Wednesday 27 May 2015

இசை ராட்சஷன் - 10 ( The Musical Legend )





                                             

                                           

                          ' எனக்கு இசை தெரியவில்லை என்று இளையராஜா கூறுகிறாரே?' என்ற ஒரு வாசகனின் கேள்விக்கு,   ' அறிவாகிய மாபெரும் கடலின் கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன் நான் என்றார் விஞ்ஞானிகளுக்கெல்லாம்  விஞ்ஞானியான  ஐசக்  நியூட்டன் . போலவே இளையராஜா மாதிரியான ஞானிகளுக்கே உரித்தான தன்னடக்கம் இது .
அவரது இசையைக்  கேட்டு ரசிக்காத தமிழனே உலகில் இல்லை என்பதுதான் உண்மை. '  என்பது ஒரு வார பத்திரிகையில் கொடுக்கப்பட்ட பதில்.

                       
                         எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச்சுவடிலும் சுவடுகள்  பதிக்கும் பாதைகளின் பயணங்களிலும்  கணக்கற்ற பாடங்கள் இருக்கும் . அந்தப் பாடங்களைப் படித்துக் கொண்டே இசைப் பயணம் தொடங்கி நம்மையெல்லாம் இன்ப உலாவிற்கு அழைத்துச் சென்றவர் இளையராஜா .
தொழில் நுட்பங்களும்  மென் பொருட்களும் மலிந்து பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்  யார் வேண்டுமென்றாலும் இசை அமைக்கலாம் . ஆனால் ஆன்மாவை  ஊடுருவும் இசையை உருவாக்க ,  வெறும் கருவிகளை விட ஆத்மார்த்தமான  ஈடுபாடு வேண்டும் . அது எந்த இசை அமைப்பாளரிடம் உளதோ அவரே சிறந்த இசை அமைப்பாளர் . அந்த வகையில் இந்தியாவில் பல இசை அமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என்பதை எந்த இசைக் கலைஞரும் ஏற்றுக் கொள்வர்.

                         
                          இசைக் கருவிகளிலும் மேனாட்டு இசை அறிவிலும் கர்னாடக இசையிலும் தேர்ச்சி பெற்ற பிறகே இளையராஜா அவர்கள் இசை உலகத்தில் புகுந்து தன் இசை ஆற்றலை ஊற்று போல ஓடச் செய்தார் . அந்தத் தீரா நதியில் முங்கிக் குளித்து குடித்து தேனுண்ட வண்டாய்  மயங்கிக் கிடந்த நாட்களை மறந்து போக முடியுமா!? திகட்டாத அமிர்தமாய் தேனோடையாய் பாய்ந்த இசை அமுதை அள்ளிப் பருகிய காலத்தை கடந்தும்தான் போக முடியுமா!?
   
                   
                        1979 இல் இளையராஜா அளித்த இசை விருந்து  இப்போதும்  என் நினைவுக் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டே இருக்கிறது.

                             
                   

No.
Film Name
# Songs
1.
Aaril irunthu arubathu varai
3
1979
2.
Agal vilakku
4
1979
3.
Amma evarikaina amma - Telugu
6
1979
4.
Anbe sangeethaa
4
1979
5.
Annai or aalayam
7
1979
6.
Azhage unnai aarathikkiren
7
1979
7.
Chakkalaththi
6
1979
8.
Dharma yuththam
4
1979
9.
Erra gulaabeelu - Telugu
2
1979
10.
Kadavul amaiththa medai
6
1979
11.
Kalyaana raaman
5
1979
12.
Kavari maan
7
1979
13.
Lakshmi
4
1979
14.
Mugaththil mugam paarkkalaam
3
1979
15.
Muthal iravu
5
1979
16.
Naan vaazhavaippen
5
1979
17.
Nallathoru kudumbam
6
1979
18.
Niram maaratha pookkal
5
1979
19.
Nuvve naa srimathi - Telugu
5
1979
20.
O inti katha - Telugu
3
1979
21.
Pagalil oru iravu
5
1979
22.
Pancha bhoothalu - Telugu
5
1979
23.
Pattaakkaththi bairavan
7
1979
24.
Ponnu oorukku puthusu
6
1979
25.
Poonthalir
5
1979
26.
Priya - Kannada
5
1979
27.
Puthiya vaarppukkal
4
1979
28.
Rosaappoo ravikkaikaari
4
1979
29.
Uthirip pookkal
6
1979
30.
Vetrikku oruvan
4
1979
31.
Yugandhar - Telugu
5
1979





                               ' ஆறிலிருந்து அறுபது வரை ' என்ற திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் தனி.  'ரஜினி படம் ' என்ற சந்தோசத்துடன்  'பைட்,  ஸ்டைல், சேசிங்' என்று பின்னி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன்   சென்று பார்த்தால் உள்ளே உட்கார வைத்து அழ வைத்துவிட்டார்கள் .  அந்த சமயத்தில் பாட்டை மட்டுமே ரசித்தேன் ; படம் ரசிக்கவில்லை. காலம் செல்லத்தான் ரஜினிக்கு அது ஒரு நல்ல திரைப்படம் , அவருடைய குணச்சித்திர நடிப்பாற்றலை வெளிக்கொணர்ந்த முக்கியமான திரைப்படம் என்பதை புரிந்து கொண்டேன் .


                                         

                            படத்தில் முதல் பாடல் ' ஆண்  பிள்ளை என்றாலும் ...சாண் பிள்ளைதானன்றோ ...' என்று  சசிரேகாவும் ஷைலஜாவும் இணைந்து  பாடியிருப்பர் .  படத்தின் பாடல்கள் அனைத்தும் பஞ்சு அருணாச்சலம் . இந்தப் பாடலில் எளிமையான வார்த்தைகளில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் குடும்பப் பொறுப்பையும்  சிறு வயதிலேயே சுமக்கும் மூத்த குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும்படி எழுதியிருப்பார்.  பாடலுக்குத்  தகுந்த இனிமையான இசை.  ' பரிதாபம் அந்தோ பரிதாபம் ' என்ற வார்த்தைகளுக்கு அழுத்தமாக  கொடுக்கப்பட்டிருக்கும் மெலடி சட்டென என்னை நெகிழ வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் .  தந்தையை இழந்த சிறுவன் ஒருவன் தன் அம்மா தம்பி தங்கைகளை காப்பாற்ற ' குரங்கு பெடல் ' போட்டபடி சைக்கிள் ஓட்டி உழைத்து சம்பாதிக்கும் காட்சியை பார்த்தவுடன் என்னைக் கொண்டு கற்பனை செய்து பார்த்து கண் கலங்கிய ஞாபகம் இன்னும் மனசுக்குள் உட்கார்ந்து இருக்கிறது. காட்சியா நம்மை கலங்கடித்திருக்கும் என்று பின்னர் யோசித்தபோது,  இக்காட்சியின் பின்னணியில் படைக்கப்பட்ட இசையே காரணமென்பதை அதன் பிறகு அந்தப் பாடலை கேட்கும்போது புரிந்து கொண்டேன்.  இசைதான் என்னை அழ வைத்திருக்க முடியும் .
இளையராஜாவிற்கே அந்தப் பெருமை.


                                அதே படத்தில் அடுத்த பாடல் 'கண்மணியே ...காதல் என்பது கற்பனையோ..' என்ற  அன்றும் இன்றும் என்றும்  எவர் கிரீன் பாடல். எப்போது கேட்டாலும்  எங்கு கேட்டாலும் அதற்குக் காதைக் கொடுக்காமல் என்னால் இருக்கவே முடியாது . பாட்டைக் கேட்டு பரவசமடையாமல் போனதே கிடையாது. எஸ்.பி.பி யும் ஜானகியும் சேர்ந்து கனிந்துருகி பாடியிருப்பார்கள். நம்மையும் உருக வைத்துவிடுவார்கள் . மூச்சு விடாமல் பாடப்பட்ட நீண்ட பல்லவி  உள்ள  பாடல்  இது   என்பதை    இளையராஜாவே  சொல்லியிருக்கிறார்.  ஆனால் மூச்சு விடாமல் பாடப்பட்ட பாட்டாக ராஜாவின்  வேறொரு பாடலைச் சொல்லுவார்கள். மேலும்  எஸ்.பி.பி அவர்கள் மூச்சு விடாமல் பாடப்பட்டதாக தொழில்நுட்பம் கொண்டு காட்டப்பட்டது என்பார்.  மேனாட்டு இசைக் கலப்போடு மோகன ராகத்தில் பின்னப்பட்ட இதயம் தொடும் அழகான மெலடி.அந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.  என்னவிதமான கருவி இசைத்து ஆரம்பிக்கிறார் என்பதை சொல்ல முடியாத அளவிற்கு கிடாரோடு வேறு இசைக்கருவிகள் கலந்து டிரம்சில் ஜாஸ் இசையோடு பல்லவி ஆரம்பிக்கும் அழகே தனி.  கடைசி வரை ஜாஸ் இசையோடு பாடல் செல்லப் போகிறது என்று பார்த்தால் இரண்டாம் இடையிசையில் கொட்டு மேளத்தோடு நாதஸ்வரம் கலந்து கொடுத்து மீண்டும் மேற்கத்திய பாணியில் ஜானகியின் ஹம்மிங்கோடு இசையை தொடரும் அற்புதத்தை நான் அப்போதே ரசித்தேன்.  என் இசை நண்பர்களோடு சேர்ந்து அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றிப்  பேசிப் பேசி மாய்ந்து போயிருக்கிறேன் . அது  ராஜாவிற்கே உரிய படைப்பாற்றல்.

                                             
                           முதல் இடையிசையில் ஜானகியின் குரலில் ஹம்மிங் இரு வேறு  மெலடிகளாக பின்னிப் பிணைந்து வரும் . அது இரு வேறு கவிதை ஒரே நேரத்தில் சொல்லப்படுவது போல் உள்ள கவுண்டர் பாய்ன்ட் அழகு . அன்று கேட்டதை விட இன்று கேட்கும்போது இன்னும் பாடலுக்கு மெருகேறிய தோற்றம் ஏன் மனதுக்குள் தோன்றவேண்டும் ?  இப்போதுள்ள இசையமைப்பாளர்களால் அது சாத்தியமாகிறது. அவர்களின் இசையை கேட்டுவிட்டு மீண்டும் இது போன்ற இளையராஜாவின் பாடல்களுக்கு வந்தால்  அந்த அற்புதம் மனதுக்குள் நிகழ்வதை உணர முடிகிறது.  இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் இளையராஜாவை எனக்கு ஞாபகம் மூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
                                                       
                                                                                                                       
                                ' மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா ..'  என்று  சரணத்தில் மேல் ஸ்தாயில் எஸ்.பி.பி பாட அவருடைய குரலிலேயே, 'லாலல .. லாலலா ..' என்று ஹம்மிங் கீழ் ஸ்தாயில் சேர என்ன சுகானுபவம் !
போலவே ஜானகி பாடும்  வரிகளுக்கும் அதே மாதிரியான கலவை கொடுக்கப்பட்டிருக்கும் . ஏதோ பற்பல வண்ணங்கள் தெளித்து  புது ஓவியம் உருவாவதைப் போல் பாடல் படைக்கப்பட்ட அழகை இன்னும் விரித்துச் சொல்ல வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படுகிறது.


                                 '   வாழ்க்கையே வேஷம் ...இதில் பாசமென்ன நேசமென்ன..' என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். குடும்பத்திற்காக வாழ்ந்து கெட்டவனின்  தத்துவமாக பாடல் வரிகளில் சோகத்தை சுகமாக சேர்த்து இளையராஜா வழங்கிய பாடல்.  வித்தியாசமாய்  கிடாரில் சோகமாய் ஆரம்பித்து வயலின், குழல் போன்றவற்றை இழையோட விட்டு பல்லவி  ஆரம்பிக்கும் . இடையில் குழந்தையை தாலாட்டும் ஒரு பெண்ணின் குரலில் அந்த ஆரிராரோ  சோகத்திற்கு கூடுதலாக சுகம் சேர்த்திருக்கும் . இடையிசையில் கிடார் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு புதுமையான ஒன்று. பெரும்பாலும் வயலின், வீணை , குழல் போன்ற கருவிகளே அதிகமாக சோகத்திற்கு பயன்படுத்துவார்கள்.  கிடாரில் சோக கீதம் ரசனையானது.  அவரின் அபார இசைத் திறமைக்கு இது கூட சான்றே!

                                                   
                                              எழவு வீட்டில் 
                                              கவலையான பாவனையில்
                                              உம்மென்று அமர்ந்திருக்கையில்
                                              தூரத்திலிருந்து
                                              காற்றில் மிதந்து வரும்
                                              இளையராஜாவின்
                                              துள்ளலிசைப் பாடலைக் கேட்டு
                                              உதடுகள் பழக்கதோஷத்தில்
                                              முணுமுணுத்து விடாதிருக்க
                                              மேல் வரிசை பற்களால்
                                              கீழ் உதட்டை இறுகக் கடித்தபடியே
                                               இருக்க வேண்டியதாகிவிட்டது
                                               அந்தப் பாடல் காற்றில் கரைந்து
                                               கடந்து செல்லும்வரை!


                         
                                     மேற்கண்ட கவிதை விகடனில் ' சொல்வனம் ' என்ற பகுதியில் ஒரு பொதுஜனத்தின் கவிதை .  அதற்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு கூட  ' ஏய் ...பாடல் ஒன்று ' என்ற இளையராஜாவின் பாடலிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது.  நம் வாழ்வில் இது போன்ற கணங்களும் அனுபவங்களும் யதார்த்தமாய் நிகழ்ந்திருக்கலாம் .  ஒரு சாவு வீட்டில் அமர்ந்திருக்கும்போது காற்றில் மிதந்து வரும் இளையராஜாவின் பாடல் எந்த அளவிற்கு பாதித்திருக்க இப்படி தன் உணர்வினை கவிதையாகக் கொட்டியிருப்பார்.  யதார்த்த வாழ்க்கையில் மனிதனுக்குள் ஏற்படும் உள்ளார்ந்த உணர்வுகளை இசையினால் வெளிக்கொணரும் ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு  என்பதை தன் ஒவ்வொரு பாட்டிலும் நிரூபித்திருப்பார். ஒரு கதாபாத்திரம் குறிப்பிட்ட சூழலுக்கு வெளிப்படுத்தும் உணர்வினை தானே வாழ்ந்து பார்த்தது போல் அனுபவித்து இசையாக படைப்பது நமது உணர்வினையும் உயிரையும் ஊடுருவத்தானே  செய்யும் .
மனசு நோகும்போது, வேண்டாத எண்ணங்களால்  வேகும்போது  ஏற்படும் மனச்சலிப்பை  விரட்டி, மருந்து தடவி, பாடலினால் நம் உணர்வினைக் கூட்டி, இசையின் இனிமையால் கற்பனையில் எங்கோ கூட்டிச் செல்லும் பாதையைக் காட்டி , புதுப் புது தரிசனங்களை  உருவாக்கும் வல்லமை இசைஞானியின் பாடலுக்கும் இடையிசைக்கும் உண்டென்பது  அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.


                                அது போலவே    எல்லாவிதமான உணர்வுகளுக்கும் நடைமுறைகளுக்கும்  இளையராஜா பாடல் அமைத்திருக்கிறார் . சோகம், சுகம் , ஏக்கம், வெட்கம், துக்கம், நேசம், பாசம், பரிவு, காதல், மோதல், நக்கல், நய்யாண்டி, வீரம்,தீரம், தாலாட்டு , பாராட்டு, நீராட்டு விளையாட்டு,  இன்பம், துன்பம், தாய்மை, சகோதரத்துவம் , ஒப்பாரி, விரகம், கரகம் , ஒயிலாட்டம் , மயிலாட்டம் , சிலம்பாட்டம், தப்பாட்டம், குத்தாட்டம் ,  நட்பு, பயம், மிரட்டல், சவால், பக்தி, முக்தி, உல்லாசம் , உற்சாகம்  போன்ற விசயங்களுக்கும் சொல்ல மறந்த இன்னும் பல விசயங்களுக்கும் இளையராஜா படைத்திருக்கும் பாடல்கள் எண்ணிலடங்காதவை.  மக்களின்  மனசைப்  படித்து  இசையாய்  படைத்த இளையராஜா,  காலங்காலமாய் மக்களிடையே ஊறிக் கிடந்த இசை கேட்டு,  அதை தன்  கற்பனையையும் ஆற்றலையும் திறமையையும் கலந்து கட்டிக் கொடுத்ததை,  தமிழக மக்கள் தாங்கள் கேட்டுப் பழகிய நெருக்கமான இசையாக பார்த்தார்கள்.  வரவேற்றார்கள்; கொண்டாடினார்கள்.  மக்களின் இசை நாயகன் என்று சொன்னால் அது அவருக்குப்  பொருந்தும்.

                                     
                                       79 இல் இளையராஜா இசையமைத்த படங்கள் ஏராளம் . அதில் அமைந்த அற்புதமான பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை. ' அகல் விளக்கு  ' என்றொரு படத்தில்  ' ஏதோ நினைவுகள் ...கனவுகள் மனதிலே மலருதே ...' என்ற பாடல் நிச்சயம் ஒவ்வொரு இசை ரசிகனும் சந்தித்த ஏகாந்த ராகமாகத்தான் இருக்கும். என் மாமா மகன் ஒருவர் ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி குறிப்பிட்டுச் சொன்ன பிறகே நானும் உற்றுக் கவனித்தேன் . அப்போதே அந்தப் பாடலின் ராகம் என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது. ஜேசுதாசும் சைலஜாவும் இணைந்து பாடும் அந்தக் காதல் காவியப் பாடலில்தான் என்னவொரு ரம்மியம்.


                                             'ம்...ம்ம்....' என்ற ஜேசுதாசின் ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்க பாஸ் கிடார் , செல்லோ , வயலின் கலந்து இசைக் கோர்வை சேர சைலஜா ஹம்மிங்கோடு நீட்டி ஆலாபனை செய்ய பல்லவி தொடரும் அழகு பேரானந்தம் தரக் கூடியது. முதல் இடையிசையில் எல்லா கருவிகளும் கலந்து ஒன்றோடொன்று மேவி தாலாட்டிச் செல்லும் . கிடார் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் . இரண்டாம் இடையிசையில் கிடாரோடு வயலின்களின் கவிதைத் தொகுப்பு மழைச்சாரல் போல் பொழியப்பட்டிருக்கும்.  பாடல் முழுமையும் மெளனமாக கேட்டு முடித்த பின்னரும் காதுகளில் அந்த இனிய கானத்தின் ரீங்காரம் இம்சை செய்வதை உணர முடியும் .

                                                     
                                          அந்தப் படத்தின் மற்ற பாடல்கள் பிரபலமாகவில்லை . ரேடியோக்களிலும் கேட்ட ஞாபகம் இல்லை . இப்போது கேட்டால் இசையின் தரத்தில் குறைவுமில்லை. ஏனோ மக்களைச் சேரவில்லை.ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியிருக்கும் இசைஞானியின்  பாடல்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் மக்களால் மிகப் பெரும் வரவேற்பு பெற்றவை . சில நூறு பாடல்கள் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் இளையராஜா ரசிகர்கள் எல்லா பாடல்களையும் கேட்டு ரசித்தவர்களாகவே இருப்பார்கள்.  அதில் நானும் ஒருவன்.



.......................தொடர்வேன்...............................




                                         
                                         
                                   



                              



படத்தில் 
படத்தில் முதல

41 comments:

  1. சால்ஸ். தங்களின் இசைஞானி குறித்த தொடர் பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்கள் .விகடனில் சொல்வனம் பகுதியில் இளையராஜா பற்றிய கவிதை வரிகளை நானும் வாசித்தேன் .என்ன ஒரு தீர்க்கமான உண்மை !பலரது நினைவுகளைப் புரட்டிப்போட்டது.படிக்கத் தவறியவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு .தொடரட்டும் உங்கள் சேவை .

    ReplyDelete
  2. நன்றி அருள் ஜீவா . தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  3. இணைத்த பாடல்கள் என்றும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்...

    ReplyDelete
  4. blogspot.in to blogspot.com + tamilmanam

    contact : dindiguldhanabalan@yahoo.com / 9944345233

    ReplyDelete
    Replies
    1. வலைச் சித்தரே வருக

      எல்லோரும் நலம் வாழ பாடல் பாடுபவர் நீங்கள். என் நலம் பாட நான் பதிவேற்றிய பாடல்களை ரசித்தமைக்கு நன்றி . தமிழ் மணத்தில் நுழைய வழி காட்டியதற்கும் நன்றி.

      Delete
  5. ஆறிலிருந்து அறுபதுவரை படப் பாடல்களுக்கெல்லாம் இத்தனை பாராக்கள் அவசியமில்லை என்று கருதுகிறேன். அவை அப்படியொன்றும் காவியப் பாடல்கள் கிடையாது. கண்மணியே காதல் என்பது பாடல் மட்டும் சற்று தேவலாம்.

    நீங்கள் வெளியிட்டிருக்கும் 1979 இரா படங்கள் பட்டியலைப் பார்த்தால் ஒவ்வொரு படத்திற்கும் ராட்சஷன் தோன்றுவான் போல தெரிகிறது. வெளுத்துக் கட்டுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. கல் மனம் படைத்தவர்களுக்கு பூக்களின் வாசனை அறியுமோ?

      உள்ளுக்குள் பயம் வந்திடுச்சு போல.

      Delete
  6. வாங்க காரிகன்

    காவியப் பாடல்களுக்கு மட்டுமே விளக்கங்களும் வியாக்யானங்களும் இருக்க வேண்டுமா என்ன!? நான் ரசித்த எல்லா இளையராஜா பாடல்களையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு விதம்தானே! உங்கள் பதிவில் நீங்கள் காவியப் பாடல்களை மட்டுமா சுட்டிக் காட்டுகிறீர்கள். பிரபலம் ஆகாத பாடல்களும் அதில் அடக்கம் . அது சரி காவியப் பாடல்கள் என்பதற்கு என்ன விதிகள் வைத்திருக்கிறீர்கள் ?

    ReplyDelete
  7. -----என்னவிதமான கருவி இசைத்து ஆரம்பிக்கிறார் என்பதை சொல்ல முடியாத அளவிற்கு கிடாரோடு வேறு இசைக்கருவிகள் கலந்து டிரம்சில் ஜாஸ் இசையோடு பல்லவி ஆரம்பிக்கும் அழகே தனி. கடைசி வரை ஜாஸ் இசையோடு பாடல் செல்லப் போகிறது என்று பார்த்தால் இரண்டாம் இடையிசையில் கொட்டு மேளத்தோடு நாதஸ்வரம் கலந்து கொடுத்து மீண்டும் மேற்கத்திய பாணியில் ஜானகியின் ஹம்மிங்கோடு இசையை தொடரும் அற்புதத்தை நான் அப்போதே ரசித்தேன். என் இசை நண்பர்களோடு சேர்ந்து அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்து போயிருக்கிறேன் . அது ராஜாவிற்கே உரிய படைப்பாற்றல். ----

    எல்லாம் சரிதான். உங்களின் ரசிப்பெல்லாம் இருக்கட்டும். அது என்ன ஜாஸ் இசை? நீங்கள் எதை ஜாஸ் இசை என்று சொல்கிறீர்கள் என்றே தெரியவில்லை. Jazz என்றழைக்கப்படும் இசை வகை அமெரிக்க கறுப்பர்களால் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. தமிழில் ஜி ராமநாதன், எம் எஸ் வி போன்றோர் இந்த ஜேஸ் இசையை கொடுத்திருக்கிறார்கள். யாரடி நீ மோகினி என்ற புகழ் பெற்ற பாடல் இந்த ரகம்தான். அதேபோல எல் ஆர் ஈஸ்வரி பாடிய பல கிளப் பாடல்கள் இதே ஜேஸ் இசை வடிவில் அமைக்கப்பட்டவை.

    இளையராஜா இந்த ஜேஸ் இசையை தன் இசையில் கொடுத்ததாக தெரியவில்லை. அவருக்கு மேற்கத்திய செவ்வியல் இசையிலிருந்து வேண்டியதை உருவ மட்டுமே தெரிந்திருந்தது. ராக், ராக் அண்ட் ரோல், ஜேஸ் எல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. மேற்கத்திய பாணி என்று எல்லா வாத்தியங்களையும் உருட்டி தட்டி உண்டாகும் கர்ண கடூர ஓசைதான் அவருடைய மேல் நாட்டு பாணி இசை.

    என்னைத் தெரியுமா என்ற பாடல் இந்த ஜேஸ் இசைக்கு எம் எஸ் வி மகுடம் சூட்டிய பாடல்.எம் எஸ் வி க்குப் பிறகு ரஹ்மான் ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி என்ற இருவர் பாடலில் மிகச் சிறப்பாக இதை புதுப்பித்திருப்பார்.

    இறுதியாக நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு பதில். காவியப் பாடல் என்பது கிளாசிக் பாடல். அது காலம் கடந்து மக்கள் மனதில் ஆட்கொண்டிருக்கும் தீரா இசை. அவ்வகையான பாடல்கள் பற்றி நான் ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இறுதியாக நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு பதில். காவியப் பாடல் என்பது கிளாசிக் பாடல். அது காலம் கடந்து மக்கள் மனதில் ஆட்கொண்டிருக்கும் தீரா இசை // மக்கள் மனதில் மேற்சொன்ன பாடல்கள் ஆட்கொள்ளமலா இன்னும் ரேடியோ, தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிப்பரப்புகின்றனர். நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை போலும். இருபது வருடங்களுக்கு பின்னர் வந்த படங்களின் பாடல்கள் யாரும் இப்போது ஒளிப்பரப்புவது இல்லை.

      Delete
    2. ஜாஸ் இசையில் நீங்கள் இன்னும் எம்.எஸ்.வி. அய்யா அவர்களின் காலத்திலே இருக்கீங்க....உங்களுக்கு காமெடி வரும் என்பதை இப்போது தான் கேட்கிறேன். ரகுமான் கொடுத்த அந்த பாட்டு உங்களுக்கு ஒரு ஜாஸா? மிகவும் அசூயை கொடுக்க கூடிய பாடலாகத்தான் எனக்கு இருக்கு. இதெல்லாம் எந்த தொலைக்காட்சியும் ஒளிப்பரப்பவில்லை, பன்பலையும் வருவதுமில்லை. அதெல்லாம் அந்த காலகட்டத்தில் மட்டும் ரசிக்கத்தக்க பாடல். நானும் ரசித்தேன். இப்போது அது மொக்கையா இருக்கு.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. """"""இளையராஜா இந்த ஜேஸ் இசையை தன் இசையில் கொடுத்ததாக தெரியவில்லை. அவருக்கு மேற்கத்திய செவ்வியல் இசையிலிருந்து வேண்டியதை உருவ மட்டுமே தெரிந்திருந்தது. ராக், ராக் அண்ட் ரோல், ஜேஸ் எல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. மேற்கத்திய பாணி என்று எல்லா வாத்தியங்களையும் உருட்டி தட்டி உண்டாகும் கர்ண கடூர ஓசைதான் அவருடைய மேல் நாட்டு பாணி இசை. """"""""" ha ha ha ha ha ha LooooooooooooooooooooooooL,

    ReplyDelete
  10. வாங்க நியோ

    நீங்கள் இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டது. காரிகன் பின்னூட்டத்திற்கு நெத்தியடி போல எடுத்துக்காட்டுடன் பதில் கொடுத்திருந்தீர்கள் . அவர் மூக்கு உடைந்த சப்தம் கேட்டது. உங்களைப் போன்ற இளையராஜா ரசிகர்கள் வந்து இப்படி தகுந்த பதிலடி கொடுத்தீர்கள் என்றால் இளையராஜா யார் என்று நிறைய பேருக்கு புரிய வைக்கலாம்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. https://www.youtube.com/watch?v=MwAH487zaWk

    hello Mr. Charles

    the above link is for Raja's Mafia so called "gnana soonyam" (you,me and so many) to learn what is normal walts and jazz walts.

    the second link below is for Raja phobia group (rpg) so called "genius"(self styled). To know how msv and Ir used those jazz walts beautifully in cinema music. kindly listen to Mr. Vicky who interprets the jazz walts work, word of and on piano. (Mainly on his words in that video), any superficial listening may tend you people (IR haters) to write any reply(nonsense) to me.

    https://www.youtube.com/watch?v=QwQB29-h0jc

    warning: people there is a "trap", please careful, if you want to write any counter post to this, take extra care.

    Mr. Charles some of visitors in your post who post comments already here seems like "morons", tell them to think twice before write anything(nonsense) here.

    i may come here with nice story little latter.

    rock and roll, blue, R&B.......... bla bla bla bla bla bla, absolutely ridiculous. tell to that liar Mr. "ignorant kid", IR is absolutely "super soldier' and 100 miles ahead of any other music composer of india in terms of music.

    ReplyDelete
  13. காரிகன் அவர்களே

    கண்மணியே பாடல் jazz waltz வகையைச் சேர்ந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . அது 1..2..3..தாள லயத்தில் அமைந்த பாடல். ஒரு வேளை இல்லையென்றாலும், இளையராஜாவிற்கு ஜாஸ் இசை என்னவென்றே தெரியாது , அவர் அப்படி எந்தப் பாடலுக்கும் இசைத்ததில்லை என்ற உங்கள் அறியாமைக்கு நியோ ஒரு குட்டு வைத்திருக்கிறார்.

    எம்.எஸ்.வி க்கு, ரகுமானுக்கு தெரிந்த ஜாஸ் இசை ராஜாவிற்கு தெரியாது என்று சொன்னால் உங்களை எல்லோரும் விநோதமாக பார்ப்பார்கள். ஊரெல்லாம் ராஜாவின் இசையைப் பற்றி பேசுகையில் நீங்கள் மட்டும் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று பேசினால் உங்கள் இசை ரசனையை அல்ல உங்களையே சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள். நீங்கள் மாறப் போவதில்லை. பொய்யான தகவல் பரப்பாமலாவது இருக்கலாமல்லவா ?

    ReplyDelete
  14. எழுதக்கூடாது என்றுதான் பார்த்தேன், நான் எதையாவது எழுதி நான்கைந்து பேர் இங்கே வந்து, வழக்கம் போல ஏதாவது ஆகிவிடுமோ என்றுதான். எல்லாருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்பதுதான் முக்கியம் போல.

    சால்ஸ் , முதலில் உங்களுக்கு jazz என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கே வந்திருக்கும் இசை மகான் லிங்க் கொடுத்ததும் அதைப் பிடித்துகொண்டு jazz waltz என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இராவுக்கு ஜேஸ் தெரியாது என்றில்லை. அவர் அதை கொடுக்கவில்லை என்பதே என் கருத்து. சொந்தமாக ஏதாவது சரக்கு இருந்தால் அதை வைத்துக்கொண்டு என்னை உரசிப் பார்க்கவும்.

    ReplyDelete
  15. Misterf neo,

    Enjoyed reading your comments and had a good laugh. Try to write something on your own to counter what I have said.It's easy to give a thousand links for anyone.When you can why can't I?

    And one more thing, next time write flawless English. Frankly speaking your English...sorry to say.. sucks...

    ReplyDelete
  16. காரிகன்

    உங்களுக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்பதை வைத்துக் கொண்டு அடுத்தவர் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் சின்னப்பையன் புத்தியை முதலில் விட்டுத் தொலையுங்கள் . அகந்தை அறியாமையை வளர்க்கும் .

    jazz இசையின் தாளகதியில் அமைந்த பாடல் என்றுதான் உங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாஸ் இசை எது என்பதை எடுத்துக் காட்டுங்கள் . ஜாஸ் இசைக்கான முழு விளக்கம் எடுத்துக்காட்டுடன் கொடுங்கள். பிறகு நாம் மறுபடி பேசுவோம் - நாங்கள் ஞான சூன்யமா , நீங்கள் அறிவுக் கொழுந்தா என்று!?

    ReplyDelete
  17. "இராவுக்கு ஜேஸ் தெரியாது என்றில்லை. அவர் அதை கொடுக்கவில்லை " என்பதே என் கருத்து. சொந்தமாக ஏதாவது சரக்கு இருந்தால் அதை வைத்துக்கொண்டு என்னை உரசிப் பார்க்கவும்.
    Vs
    "ராக், ராக் அண்ட் ரோல், ஜேஸ் எல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. மேற்கத்திய பாணி என்று எல்லா வாத்தியங்களையும் உருட்டி தட்டி உண்டாகும் கர்ண கடூர ஓசைதான் அவருடைய மேல் நாட்டு பாணி இசை. "

    Long live English

    MUSIC - RIP









    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Rewriting Tamil
    எழுதக்கூடாது என்றுதான் பார்த்தேன், - (ஏனென்றால் என்னிடம் சரக்கு இல்லை)
    நான் எதையாவது எழுதி நான்கைந்து பேர் இங்கே வந்து, - ( நான்கைந்து பேரா? நான் (mister neo)ஒருவன் மட்டுமே!!!!! (இங்கயும் பொய்யா? என்ன கொடும சரவணா இது!!!
    வழக்கம் போல ஏதாவது ஆகிவிடுமோ என்றுதான். - (பயம்)
    எல்லாருக்கும் நான் என்ன (பொய்) சொல்கிறேன் என்பதுதான் முக்கியம் போல.

    சால்ஸ் , முதலில் உங்களுக்கு jazz என்றால் என்னவென்றே தெரியவில்லை. - (ஏனென்றால் எனக்கும் தெரியாது)
    இங்கே வந்திருக்கும் இசை மகான் - mister neo (thanks for complement)லிங்க் கொடுத்ததும் அதைப் பிடித்துகொண்டு jazz waltz என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இராவுக்கு ஜேஸ் தெரியாது என்றில்லை. அவர் அதை கொடுக்கவில்லை( என்று பொய் சொல்கிறேன்)என்பதே என் கருத்து.
    சொந்தமாக ஏதாவது சரக்கு இருந்தால் அதை வைத்துக்கொண்டு என்னை உரசிப் பார்க்கவும்.- சரக்கா!!!!! அதுவும் சொந்த சரக்கா!!!!!! அதுதான் என்னிடம் கம்மியாக உள்ளது, தயவு செய்து கொடுத்து உதவவும்.

    ReplyDelete
  20. So Misterf neo,

    This is your idea of writing your own stuff? I really pity your standard. Try something original.

    ReplyDelete
  21. வெளியீடு சோதனை

    ReplyDelete
  22. வெளியீடு மட்டுறுத்தப் படவில்லை ...
    ராக்கம்மா எனும் தளம் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன்
    நன்றி அய்யா ..
    நானும் இளையராஜாவை ரசிப்பவன்..
    மோகிப்பவன்தான்
    ஆனால் மற்ற இசை தொகுப்புகளையும் கேட்பேன்.. ரசிப்பேன் நன்றி
    தம+

    ReplyDelete
  23. அந்தக் கவிதையை எழுதியவர் ஸ்டாலின் சரவணன் ..
    புதுக்கோட்டை ..

    ReplyDelete
  24. வாங்க மது

    நானும் எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு ரசிப்பவன்தான். இளையராஜாவை அதிகம் ரசிப்பவன். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போல பல படைப்பாளிகள் உங்கள் ஊரிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர் .

    இளையராஜா பற்றிய தளங்கள் நிறைய உள்ளன. போகப் போக நானே அறிமுகப்படுத்துவேன். இளையராஜா இசை என்றாலே சுவாரசியம்தான் .

    ReplyDelete
  25. நண்பர்களே

    இன்று ஜூன் 3, 2015 - இசைஞானி , ராக தேவன், மேஸ்ட்ரோ என பல பெயர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் பிறந்த நாள் . வயது 72
    அவரின் இசைக்கு வயது 40 . அவரது இசை வாழப் போகும் வயது .....காலம் கணிக்கும் .

    சன் மியூசிக் சானலில், அவருடைய பாடல் ஒன்றை ஒரு பெண் கலைஞர் சாரங்கி கொண்டு இசைதத்ததின் மூலம் , அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. அவர் பல்லாண்டு வாழ நாமும் வாழ்த்துவோம்.

    ReplyDelete
  26. ஜூன் -3 தமிழன் பெருமைப்பட வேண்டிய நாள்

    ReplyDelete
  27. அரசியல் சாணக்கியரும்,இசைச் சக்கரவர்த்தியும் இந்த தமிழ் மண்ணில் அவதரித்த நாள் .காலம் உள்ளவரை இவர்களது கலை வளரட்டும் .

    ReplyDelete
  28. சார்லஸ்,

    இளையராஜாவின் அதிதீவிர ரசிகராய், அவரின் இசைகாற்றை பரப்பும் உங்களின் புதிய காற்றுக்கு இதுதான் எனது முதல் வருகை !

    எனது பால்யமும், இளமையும் இளையராஜாவின் ராகங்களின் தாக்கத்துக்கு உள்ளானதை மறுப்பதற்கில்லை ! நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்ட மெலொடிகளில் பல என் மனம் கவர்ந்தவை. எம் எஸ் வி எப்படி ஒரு தலைமுறையை தன் இசையால் கட்டிப்போட்டாரோ அதே போல இளையராஜாவும் ஒரு தலைமுறையின் சுக துக்கங்களை தன் இசையினால் மீட்டினார் என்பதும் உண்மை !

    ஆனால் கால ஓட்டத்தில் தமிழ் திரையிசை என்றாலே " இளையராஜா " தான் என்றிருந்த என் மனபிம்பம் மறைந்துவிட்டது ! அவரது இசை ஞானத்தில் எந்த சந்தேகமும் கிடையாது என்றாலும் அவரது காலத்திலேயே இன்னும் பல திறமைசாலிகள் இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை ! மேலும் அவரது சில வழிமுறைகளில் விமர்சிக்க நிறைய உள்ளது ! ( இது என் தனிப்பட்ட கருத்து )

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாம் சார்

      வருகைக்கு நன்றி . தமிழ்த் திரையிசை என்றாலே இளையராஜாதான் என்று நானும் சொல்லுவதில்லை. அவருக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்தே பல இசை வித்வான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலமெல்லாம் நானும் அறிவேன். என் இசை உலகம் மெல்லிசை மன்னரிடமிருந்துதான் ஆரம்பித்தது . அதையெல்லாம் மறுப்பதற்கில்லை . இளையராஜா என்னை அதிகம் ஆக்ரமிக்க ஆரம்பித்ததை பகிர ஆசைப்படுகிறேன். அதற்காக மற்றவர்களை பதிவில் நான் எந்தக் குறையும் சொல்லவில்லை. பின்னூட்டங்களில் சிலரை குறை சொல்லியிருக்கலாம் .

      இளையராஜா காலத்திலேயே பல திறமையான இசையமைப்பாளர்கள் இருந்தார்கள் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஆழிப் பேரலைக்கு முன்னால் அனைத்தும் சுருட்டப்பட்டதைப் போல இளையராஜாவின் இசையை தாண்டி அவர்கள் சோபிக்க முடியவில்லை . குறைகள், விமர்சனம் என்று பார்த்தோமானால் இளையராஜா மட்டுமல்ல , எல்லோருடைய இசையிலும் கண்டுபிடிக்கலாம். எல்லா மனிதரும் ஒரே மாதிரியான எண்ண அலைகளை கொண்டிருக்க முடியாதில்லையா!?


      Delete
  29. நன்றி சார்லஸ்,

    உங்க இந்த பதிவில் வரும் பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். மிகவும் பிடித்த ஆண்பிள்ளை என்றாலும் பாடல் கேட்க்கும் போது என்னை அதில் வைத்து சுயப்பச்சாதாபம் வரும் அளவுக்கு பாடலில் நம்மை அழ வைத்துவிடுவார். படமும் எனக்கு பிற்காலத்தில் தான் பிடித்திருந்தது. கண்மணியே காதல் என்பது பாடல் கேட்டவுடன் யாராக இருந்தாலும் பிடித்து விடும் பாடலாக அமைந்துவிடும். அந்த பாடலில் கோரஸ் வரும் போது கதாநாயகன் அல்லது கதாநாயகி முன்னணியில் வந்து பாடுவார்கள். அருமையாக படமாக்க பாடல். இது எந்த வகையான இசை வகை என்பது நமக்கு தேவையில்லை. இது ராஜா வகை பாடல். இது அவர் மட்டுமே அவர் மக்களுக்காக கொடுக்கப்பட்டது. சிலர் குறை சொல்லுவதர்க்கென்ற கிளம்பி வந்து இந்த பதிவுகளின் உண்மையை கலைத்து விட எழுத்துகளில் தேனை ஊற்றி வந்து விஷம் கக்குவார்கள். அவர்கள் தளங்களில் அதே வேலையை செய்து கொள்வார்கள். ராஜா சார் புகழ் எங்கும் பரவி விடுமோ என்று அவரின் உண்மையான எதிரிகளே ஆச்சிரியபடுமளவுக்கு குறை காண்பதே பொழப்பாய் திரிபவர்கள். அவர்களின் புலம்பல்களை புறம் தள்ளி, உங்கள் ராட்சசன் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

    ஏதோ நினைவுகள் பாடல் கேட்கும் போது ''ஏதோ நினைவுகள்' என்னை ஆட்கொள்ளும். அப்போது எனக்கு நான்கு வயது இருக்கலாம். எங்கள் தெருவில் விளையாடும் போது ஏதோ கடையில் கேட்டு, நின்று கொண்டிருப்பதை போன்று ஒரு நினைவு. ராட்சசன் அடிக்கடி வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார்

      நீங்கள் வந்து ரொம்ப நாளாச்சு . இளையராஜாவின் ரசிகராய் உங்கள் ரசனையை பின்னூட்டத்தில் நீங்கள் கொடுப்பதே எனக்கு மகிழ்வான விசயம். மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும் இளையராஜாவின் இசை உச்சிக்கு சென்ற காலத்தை யாராலும் இனி மாற்ற முடியாது. சாமானிய மக்களின் உணர்விலும் இதயத்திலும் கலந்த இன்னிசையை யாரும் இனி வந்து அழித்து விட முடியாது. குறை சொல்பவர்கள் இருந்தால்தான் அவர் இசையில் உள்ள நிறைகளை இன்னும் இன்னும் நாம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்க முடியும். குறை சொல்பவர்களை வரவேற்போம்.

      Delete
  30. சார்ல்ஸ் ,
    அணு ,அணுவாக ரசிப்பது உங்கள் ஸ்டைல்.வாழ்த்துக்கள்.உங்களை பாதித்த வகையில் பாடல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.ராஜாவின் பாடல்களை பாராட்ட நமக்கு வார்த்தைகள் போதுமா ?
    ராஜாவின் இசைப் பெருமைகளை தங்களைப்போன்றவர்கள் எழுத்தில் வடிப்பது மிகவும் சிறப்பான செயல். ஏதோ நினைவுகள் , கண்மணியே காதல் என்பது ...ஆகா..ஆகா வாழ்க.
    தொடந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. சார்ல்ஸ்

    "பதிவக முதியவர் " என்ற ஒப்பனையுடன் "வார்த்தை விருப்ப நாயகர் " கசப்பு மருந்துகளை எல்லாம் கலந்து எழுதிய குசும்பு பதிவை பார்த்தேன்.நம்மிடம் எத்தனை தரம் அடி வாங்கினாலும் திருந்தவே மாட்டேன் என்கிற "வால்"தனம் சிரிப்பு தருவதாய் இருந்தது.

    அதற்க்கு சப்பை கட்ட பெரியவர் அமுதவன் சொன்ன கருத்துக்கள் அதைவிட நகைச் சுவை.
    அரைகுறையான செய்திகளுடனும் , ஞானமற்ற இசை ரசனையுடனும் எழுதுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்பது பல முறை நிரூபனமாகியுள்ளது.

    அன்னகிளியில் ராஜா கேள்விக்குறியானாரா?16 வயதினிலே தயாரிப்பாளர் ராஜ்கண்ணு , பாரதிராஜாவுக்கு சொன்னதே " முதலில் ராஜாவை ஒப்பந்தம் செய் ! பிறகு நீ படத்தை எடு என்பதே "!

    இவர்கள் புலம்பும் " ஆபாசம்" பற்றி இவர்களுக்கு முன்னைய சில பதிவுகளில் சொல்லி முடித்தாயிற்று.நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வெட்கம் கேட்டு ஓடியவர்கள் இவர்கள் .

    சிம்பனி பற்றி பெரியவர் முட்டள்தனமாக பேசுவதும் கோமாளித்தனம்.

    ReplyDelete
  32. வாங்க விமல்

    வந்து ரொம்ப நாளாச்சு . பதிவை வாசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி . இளையராஜா பற்றி நிறைய குறைகள் சொல்லச் சொல்ல அவரின் இசை அருமைகளை இன்னும் இன்னும் அதிகமாக எடுத்துச் சொல்ல உத்வேகம்தான் பிறக்கிறது. அவரை தூற்றுபவர்களைப் பற்றி நமக்கு கவலை தேவையில்லை . அவர்கள் சூரியனை மறைக்கும் மேகங்கள் போன்றவர்கள் . அவர்களின் எண்ணங்களும் அப்படித்தான் இருக்கும் . இளையராஜா என்ற இசைச் சூரியனை ஒளிக்கவும் முடியாது ; ஒழிக்கவும் முடியாது.

    ReplyDelete
  33. சார்லஸ்,குமார், விமல் மிஸ்டர் நியோ எல்லாரும் பேசுறதை கேக்கிறப்போ ஐ படத்துல வில்லனுக சேர்ந்துகிட்டு குடிச்சுக்கிட்டே பேசுராப்ல இருக்கு. ஹா ஹா ஹாஹா ...நல்ல காமடி...

    ReplyDelete
  34. ஹலோ அனானி

    பெயரிட தைரியமில்லாத உங்களின் எடுத்துக்காட்டு நீங்கள் ' பச்ச புள்ள ' என்று காட்டுகிறது . நாங்கள் உண்மையான இசைக் கலைஞனைப் பற்றி பேசுகிறோம் . வேற யார் பெத்த இசையையோ தன்னிசையாக காட்டிக் கொள்ளும் இசை அமைப்பாளரின் ரசிகராக நீங்கள் இருப்பீர்கள் என்று நன்கு புரிகிறது. உங்கள் கண்களுக்கு நாங்கள் அப்படிதான் தெரிவோம்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை தரம் விவாதித்து மண் கவ்வினாலும் மீசையில் மண் படவில்லை என்ற சொரணை கெட்ட கோமாளிகளை என்னவென்று அழைப்பது.

      Delete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்