Monday 16 February 2015

இசை ராட்சஷன் - 7


                                                   இசை ராட்சஷன் - 7

                                   ( The Musical Legend  ) 

                            
                               
                         கர்னாடக இசையின் ஆதி நாட்டுப்புற இசை என்ற ஆய்வு இசை ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு நிரூபணமும் செய்யப்பட்டிருக்கிறது.  மக்களால் மண் சார்ந்த இசையாக மக்களிசை என்று உருவான இசையே நாட்டுப்புற இசை . நாட்டுப்புற இசையின் வேர்களிலிருந்து பல ராகங்கள் உருவாகி  கர்னாடக இசையாக உருமாறிய வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு சொல்கிறது.  நாட்டுப்புற இசை பாமரரும்  புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையானது . கர்னாடக இசை குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டும் புரிந்து கொள்வதும் கற்றுக் கொள்வதும் ஆளுமை செய்வதும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

                   தமிழ்த் திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும் கொடுக்கப்பட்ட பின்னரே பாமர ஜனங்களும் அதை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். இளையராஜாவின் வருகைக்கு முன்னர் பல இசை முன்னோர்களால் படைக்கப்பட்ட அற்புத பாடல்கள் போலவே இளையராஜாவும் நாட்டுப்புறப் பாடல்களை அனாயசமாக கையாண்டார் .  தனது இசை முன்னோர்கள் கொடுத்த படைப்புகளையும் தாண்டி செவ்வியல் இசை கலந்த நாட்டுப்புற பாடல்களை   கொடுத்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.

                                                 

                      ' ஞானதேசிகன் '  என்ற இயற்பெயர் கொண்டு பிறந்து, கிறித்தவராக ' ' டேனியல் ' என்ற  பெயரும்   கொண்டு , வீட்டில் ' ராசய்யா ' என்று அன்பொழுக அழைக்கப்பட்டு,  திரையுலகத்திற்காக  'இளையராஜா ' என்று உருவெடுத்தவர்  நமது இளையராஜா .  தமிழகத்தின் கடைக்கோடியில் பண்ணைபுரத்தில் பிறந்து வளர்ந்து, மக்களிசை கேட்டு, இசையின்பால் ஈர்க்கப்பட்டு,  பெண் குரலில் பாடிக் கொண்டு, நாடகங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று ஊர் ஊராக தன் சகோதரர்களுடன் சுற்றி இசைக்கச்சேரி நடத்தி, சென்னைக்குக் குடி புகுந்து,  இசை அறிவை வளர்த்துக் கொண்டு , சினிமா உலகத்தில் பிரவேசித்தவருக்கு என்ன கொடுத்தால் இந்த ஜனங்களுக்குப் பிடிக்கும் என்பது தெரிந்து கொடுத்த இசைஞானம் அளப்பற்கரியது.  நாடக இசையிலிருந்துதான் இந்த சினிமா இசை வளர்ந்திருக்க முடியும் என்பதால் இளையராஜாவிற்கு அந்த நாடக  இசை  அனுபவம்  ஏற்கனவே இருந்தது ; அதனால் அவரால் சிறப்பானதொரு இசை வழங்க முடிந்தது .


                                   1978 இல் இளையராஜாவின் இசைப்பயணத்தில் நானும் பயணித்துக்கொண்டிருந்த காலம் . குறுகிய  ஹாஸ்டல்  வாழ்க்கை முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டேன்.  டேப்ரெக்கார்டர் வசதி படைத்தோர் வீட்டில் மட்டும் இருக்கும். எனக்கு வாய்த்தது  ரேடியோ மட்டுமே! சிலோன் வானொலி ஒலிபரப்பாத பாட்டுக்களா! எத்தனையோ இசை அமுதங்களை  அள்ளி வழங்கிய  அட்சயபாத்திரமல்லவா !  பாட்டுக்கள்  கேட்டுக்கொண்டே தூங்கிப் போன காலமும் பாட்டுக்கள்  கேட்பதற்காகவே தூங்காத காலமும் நெஞ்சில் நிழலாடுகின்றது.  அரை மணிக்கொரு முறை வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு காலத்துப் பாடல்களை ஒலிபரப்புவதில்  இலங்கை வானொலியை முந்தவே முடியாது.

                   
                               அந்த சமயத்தில் ' இளமை ஊஞ்சலாடுகிறது '  என்ற ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் வெளிவந்தது.  ரஜினி , கமல் என்று இரு மெகா ஸ்டார்கள் இணைந்து நடித்த  படம் . அவர்களின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக்கு சென்று கொண்டிருந்த காலமது. எம்.ஜி. ஆர் , சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார்களாக பேசப்பட்டு வந்தார்கள். திரைப்படம் பெரிய ஹிட். பாடல்கள் அதைவிட பெரிய ஹிட்.


                                 இலங்கை வானொலியில்  'இசைச்செல்வம்'  என்ற நிகழ்ச்சி  ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு மணி நேரம் நடத்தப்படும். பல புதிய பாடல்கள் ஒலிபரப்பப்படும் . மக்களை எது அதிகமாய் கவருகின்றதோ அந்தப் பாடலுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து  அப்பாடல் எந்தத்  தரத்தில் இடம் பிடிக்கிறது  என்பதை தேன்குரல் அறிவிப்பாளர்  கே.எஸ் . ராஜா  அறிவிப்பார்.  கடைசியாக  இருக்கும்  பாடல் அந்த வாரம் வெளியேற்றப்படும்.  புதிய பாடல் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் .  ' என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு  ' என்ற பாடல் அப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.  ஒரே வாரத்தில் மூன்றாம் இடம் பிடித்தது. அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஏறக்குறைய  என் நினைவில் உள்ளவரை 30 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக முதலிடத்தைப்  பிடித்தது .


                                 என்ன ஒரு இளமைத் துள்ளலான பாடல்! கிடார் , டிரம்பெட் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடல் .  கிடாரை  இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா என என்னை வியக்க வைத்தது . தான் காதலித்தப் பெண்ணொருத்தித் தன் நண்பனுடன் சேர்ந்து வந்து தானாடும் நடன நிகழ்ச்சியை  காண அமர்ந்திருப்பதை பார்க்கும் நாயகன் உற்சாக உணர்வு சட்டென வடிந்துபோய் ஏமாற்றம், பிரிவு, நம்பிக்கைத் துரோகம் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொள்ள முடியாமல் வெடித்து , 'வார்த்தைத்  தவறி விட்டாய் கண்ணம்மா ...மார்பு துடிக்குதடி '  என்று வேதனைக் குரலோடு பாடல் பாடி ஆடுவதாக காட்சி. கமலஹாசனின் ஆவேசமான ஆட்டம், எஸ்.பி.பி யின் இளமை பீறிடும் உணர்ச்சிப் பூர்வமான குரல், 'அதுக்கும் மேல'  இளையராஜாவின் அட்டகாசமான இசையமைப்பு என்று எல்லாம் பொருந்தி நம்மையும் கலங்கடிக்கும்  பாடல் அது. சொல்லப்பட்ட சூழலை மனதில் உள்வாங்கி  அதை அப்படியே இசைமாலையாக கொடுத்திருப்பார் இளையராஜா. நாயகி அங்கிருக்கவும் இயலாமல் நகரவும் முடியாமல் தவிப்பதை மேலை நாட்டு இசைக்கலப்பில் அழகாக  எடுத்துரைப்பார்.


                             'உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில்  மறைந்திருக்கும் துளி விஷம் ' என்ற வரிகள் சரணத்தில் பாடப்பட்டு  ஒரு இடையிசை வந்து மறுபடியும் அதே வரிகள் பாடப்படும். அடுத்த சரணத்திலும் அது போலவேதான்!  அந்த இடையிசைக்கு ரஜினி செய்யும் மேனரிசம் இப்போதும் ரசிக்கலாம் . அதற்காகவே அந்த இடையிசையை கூர்ந்து கேட்டு ரசிப்பேன் .  அவ்வளவு ஆர்ப்பாட்டமாய் ஒலிக்கும் பாடல் எல்லா இசையும் நிறுத்தப்பட்டு மீண்டும் தொகையறா வரிகளோடு  முடிவதெல்லாம் எனக்கு புதுமையாக தெரிந்தது. இன்று அந்தப் படம் , நடிகர், நடனம் , நடனத்திற்கான உடை , இசையமைத்தவர் , பாடியவர் எல்லாம் பழசு . ஆனால் அந்த இசை மட்டும் எனக்கு புதுசு. ஏன் என்று எளிதாக கேட்கும் அளவிற்கு விளக்கம் எளிதாக சொல்ல முடியவில்லை.

                           
                                           

                         
                             அதே படத்தில் ' ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது ' என்ற இனிய கானம் கேட்பவரை காதல் கொள்ளச் செய்யும் ; காதலிப்போரை முணுமுணு க்கச் சொல்லும்; காதலிக்காதவரை ஏங்கச் சொல்லும் . அன்று அந்தப் பாடல் கேட்டு நிறைய இளைஞர்கள் அப்படித்தான் திரிந்தார்கள்.
படம் மட்டுமா  ' இளமை ஊஞ்சலாடுகிறது ' ...இப்போது கேட்டாலும் பாட்டைப் பாடிய பாலுவிற்கும் வாணி அவர்களுக்குமல்லவா குரலில் இளமை ஊஞ்சலாடுகிறது . இருவரும் இணைந்து கனிந்து குரலில் அப்படி ஒரு குழைவைக் கூட்டிச் சேர்க்கும் வித்தையை கொண்டுவந்திருப்பார்கள். அந்தக் கனிவிற்கும் குழைவிற்கும் இளையராஜாவின் அருமையான இன்னிசையே காரணம்.  'கற்பனைகளில் ...சுகம்... சுகம்...' என்று எஸ்.பி.பி கொஞ்சிப் பாடும்போதே கேட்பவருக்கும் சுகம்தான்! சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பில் இந்தப் பாடலையும்  நிச்சயம்  சேர்க்கலாம் .

                     
                         
                         
       
                          மலேசியா வாசுதேவன் குரலில் ' தண்ணி கருத்துருச்சு ...அங்கு தவளை சத்தம் கேட்டுருச்சு  ' என்ற பாடல் ஊரெல்லாம் உற்சாகப்படுத்திய குத்துப் பாடல்.  பாடலின் பின்னணியில் காட்சிகள் கொஞ்சம் அடல்ஸ் ஒன்லி . நாயகனும் நாயகனின் தோழியும் ஒன்று கூடுவதாக வரும் காட்சியமைப்பில் வெளியே நாடோடிக் கூட்டத்து ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடலுக்கு முகவுரையாக ஆடிப் பாடி மகிழ்வதின் பின்னணியில் இப்பாடல் ஒலிக்கும். மலேசியா வாசுதேவனின் குரல் குத்துப் பாட்டுக்கும் நாடோடிப் பாட்டுக்கும் சரியாக பொருந்தும் . யாருக்கு எந்தப் பாடல் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை தேர்வு செய்வதிலும் ஒரு இசையமைப்பாளனின் பங்கு இருக்கிறது . இளையராஜா அதிலும் கெட்டிக்காரர்.


                           ' ஏ .....காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள ...கண்ணும் கண்ணும் பேசுறப்போ வார்த்தையில்ல ...'  என்ற வரிகள் வரும்போது பாட்டின் போக்கும் இசையின் போக்கும் வித்தியாசமாய் இருக்கும் . பின்னணியில் இருவரின் உணர்ச்சிகளும் இலைமறை காயாக அதற்கேற்றார்போல காட்டப்பட்டிருப்பதை பார்த்தபோது எனக்கும் பற்றிக் கொண்டதெல்லாம் பகிர முடியாது . இளையராஜாவின் இசையும் சேர்ந்து பற்ற வைத்தது.

                 http://play.raaga.com/tamil/album/Illamai-Oonjaladuthu-songs-T0000059


                எல்லா பாட்டுக்களும் வாலி அவர்களின் கை வண்ணமே! வார்த்தைச் சித்தர் என்று ஏன் அழைக்கிறார்கள் என இப்போது புரிகிறது . 'கிண்ணத்தில் தேன் வடித்து ' , ' நீ கேட்டால் '  என்ற மேலும் இரு அருமையான வித்தியாசமான பாடல்களும் அதே படத்தில் உண்டு . அந்நேரத்தில் நான் அதை அதிகம் ரசிக்கவில்லை. இப்போது கேட்டால் ஐந்து பாடல்களும் ஐந்து விதமான வித்தியாசம் கொண்ட பாடல்கள் என்பது புரிகிறது .  இன்னும் இன்னும் கேட்கத் தூண்டும் இளையராஜாவின் இசைக்குத்தான் எத்துனை பலம் !


                    ' இது எப்படி இருக்கு ' என்றொரு படம் . ஜேசுதாஸ்   மற்றும் ஜானகி குரலில் '  எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ ' என்ற பாடலை கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போனது. இயற்கையின் அழகையெல்லாம் அள்ளிக் குடித்து விடத் தோன்றும் அழகியல் உணர்வோடு காதலின் மென்மையையும்  சேர்த்து வெளிக்காட்டும் நாயகனும் நாயகியும் ஆடிப் பாடுவதாக அமைக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜா இசையை அள்ளித் தெளித்த வண்ணம் அற்புதமானது. பாடல் கேட்கும்போதெல்லாம் இறக்கை முளைத்துப்  பறப்பதைப் போன்ற உணர்வு.  ' குக்கூ ....குகுகுக்கூ ...' என்று இரு குயில்களின் குரலொலி போல் குரலிசை சேர்த்து பின்னணி இசை அமைத்திருப்பார்.  நாமும் பறவைகளாகாமல் என்ன செய்ய?
                                                                            
                                             
               
          'கண்ணன் ஒரு கைக்குழந்தை '  என்ற திரைப்படத்தில்  ' மேகமே ...தூதாக வா ... அழகின் ஆராதனை ' என்று எஸ்.பி பி. மற்றும் சுசீலாவின் ஜோடிக் குரல்களோடு ஒரு உல்லாசப் பாடல். பகடி ராகத்தில் அமைக்கப்பட்ட  இளமையும் இனிமையும் ததும்பும் பாடல்.  காதல் பாடல்கள் பல இசையமைப்பாளர்கள் அமைத்து   இருக்கிறார்கள்.  அதே விதமான உணர்வை  அதை விட மேலான உணர்வை  இவர் பாடல்களும் ஏற்படுத்துவதே இளையராஜாவின் சிறப்பு.

                                                                                 

 



 அதே  படத்தில் ' மோக சங்கீதம் ...நிலவே.. நிலவே... அதைக் கேட்க
 வந்தாயோ ..' என்ற பாடல்  சுசீலாவின் குரலில் மிக மென்மையான பாடல்.  ஆனால் இலங்கை வானொலியில் அதிகம் ஒலி  பரப்பியதில்லை. கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும்  அழகான மெலடி . அத்திப் பூ வரிசையில் இடம் பெற்றது ஏன்  என்பதற்கு என்ன காரணம் சொல்ல!? தெரியவில்லை. 
 

      அடுத்து அதே 78  இல்   வந்து  தமிழகத்தைக்  கலக்கிய பாரதிராஜாவின்  இரண்டாவது படம் ' கிழக்கே போகும் ரயில் ' . இளையராஜாவின் இசை மணிமகுடத்தில் இன்னொமொரு நவரத்தினக்கல் இந்தப் படம் . பாடல் காட்சிகளை புதுமையாக எடுப்பதில் வல்லவர் பாரதிராஜா . அதற்கேற்ற அற்புத இசையை இளையராஜா கொடுக்க மக்களுக்கு அது பெரிய கொண்டாட்டம் . படமும் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.

                                                      


       மதுரையில் புறநகர் பகுதியில் நாங்கள் குடியிருந்ததால் வீட்டிற்கு அருகே ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது . எனக்கு ரொம்பவும் வசதி . படமும் பார்க்கலாம். பாட்டுக்களும் கேட்டுக்கொள்ளலாம் . அதனால் வாரம் இரண்டு படங்களாவது பார்த்துவிடுவேன்.  பாட்டுக்கள் கேட்பதற்காகவே சினிமாவிற்கு போனது அதிகம் . சினிமா தியேட்டரில் பாடல்கள் கேட்பது சுகானந்த அனுபவம் . அரங்கமே இசையால் நிரம்பும் .  மனதுக்குள் அப்படியே இறங்கும் . அப்படிதான் கிழக்கே போகும் ரயில் படத்தின் பாடல்களை விரும்பி கேட்டேன். ஒரே வாரத்தில் மூன்று தடவை சினிமா கொட்டகை போய் படம் பார்த்தேன்.  சில நேரங்களில் கையில் காசு இல்லாவிட்டால் முக்கியமான பாட்டு கேட்க அரங்கத்தை ஒட்டி வெளியே நின்று கேட்டு  ரசித்திருக்கிறேன். 




                             அந்தப் படத்தில் ' மாஞ்சோலைக் கிளிதானோ ..மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ ...'  என்ற பாடல் தேனிசைக் குரல் ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய மகத்துவமான பாடல். கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் முத்திரைப் பதிக்கும் தேன்மதுரத் தமிழ் வரிகளில் தென்னையையும் தலையசைக்க வைக்கும் அழகிய செவ்வியல் இசை கலந்த  மெல்லிசை. ஒரு பெண்ணை வர்ணிக்க அதிகமான சொற்கள் பயன்படுத்தப்பட்ட நீண்ட பல்லவி அல்லது சரணம்  உள்ள பாடல் என்று முத்துலிங்கம் சமீபத்தில் சொன்னதாக ஞாபகம்.  மிருதங்கம் , வீணை, புல்லாங்குழல்   பிரதானமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.    பாட்டின்
ஆரம்பத்தில் மிருதங்கம் , தபேலா , சதங்கை  கலந்து அழகிய தாளலயத்தில் நடை வாசிக்கப்பட்டு , சட்டென நிறுத்தி, 'மாஞ்சோலை கிளிதானோ' என மென்மையாக ஆரம்பிக்க, பூக்கள் சொரியும் இசை போல் இடையிசை ஒலித்து 'மான்தானோ ' என தொடர, குயிலின் சப்தத்தை கூட்டிச் சேர்த்து பாடலை மீண்டும் மெல்லிய வேகத்தில் கொண்டு போய் இரண்டாம் சரணத்தில் கூடுதல் வேகம் பிடிக்கும் அந்த லாவகமான இசை இளையராஜாவின் தனி முத்திரை. 



                    
        ' மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ ...அங்கம் ஒரு தங்கக் குடம் ..அழகினில் மங்கை ஒரு கங்கை நதி ...உலகினில் துள்ளும் இதழ் தேன்தான்  அள்ளும் கரம் நான்தான் ...வஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன் ...கண் காவியம் பண் பாடிடும் பெண் ஓவியம் செந்தாமரையே ....'  என்றொலிக்கும் வரிகளில் வேகமான நடையில் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தி மீண்டும் பழைய நடைக்கு பாடலின் இசை மாறுவது  புல்லரிக்க வைக்கும் . ஒரே மூச்சில் அந்த வரிகள் பாடப்பட்டிருக்கும் . கடினமான பாடல் ; ஆனால்  காவியப் பாடல் . மறக்க முடியுமா ? அப்போது ஒன்றும் தெரியவில்லை . இப்போது பார்த்தால்  நாயகியின் நடன அசைவுகள் சகிக்க முடியவில்லை  .  
                         


                 ' பூவரசம்பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதி வந்தாச்சு' என்று ஜானகி அவர்களின் குரலில் குயிலே பாடுவதைப்  போல ஒலிக்கும் உற்சாகமான பாடலை  இப்போது கேட்டாலும் நெஞ்சுக்குள் சந்தோசப் பூ மழை பெய்யும்.  அந்தக் காலத்தில் கேட்டபோது அடிக்கடி பாடிக் கொண்டலைந்தேன் . கங்கை அமரன் எழுதிய பாடல் வரிகள் சாதாரணமானவை . ஒரு கிராமத்துப் பெண்ணொருத்தி பட்டணம் போய் வேலை தேடும்  தன் காதலன் எப்போது திரும்புவான் என ஏங்கி காத்திருக்கும் வேளையில் கிழக்கே போகும் ரயிலின் கடைசிப் பெட்டியின்  பின்புறத்தை கரும்பலகையாக்கி அவன் சேதி அனுப்பியதை கண்டவுடன் உற்சாகமாக பாடும் பின்னணிக்கு ஏற்றாற்போல் பாடல் எழுதப்பட்டிருக்கும் . ஆனால் எல்லாவற்றையும் மிஞ்சியது போல இளையராஜா அதற்குக் கொடுத்திருக்கும் இசையில் மயங்காமல் இருக்கவே முடியாது.  ' கரகர வண்டி காமாட்சி வண்டி ...கிழக்கே போகும் பொள்ளாச்சி வண்டி ...' என்று பாடிக்கொண்டே தட்டாமாலை சுற்றி கீழே விழுந்தவுடன் உலகமே சுற்றுவது போலிருக்கும் அனுபவம் எல்லாம் சிறுவயதில் நானும் செய்து பார்த்திருப்பதால் அந்தக் காட்சியை ரசித்ததோடு , தலை சுற்றும் பின்னணிக்கு ராஜா கொடுக்கும் பின்னணி இசை வயலினில் வாசிக்கப்படுவதையும் ரசித்திருக்கிறேன் .  
                            
                                                                 
                                   
              
                       பாட்டின் ஆரம்பத்தில் ஜானகி மெதுவாய் பாடலை நீட்டி முழக்கி சட்டென சிறிது வேகம் பிடிக்கும் டெம்போவில் பாட உண்மையில் ஒரு ரயில் மெதுவாக கிளம்ப ஆரம்பித்து வேகம் பிடிப்பதைப் போலவே இசைக் கோர்ப்பு செய்திருப்பது வித்தியாசமாகவும்  புதுமையானதாகவும் இருக்கும் . பின்னணி இசையை கூர்ந்து நோக்கினால் உண்மையிலேயே ரயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை இளையராஜா பாட்டில் கொண்டு வந்திருப்பார். தொடர்ந்து ஜானகி , ரயில் எழுப்பும் சங்கொலி  போலவே  கூ... என கூவுவதும்  ரயில் சப்தப் பின்னணியில் பல்லவி பாடுவதும் பல்லவி முடிந்து இடைசையில் ஒற்றை வயலினோடு சேர்ந்து இசைக்கருவியா குரலா என பிரித்தறிய முடியாமல்   குலவையிடுவது போல் ஒலி எழுப்புவதும் சொல்லவொண்ணா  கற்பனை.  ரயிலை விட்டு உடல் பறந்து வெளியே போய்விட்டு மீண்டும் ரயிலுக்குள் வந்தது போன்று இடையிசை முடிந்து சரணம் ஆரம்பிக்கும் . ரயிலின் ஓசையை  தாளமாகக்         கொண்டு இளையராஜாவின் முன்னோர்கள்  சிலர் பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள் . அதுவும் கேட்க நன்றாக இருந்தாலும் இந்தப் பாடல் புதுமையானதே!
 


                             
                               '  கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ .. ' என்று துர்கா ராகத்தில் கண்ணதாசனின் வரிகளில்  மலேசியா வாசுதேவன் , ஜானகி அவர்களின் இனிய குரல்களில் இளையராஜா ஆனந்த மயமான காதல் கானம் ஒன்றை அதே படத்தில் கொடுத்தார். மக்கள் எல்லோரும் அவர் இசையில் ஏன் மதி மயங்கிப் போயிருந்தார்கள் என்பது எனக்கு அப்போதே புரிந்தது . அதையும் அப்போதுதான் கவனித்தேன் . பாட்டில் மூன்று சரணங்கள் . மூன்றுக்கும் மூன்றுவிதமான இடையிசையை கொடுத்திருக்கிறார் . மற்ற எல்லா படங்களின் பாடல்களை மீண்டும் கேட்டுப் பார்த்த பிறகு அது தெளிவானது. ஆரம்பப் பாட்டிலிருந்தே வெவ்வேறு விதமான பி.ஜி.எம் . ராஜாவின் முன்னோர்கள் பெரும்பாலும் அப்படி கொடுத்ததில்லை. மூன்று சரணம் மூன்றுக்கும் ஒரே பி.ஜி.எம் . இதுபோல அப்போது கவனிக்க மறந்த எத்தனையோ விசயங்களை இப்போது கவனிக்கும்போது இளையராஜாவின் பாடல்களில் உள்ள புதுமைகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். 
                             
                                 


                          பொதுவாக ஒரு பாடலில் சரணம் முடிந்து பல்லவி முழுவதும் மீண்டும் பாடப்படும் வழக்கம் இருந்தது . இளையராஜாவின் பாடல்களில் அதிலும் சில புதுமைகள் இருந்தன. முதல் சரணம் முடிந்து பல்லவியின் முதல் வரியோடு இடையிசை சேர்ப்பது,   முதல் சரணம் முடிந்து பல்லவி இல்லாமலே இடையிசை கொடுத்து அடுத்த சரணம் பாடப்படுவது , முதல் சரணம் முடிந்து பல்லவி அனுபல்லவி, மீண்டும் பல்லவி, பிறகு இடையிசை என்று கொண்டு செல்வது   என பலவிதமான யுக்திகளில்  தனது பாடல்களை கொடுத்தவர் இளையராஜா . 


                                  ' மலர்களே நாதஸ்வரங்கள்  ' என ஆரம்பிக்கும் ஹம்சத்வனி ராகத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அவர்களின் இனிய குரல்களில் காதல் கானம் அப்போதும் இப்போதும் கேட்டவுடன் மனதுக்குள் மகிழ்ச்சியை மழைச் சாரலாய் தூவிடும் .  ' கற்பகப் பூச்செண்டு ..கருநீலக் கண்ணில்...' என்று வாசுதேவன் நீட்டிப் பாட ஜானகி  தொடர்ந்து ஹம்மிங் கொடுப்பது  அவ்வளவு அற்புதமாக இருக்கும். நம்மை எங்கெங்கோ கூட்டிச் செல்லும்.  நாயகன் நாயகியோடு தன்  திருமணக் கோலத்தை கற்பனைக்குக் கொண்டு வருவதை மங்கள வாத்தியங்களோடு நாதஸ்வரம் இசைத்து அருமையாக ராஜா கொடுத்திருப்பார். 


                              பாரதிராஜா படத்திற்கென்றே இளையராஜா  தனித்த இசை ராஜாங்கம் நடத்துவார். ராஜாவின் இசைக்காகவே விரும்பி மீண்டும் மீண்டும் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான காட்சிகள் வரும்போதெல்லாம் புதுமையான பின்னணி இசையால் என் இதயத்தை வருடியிருக்கிறார். கிராமத்துப் பின்னணி கொண்ட படம் என்றால் இளையராஜாவிற்கு கிராமத்துத் தேவதைகள் எல்லாம் கூடி வந்து வாழ்த்துப் பா பாடியது போல இசை ஆசிர்வாதம் கிடைத்துவிடும். இசையில்  பிரமாதப்படுத்தி  பின்னி எடுத்து விடுவார். 

                                  
                                 என்னைப் போன்ற லட்சகணக்கான  ரசிகர்கள் பலர் பலமுறை ஒரே திரைப் படத்திற்குச் சென்று ரசித்ததால்தான்  நூறு நாட்களைத் தாண்டியும் படங்கள் ஓடியிருக்கின்றன. அதற்கு பல இசையமைப்பாளர்கள் போலவே இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் என்றால் அதில் பொய்யில்லை ; மிகையில்லை. மிகவும் சுமாரான படங்கள் இளையராஜாவின் இசைக்காகவே வெற்றிப் படங்களாக மாறி அதிக நாட்கள் ஓடின. ஓடாத படங்களுக்கும் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.  அதனால்தான் ஒரே ஆண்டில் 50 திரைப்படங்கள் கூட கொடுக்க முடிந்தது. அவர் உழைப்பு யாராலும் எளிதில் ஈடு  செய்து விட முடியாத அயராத உழைப்பு; அற்புதமான உழைப்பு. இசைக்காக கொஞ்சமும் அசராமல் கடந்த 38 வருடங்களாக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்.  நலிந்த இதயங்களை  இசையால் கொள்ளை கொண்டிருக்கிறார். 


                              ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு வாசகர்  " இளையராஜா ஆயிரம் படங்கள் இசையமைத்து சாதனை புரிந்தது பற்றி...? " என கேள்வி எழுப்பியிருக்கிறார். 

                                    
                                சொல்லப்பட்ட பதில் கீழே.     
                          
                                ஆயிரம் படங்கள்  என்பது மட்டுமல்ல . அவரது இசை ஞானத்தால் அவர் படைத்த அத்தனையுமே முத்துக்கள் என்பதுதான் மகத்தான சாதனை. பெரிய படம், சிறிய படம் என்றெல்லாம் வித்தியாசம் பாராமல் எல்லா படத்திற்கும் ஒரே மாதிரியாக உயிரைக் கொடுத்து கடந்த நாற்பது ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவரது உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை நாம் தந்திருக்கிறோமா என்று தெரியவில்லை . அவரும் இதையெல்லாம் எதிர்பார்த்து உழைப்பதில்லை. எனவேதான் அவர் ஞானி. 


...................................தொடர்வேன்............................
                  
 

26 comments:

  1. சால்ஸ்,

    ஏழாவது ராட்சஷன் உங்கள் அனுபவப் பார்வையிலிருந்து விலகி ஒரு சராசரி ரசிகனின் மனப்பான்மையை வெளிகாட்டுகிறது. அந்த அளவுக்கு ஒரே புகழ் புகையாக இருக்கிறது. சற்று மிகையும் கொண்ட பாராட்டு மழை. அதுசரி உங்கள் விருப்பம்.

    நான் என்ன சொன்னாலும் எதிர் கருத்துக்கென சில கந்தசாமிகள் படாரென்று வந்துவிடுவார்கள். உங்களின் சில கருத்துக்கள் சற்று புனைவானவை.

    ---- பாட்டில் மூன்று சரணங்கள் . மூன்றுக்கும் மூன்றுவிதமான இடையிசையை கொடுத்திருக்கிறார் . மற்ற எல்லா படங்களின் பாடல்களை மீண்டும் கேட்டுப் பார்த்த பிறகு அது தெளிவானது. ஆரம்பப் பாட்டிலிருந்தே வெவ்வேறு விதமான பி.ஜி.எம் . ராஜாவின் முன்னோர்கள் பெரும்பாலும் அப்படி கொடுத்ததில்லை. மூன்று சரணம் மூன்றுக்கும் ஒரே பி.ஜி.எம் .------

    இந்த மூன்று சரணத்திற்கும் வெவேறு வகையான இசை அமைப்பு செய்தது இளையராஜா மட்டுமல்ல. அவருக்கு முன்பே கே வி மகாதேவன், விஸ்வநாதன் செய்துவிட்டார்கள். இதை நான் எனது நிற்காத மழை பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். (உதாரணம் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல்.)விட்டால் இரண்டாவது சரணத்தில் ஒரு ஒற்றைப் புல்லாங்குழல் இசை இதுவரை யாருமே செய்ததில்லை என்று கூட சொல்வீர்கள் போலிருக்கிறது. கிணற்றுத் தவளைகள்.

    ---- ஆயிரம் படங்கள் என்பது மட்டுமல்ல . அவரது இசை ஞானத்தால் அவர் படைத்த அத்தனையுமே முத்துக்கள் என்பதுதான் மகத்தான சாதனை.---

    இது அடுத்த புனைவு. இது டை ஹார்ட் ராஜா ரசிகர்களுக்கே சற்று அதிர்ச்சியாக இருக்கும். பத்தாயிரம் பாடல்களில் 500 தேறும். நானாவது பரவாயில்லை. 500 என்கிறேன். வேறு சிலர் 300 என்கிறார்கள். இந்த அலப்பறை எல்லாம் வெறும் 300க்கும் 500க்கும் தான் என்பதுதான் வேடிக்கை.

    ReplyDelete
  2. சால்ஸ். தங்கள் இசை இராட்சசன் -7நன்று . 70-80களில் பெரும்பாலோனரது இளமைப் பருவத்தை ஊஞ்சலாட வைத்தது இசைஞானியின் இசை என்றால் அது மிகையாகாது .அவ்வகையில் தங்கள் பதிவு என் போன்ற சிலரை இளமைப் பருவத்தே இழுத்துச் சென்றுவிட்டதென்றே சொல்லலாம் .அவரது பாடல்களைக் கேட்டால் மட்டுமல்ல .நினைத்துப் பார்த்தாலே காதல் வயப்பட வைக்கும் .இன்னும் சில பாடல்களை இணைத்திருக்கலாம் .வளரட்டும் தங்கள் பதிவு .

    ReplyDelete
  3. # நான் என்ன சொன்னாலும் எதிர் கருத்துக்கென்று சில கந்தசாமிகள் வந்து விடுவார்கள் .ஐயா ,தெரிந்தே தானே குறை கூறுகிறீர்கள் . 10000 பாடல்களில் 500 தான் தேறுமாம் .காரிகன் இது உங்களுக்கு ஓவரா தெரியலையா?இக்கால இரைச்சல் கூட இசையாய் ஒலிக்கும் போது இனிமையான இசையை ஏற்க மறுப்பதேன்?

    ReplyDelete
  4. வாங்க காரிகன்

    பாராட்டு மழை என்ன பெரிய அதிசயம்!? இசையில் உருகி மகிழும்போது ஏற்படும் அனுபவத்தை உருவாக்கிய இளையராஜாவை பாராட்டாமல் யாரை பாராட்டச் சொல்கிறீர்கள்? புகழ் மழை கேள்விப்பட்டிருக்கிறேன் . அது என்ன புகழ் புகை? வார்த்தையை ரொம்ப புனைகிறீர்கள் .


    மூன்று சரணத்திற்கு வெவ்வேறு இடையிசையமைப்பு இளையராஜாவின் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள் . நான் மறுக்கவில்லை. ஆனால் சொற்ப எண்ணிக்கையில்தான் செய்திருக்கிறார்கள் . இளையராஜா முதல் பாட்டிலிருந்து இப்போது வரை வெவ்வேறு இடையிசையைத்தான் கொடுத்து வந்திருக்கிறார். நான் அதைதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    பதிவின் கடைசி பத்தி என்னுடைய புனைவு அல்ல . அது புனைவே அல்ல , உண்மை. வசந்தம் என்ற ஞாயிறு மலரில் வந்த கேள்விக்கான பதில்.

    ReplyDelete
  5. காரிகன்

    இளையராஜா ஆயிரம் படங்கள் இசையமைத்துள்ளார். சராசரியாக ஒரு படத்திற்கு இரு பாடல்கள் சூப்பர் ஹிட் என்று வைத்துக் கொண்டாலும் 2000 பாடல்கள் பிரபலம் என சொல்ல முடியும். உங்கள் கணக்கு தவறு.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஒரு ஊர்ல ஒரு அப்பாவும் , ஒரு பையனும் இருந்தாங்கலாம், அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஆசை இருந்திச்சாம் , அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு குதிரை வாங்கி வளர்க்க ஆசை, அதில் சவாரி செய்வதற்கும் ஆசை, அதனால அவங்க வெளியூர் சென்று ஒரு குதிரை வாங்க முடிவு செய்து , வெளியூர் சென்று ஒரு குதிரையை வாங்கி அந்த குதிரையை அழைத்து சென்று கொண்டிருந்தனர் ............

    அவர்கள் தங்கள் ஊர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, அவர்களை எதிர் நோக்கிய "ஒருவர்" "ஏம்ப்பா உங்களுக்கு அறிவே இல்லையா? குதிரையை சும்மா அழைத்து செல்வதற்கு பதில் அதில் ஏறி செல்லலாமே? என்று "குறை" கூற, அப்பா பையனை குதிரையில் ஏற்றிவிட்டு பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்

    அப்போது அவர்களை எதிர் நோக்கிய "ஒருவர்" ஏம்ப்பா பையன் சின்னவனாக வாலிபனாக இருக்கிறான் அவனை நடக்கவிட்டு நீ குதிரையில் வரலாமில்லையா? என்று "குறை" கூற, அப்பா என்னடா இது என்று நினைக்க பையன் குதிரையிலிருந்து இறங்கி, அப்பாவை ஏற்றி விட்டு வந்து கொண்டிருந்தனர்

    அப்போது அவர்களை எதிர் நோக்கிய "ஒருவர்" ஏம்ப்ப இப்படி கல்நெஞ்சனாக இருக்கிறாய்? பெத்தபிள்ளையை இப்படி நடக்கவிட்டு நீ மட்டும் குதிரையில் வருகிறாயே? இது உனக்கே நல்ல இருக்கா என்று "குறை" கூற,

    என்னடா இது கஷ்டகாலம் என்று, அப்பா மற்றும் பையன் இருவரும் குதிரையின் மீது அமர்ந்து பயணித்தார்கள். அப்போது அங்கு வந்த "ஒருவர்" ஏம்ப்ப இது உனக்கே அநியாயமா படல ஒரு வாயில்லாத ஜீவன் மேல இப்படி ரெண்டு பேர் அமர்ந்து செல்லலாமா? என்று "குறை" கூறினார்

    அடுத்தது
    இரண்டாவது பாராவிலிருந்து படிக்கவும் ................

    கதை முடிந்தது
    (இந்த கதைக்கு சொந்தக்காரன் நான் இல்லை, எங்கோ நான் கேட்டது)

    அந்த "ஒருவர்" யாரென்று எனக்கு தெரியாது ஆனால் கரி-கண்ணாயிரத்துக்கு மட்டுமே வெளிச்சம்.

    குறிப்பு:- இதை படிக்கிற யாருக்கேனும் moral of the story வேண்டும் என்றல் தயவுசெய்து இந்த comment க்கு reply பண்ணுக.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நியோ

      என்ன ரொம்ப நாளாய் காணவில்லை. வருக வருக!

      உங்கள் கதை கேட்ட கதைதான். இருந்தாலும் தற்சமயம் பொருத்தமான கதையே! மற்ற இசையமைப்பாளருக்கு நல்ல கண்ணாடி போட்டுப் பார்க்கும் அந்த ' ஒருவர் ' இளையராஜா என்று வரும்போது மங்கலான கண்ணாடி போட்டு பார்க்கிறார். பார்வை சரியில்லை. கண்ணாடியை குறை சொல்லி என்ன செய்ய ?

      Delete
  8. சால்ஸ்,

    புகழ் புகை என்றால் என்ன கேட்டிருந்தீர்கள். புகை என்ன செய்யும்? அதுதான்.

    உங்களுக்கு ஒரு பின்னூட்டம் இட்டால் அதற்கான பொழிப்புரையையும் நானே சொல்லிவிடவேண்டும் போல. சரியாப் போச்சு. என்னத்தை புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கூறியதை நான் புனைவு என்று சொல்லவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் அந்த வசந்தம் இதழின் கருத்தைத்தான் உண்மையில்லை என்கிறேன். அதற்காக அவர்கள் அப்படி சொல்லவேயில்லை என்று அர்த்தம் எடுத்துக்கொண்டு அதற்கு விளக்கம் வேறு. வெளங்கிரும்.

    நீங்கள் பிரபலம் சூப்பர் ஹிட், தரம் இரண்டையும் குழப்பிக்கொள்கிறீர்கள். இ ரா பாடல்களில் சராசரியாக இரண்டென்ன அதற்கு மேலேயே பிரபலம் ஆனவைதான். ஆனால் அவை எல்லாமே முத்துக்கள் என்று குறிப்பிடுவதைத்தான் நான் விமர்சித்தேன். இதற்குள் யாரோ ஒரு ஆசாமி "ஒருவர்" கதையை சம்பந்தம் இல்லாமல் எழுதுகிறார். சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் இதென்ன பழங்காலத்து பாட்டி பாணி? மேலும் அந்தக் கதையில் ஒருவர் இப்படி சொல்வதில்லை. அவர்கள் இருவரும் போகும் வழியில் இருக்கும் பலரும் இப்படித்தான் சொல்வார்கள் என்பதாகத்தான் அந்தக் கதை போகும். மக்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்காமல் உன் வேலையைப் பார் என்று அர்த்தம் கொண்டது இந்தக் கதை. இதை இங்கே சொல்லவேண்டிய தேவையே இல்லை.என்ன தொடர்போ? அந்தக் குதிரைதான் இளையராஜாவோ?

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      கதை என்பது கற்பனை . ஒரு ஒப்புமைக்காக சொல்லப்படும் புனைவு . அந்தக் கதைக்கு விளக்கம் கொடுக்கிறீர்களே! சிறுபிள்ளைத்தனம் . பலர் என்பதை ஒருவர் என இடத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம் . அவர் சரியாகத்தான் கதை சொல்லியிருக்கிறார். இளையராஜாவை மோசமாக விமர்சனம் செய்வோர் எல்லோருமே ஒரே இனம்தானே. அதான் 'ஒருவர்' .

      பிரபலம் ஆனா பாட்டுக்கள் எல்லாம் இளையராஜாவின் பாட்டுகள் என்றால் முத்துக்கள் இல்லை. எம்.எஸ்.வி , கே. வி.எம், ரகுமான் , கொஞ்சம் போல பாட்டுக்கள் போட்ட வி.குமார், மக்களுக்கு யாரென்றே தெரியாத வெங்கடேஷ் இவர்களின் பாடல்கள் எல்லாம் உங்களுக்கு முத்துக்கள் ஆகி விடும் . முத்து போல் பல்லழகர் ஆகி விடுவீர்கள் இல்லையா?

      Delete
  9. சார்ல்ஸ்

    உங்கள பாணியில் ஏழாவது பதிவு சிறப்பாக வந்துள்ளது.எங்கள் நினைவுகளையும் உங்கள் பதிவின் ஊடே மீட்டிப்பார்த்தோம்.வாழ்த்துக்கள்.

    ஒரு சிறு திருத்தம்.;;எங்கும் நிறைந்த என்று தொடங்கும் பாடல் ஜேசுதாஸ் பாடிய பாடல் என்பதையும் தெரிவிக்கின்றேன்.

    காரிகனின் குறளி வித்தைகள் ஏராளம் ! 300 பாடல்கள் தான் தேறும் என்பவர் முதலில் என்னென்ன பாடல் என்று ஒரு பட்டியலை அவர் தருவாரா ?

    எத்தனை தரம் நம்மிடம் வாதிட்டு தோற்றாலும் , விழுந்தாலும் மண் படவில்லை என்ற "வடிவேலு தனம் " எனக்கு அவரிடமும் , நொண்டிச் சாக்குச் சொல்லி ஓடிப்போனவரிடமும் மகவும் பிடித்தமான விடயமாகும்

    ReplyDelete
  10. வாங்க விமல்

    உங்கள் பாராட்டுக்கு நன்றி . 'எங்கும் நிறைந்த' பாடலில் குரலை கவனித்துக் கேட்டால் ஜெயச்சந்திரன் போல உள்ளது . ஜேசுதாஸ் என்று நீங்கள் சொல்வதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் உள்ளது. ஆனால் இணையத்தில் தெளிவான செய்தி இல்லை . வேறு ஆதாரம் கொடுத்தீர்கள் என்றால் வசதியாக இருக்கும் .

    காரிகனும் நம்மை மாற்றிவிடலாம் என்று மிகவும் பிரயத்தனப்படுகிறார் . நாம் மாறி விடுவோமா?அமுதவன் அவர்களின் புதிய பதிவைப் பார்த்தீர்களா ? இளையராஜா பற்றி அவருடைய கருத்து படித்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. 'எங்கும் நிறைந்த' பாடல் பாடியவர் ஜேசுதாஸ் என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

      Delete
    2. நன்றி சேகர் சார் . என் பதிவில் அதை திருத்தி விடுகிறேன் .

      Delete
  11. சார்ல்ஸ்

    பெரியவரின் தளம் " துள்ளிக் " கொண்டிருக்கிறது.என்னத்தெ பார்க்கிறது? புதிதாக ஏதாவது சொல்லாவா போகிறார்?ஏதாவது புது "வதந்தியை " கிளப்புவார்.வேறென்ன ஐயாவுக்குத் தெரியும் ?

    ReplyDelete
  12. வாங்க விமல்

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி சிலாகித்தவர் அதிலும் இளையராஜா வசை பாட மறக்காமலில்லை . நானும் சரவணன் என்பவரும் எதிராடல் செய்து கொண்டிருந்தோம் . காரிகனும் அமுதவன் அவர்களும் இளையராஜாவின் இசையையும் ரசிகர்களையும் கீழ்மைப் படுத்துவதிலேயே முனைப்போடு இருந்தார்கள் . வாசித்துப் பாருங்கள் .

    ReplyDelete
  13. சார்ல்ஸ்

    சமீபத்தில் நான் இணையத்தில் கண்டெடுத்த முத்து இது.உலக காப்பி மகா இசைமேதை ரகுமான் கடல் படத்தில் " நெஞ்சுக்குள்ளே " பாடலின் ஒரிஜினல் வடிவம்.நெஞ்சுக்குள்ளே பாடலில் 24 வது செக்கனிலிருந்து 44 வது செக்கன் வரும் இசையை உற்று கேளுங்கள்.

    Runrig The Fisherman. என்ற மூல வடிவத்தின் ஆரம்ப இசையையும் கேளுங்கள்.

    https://www.youtube.com/watch?v=B3Y8gDHBt8A

    https://www.youtube.com/watch?v=h52XlqDJJIs

    ReplyDelete
  14. சார்ல்ஸ்

    அமுதவன் ஏதாவது புலம்பட்டும்.நமக்கென்ன ? நாம் போட்ட சூட்டில் சாக்கு போக்கு சொல்லி ஒளித்து ஓடியவர் தானே...!
    மறைவாக பழங்கதைகள் பேசும் கோமாளிகள்.அவருடைய பொன்மொழிகளை வாசிக்கலாம் என்றால் , மேதாவியின் இணையம் ஒழுங்காக வேலை செய்யவில்லையே ..! அவரின் எழுத்தை படித்து நம் அறியாமையை போக்கிக் கொள்ளலாம் அல்லவா ..!!

    ReplyDelete
  15. விமல்

    நீங்கள் அனுப்பிய லிங்க் பார்த்தேன் . ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ரகுமானின் பெரும்பான்மையான பாடல்கள் காப்பி அடிக்கப்பட்ட பாடல்கள்தான்! தமிழ்த் திரையிசைக்கு இருந்த இலக்கணத்தையும் பாரம்பரியத்தையும் மாற்றியமைத்தவரே ரகுமான்தான். ஆங்கிலப் பாடல்களில் மோகம் கொண்டலையும் இளைஞர்கள் கொஞ்சம் பேர் புதுமை என்ற பெயரில் ரகுமானை அதிகம் ஆதரித்தார்கள். அவர்களும் இளையராஜாவின் இசை மகத்துவத்தை புரிந்து கொள்வார்கள் . அப்போது தெரியும் எது நமது உண்மையான இசை என்று!?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் சினிமா இசை இப்படி சீரழிந்து போக காரணம் ரகுமான் வரவுக்கு (1992) பின்னே தான். இது எனது கருத்து. போலித்தனமான கதைகள், கதாபாத்திரங்கள், இசை என எல்லாம் இன்று விஸ்வரூபம் எடுத்து தமிழ் சினிமாவை வேற ஒரு தளத்துக்கு எடுத்து சென்று விட்டது. முன்னெல்லாம் எ சென்டர் மக்கள் தொகை குறைவு அவர்கள் சினிமாவை எப்பாவது தான் பார்ப்பார்கள். பீ, மற்றும் சி சென்டர் மக்கள் தான் திரைப்படங்களை வாழவைத்தார்கள். அதனால் ஆரோக்கியமான படங்கள், பாடல்கள், நடிகர்கள் இருந்தன. அதுக்கு உதாரணம் எண்பதுகளின் நடிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சொல்லலாம். அன்று ஒருவர்க்கொருவர் போட்டியில் இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கிற நட்பு அதில் இருந்தது. பாடல்களும் இன்றும் கேட்டு கொண்டே இருக்கிறது. நம் தலைமுறைக்கு பின் வந்த தலைமுறைகள் உண்மையான நம் இசையை தொலைத்துவிட்டு மேல்நாட்டு இசைக்கு அடிமை ஆகிவிட்டனர். நம் முகவரியை தொலைத்துவிட்டு வீட்டை தேடினால் கிடைக்காது. மேல்நாட்டு பாடல்கள் இன்னும் மேல் நாட்டு பாடல்களாக தான் இருக்கிறது. அதில் அவர்கள் புதிததாக தங்கள் அடையாளம் தொலைக்காமல் இசையை கொடுக்கின்றர்னர். ஆனால் நாம்?
      ஏதோ 1992 இல் இசை புரட்சி நடந்து தமிழ் சினிமாவை வேற தளத்துக்கு கொண்டு போனதுபோல சிலர் பேசுகின்றனர். இவர்களளெல்லாம் எம்.எஸ்.வி. அய்யா, மகாதேவன் அய்யா பேரை சொல்லி இசை பதிவு செய்வது பாவத்திலும் பாவம் பெரும் பாவம். உணராமல் இவர்கள் இல்லை. ராஜா சார் மேல் கொண்ட பொறாமையாக தான் இருக்கும். இவர்களுக்கு இவ்ளோ திமிர், அகம்பாவம் இருக்கிறதென்றால், இசை சாம்ராஜ்ஜியத்தில் வாழும் ஒரு கலைஞருக்கு இசை செருக்கு, திமிர், அகம்பாவம் இருக்க கூடாதா? சிலர் தான் அமைதியாக, அகம்பாவெல்லாம் கொள்ளாமல் அடக்கத்தின் பிறப்பிடமாக சொல்வார்கள். அந்த பிரம்மம், வித்தை பயின்றவரிடமே திருகு வேலை பார்த்தவர் என்பதை சொல்ல கேட்டிருக்கிறேன். ஐநூறு பாடல்களுக்கு கீபோர்ட் வாசித்ததை மறைத்தவர். இப்பொழுதான் சொல்கிறார். ஆரம்ப கால அவர் பேட்டிகளில் காணும் திமிர் யாருக்கும் இருந்திருக்காது. படித்து இன்னும் எங்களது மனதுகளில் தேக்கி வைத்திருக்கோம். அதற்க்கான நகல் மட்டும் கிடைத்தால், அவரின் உண்மையான சொரூபத்தை கிழிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அவரின் காலம்எல்லாம் 1997ல் முடிந்துவிட்டது, அப்பொழுதும் ராஜா சாரின் சாம்ராஜ்ஜியம் தான். ஆரம்ப காலங்களில் மட்டுமே சிறிய படங்களுக்கு இசையமைத்தார், இப்போதெல்லாம் பெரிய தயாரிப்பு படங்களுக்கு மட்டுமே இசை. அப்போழுதுதானே அந்த படத்தின் வெற்றியோடு தன்னையும் சேர்த்துக்கொள்ளலாம். இசையில் அப்படியொன்றும் புதுமைகள் இல்லை. ஏற்கனவே அடித்து தொங்கபோட்டு விட்டனர் அவரின் சிஷ்ய பிள்ளைகள்.
      காரிகன் அவர்களே, தயவு செய்து எம்.எஸ்.வி. அய்யா, மகாதேவன் அய்யா, போன்ற முன்னோர்களுடன் ஆஸ்கார் நாயகனை ஒப்பிட்டு உங்கள் தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள். உங்கள் மேல் உள்ள இந்த கெட்ட மதிப்பே அவருக்கு நீங்கள் செய்யும் சப்போர்ட் தான்.

      Delete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. சேகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல1990களுக்குப் பிறகான பெரும்பாலான தமிழ் திரைப்பட பாடல்கள கேட்பதற்கே நாராசமாய் உள்ளது .தெரிந்தும் சிலர் இசைஞானியால்தான் தமிழிசை சீரழிந்தது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .இசை இராட்சசன் குறித்த அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. குமார் சார்

    வணக்கம் . நீங்கள் ஏற்கனவே என் பதிவிற்கு வந்து கருத்துரை இட்ட ராஜா ரசிகர் என்று தெரியும் . காரிகனின் தளத்திலும் ராஜாவிற்காக நீங்கள் வாதாடின விதம் வாசித்து ரசித்திருக்கிறேன். காரிகன் ,அமுதவன் சார் போன்ற வெகு சிலரே ராஜாவின் இசையை மோசமாக விமர்சிப்பவர்கள் . மற்றவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களே! ரகுமான் தான் ராஜாவிடம் வேலை பார்த்ததை பெருமையாக சொல்லிக் கொண்டதில்லை . ராஜா தன் முன்னோர்களை புகழ்ந்து பேசியது போல அதிகமாய் புகழ்ந்ததுமில்லை. நம் நாட்டு இசை அல்லாத வேற்று இசையையும் வட நாட்டு இசையையும் அரபு நாட்டு இசையையும் கலந்து பல கலவைகள் செய்து கொடுத்தார்; கொடுத்துக் கொண்டுமிருக்கிறார் . தற்போது தன் இசையையே தோசையை திருப்பிப்.போடுவது போல திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறார். வித்தியாசம் காட்டவில்லை. பெரிய பேனர்களில் மட்டும் வாசிப்பார். பெரிய தயாரிப்பாளர்களிடம் மட்டும் வேலை செய்வார். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அது ஒரு மாயை.

    இளையராஜா சிறிய படம், பெரிய பேனர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் இசையமைத்தவர். தற்போது முதன் முதலாக படம் இயக்குபவருக்குக் கூட சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று பத்திரிக்கையில் வாசித்தேன் . இந்தக் கால இளைஞர்களுக்கு எது நல்ல இசை என்பது தெரியாமல் இருக்கிறது. நம்மைப் போன்றோர் புரிய வைக்க வேண்டும் . என் பதிவே அதற்காகத்தான்! எனக்குத் தெரியாத செய்திகள் இருந்தால் பகிருங்கள் . இளையராஜாவின் இசை அழிக்க முடியா ஆவணம் என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம்.


    பொதுவாக போன் நம்பரை பொது இடத்தில் குறிப்பிட வேண்டாம் . தேவை ஏற்படும் நேரத்தில் நம்மை வெளிப்படுத்திக் கொள்வோம் . இணையத்திலேயே சந்திக்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்லஸ் அவர்கள்,

      உங்களது கருத்துக்களை நான் எப்போதும் வரவேற்ப்பேன். உங்களின் அடுத்த பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

      Delete
  20. அருள்ஜீவா

    அடுத்தப் பதிவிற்கான வேலைகள் நடந்தேறுகின்றன . விரைவில் எதிர்பார்க்கலாம் . குமார் அவர்களை சேகர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இளையராஜாவால் தமிழிசை சீரழிந்தது என யாராவது ஒரு இசைக் கலைஞரை சொல்லச் சொல்லுங்கள் . சொல்லமாட்டார்கள். சொல்ல முடியாது. அவர்களுக்குத் தெரியும் இளையராஜாவின் இசை எப்படிப்பட்டதென்று!

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்