Sunday 13 March 2016

இசை ராட்சஷன் - 15 ( The Musical Legend )


                                                     
                           

திரைஉலகில் வெற்றி பெற எது அவசியம் ?


பொறுமை. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். எழுபதுகளின் ஆரம்பத்தில் மேடைக் கச்சேரிகளில் ஒருவர் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.  யதேச்சையாக அதைக் கேட்டார் தயாரிப்பாளர் ஒருவர். அப்போது ' உயிர் ' என்ற படத்துக்கு அவர் பூஜை போட்டிருந்த நேரம்.  முத்துராமன் ,  சரோஜா தேவி ஜோடி. அந்தப் படத்துக்கு மேடைக் கச்சேரியில் இசைப்பவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் .


                              தனக்கு விடிவு காலம் கிடைத்து விட்டது என்று நம்பிய அந்த இசை அமைப்பாளர் அதிகாலையில் எழுந்து கருமாரியம்மன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து விட்டு ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வந்தார்.


                                 ஆனால் , '  உங்க டியூன் நல்லா இல்ல.  அதனால இன்னைக்கி ரெக்கார்டிங் இல்ல ...' என்று அந்த தயாரிப்பாளர் சொல்லிவிட்டார்.  மட்டுமல்ல. ரமணி ஸ்ரீதர் என்பவரை இசை அமைப்பாளாராக ஒப்பந்தம் செய்து  அடுத்த வந்த முகூர்த்த நாளில் ரெக்கார்டிங்கை ஆரம்பித்தும் விட்டார்.


                                   இந்த சம்பவம் மேடைக் கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தவரை  பாதித்தது. ஆனாலும் மனம் தளராது தன்  போராட்டத்தைத் தொடர்ந்தார். அதற்கான  பலன்  கிடைத்தது.  கம்யூனிஸ்ட் தலைவரான என். சங்கரையாவின் சகோதரர் மகனான கதாசிரியர் ஆர். செல்வராஜ் , தனது படத்துக்கு இவரையே ஒப்பந்தம் செய்து  திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.


                                      அந்தப் படம் ' அன்னக்கிளி ' . பொறுமையுடன் இருந்த அந்த இசை அமைப்பாளர்  இளையராஜா . இவரது டியூன் சரியில்லை என்று சொல்லி நிராகரித்த அந்த தயாரிப்பு நிறுவனம் ' ஜெமினி ' .


                                       மேற்கண்ட இந்தச் செய்தி ஒரு வாரப் பத்திரிகையில் வந்தது.  மேடைக்கச்சேரிகளில் தனது இசை முன்னோர்களின் பாடல்களை இசைத்து வந்த இளையராஜா ,  அவ்வப்போது அமர் எழுதி தானே இசையமைத்து அதைப் பாடியும் வந்திருக்கிறார். அதற்கும் மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்திருக்கிறது.   சினிமாப் பாடல்கள் போலவே அந்தப் பாடல்களும் அமைந்து விட மக்கள் அதிகம் ரசித்திருக்கிறார்கள்.  அந்தக் கணங்கள்தான் சினிமாவில் இசையமைத்து இசையில் சிகரம் தொட்டு விடும் உத்வேகத்தை அவருக்கு அளித்தன . அன்று புறப்பட்ட இசைப் பயணம் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


                                            ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதல்ல ,  என்ன விதமான அதிர்வை இந்த உலகத்திற்குக் கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியம். அந்த வகையில் இளையராஜா தன்  இசையால்  மிகப் பெரிய அதிர்வினை  ஏற்படுத்தி இருக்கிறார் .  ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள்  அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்  என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது.  இளையராஜாவின் இசை பலருக்கும் அப்படிப்பட்ட பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


                                         ஒரு பாடலுக்கான ஒத்திகையும் பாடல் பதிவும் எவ்வாறு இளையராஜாவால் நிறைவேற்றப்படுகிறது என்று பார்ப்போம்.

                                                       
                                   
                                  

                         ஒரு பாடல் தேர்வான பின்னர் இசைக் குழுவினர்  அனைவரும் ஒலிப்பதிவுக் கூடத்தில் கூடுவார்கள். தேர்வறைக்கு வெளியே  காத்திருக்கும்  மாணவர்களைப் போல காத்திருப்பார்கள்.  வயலின் வாசிப்பவர்களில் மூத்தக் கலைஞர் திரு. ஜூடி அவர்கள் இளையராஜாவின் அறைக்குச் சென்று இசைக் குறிப்பு அடங்கிய தாளினைப் பெற்று வருவார்.  இசைக் குறிப்புகளை பிரதி எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது இவரின் பொறுப்பு.


                                          ஒத்திகை நடக்கும் நேரத்தில் இளையராஜா கொடுக்கும் திருத்தங்கள் , மாற்றங்கள் ஏதும் இருப்பின் அவற்றையெல்லாம் ஒத்திகை நேரத்திலேயே சரி செய்து மீண்டும் பிரதிகள் எடுத்து எல்லோரிடமும் கொடுப்பதும்  இவர் வேலையே!  இசைக் குறிப்புத் தாளினை ஜூடி தன் கையில் வைத்திருக்க மற்றவரெல்லாம் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள் .


                                     இசைக் குறிப்புகள் எளிமையாக இருந்தால் இசைக்குழுவினருக்கு நிம்மதியாக இருக்கும் . கடினமாக இருந்தால் அதை மீண்டும் மீண்டும் வாசித்துப்  பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இசைக்குறிப்புகளை முழுமையாக வாசிக்க முடிந்தால் 20 அல்லது 30 பிரதிகள் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கப்படும்.


                                     ராஜா 9  மணிக்குள்ளாக தன் காலை உணவை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வருவார். ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் உள்ளே நுழைய எல்லோரும் தங்களின் இசைக் கருவிகளை இசைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


                                        முதலில்  Rhythm section  ஐ  வழிநடத்தும் திரு. புருஷோத்தமனிடமிருந்து இளையராஜா ஆரம்பிப்பார்.  குறிப்பிட்ட பாடலுக்கான தாள நடை எப்படி இருக்க வேண்டும் என்பதை கைகளைத் தட்டிக் காட்டுவார்.  பாடல் முழுமைக்கும் வரக்கூடிய தாள நடை பொதுவானதாக இருந்தாலும் இடையில் நடையில் மாற்றம் வேண்டியிருப்பின் அதையும் சுட்டிக் காட்டுவார்.  வேறுபட்ட தாள லயங்களோடு  பாடல் ஒலிக்கும். பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் தாள ஒலியில்  தேவையான ஏற்ற இறக்கங்களையும் புருஷோத்தமனிடம் விளக்குவார். புருஷோத்தமன் தனது octo pad ல் அதை வாசித்துக் காட்டுவார் . எந்த நடை , எப்படிப்பட்ட தாள லயம் , என்ன சுருதி வேண்டும் என்பதை ராஜா தேர்ந்தெடுப்பார்.


                                       அவர்  விரும்புகிற தாள லயத்தை  புருஷோத்தமன்  புரிந்த கொண்ட பிறகே ராஜா தோல் கருவிகள்  ( Tabla , Dolak  etc  )  பிரிவுக்கு நகருவார். அவர்களுக்கு  புரிந்த மொழியில் நடை, தாளக் கட்டை போன்ற வார்த்தைகளை  பிரயோகித்து  அவர்களையும் தெளிவு படுத்துவார். இப்போதுதான் புருஷோத்தமனுக்கு ஒட்டு மொத்தமான தாள லயம் புரிய வரும்.


                                     அடுத்து  Keybord , Electric guitar வாசிக்கக் கூடிய பிரிவுக்கு ராஜா  நகர்ந்து  அவர்களுக்கு விளக்கம் கொடுப்பார்.  Keybord பிரிவை  திரு. விஜி மேனுவல் மற்றும் திரு. பரணி பார்த்துக் கொள்ள , கிடார்  பிரிவை திரு. சதானந்தம் வழி  நடத்துவார். ( தமிழ்த்திரையிசையின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சுதர்சனின் மகன்தான் சதானந்தம்  )

                                                           
                               

                                        இசைக்குறிப்பேட்டில் பாடலுக்குத் தேவையான Chords  முழுவதும் எழுதப்பட்டிருக்கும்.  Keyboard  மற்றும் Synthesizer இசைப்போர் இசைக்குறிப்பில் குறித்துள்ளபடி தேவையான கருவிகளை  தேர்ந்தெடுக்கும் இடங்களைக் குறித்து வைத்துக் கொள்வார்கள்.  Bagpiper , Santoor , Oboe  (ஓபோ என்ற மரத்தாலான குழல் இசைக்கருவி )  போன்ற கருவிகளின் ஒலியை  Keyboard ல் தேர்வு செய்வார்கள்.   (  அந்தக் கருவிகள் எளிதில் கிடைக்காதவை;  அவைகளை மீட்டுவோரும் குறைவு  )


                                          புல்லாங்குழல் , வயலின், Brass section மீட்டப்படும்போது  Keyboard லும் அதே கருவிகள் தேர்ந்தெடுத்து  சேர்ந்து வாசிப்பதும் சில நேரங்களில் நடக்கும்.  அதனால் இசையின் தரம் கூடும்.  Keyboard ல் இந்த மாதிரி பல கருவிகள் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளதால்  உண்மையான Brass  Players குறைந்து விட்டார்கள் .  போலவே ,  ஒலியின் தரம் கூட்டுவதற்காக Synthesizer பயன்படுத்தி கோரஸ் குழுவினரின் குரலோசையோடு சேர்த்தும் இசைக்கப்படும். வேறுபடுத்த முடியாதது போல இருக்கும்.
( விக்ரம் படத்தில் கமலஹாசன் பாடியிருக்கும் அந்த டைட்டில் பாடலில் வரும் ஜானகியின் ஹம்மிங் கேட்டால் புரியும் )

                                              புல்லாங்குழலை இசைக்கும் நெப்போலியன்    (அருண்மொழி என்ற பாடகர் )  என்பவரோடு சேர்ந்து விஜி மானுவல்  தன் Keyboard ல் அதே பகுதியை வாசிப்பார். எனவே இரட்டைப் புல்லாங்குழல் (double flute passaage )  இசைத்த நாதம் ஒலிக்கும். மீண்டும் நெப்போலியன் இரண்டாவது முறை வாசித்து அதை track ல்  சேர்க்கும்போது ஒரே நேரத்தில் மூன்று குழல்கள் ( treble flute passage )  சேர்ந்து ஒலிப்பது போல் இருக்கும்.


                                               உதாரணமாக , கோபுர வாசலிலே எனும் திரைப்படத்தில் எஸ்பி.பி , சித்ரா பாடிய  'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்  என்ற பாடல் , சின்ன தம்பி திரைப்படத்தில் ' போவோமா ஊர்கோலம் ' என்ற பாடல் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம் .  இரண்டாவது  BGM  ல் வரும் அந்தப் புல்லாங்குழலின் நாதம் அழகான double flute passage ஐக் கொண்டிருக்கும்


                                                கோபுர வாசலிலே படப் பாடல் அற்புதமான இசைக்கோர்ப்பு செய்யப்பட பாடல். எஸ்.பி.பி  அவர்கள் அந்தப் பாடலின் பல்லவி பாட கடைசி வரியில் சித்ரா சேர ,  தொடர்ந்து சித்ரா பல்லவி பாட ஆரம்பிக்கும்போது எஸ்.பி.பி  நிறுத்திக் கொள்ள ...Orchestration பிரமாதமாக இருக்கும்.  பகல் நிலவு படத்தில் வரும் ' பூ மாலையே தோள் சேரவா '  என்ற பாடல் ஆய்வுக்குரிய ஒரு படைப்பு. இளையராஜாவும் ஜானகியும் வேறுபட்ட சரணங்களை வேறுபட்ட Octave ல் ஒரே நேரத்தில் பாடுவது அசாத்தியமானது.
   
                                                                                           


                                                ஒலிப்பதிவுக் கூடத்தின் மையப் பகுதிக்கு ராஜா வந்து நிற்க அவருக்கு முன்னால்  திருத்தப்பட்ட இசைக்குறிப்பேடு பொருத்திய தாங்கி இருக்கும்.  முதலில் தந்திக் கருவிகளை வாசிக்கச் சொல்லி பார்ப்பார்.  பிறகு ஒவ்வொரு பிரிவினரின் பங்கினை  வாசிக்கச் சொல்லுவார்.  BGM   1, 2, 3  என்று வெவ்வேறு பின்னனி இசையையும்  வாசிக்கச் சொல்லி சரி பார்ப்பார்.  ஆரம்ப இசை முதல்  BGM ,  முதல் சரணத்திற்கு முன் வரும் இடையிசை  இரண்டாம்  BGM ,  இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் மூன்றாம்  BGM என ஒவ்வொன்றையும்  இசைக்கச் சொல்லி , தவறு இருந்தால் அதையும் திருத்துவார்.   முதல் வயலின் குழு  அடுத்து இரண்டாம் வயலின் குழு  அடுத்து Cello வாசிக்கும் குழு என தனித் தனியாக சரி பார்ப்பார்.
                                                                 
                                                    


                                                இசையின் போக்கு அவர்களுக்குத் தெளிவாக புரியும்வரை  தனியாகவும் மெதுவாகவும் வாசிக்கச் சொல்லி , தொடர்ச்சி மற்றும் நிறுத்தம் வரும் இடங்களை புரிய வைப்பார்.  திடீர் நிறுத்தங்கள் அவருடைய இசையில் முத்திரை பாதிக்கும் லாவகம் ஆகும்.  பல்லவி மற்றும் சரணம் பாடும்போது வரிகளுக்கு இடையே, சில நேரம் வார்த்தைகளுக்கு இடையே , இழைந்து வரும் மின்னல் நேர இசையையும் வாசிக்க வைத்து சரி பார்ப்பார்.

                                                               
                                                             

                                               இவ்வாறு ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று ஒத்திகை பார்த்து சரி செய்த பின்பு  முழுப் பாடலுக்கான இசை தயாராகி விடும்.  சுந்தரராஜன் பாடலை ஹம்மிங் செய்து   பாட , எல்லா கலைஞர்களும் சேர்ந்து பாடல் முழுவதும் இசைக்குறிப்பேட்டில் உள்ளபடி  இசைப்பார்கள்.  ஆனால் Rhythm Section இன்னும் முழுமையடையாததால்  புருஷோத்தமன் அதை ராஜாவின் முன்னிலையில் சரி செய்வார்.


                                                இளையராஜா தான் எதிர்பார்த்த கற்பனைகளும் எண்ணங்களும் வண்ணங்களாக  இசை வடிவில் வெளிப்படாதவரை  மீண்டும் மீண்டும் சரி செய்தும் திருத்தியும் ஒத்திகை பார்த்துக் கொண்டேயிருப்பார். ராஜாவின் பாடல்களில் இசைக்கருவிகள் பாடகரோடு சேர்ந்து பேசுவது போல கூடவே இழையோடி வரும் . உதாரணமாக ஏழை ஜாதி என்ற திரைப்படத்தில் ' அதோ அந்த நதியோரம் ' என்ற பாடலின் சரணத்தை கவனித்தால் String Section பாடலோடு சேர்ந்து பாடுவது போல மிக அற்புதமாக பின்னப்பட்டு இருக்கும் .


                                               ஒத்திகை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிக்க மிகவும் சிரமம் இருக்கும்பட்சத்தில் இளையராஜா அவர்களை எளிதில் விட்டுவிட மாட்டார். மீண்டும் மீண்டும் சரியாகும் வரை ஒத்திகை பார்க்கச் சொல்வார்.  பாடல் பதிவு நடக்கும்போது கடினமான பகுதியை வாசிப்பதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டால் மட்டுமே அதில் சிறு மாற்றம் செய்யச் சொல்வார்.  பெரும்பாலும் ராஜா நினைத்ததை கொண்டு வரவே முயற்சிப்பார்.


                                               ஒத்திகை முடிந்தவுடன் ராஜா தன் தனியறைக்குச் செல்வார்.  அவர் சற்று ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மீண்டும் தங்களுக்குரிய பங்கினை ஒத்திகை பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.  இதற்கிடையில் பாடலாசிரியர் உள்ளே வந்து அமர்ந்து எழுதிய முழுப் பாடலையும்  வாசித்து காட்ட , ராஜா மெட்டுக்கு பொருத்தமாக எல்லா வார்த்தைகளும் அமைந்திருக்கிறதா என்று பாடிப் பார்த்து சரி பார்ப்பார்.  இப்போது பாடல் பதிவு தயார் நிலைக்கு வந்து விட்டது.  Voice Mixing செய்வது அடுத்த வேலை.


                                          பாடகர்கள்  பாடலைப் பாடி பயிற்சி  எடுக்கும் வேளையில் இளையராஜா மற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்.  அது அவரது தனிப்பட்ட வேலையாக இருக்கலாம்.  யாரையாவது சந்திப்பார்; அல்லது மறுநாளைக்குரிய  பாடல் தயாரிப்பாக  இருக்கலாம் ; அல்லது அடுத்த புத்தக வெளியீடு பற்றிய சிந்தனையாக இருக்கலாம் .  ' How to Name it  ' மற்றும் ' Nothing but Wind  '  போன்ற ஆல்பங்கள் ( albums ) அவர் எண்ணத்தில் அந்த நேரங்களில் உதித்தவைதான்!!


                                             சரியாக  12: 30 மணியளவில் எல்லோரும் ஒத்திகை முடித்து ஆயத்த நிலையில் இருக்கும்போது புருஷோத்தமன் ஒலிக் கலவை  செய்யும் அறைக்குச் சென்று அமர்ந்து ஒலிக்கலவை செய்யும் பணியில் (Music Producer )  ஈடுபடுவார்.  பலவித இசைக்கருவிகள் எழுப்பும் நாதங்களை  வெவ்வேறு Channel வழியே balance செய்யும் வேலைகளைச் செய்பவர்  Music Producer .  இப்போது புருஷோத்தமன் ஒவ்வொரு பிரிவிலுள்ள எல்லா கலைஞர்களையும் அவரவர் இசைக் கருவிகளை  வாசிக்க வைத்து அதன் ஒலிச்சுருதி தரத்தை  ( Volume Level ) கூட்டியோ குறைத்தோ balance  செய்வார்.


                                            
                                            எலெக்ட்ரானிக் கருவிகள் நேரடியாக mixer உடன் இணைப்பில் உள்ளதால் அதன் ஒலித்தரம் கூடுதலாக இருக்கும் . Manuel instrument மற்றும்  electronic instrument இரண்டையும் ஒலிக்கலவையின்போது balance செய்வது எளிமையான வேலையல்ல. 


                                             பாடல் பதிவு ஆரம்பிக்கும்போது ஜூடி  மற்றும் பிரபாகரன் ( Senior Violinist  )  சேர்ந்து முழுப்பாடலையும் வழி  நடத்துவார்கள்.  ஒவ்வொரு இசைப்பிரிவினரும் தனித் தனி  அறைகளில் இருப்பார்கள்.  மைய அறையில் எலெக்ட்ரானிக் கருவிகள் வாசிப்போரும் string section குழுவினரும் இருப்பார்கள். 

                                                          
                          

                                              சுந்தரராஜன் பாடும் அறைக்குச் ( Voice booth ) சென்று பாடலை  ஹம் செய்வார். சில நேரங்களில் பிரபாகரன் அவர்கள் முழுப்பாடலையும் வயலினிலேயே  இசைத்துக் காட்டுவார்.  ராஜா ஏற்றுக் கொள்ளும் வண்ணம் முழுப்பாடலும் அரங்கேற புருஷோத்தமன் ஒலிக்கலவையினை   கச்சிதமாக  செய்து  முடிப்பார். புருஷோத்தமன் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே இளையராஜாவோடு நல்ல புரிதலோடு பழகியவர் என்பதால் ராஜாவின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்தவராய் ஒலிக்கலவை  செய்து கொடுப்பார்.  பாடல் பதிவு  இறுதிக் கட்டத்தை எட்டும். 


                                              பதிவு செய்யும் அறையிலிருந்து இளையராஜா முழுப்பாடலையும் கவனிப்பார். அப்போதும் அவர் நினைத்த இசை வரவில்லை என்றால் அங்கும் திருத்தங்கள் உண்டு. கடைசி திருத்தத்தின்போது கூட ஒரு சிறு பயிற்சி எடுத்த பிறகே எல்லோரும் மீண்டும் ஆயத்தமாவார்கள்.  ராஜா திருப்தி அடைந்த பின் மீண்டும் take நடக்கும். 


                                             ஒரு முழுப்பாடலுக்கான  தயாரிப்பு முழுமை பெற்றவுடன் சில நேரங்களில் ராஜா அவர்கள் புருஷோத்தமனிடம் பாடல் பதிவுப்  பொறுப்பினை ஒப்படைத்து விட்டு மதிய உணவிற்காக தன் அறைக்குத் திரும்புவார்.  அல்லது நடக்கவிருக்கும் அடுத்தப் பாடல் பதிவிற்கான இசைக்குறிப்புகளை எழுதப் போய் விடுவார். 


                                              கடினமான பாடல் என்றால் பாடகரை தாளத்துடன் பாட வைத்து தனி track எடுத்துவிட்டு , மற்ற வாத்தியக்கருவிகளின் பங்கினையும் தனியாக எடுத்து இரண்டையும் கலவை செய்யக் கூடிய முறையும் நடக்கும் . 


                                             ராஜாவிடம் பணிபுரியும் அந்தக் கலைஞர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்பதால் அவர் மனதில் ஓடும் படைப்புத் திறனையையும் கற்பனையையும் செயல் வடிவமாக்குவதில் வல்லவர்கள்.  செயல் திறனுள்ள எந்திரம் போல அந்தக் கலைஞர்கள் அனைவரும் ராஜா நினைத்ததை இசையில் கொண்டு வந்து விடுவார்கள் . 


                                             சுந்தரராஜனுக்குப் பதிலாக இளையராஜாவே voice trackல் பாடுவதுண்டு. எடுத்துக்காட்டாக , ஈரமான ரோஜாவே படத்தில் வரும் 'வா..வா..அன்பே  ' என்ற பாடல் முழுவதையும் ராஜா பாடி வைக்க பிறகுதான் ஜேசுதாஸ் , ஜானகி குரலில் பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்த மாதிரி பாடிய பாடல்கள் அவரது குரலில் நன்றாக ஒலித்தால் cassette , CD  களில் ராஜா பாடிய version சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் திரைப்படத்தில் பாடல் ஒலிக்காது. 


                                              இதயக்கோயில் படத்தில் ' இதயம் ஒரு கோயில் ' என்ற பாடல் அதற்கு உதாரணம் . முதலில் ஜானகி ஹம் செய்ய ராஜா பாடி பதிவு  செய்யப்பட்டது. பிறகுதான் பாலுவின் குரலில் மீண்டும் பதிவானது .  படத்தில் பாலுவின் குரல் மட்டுமே ஒலிக்கும் . காதலுக்கு மரியாதை படத்தில் 'என்னைத் தாலாட்ட வருவாளோ ' என்ற பாடலும் அதுபோலவே பதிவு செய்யப்பட்டு பின்னர் ஹரிஹரனின் குரலில் ஒலித்தது.     


                                                 BGM  எல்லாம் வாசிக்கப்பட்டு பதிவு செய்த பிறகு குரல் பதிவு இறுதியாக நடக்கும் . சுந்தரராஜன்  BGM களை ஓடவிட்டு, பாடகர்களுக்கு சரியான ஸ்வரங்கள் சொல்லி , திருத்தி சரி செய்து , குரல் பதிவு செய்வார். பாடகர்களின் குரல் இறுதியாக கலவை செய்யப்படும். கடினமான பாடல் என்றால் இளையராஜாவே கூட அமர்ந்து கவனித்து ஒலிக்கலவை செய்யச் சொல்வார்.  மற்றபடி சுந்தரராஜனே முடித்து விடுவார்.  போலவே , குழுவினரின் குரலோசையும் இறுதியாகத்தான் சேர்க்கப்படும்.  இப்போது முழுப்பாடலும் பதிவு செய்து முடிக்கப்பட்டுவிட்டது .  பாடல் தயார்.


                                           
                                                 
                                              
                            மேலே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளி இளையராஜாவின் இசைக்கோர்ப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் . வயலின் என்ற வாத்தியக் கருவியைக் கொண்டு எத்தனையோ விதமான நாதங்களை அவர் பல பாடல்களில் பலவிதமாக பயன்படுத்தியிருக்கிறார். பலவித வேறுபட்ட உணர்வுகளை வயலின் கொண்டே எல்லோருக்கும் விருந்தாகவே படைத்திருக்கிறார்.

                                         
                              மேற்கண்ட காணொளியில்  ராஜாவுடன் 40 வருடங்களாய், ராஜாவின் இசைப்பாதியாய்  பங்கு கொண்ட ,  மறைந்த மேதை பியானிஸ்ட்  விஜி  மானுவல்  அவர்களுடன் கலந்து ராஜா  இசைக்கோர்ப்பு செய்யும் காட்சி அருமை.

                அடுத்து வரும் காணொளி மூலம்  தோல் கருவிகளைக் கொண்டு வெவ்வேறு தாள லயங்களை  எப்படி உருவாக்குவது ,  வெவ்வேறு இடங்களில்  என்ன நடை பயன்படுத்துகிறார்கள் , அந்தக் கருவிகள் எங்கிருந்து வந்தன என்று பல செய்திகளை ராஜா ஒருவருக்கு விளக்குவதன் மூலம் அவருடைய இசை ஞானமும் வெளிப்படுவதைக் காணலாம்.

                                           


                    முகநூல் நண்பர்  ஒருவர்  இளையராஜாவின் ஒரு பாடலில் அவர் வடித்திருக்கும்  பின்னணி  இசையை  அவருக்குரிய  பாணியில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார் .


                           இசை Arrangement ராஜா
பல வருட மேற்குலக வாழ்வில் எனக்குக் கிடைத்த அனுகூலங்களில் ஒன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல இனத்தவர்களிலிருந்து தோன்றிய இசை மேதைகளின் இசைகளைக் கேட்கக்கூடிய வாய்ப்பு அமைந்ததுதான். இந்த இசைகளை விரும்பியோ விரும்பாமலோ கேட்டே ஆகவேண்டிய சூழ்நிலை எனக்கிருந்தது காரணம் பல வருடங்கள் நான் மிக ஆடம்பரமான Discotheque ஒன்றில் பணியாற்றியிருந்தேன்.
பல நாட்டு மக்களின் பாரம்பரியங்களின் வெளிப்பாடுகளின் ஊடாக உருவான இசை மேதைகளின் பல்வேறுவிதமான இசையைக் கேட்டவன் என்ற வகையில்...
உலகத்தவரின் இசையெல்லாவற்றிலும் பார்க்க இளையராஜாவின் இசை ஒரு படி மேலேயே உள்ளது. அவரின் இசை மிகவும் கட்டுக் கோப்பானது, கண்ணியமானது அதற்குள் விபரிக்கமுடியாத ஆசுவாசம் இருக்கிறது.
உலகின் இசையமைப்பாளர்களும் கொம்போசர்களும் பாடல்களையும், பின்னணியிசைகள், இசைக்கோர்வைகள், மற்றும் தீம் இசைகளை உருவாக்குகிறார்கள், அவற்றில் ஆயிரக்கணக்கானவைகளை எங்கள் செவிகள் கேட்கின்றன அத்துடன் அவைகள் முற்றுப்பெற்றுவிடுகின்றன அல்லது காற்றோடுகாற்றாய் கரைந்து விடுகின்றன அவை மனதுக்குள் நுழைந்து காலகாலத்துக்கும் நிலைத்து நிற்பதில்லை. ஆனால் ராஜாவின் பாடல்கள் அப்படியல்ல. அவை ஒவ்வொன்றைக்கேட்கும் போதும் கடந்து போன பல சம்பவங்களை மனம் நினைத்துக்கொள்ளும், அந்தப்பாடலில் ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் பல இசைச்சூட்சுமங்களில் ஒன்றில் அது என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் லயித்துப்போகும் அப்படி ராஜாவால் செய்யப்பட்டிருக்கும் இசைச்சூட்சுமங்களில் ஒன்று அந்தப்பாடலின் இசை அரேஞ்மெண்ட். ( Musical arrangement )
இசையொன்றினை யாரும் உருவாக்கிவிட்டுப் போகலாம் ஆனால் அந்த இசை உயிரை ஊடுருவவேண்டுமானால் அதைத் தாங்கிப்பிடித்திருக்கும் அரேஞ்மெண்ட் மிக முக்கியம். அது என்ன இசை அரேஞ்மெண்ட்
Music arranging is the ability to change a piece of music to a specific vocal and/or instrumental combination.
musical arrangement - a piece of music that has been adapted for performance by a particular set of voices or instruments.
இசைக்கோட்பாடுகளில் ஒன்றான இதில் (Arranging) ஞானியார் அசகாயசூரர். அது அவருக்கு பிறவியிலேயே கிடைத்த கொடை என்றே நான் எண்ணுவதுண்டு. தனது ஒவ்வொரு பாட்டிலும் இதனை அவர் மிகப்பிரமாதமாக செய்துவந்துள்ளார். அதன் காரணமாகவும் அவரின் பாடல்கள் பல வருடங்களாகியும் முதலில் கேட்கும்போது கொடுத்த அதே ஆனந்தத்தை இன்றும் கொடுக்கின்றன. எமது நெஞ்செல்லாம் நின்று நிலைக்கின்றன. அவரின் பாடல்களில் என்னைக் கிறங்க வைக்கும் Arrangement செய்யப்பட்டுள்ள பாடல்களில் அம்மன் கோயில் கிழக்காலே என்ற படத்தில் பாலு பாடியுள்ள "சின்னமணிக் குயிலே" யை மறக்க இயலாது. இந்தப்பாடலில் :
ஆர்மோனியம்
புல்லாங்குழல்
கிட்டார்
கீபோர்ட்
ஆகிய வாத்தியங்களை எவ்வாறாக அரேன்ஞ் பண்ணியுள்ளார் என்பதைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்:
முதலில் பாலு சின்ன மணீக்குயிலே என்பார்
உடனே ஆர்மோனியம் தக தக தக.. என்றவாறு ஏதோ கூறும்.
பின்பு மீண்டும் "சின்ன மணிக்குயிலே " என்று பாலு ஆரம்பித்ததும் "ட்டீய்ங்" என்று விறைப்பாகப் பதிலளிக்கிறது கிட்டார்
தொடர்ந்து "மெல்ல வரும் மயிலே ".. என்பார் பாலு அதற்கு "லலா ல லா" என்று வேறு விதமாகச் சிணுங்கிப் பதிலளிக்கிறது புல்லாங்குழல் இப்படியே கிட்டாரும் புல்லாங்குழலும் மாறி மாறி பாலுவுக்குப் பதிலளித்துக்கொண்டே செல்கின்றன. சற்றே சிந்தித்துப்பாருங்கள் இந்தப்பாடலின் பல்லவியில் பாலுவுக்குச் சரிக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் ஞானியாரால் அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா அவை மட்டும் இங்கே பயன்படுத்தப்படாது அந்த இடம் வெறுமையாக விடப்பட்டிருந்தால் இந்தப்பாடல் இப்படி இனிமையாக இருந்திருக்குமா ? அந்த இடத்தில் அந்தப் புல்லாங்குழலையும் கிட்டாரையும் மாறி மாறிப் பயன்படுத்தினால்தான் பாடலிற்கு ஒரு தனித்தன்மை கிடைக்கும் என உணர்ந்து அவற்றை அப்படிப் பயன்படுத்தியதுதான் Arrangement .
இந்தப் பாடலின் முதலாவது இடையிசையிலும் ஞானியாரின் அபரிமிதமான இசைக்கற்பனை உள்ளது குறிப்பாக இடையிசையின் 1:03 வது நிமிடத்தில் ஷெனாயைக் (?) கொண்டு ஆரம்பிக்கும் ராஜா அதே ஷெனாயை முடிக்கும் போது ஆர்மோனியத்தை அதே Range இல் ஒன்றாக்கி முடிக்கிறார், அதாவது அந்த இடத்தில் அது ஷெனாயா அல்லது ஆர்மோனியமா என்று குழம்பியபடியே ரசிப்பதிலும் ஒரு த்ரில் உள்ளது.
பாடல் முழுவதுமே பாலுவுக்குச் சமனாக புல்லாங்குழலும் கிட்டாரும் பாவிக்கப்பட்டு அசத்தியிருக்கும் அதேவேளை சரணங்களின் இரண்டாவது பகுதியில் அமரர் விஜி மனுவலின் கீபோர்ட் வாசிப்பு பின்னணியில் நின்றபடி அந்த வரிகளுக்குக் கொடுக்கும் புதிய பரிமாணத்தையும் பதிந்தே ஆகவேண்டும்,
இந்தப்பாடலை புல்லாங்குழல் கிட்டார் கீபோர்ட் இல்லாமல் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. அதுதான் ஞானியாரின் Music Arrangement இன் சாணக்கியம்/ தனித்துவம்.
இப்படியான மிக நுண்ணியமான நுணுக்கங்களையெல்லாம் சாதாரணமாக கிராமத்தில் இடம்பெறும் பாடல் காட்சியொன்றுக்காக அவர் செய்துபார்த்துள்ளதுதான் வியப்பு. இந்தப்பாடலில் செய்துள்ள புதுமையைப்போல இன்னும் பல பாடல்களிலும் வெவ்வேறுவிதமாகச் செய்து பார்த்துள்ள அவர் தனது இந்தச் சின்னச் சின்ன ஆனால் அற்புதமான வேலைப்பாடுகளை அந்தப் பாடல்களின் இயக்குனர்களிடமோ நிருபர்களிடமோ பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை அதற்குக்காரணம் பாடல்களின் பிரபலத்தையும் அதனூடான படங்களின் வெற்றியையும் மட்டுமே எதிர்பார்க்கும் வியாபார உலகில் தனது இந்த முயற்சிகளின் பெறுமதி புரிந்துகொள்ளப்படமாட்டாது என அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இசையில் அவரின் அற்பணிப்புக்களும், தேடல்களும், சேவைகளும் எதிர்கால நல்ல இசையமைப்பாளர்களுக்கு பிள்ளையார்சுழியாக இருக்கும் என்பது திண்ணம்.

                              
                               இவ்வாறு இசைக்கற்பனையின் அதீதமாய் , இசைப்படைப்பின் மேலாதிக்கமாய் ,  இசை அறிவின் உன்னதமாய் , இசைத் திறனில் மேன்மையாய் திகழும் இளையராஜாவின் படைப்புகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் . இளையராஜா ஓர்  இசை  ஊற்று!

........................................தொடர்வேன்...................

                                               
                               
                           

25 comments:

  1. தகவல்களுக்கு வர்ணனைக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன் நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  2. சார்ல்ஸ்
    தொடர்ந்து வரும் உங்கள் இசைராட்சசனுக்கு வாழ்த்துக்கள் .
    #ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதல்ல .என்ன விதமான அதிர்வை இந்த உலகத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறார் என்பதே முக்கியம்# ஆயிரம் கடந்த அபூர்வ ஞானி .இங்கு எண்ணிக்கை பெரிதல்ல .மக்களின் எண்ணங்களோடு இரண்டறக் கலந்திருப்பதே இனிமையான இசைக்கு அழகு .அதையும் சாதித்திருக்கிறார் இசைஞானி .
    25படங்களுக்கு இசையமைத்தாலே இமய சாதனையாய் நினைத்து தற்பெருமையில் தப்பாட்டம் போடும் இக்காலத்தில் ஆயிரம் கடந்தும் ஆர்ப்பரிக்கும் இசையை அமுதசுரபியென அள்ளி வழங்கி வருகிறார் இளையராஜா என்னும் இசைராட்சசன் .அவரின் இசைச் சேவை மென்மேலும் வளர வாழ்த்துவோம் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருள்ஜீவா

      ஆயிரம் கடந்தும் ' நான் என்ன பெரிதாக செய்து விட்டேன் ' என்றுதான் எல்லா பேட்டிகளிலும் சொல்கிறார். அவர் கோபத்தோடு வெளிப்படுத்தும் வார்த்தைகளை பெரிதாக அசை போடுகிறார்கள் . தன்னடக்கத்தோடு சொல்லும் வார்த்தைகளைப் பற்றி விமர்சனங்கள் அவ்வளவாக வருவதில்லை. இசை மட்டும் கொண்டு அவர் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வு காலாகாலத்திற்கும் தொடரும். அந்த இசைச் சாதனையாளரை மிக எளிதாக யாரும் எடுத்துக் கொள்ளுதல் தவறு.

      Delete
  3. இரா மட்டும்தான் நோட்ஸ் எழுதி மற்றவர்களுக்குக் கொடுத்து விதவிதமான வாத்தியக் கருவிகளுக்கான ஒத்திகை பார்த்து, பிறகு பாடகர்களைப் பாடவைத்து பாடல் பதிவு செய்வார் என்று உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது. மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் வெறுமனே சும்மா ஸ்டூடியோ வுக்கு வந்து மனம் போன போக்கில் குருட்டாம் போக்கில் காமா சோமா என்று பாடல்கள் பதிவு செய்கிறார்கள் போலும்.

    நீங்கள் குறிப்பிடும் ஏழை ஜாதி படமோ அதில் வந்த பாடல்களோ இப்போது யாருக்கும் நினைவிலிருக்காது. இராவே அதை மறந்திருப்பார். கஷ்டம். இப்படிக்கூடவா ஒரு ஆளை தூக்கிவைத்துக்கொண்டு அபத்தமாகக் கொண்டாடவேண்டும்?

    அடுத்து சரவணபவன் ஹோட்டலில் எப்படி மசால் தோசை தயாரிக்கிறார்கள் என்று எழுதுங்கள். இது கூட ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறது.

    ஆயிரம் படம் என்று கணக்கு காட்டி என்ன பயன்? இந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டே கூத்தடியுங்கள். ஆயிரமாவது படம்தான் ஊற்றிக் கொண்டதே? இராவின் ஆயிரமாவது படம் அவருக்கு ஒரு அவமரியாதையை கொடுத்துவிட்டதாக பேச்சு.

    ReplyDelete
  4. ஹலோ காரிகன்

    மசாலாத்தனமான உங்கள் பின்னூட்டம் கொஞ்சம் காரம்தான் . மசாலா தோசை போல அவ்வளவு எளிதான விசயமா இசை அமைப்பது!? சூழலுக்கேற்றவாறு ஒரு பாடலை உருவாக்குவது யாராயிருந்தாலும் எளிதான காரியமல்ல. இளையராஜாவைத் தவிர யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள் என்று நான் எங்கிலும் சொல்லவில்லை.

    ராஜா ஒரு பாடலை காலை 7 மணிக்கு ஆரம்பித்து 2 மணிக்குள் எவ்வாறு பதிவு செய்கிறார் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன் . ஒரு சிலர் ஒரு பாடலுக்கு ஒரு வாரம் எடுத்தவர்கள், எடுப்பவர்கள் இருக்கிறார்கள் . இரவில் மட்டும் இசை அமைப்பவர்கள் இருக்கிறார்கள் . அவர்களை இவரோடு நான் ஒப்பிடவுமில்லை. நீங்கலாக வீண் கற்பனை செய்து கொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளாதீர்கள்.

    ஆயிரம் படங்கள் வெறும் கணக்கா? அந்த எண்ணிக்கையை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடியுமா? நாற்பது வருடங்கள் ஆகியிருக்கின்றன. இரு தலைமுறைகளை தாண்டிய விசயமிது. இந்த சாதனைகள் ஒரு சிலரால் மட்டுமே முடியும். இளையராஜாவும் அதில் ஒருவர். உங்களுக்கு இளையராஜாவின் இசை புரியவில்லை. பாவம் !
    அதனால் அவர் என்ன செய்தாலும் தப்பாக பேசுவீர்கள்.

    ராஜா இசையமைத்த ஆயிரமாவது படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறீர்களா? படம் ஓடவில்லை . ஆனால் இசையால் மிரட்டியிருப்பார். வயசு ஆனாலும் சிங்கம் சிங்கம்தான்! உங்களைத் தவிர யாரும் அந்தப் படத்தின் இசையை குறைவாக பேசவேயில்லை.
    இரா மீதுள்ள உங்களின் வன்மப் பார்வையில் இதுவும் ஒரு கோளாறான பார்வையே!

    நீங்கள் காணாய்ப்போனவர் வீணாய்ப் போனவரின் பாடல்களையெல்லாம் எடுத்துப் போட்டு உருகுவீர்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து உருகணும் . நாங்கள் சொன்னால் அபத்தமா?நீங்களும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அபத்தமாகவே எழுதுவீர்கள்?

    வாழும் இசைக்களஞ்சியம் இளையராஜா . வாழ்த்தாவிட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாமல்லவா ?

    ReplyDelete
  5. http://www.eraaedwin.com/2016/02/blog-post.html

    ReplyDelete
  6. வாங்க அனானி

    நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் உள்ளே சென்று வாசித்தேன். விஜய் டிவி யில் அவர் கொடுத்த பேட்டியின்போது மதுரையில் வாடகை வீடு கிடைக்காமல் தெரிந்தவராலேயே புறக்கணிக்கப்பட்டதாக சொன்னார். அது தோழர் மாயாண்டி அவர்களைப் பற்றியது . ராஜா இசையில்தான் ஞானி . வேறு எந்த துறையிலும் பாண்டித்தியம் பெற்றவரல்ல. எல்லா மனித சுபாவங்கள் அவருக்கும் உண்டு. பொது மேடையில் பேசும்போது மனதில் பட்டதை நாகரீகம் கருதாது சொல்லி விடுகிறார். அது விமர்சனத்திற்கு உட்படுகிறது.

    அவருடைய இசை ஆளுமையை மட்டுமே நான் எடுத்துச் சொல்ல விழைகின்றேன். அவருடைய பேச்சுக்களை நான் வரவேற்பதில்லை.

    ReplyDelete
  7. தாரைதப்பட்டையில், இளையராஜாவின் அசத்தும் புதுமுயற்ச்சிக்கு தேசியவிருது கிடைத்துள்ளது விரைவில் "ஆஸ்கார்" விருதும் கிடைக்க வாய்ப்பு வல்லுந‌ர்கள் கருத்துகனிப்பு
    ***************************************
    1976 மே 14, பண்ணைபுரம் ராசய்யா இளையராஜாவாக அன்னக்கிளியில் அறிமுகமாகி இன்று ஆயிரமாவது படத்தில் தாரை தப்பட்டையைக் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார்
    பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழுப் படத்தையும் எடுத்து இசையமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதைப் பார்த்து கதையின், காட்சியின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள்.
    இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழுக்கதையையும், காட்சிகள் பற்றியும், அந்தக் காட்சிகளை பாலா எப்படிப் படமாக்குவார் என்பதைப் பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா, சில முக்கிய காட்சிகளைக் கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து படப்பிடிப்புக்கு முன்பே அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்
    பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளைப் படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளில். பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்தக் காட்சியைப் படமாக்கும் புதிய முறை இது. தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி, அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜா, முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.
    இளையராஜாவின் ஐநூறாவது படமான அஞ்சலி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமமில்லாமல் பல விருதுகளை வென்று ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட படமாக அமைந்ததற்கு ராஜாவின் இசையும் ஒரு காரணம். அது போலவே தாரை தப்பட்டை படமும் அமையும் வகையில் அருமையான இசையைக் கொடுத்ததற்காக தற்போது தேசியவிருது கிடைத்துள்ளது இந்தபடத்தை "ஆஸ்கார்"விருதுக்கு பரிந்துரை செய்தால் நிச்சயம் கிடைக்கும் என திரைப்பட வல்லுநர்களின் கருத்துகனிப்பு

    மேற்கண்ட கருத்து முக நூலில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டது . தாரை தப்பட்டை இசையை முழுமையாக கேட்டிராத ஒரு இணைய நண்பர் தனது பின்னூட்டத்தில் அவதூறாக சொன்ன செய்திக்கு ஏற்கனவே நான் பதில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் இதுவும் அவருக்கான பதில் பின்னூட்டமாக இருக்கட்டும். இப்போது அவர் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பார் என்பதுதான் கேள்வி?

    ReplyDelete
  8. இதைத்தான் எதிர்பார்த்தேன். விருது இளையராஜாவுக்குக் கிடைத்தால் அது நியாயமானதாம். அதே விருது ரஹ்மானுக்கு கிடைத்தால் அதை அவர் பணம் கொடுத்து வாங்கினாராம். ஒன்று தெரியுமா? தேசிய விருது தேர்வுக் குழுவில் இராவின் சகோதரர் கங்கை அமரனும் ஒருவர். கேட்டால் இசை விருது ஓட்டெடுப்பின் போது கங்கை அமரன் அங்கு இல்லவேயில்லையாம். வெளியில் நின்றுகொண்டிருந்தாராம். யார்கிட்ட இந்தக் கதை?

    தாரை தப்பட்டைக்கு ஆஸ்கார் அவார்டா? போய் எங்கேயாவது வாயில விரல் சப்பிக்கிட்டு இருக்கிற சின்னப் பசங்க கிட்ட சொல்லுங்க. அப்படியா என்று உங்களை வியப்பாக பார்ப்பார்கள். ஆஸ்கர் விருது தரப்படும் முறை பற்றி அரிச்சுவடி தெரியாத அரைவேக்காட்டு வீராப்பு பேசுகிறீர்கள்.. வழக்கம் போலவே எதையும் முழுதாக தெரிந்துகொள்ளாமல் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று நீங்கள் சொல்வது புதிதல்லவே. எல்லாம் கண்டதுதானே.

    இராவுக்கு விருது கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை உங்களைப் போன்று இராவாசிகளைத் தவிர.

    மறுமுறை தாரை தப்பட்டைக்கு ஆஸ்கார் என்று சொல்லிவிடாதீர்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா?

    ReplyDelete
  9. ஒன்றை மறந்துவிட்டேன். முதலில் உங்க இராவை அவர் போட்டதாக சொல்லும் சிம்பனியை வெளியிடச் சொல்லுங்கள். பிறகு ஆஸ்கர் பற்றி கதையடிக்கலாம். இரா பெயர் தமிழ் நாட்டைத் தாண்டினாலே யாருக்கும் தெரியாது. இதில் அகில உலக விருதுக்கு எப்படியப்பா போவார்?

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      கீழ்க் கண்ட விடியோவில் விஜி மானுவல் பொய் சொல்கிறாரோ!!?

      https://www.youtube.com/watch?v=fFPjQlXXaio

      Delete
  10. காரிகன் வந்தாச்சா

    ஆஸ்கார் அவார்ட் பற்றி முக நூல் நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். நான் சொல்லவில்லை. ஹாலிவூட் திரைப்படத்தைத் தவிர எந்தப் படத்துக்கும் அந்த அவார்ட் கிடைக்காது என்பது தெரிந்ததுதானே!

    ஆனால் இரா வுக்கு அதற்குரிய தகுதி உண்டு. இசையறிவும் உண்டு. இசையைப் பொறுத்தவரை அவர் அசாதாரணமானவர் . இசை வல்லுனர்களை மதிக்கத் தெரியாத உங்களைப் போன்ற ஞானப் பிரகாசகங்கள் வேண்டுமென்றால் குறை சொல்லிக் கொண்டே அலையலாம்.

    கங்கை அமரன் குழுவில் இருந்ததால்தான் இளையராஜாவிற்கு விருது கிடைத்தது இல்லாவிட்டால் கிடைத்திருக்காது என்பது உங்களின் கருத்தாகவும், அதுதான் உண்மை என்பது போலவும், சிம்போனியும் இசைக்கவேயில்லை என்றும் நீங்கள் கருதிக் கொள்ளும்போது, ரகுமானைப் பற்றி அந்த நேரத்தில் வெளிவந்த செய்திகளை உண்மை என நான் ஏன் நம்பக் கூடாது?

    ReplyDelete
  11. http://cinema.dinamalar.com/hindi-news/44791/cinema/Bollywood/Problem-rised-for-National-award-to-Ilayaraja.htm

    ReplyDelete
  12. இதற்கு முன்னால் நான்கு முறை தேசிய விருது பெற்றிருக்கிறாரே அப்போதெல்லாம் இளையராஜாவுக்கு வேண்டியவர்கள் அந்த ஜூரியில் இடம் பெற்றிருந்தார்களா? தற்போது கங்கை அமரன் மட்டுமே அவர் அண்ணனை தேர்ந்தெடுத்தாரா? ஜூரியில் வேறு யாரும் இல்லையா? கங்கை அமரனுக்கு அவ்வளவு செல்வாக்கா இருக்கிறது?

    கங்கை அமரனும் தெளிவாக பதில் சொல்லி விட்டார். இதில் இளையராஜாவின் திறமை மீது எங்கிருந்து சந்தேகம் வந்தது?

    ReplyDelete
  13. சார்ல்ஸ்

    மிக அருமையான பதிவு.சிலர் எழுதும் கண்றாவிகளுக்கு மத்தியில் இசையமைப்பின் விபரங்கள் பற்றியும் அழகாக எழுதியுள்ளீர்கள்.பல விசயங்களை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.

    ஒரு கோமாளியின் தேய்ந்த ரிக்காட்ஒன்று தான் கடுப்பேற்றுகிறது.இசையை பற்றி ஒன்றுமே தெரியாத கததுக்குட்டி.

    ///ஒரு அழகான ஓசை என்னைப் பொறுத்தவரை இசையே. // என்று சொல்லுகிற இசைமேதை..

    முன்பு ஒருவர் இளையராஜாவுக்கு கங்கைஅமரன் இசையமைத்து கொடுத்தார் என்று ஒரு அசட்டு தைரியத்தில் எழுதியதைப் போல இளையராஜா சிம்போனி அமைக்கவில்லை கேட்கிற பாங்கும் , கங்கை அமரனால் விருது கிடைத்தது என்பதும் ஒன்றுதான் வெங்காயம்!

    காரிகன்

    இந்தியாவிலே பாட்டுக்கு நோட்ஸ் எழுதுபவர் இளையராஜா தான்.இந்த காணொளியை பார்க்கவும்.சொல்பவர் கங்கை அமரன் அல்ல.ஜேசுதாஸ்.உம்மைப் போல ஜேசுதாசுக்கு அறிவில்லை என்று எழுதிப்போடாதீர்!

    ///இரா மட்டும்தான் நோட்ஸ் எழுதி மற்றவர்களுக்குக் கொடுத்து விதவிதமான வாத்தியக் கருவிகளுக்கான ஒத்திகை பார்த்து, பிறகு பாடகர்களைப் பாடவைத்து பாடல் பதிவு செய்வார் என்று உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது.//- காரிகன்

    இதிலென்ன சந்தேகம் !

    ///" மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் வெறுமனே சும்மா ஸ்டூடியோ வுக்கு வந்து மனம் போன போக்கில் குருட்டாம் போக்கில் காமா சோமா என்று பாடல்கள் பதிவு செய்கிறார்கள் போலும். //" = காரிகன்

    இது தான் காரிகன் ஸ்டைல் ...வெட்கம்கெட்ட பித்தலாட்டம் !

    சிம்பொனி பற்றி கதைக்க ஒரு அருகதை வேண்டும் .

    சார்ல்ஸ் தொடர்ந்து 1000 பதிவுகள் எழுதுங்கள்.இவர்களுக்கு இது தான் பதிலடி இவர்களும் ஒரே ஒப்பாரியை வைக்கட்டும்.சிரித்து மகிழ்வோம்.

    ReplyDelete
  14. https://www.youtube.com/watch?v=fVmDUhdkbp8

    ReplyDelete
  15. வாங்க விமல்

    இந்தப் பக்கம் நீங்கள் வந்து ரொம்ப நாளாச்சு . ஜேசுதாஸ் அவர்களின் விழாவில் தாசும் இளையராஜாவும் பேசிக் கொள்ளும் விஷயங்கள் மிகவும் சத்தியமானவை. இரு பெரிய இசை ஆளுமைகள் மேடையில் உரையாற்ற தக்ஷிணாமூர்த்தி , பாலமுரளி கிருஷ்ணா போன்ற இசை மேதைகள் அதை உன்னிப்பாய் கவனிப்பது பரவசப்படுத்தும் காட்சி.

    தாஸ் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை. சரியாக உண்மையை உரைத்திருக்கிறார் . மற்றவர்கள் ராஜா மீது கொண்டிருக்கும் வன்மம் இதையெல்லாம் சகித்துக் கொள்ள விடாது . அவர்கள் வழக்கம் போல பிதற்றட்டும் . நாம் அவர்களைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

    ReplyDelete
  16. https://youtu.be/QfgtjXtxC6s

    ReplyDelete
  17. நன்றி நியோ . வெளிநாட்டவரை நமது இளையராஜாவின் பாடல்கள் கவர்வதில் ஆச்சரியமில்லை . நமது ராஜாவை நம்மில் சிலருக்குதான் புரிந்தபாடில்லை . அவரை தெரியாவிட்டாலும் அவர் இசையை ரசிக்கும் வெளிநாட்டினர் பலர் இருக்கிறார்கள். அது அவர் இசையின் மகிமை . அதில் தமிழராகிய நமக்கும் பெருமை.

    ReplyDelete
  18. salute to your immense patience............... go ahead.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் . நான் தொடர்வேன். நீங்களும் தொடருங்கள்.

      Delete
  19. சார்லஸ் சார் ...காரீகனிடம் விஜய்மேனுவல் வீடியோ தொகுப்பில் 0017 ஐயும் பின்0220யையும் பார்க்க சொல்லுங்கள்...புயலின் மன்பலம் அறிய சொல்லுங்கள்

    ReplyDelete
  20. வாங்க சிவகுமார்

    விஜி மானுவலின் வீடியோ தொகுப்பை கேட்டேன் . அட்டகாசமான இசைத்தொகுப்பு . இளையராஜா என்ற இசை ஜீனியஸிடம் இணைந்த மற்றொரு ஜீனியஸ் விஜி . காட்டுக் கூச்சல் இசை கேட்பவரிடம் இதை பற்றி பேசினால் புரிந்து கொள்ள மாட்டார்கள் .கற்றுத் தேறவே முடியாத மாணவனை புரிய வைக்க முடியாது.

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்