இருந்தா வரும் சார் ...

ஆண்  :   தேய்க்க தேய்க்க எல்லாம் கொட்டிப்   போச்சு..
                  போனதுக்கப்புறம் இனிமே தேய்ச்சா
                  முடி வருமா...?

பெண் :   கண்டிப்பா வரும் .

ஆண்  :  ஒருவேளை மழை பெய்ஞ்சா வருமோ...?  வெயில் காலம் அதனால
                   வர மாட்டீங்குதோ ..?


பெண் :    அப்படி இல்லை சார் ... கண்டிப்பா வளரும் சார்


ஆண்  :    ஒரு பாட்டில் தேச்சப்ப கொட்டிப் போச்சு ..  ரெண்டாவது மூணாவது
                      தேய்ங்கன்னு  சொன்னாங்க ...மொத்தமா போச்சேம்மா ...

பெண் :    முதல் பாட்டில் தேய்க்கும்போது  பொடுகு போகும் ...அடுத்தடுத்து
                   தேய்ச்சா வளரும்

ஆண்  :   இது எங்கிருந்து வருது ....பிரேசிலா ...:

பெண்  :   அமேசான் காட்டிலிருந்து மூலிகை மூலம் தயார் செய்றாங்க சார்

ஆண்  :   அமேசான் பிரேசிலில்தானே இருக்கு

பெண் :   ஒரு நிமிசம் ...( யாரிடமோ கேட்கிறார் )... சவுத் ஆப்பிரிக்காவில்
                   இருக்கு சார் .

ஆண்  :  அப்படியா ...?  அங்க இருக்கிறவங்களுக்கு இதை விக்கிறீங்களா ...?
                  அங்க இருக்கறவங்க தலை சொட்டையா இருக்குறதா என் பிரண்டு
                    சொல்றாரு .

பெண்  :  எல்லோரும் நல்ல ரிசல்ட் கொடுக்கிறாங்க ..யாரும் ராங் ரிசல்ட்
                   சொல்றதில்லை சார் ...

ஆண்  :   என் பிரன்ட்ஸ் நாலு பேரு இதே மாதிரி எல்லாம் கொட்டிப்
                  போச்சுன்னு சொல்றாங்க ...அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது நாலு                                 பாட்டில் வேஸ்ட் பண்ணிட்டேன் ...நாலாயிரம் போச்சு ..முடியும்
                    போச்சு

பெண் :   கண்டிப்பா நான் கம்பிளைன்ட் பதிவு பண்றேன்  சார் ..

ஆண்  :  என்னை கம்பிளைன்ட்  பண்றீங்களா

பெண் :   இல்ல சார் உங்க கம்பிளைன்ட்ட கம்பெனிக்கு சொல்றேன்

ஆண்  :  அது சரி ...போன முடிக்கு என்ன பதில் சொல்லப்  போறீங்க ...இதில
                  இன்னொரு பாட்டில் வாங்கச் சொல்றீங்க

பெண் :  ஆமா சார் யூஸ் பண்ணா கண்டிப்பா வளரும் சார் .. பொல்லுசன்
                ஏதாவது  இருந்ததுனா பிராபிலம் இருக்கும்

ஆண்  :  அப்ப  தேய்ச்சுட்டு  வீட்டுக்குளேயே கிடக்கச் சொல்றீகளா .. வேலை
                  வெட்டிக்கு போக வேணாமா ...?

பெண் :  இல்ல சார் கண்டிப்பா வளரும் சார் . கர்சீப் கட்டிக்கிட்டு ஹெல்மெட்
                  போடுங்க சார் .

ஆண் :    சொட்டை தலையாப் போச்சு ....அதுக்கு என்ன பதில் சொல்லப்                                     போறீங்க  ...நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு விக் வாங்கி கொடுங்கம்மா
                   வெளியில தலை காட்ட முடியில 


பெண் :  உங்க தரப்புல கம்பிளைன்ட் பண்றேன் சார் .. கால் வரும் சார்

ஆண்    :   கால் வந்து என்ன பண்ண... முடி வரணுமே  ...நாலாயிரம் ரூபா
                   திருப்பி தருவதா சொன்னா கூட எனக்கு முடி வளந்திரும்னு  
                   தோணுது ..அந்த  ஆறுதல்லேயே ...
 

பெண் :   யூஸ் பண்ணுங்க சார் ...உங்களுக்கு கண்டிப்பா வளரும் சார்

ஆண்  :   திரும்பவும் யூஸ் பண்ணவா ....அம்புட்டும் போச்சுன்னு
                 சொல்லிகிட்டு இருக்கேன் ...திரும்ப யூஸ் பண்ண சொல்றீங்களே









9 comments:

  1. ஹா... ஹா... இப்படி பதில் சொன்னால் பல தொல்லைகளிடமிருந்து தப்பிக்க முடியும்....!

    ReplyDelete
    Replies
    1. வலைச் சித்தரே வாருங்கள். நீங்கள் சொல்வது உண்மை . இப்படி வாயடிப்பது ஒரு கலை . எல்லோருக்கும் வராது . நம்மால் இப்படி பதில் சொல்ல முடியுமா?

      Delete
  2. நல்ல சம்பாஷனைகள். ரசித்து சிரிக்க வைத்துவிட்டது. வாட் சப் என்னிடம் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன். ராஜா சார் பாட்டெல்லாம் பரிமாரிக்கொள்ளுவார்களா?

    ReplyDelete
    Replies
    1. குமார் சார் செல்போனே கையில் இல்லை என்றால் இன்னும் சந்தோசமாக இருப்பீர்கள் . எல்லா பாடல்களும் பரிமாறப்படுகின்றன. திடீரென அதற்கெல்லாம் தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாட்சப் மோகத்தை கூட்டிவிட்டு திடீரென பைசா பிடுங்கப் போகிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று அப்போது தெரியும்.

      Delete
  3. --உள்ளறையில் படுத்திருக்கும் என்னை என் மகள் ' அப்பா டீ குடிக்க ஹாலுக்கு வாங்க ' என்று வாட்ஸப்பில் செய்தி அனுப்புகிறாள்.----

    கொஞ்சம் குறும்புக்காரப் பெண்தான் போல.

    தடவுற போன் என்று நேர்மையான தமிழாக்கம் கொடுத்திருக்கிறீர்கள் டச் போனுக்கு. சரிதான். வித்தியாசமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க காரிகன்

      இதில் இளையராஜா பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அதனாலேயே இந்தப் பதிவை நீங்கள் ரசித்திருக்கலாம் . வருகைக்கு நன்றி.

      Delete
  4. அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சென தெரியாமலா பெரியவர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.எதையுமே முறையாக பயனபடுத்தினால் நலமே.வித்தியாமான பதிவு .நன்றாக. இழக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. அருள் ஜீவா

      வாட்ஸப் பயன்பாடு அளவுக்கு மீறினால் இளம்தலைமுறையின் நல்லுறவு, கல்வி எல்லாம் குறைந்து போகும் அபாயம் உண்டு .

      Delete
  5. அருள் ஜீவா சார்,

    எதுக்கு இத்தனை எக்கோ?

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்