Sunday 7 December 2014

இசை ராட்சஷன் - 5




                                        இசை ராட்சஷன் -  5

                                        ( The Musical Legend )


                      1977 ஆம் ஆண்டில் இளையராஜாவை விட எம்.எஸ்.வி இசையமைத்தத் திரைப்படங்கள் அதிக அளவில் வந்தன. சில படங்களின் பாடல்கள்  மட்டும் வெற்றி பெற்றன என்பது மறுப்பதற்கில்லை . ஆனால் அதிக அளவில் இளையராஜா பாடல்கள் வரவேற்புப் பெற்றதும் கவனிக்கப்பட்டதும் கூட மறுப்பதற்கில்லை.  காரணம் பாடலுக்கான பின்னணி இசை அவரை மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. இசையில் அவர் செய்த புதுமைகள் போற்றப்பட்டன, கொண்டாடப்பட்டன . அது மறுக்க முடியாத வரலாறு . 





                        என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அவர்களை மனதளவில் ஒதுக்கித் தள்ளாதவாறு  அவருக்கென்று ஒரு தனி இடம் வைத்திருந்தேன் . இளையராஜாவின் பாடல்களை ரசித்தாலும் வெளியே காட்டிக் கொண்டதில்லை. இளையராஜாவா எம்.எஸ்.வி யா என்ற கேள்விகளும் வாதங்களும் உருவாகும் இடங்களில் நான் எம்.எஸ்.வி பக்கம் நின்றேன் . பெரிய அண்ணன்மார்களிடம் கூட அதற்காக சண்டை போட்ட அனுபவம் உண்டு. வகுப்புத் தோழர்களோடு வயதுக்கேற்ற வார்த்தைச் சண்டை நடந்தது. 


                           நான் வளர்ந்த கிராமத்தில் சினிமா கொட்டகை இல்லை. தியேட்டர் இல்லாத ஊராட்சி ஒன்றியம் அதுவாகத்தான் இருந்தது என்பது பத்திரிக்கையிலும் வந்தது. அதனால் ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருந்த மற்றொரு கிராமத்து சினிமா கொட்டகைக்குச் செல்வோம்.  பஸ்  வசதி இல்லை . சைக்கிள் எடுத்துப் போகவேண்டும் . இல்லாவிடில் நடராஜா சர்வீஸ்தான் !  சினிமாவிற்கு போகப் போகிறோம் என்று தெரிந்துவிட்டால் கால் வலியாவது கை வலியாவது! எதையும் பார்ப்பதில்லை. உற்சாகத்தோடு நடந்தே போய் படம் பார்த்துவிட்டு இரவு திரும்பும்போது எல்லாமே வலிக்க ஆரம்பிக்கும் . தூக்கம் தூக்கமாய் வரும் . விட்டால் ரோட்டிலேயே படுத்துத் தூங்கிடச் சொல்லும் அளவிற்குக் கண்ணைச் சுழற்றும் .  அம்மா என்னுடன் வரும்போது,  'என்னைத் தூக்குமா ' என்று அழுது அடம் பிடித்து அடி வாங்கி நடந்தே வந்திருக்கிறேன் . சில நேரங்களில் அடியும் போட்டு என்னைத் தூக்கிக் கொண்டும் அம்மா நடந்து வந்ததை இளையராஜாவின் ஆரம்ப காலப்  பாடல்கள்  ஞாபகமூட்டுகின்றன.  இப்போது  அந்தப் பாடல்களை  கேட்கும்போது எண்ணம் பெருகி இதயம் உருகி கண்ணீர் அருவி கன்னம் வழிவதை யாரும் பார்ப்பதற்குள் துடைத்துக் கொள்வேன்.  விலை மதிப்பிலா உணர்வுகள்!






                          டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கும் அனுபவமே தனி!  நடுவில் கூடாரம் .இருபுறமும் திறந்த வெளி. 'நம்பர் ஒன் ' சமாச்சாரங்களும் அங்கேதான் . தரை டிக்கெட் , பெஞ்சு , சேர்  என்று மூன்று வகுப்புகள் . தரை டிக்கெட் 25 பைசாவிற்கு நான் படம் பார்த்த அனுபவம் நினைவிருக்கிறது . தரையில்  மண்ணைக் குவித்து சற்று உயரமாக்கிக் கொண்டு உட்கார்ந்து படம் பார்ப்பேன் . கூட்டம் இல்லாவிட்டால் படுத்துக் கொண்டே படம் பார்த்த அனுபவமும் உண்டு . துப்பி வைப்பார்கள் . 'இருந்து'   தொலைப்பார்கள். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு படம் பார்த்திருக்கிறேன் . திரைப்படம் பார்க்கும்  சுவாரசியத்தில்  அதெல்லாம் ஒரு பொருட்டாகவே பட்டதில்லை. 



                       அப்படி ஓடி ஓடி படம் பார்த்த அனுபவங்கள் மனசுக்குள் ஓடும்போது சினிமா கொட்டகையை நெருங்கும் கணங்களும் நினைவிற்கு வருகின்றன. டென்ட் கொட்டகையின் உச்சியில் கட்டிய குழாயில் பாடல் ஒலிக்கும் .  ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நெருங்கும்போதே பாடல்கள் ஒலிப்பது தெளிவாகக் கேட்கும் . எல்லாமே ஹிந்திப் பாடல்கள்தான் ! 

ஆராதனா, கேரவன், பாபி , யாதோங்கி பாரத் , ஹம் கிசிசே கம் நகி போன்ற படங்களிலிருந்து அதிகப் பாடல்கள் போடுவார்கள்.  ஹிந்திப் பாடல்களை முதன்முறையாக நான் அங்குதான் கேட்டேன். ரேடியோவில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே கேட்டிருக்கிறேன் . அப்போது  சினிமா கொட்டகையில் ஏன் ஹிந்திப் பாடல்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்விக்கு இப்போது விடை தெரிகிறது . 70 கள்  ஆரம்பித்து  அதன் மையம் வரை ஹிந்திப் பாடல்களின் சாயலில் நமது தமிழ்த் திரை இசை அமைப்பாளர்களும் பாடல்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் .


                     இளையராஜாவின் வருகை அதையெல்லாம் மாற்றிப் போட்டது . திரை இசையின் போக்கு திசை மாறியது. ஒட்டு மொத்தத்  தமிழர்களும் இசை கிளம்பிய திசையைத் திரும்பிப் பார்த்தார்கள் . தமிழன் தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்ய தலையெடுத்தார் இளையராஜா. மண்ணின் மணம் சார்ந்த பாடல்கள் கேட்டு மக்கள் மனது மாறிப் போனது. எங்கும் அதன் பிறகு தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன . இளையராஜாவின் கானங்கள் கேட்கக் கேட்க 'பானங்கள்'  உண்ட போதையைத் தந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இளையராஜா ஒரு இசை அசுரனாக வளர்ந்து கொண்டே வந்ததை கண்கூடாக பார்த்தேன். மற்ற இசை அமைப்பாளர்களும் அதே காலகட்டத்தில் இசை அமைத்துக் கொண்டிருந்தாலும்  இளையராஜாவின் இசையோடு அவர்களால் போட்டியிட முடியவில்லை.  பெரும்பான்மையான மக்களின் நெஞ்சங்களை ஆக்ரமித்த பாடல்களை இளையராஜா ஒருவராலேயே கொடுக்க முடிந்தது. 


                     காலம் உருண்டது. 77 முடிந்தது. 78 இல் இளையராஜா இசையமைத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. 

                                        -   அச்சாணி 
                                        -   அவள் அப்படித்தான் 
                                        -    பைரவி 
                                        -    சிட்டுக் குருவி 
                                        -    இளமை ஊஞ்சலாடுகிறது 
                                        -    இது எப்படி இருக்கு 
                                        -    காற்றினில் வரும் கீதம் 
                                        -    கண்ணன் ஒரு கைக்குழந்தை 
                                        -    கிழக்கே போகும் ரயில் 
                                        -     மாரியம்மன் திருவிழா 
                                        -     முள்ளும் மலரும் 
                                        -     ப்ரியா 
                                        -     சட்டம் என் கையில் 
                                        -     சிகப்பு ரோஜாக்கள் 
                                        -     சொன்னது நீதானா 
                                        -     திருக்கல்யாணம் 
                                        -     திரிபுர சுந்தரி 
                                        -     தியாகம் 
                                        -     வாழ நினைத்தால் வாழலாம் 
                                        -     வட்டத்துக்குள் சதுரம் 



                  அச்சாணி என்ற திரைப்படத்தில் ' மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன் ' பாடல் வெளிவந்தபோது அது சினிமா படத்தில் வந்த பாடல் போல எனக்குத்  தோன்றவில்லை . இன்னுமொரு பக்தி பாடல் உருவாகி இருக்கிறது என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. 'இடைவிடா சகாய மாதா' என்றொரு கிறித்துவ பக்தி பாடல் சுசீலாவின் குரலில் அற்புதமான  இசையோடு  ஒலிப்பதை அடிக்கடி கேட்டிருக்கிறேன் .  கிறித்துவ ஆலயத்தின் திருவிழா காலங்களில் அந்தப் பாடல் ஒலிப்பேழை மூலம் ஒலிக்கப்படும்.    

சுசீலாவின் குரலா பாடலுக்கான மெலோடியா அல்லது இரண்டுமா என்பதை  பிரித்தறிய முடியாமல்  மெய்மறந்து பாடல் கேட்பேன்.  ' மாதா உன் கோயிலில் ' என்ற பாடல் முதன்முறையாக அங்கு நான் கேட்டபோதும் அதேபோல்  மெய்மறந்து போனேன் . என்ன ஒரு மனதுருக்கும் மெலடி !





              'மச்சானைப் பாத்தீங்களா பாடின அதே ஜானகி அம்மாதான் இதையும் பாடி இருக்காங்க' என்ற செய்தி கேட்டவுடன்  தன்னுடைய இனிய குரலால் நம்மை குதூகலிக்க வைக்கவும்  கும்பிட வைக்கவும் செய்கிறார்களே என்று வியந்து போனேன் . வீணையையும் வயலினையும் இளையராஜா வாசிக்க வைத்தது போல இல்லாமல் அழ வைத்துக் காண்பித்திருப்பார். பாடலோடு இழையோடும் இசைக் கருவியிலும் அழுகையை கொண்டுவர முடியும் என்பதை ராஜா நிரூபித்திருப்பார். 

முகநூலில் படித்த செய்தியைப்  பகிர ஆசைப்படுகிறேன்.

பல டேக்குகள் எடுத்த பாடல் .
பாடலை ரெகார்ட் செய்யும் போதே தனது கற்பனையில் தோன்றிய சங்கதிகளை ஜானகியிடம் அவ்வப்போது சென்று சொல்லி பாடலை மெருகேற்றினார் ராஜா .
இறுதியில் அனைத்தும் நன்றாக வந்த நேரத்தில் பாடலில் மெய் மறந்து BGM க்கு கை காட்ட மறந்துவிட்டார் இசையை conduct செய்த கோவர்த்தன்.
அடுத்த டேக்கில் மூன்றாவது சரணத்தில் ''பிள்ளை பெறாத பெண்மை தாயானது ,அன்னை இல்லாத மகனை தாலாட்டுது ''என்ற வரிகளை பாடிய ஜானகி தொடர்ந்து பாடாமல் நிறுத்தி விட்டார் .
என்னவென்று ராஜா வாய்ஸ் ரூமை பார்த்தால் ஜானகி கர்சீப்பால் கண்களை துடைத்து கொண்டிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது
என்னவென்று கேட்க பாடலின் டியூனும் வார்த்தையும் கலந்து பாவத்தில் ஏதோ ஒன்றை உணர்த்த அழுகையை நிறுத்த முடியவில்லை என்றார் ஜானகி .இதை கேட்டு எல்லோரும் உருகி விட்டார்களாம் .
பாடல் இசையை coduct செய்தவர் ,பாடலை பாடியவர் இருவருக்குமே உணர்ச்சி மயமான அனுபவத்தை தந்த பாடல் இது .
இப்போது கூட இந்த பாடலை கேளுங்கள் .அதன் tune ,bgm குறிப்பாக 2nd interlude அதில் வரும் bass flute இசை சிலிர்ப்பூட்டும்.
 

               அதே படத்தில் வரும் ' தாலாட்டு பிள்ளை  ஒன்று  தாலாட்டு ' என்ற பாடலும் நல்லதொரு மெலடி . வானொலியில் அதிகம் தாலாட்டப்பட்டது. 
எஸ்.பி.பி அவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொருவிதமான expression கொடுப்பதில் வல்லவர் . இந்தப் பாட்டிலும் அவருடைய பங்கை 'வெள்ளைக் குயில்'  சுசீலா அவர்களுடன் சேர்ந்து அழகாக கொடுத்திருப்பார். 



                'அவள் அப்படித்தான் '  என்ற படம் அப்போது புரியவில்லை . ஆனால் இந்திய சினிமாக்களைப் பற்றி பேசினால் அந்தப் படத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது எனும் அளவிற்கு அந்தஸ்து பெற்ற படம் என்பது இப்போது தெரிந்து கொண்ட செய்தி . புதுமையான ஒரு stylish திரைப்படம் . படத்தில் வரும் 'உறவுகள் தொடர்கதை ' என்ற பாடலைக் கேட்டு மதிமயங்கி போயிருக்கிறேன் . கிடார் இசையின் அற்புதம் புரிய வைத்த பாட்டு. தாஸ் அவர்களின் குரலில் அது ஒரு தேவகானம் . இளையராஜாவின் இசைப்  பொக்கிஷத்தில் வைரமாய் மின்னும் பாடல் . இன்னும் கூட மின்னிக் கொண்டுதான் இருக்கிறது .  உறுத்தாத வார்த்தைகள் வருத்தாத இசை கொண்டதொரு பாடல் .  எவருக்கும் பிடிக்கும் .  ஜேசுதாஸ் அவர்கள் சமீபத்தில் ' கர்னாடக இசையே எனக்கு முதலிடம். சினிமா இசையெல்லாம் எனக்கு சும்மா ' என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  அது அவருடைய உணர்வாகவிருந்தாலும் இப்படிப்பட்ட  சினிமா பாடல்கள்தான் அவரை வெகு ஜனங்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அந்தக் காந்தர்வக் குரலை எத்தனையோ பாடல்களில்  எத்தனை  ஆயிரம் முறை கேட்டிருப்பேன்  என்று கணக்கிடவே முடியாது . 
            

  
                                     


                அதே படத்தில் கமலஹாசன் அவர்கள் பாடிய ' பன்னீர் புஷ்பங்களே
என்ற பாடலும் சுகமானது .  பாடலின்  பதிவில்   மலையாள  உச்சரிப்பு அதிகம்
இருந்ததை ராஜா திருத்திப் பாடவைத்தார் என கமலஹாசன் நினைவு  கூர்ந்திருக்கிறார்.  இசைக் கருவிகளின்  ஆக்ரமிப்பு  இல்லாவிட்டாலும்  வீணை,  வயலின்  இரண்டின் சோகமும் இழையோடும் . 


                      ' பைரவி' படத்தில் '  நண்டூருது  நரியூருது  '  என்ற பாடலின் சோகம் சுகமான ராகம் . ரஜினிகாந்த்துக்கு   டி .எம்.எஸ்  அவர்களின்  குரல் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால்  இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது ஒலிப்பதிவுக் கூடத்திற்கு சென்று இரண்டு மணி நேரம் கண்டு ரசித்ததாக  செய்தி படித்திருக்கிறேன் . இரண்டாவது சரணத்தில் பாட்டோடு சேர்ந்து வயலின்களின் கூட்டம் ஒரு சேர  பேசிக் கொண்டே வருவதை ரசிக்கலாம் . முதல் சரணம் வரை பாசத்தோடு வளர்த்த தங்கையின்  நினைவுகளை  எண்ணிப் பார்க்கும் நாயகனின்  உணர்வுகளை  வெளிப்படுத்தும் இசையை மென்மையாய்  கொடுக்கும் இளையராஜா,  இரண்டாம் சரணத்தில்   ' நாளுக்கு நாள் உழைத்தேன் ...நன்றியில்லை அங்கே '  என்று தங்கையின் மரணத்திற்கு காரணமான முதலாளி வில்லனை பழி  வாங்க  ஏற்கும் சபதத்திற்கு  தகுந்தாற்போல்  இசையின் போக்கை வீரியத்தோடு வெளிப்படுத்தும் விதம் அருமை .  இளையராஜாவின் சிறப்புகளில் இதுவும் ஒன்று . பாடல் முடியும் நேரம் ஏதோ ஒன்று நடக்கப் போவதை இசையிலேயே உச்சகட்டம் கொண்டு வந்து எதிர்பார்ப்பை  கூட்டுவது இளையராஜாவின் திறமைக்கு சான்று .  இன்னும் சில பாடல்களையும்  உதாரணம் சொல்லலாம்  :  'பாடவா உன் பாடலை ' , ' யார் வீட்டில் ரோஜா பூ பூத்தது ' .


                   

                       '  நண்டூருது ' பாடலுக்கு ரஜினிகாந்த் நடித்திருந்தாலும்  தன்  வளமான குரலால் டி . எம் .எஸ்  அவர்களும்  நடித்திருப்பார் . தன்  புதுமை இசையால் இளையராஜாவும்  நடித்திருப்பார் . அதுவே அந்த பாடலின் சிறப்பு.
அதே படத்தில் வரும் ' கட்ட புள்ள குட்ட புள்ள ' என்ற பாடல்  குத்துப்  பாடல்
ஆட்டம் போட வைக்கும் பாட்டு . ஆனால் நான் ஆட்டம் போடவில்லை . கொஞ்சம் வளர்ந்துட்டேனாக்கும் ! திரும்பிய திசையெல்லாம் அந்தப்பாடல்   ஒலிபரப்பப்பட்டது .


                        மக்களின் மனதை  தனது பாடல்களால் கட்டிப் போட்டு வைத்திருந்த இளையராஜா எங்கிருந்து முளைத்தார் , எந்த மூலையிலிருந்து வந்தார், இசை தொடர்பான விசயங்களை எங்கே கற்றார்  என்ற செய்தி பெரும்பான்மையானவருக்கு தெரியாமலே இருந்தது. ஏனென்றால் அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை . 35 வருடங்களாக தொலைகாட்சி , ரேடியோ , பத்திரிக்கை போன்ற ஊடகங்களிலும் பேட்டி கொடுத்ததுமில்லை . அதனால் அவரை arrogant  என்று விமர்சித்தார்கள் . தான் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை நிரூபிக்க  சமீப காலங்களில்தான் தன்னை அவர் வெளிப்படுத்துகிறார் . இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். நிறைய செய்திகளை வெளியிடுகிறார் .  35 வருடங்களாக ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை  என்பதற்கும் இப்போது ஏன் வெளிப்படுத்துகிறார் என்பதற்கும் பலரும் பல்வேறு கற்பிதங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்  .  Interpretations  உருவாக்கலாம் .அது முக்கியமில்லை . இசை எனும் இன்பத்தில் இத்தனை  ஆண்டுகளாக  நம்மை  நீந்த வைத்துக் கொண்டிருக்கிறார் .  அதுவே முக்கியமாக தெரிகிறது .


                    தன் இசைப் பயணம் எங்கு ஆரம்பித்தது , தன்னுடைய தாயார் அவரை  எப்படி வழியனுப்பினார் , இந்த உலகத்தை எப்படி புரிந்து கொண்டார் , தன்  இசை முன்னோர்களை எப்படி சந்தித்தார் , இசையை கற்க எடுத்த முயற்சிகள் என்னென்ன , தான் சந்தித்த திறமையான இசைக் கலைஞர்கள் யார் என்ற கேள்விகளுக்கு எல்லாம் கீழே உள்ள காணொளியில்  ஜி. வெங்கட் ராம்  என்பவர் தன் இணையதள சானலுக்காக எடுத்த பேட்டியில்  இளையராஜா அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுப்பதை பார்க்கலாம்.


                     




              தலை முறைகள் கொண்டாடும் இசைப் புதையலை நமக்கு அள்ளி  வழங்கியிருக்கும் இளையராஜாவை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம், புகழலாம் , வாழ்த்தலாம்.


.................................தொடர்வேன் ..........................................

37 comments:

  1. இசைக்கு(இளையராஜாவுக்கு) பெரும் சேவை செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.ஜாபர்

    ReplyDelete
  2. வாங்க ஜாபர்

    முதல் வருகை . நன்றி. இசைக்கு சேவையா? யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான் . இதுவும் பலர் அறிய உதவும் சேவைதானே!

    ReplyDelete
  3. சால்ஸ். இசை இராட்சசன் -5. படிப்பதற்கும் ,பார்ப்பதற்கும் ,கேட்பதற்குமான ஓர் அற்புத பதிவு .தங்கள் பால்ய நிகழ்வுகளைப் பதிவு செய்ததன் மூலம் என்னைப் போன்ற பலரையும் மலரும் நினைவுகளில் மூழ்கச் செய்துவிட்டீர்கள் . தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல். கேட்டாலே போதும் இளம் நெஞ்சங்கள் வாழும் . ------------------------------ ஆம் . வாழும் மனிதனை அவன் வாழ்க்கையோடு லயிக்கச் செய்வது இசைஞானியின் தேமதுர தேனிசை . ஒரு சாரார் மட்டுமே கேட்ட ,புரிந்த ,இசைத்த இசையைப் பட்டிதொட்டியெங்கும் உள்ள பாமரனும் கேட்கமட்டுமல்லாது அனுபவித்து தன் சூழலோடு ஒத்த ரசனையின்பால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய பரிணாமத்தைத் தன் இசையில் கொணர்ந்தவர் இளையராஜா என்பதில் சந்தேகமில்லை . 80களின் ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் மோகன் .குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவரது பல படங்கள் வெள்ளிவிழா கண்டன .கதை ,திரைக்கதை ,வசனம் ,நடிப்பு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இசைஞானியின் இசையிலமைந்த பாடல்களே பெரும்பாலான வெற்றிக்குக் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது . ... மறுப்போர் மதியிழந்தோரே !

    ReplyDelete
  4. ஹலோ அருள்ஜீவா

    அழகாக சொல்கிறீர்கள் . இளையராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு புதிய உலகம் இட்டுச் செல்லும் . புது அனுபவத்தைத் தரும் . 80 களில் இசைஞானியின் இசை பெரியதொரு விஸ்வரூபம் எடுத்தது . விரைவில் அந்தப் பதிவுகளையும் சந்திக்கத்தான் போகிறீர்கள்.

    ReplyDelete
  5. சால்ஸ்,

    இந்த தாமதம் நானே ஏற்படுத்திக்கொண்டதுதான். வழக்கமான உங்களது கச்சேரி கோஷ்டிகள் வருகிறார்களா என்று காத்திருந்தேன். யாரும் இதுவரை வரவில்லை.இதிலிருந்தே அவர்களின் நோக்கம் தெளிவாகப் புரிந்துவிடும் உங்களுக்கு. அவர்களின் ஒரே நோக்கம் என்னை மற்றும் அமுதவனை தாக்குவது மட்டுமே மற்றபடி நீங்கள் என்ன இளையராஜா பற்றி உயர்வாக எழுதினாலும் அதெல்லாம் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.

    நல்லது. போன பதிவை விட இந்தப் பதிவு மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தடுமாறாத நடை. இளையராஜாவின் எழுபதுகள் அற்புதமானவை. அதை நான் என்றைக்கும் எங்கேயுமே மறுத்ததேயில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நானே இளையராஜாவின் எழுபதுகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதைப் படித்தால் ஒருவேளை என் நடுநிலையை உணர்ந்து கொள்வீர்கள்.

    ஆனால் வழக்கம் போலவே சில அள்ளித் தெளித்த அவரச கோலங்கள் இருக்கின்றன. முதலாவது ஹிந்தி இசை பற்றியது. இ.ராஜா வந்துதான் தமிழர்களுக்கு தமிழ் இசையை அறிமுகப் படுத்தினார் என்ற உங்களின் கிளிஷே கருத்து.

    இரண்டாவது இளையராஜா தற்போது தன்னைப் பற்றி பேட்டிகளில் பேசுவது. அதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். எ ஆர் ரஹ்மானின் வருகை. இ.ராஜா எண்பதுகளில் சில பேட்டிகள் கொடுத்தவர்தான். இலங்கை வானொலியில் அவரை சரமாரியாக கேள்விகள் கேட்டு அவர் மென்று முழுங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்காது. பிறகு அவர் தன்னை வெளிப்படுதிக்கொண்டதே கிடையாது. அவர் ஒரு கிருஸ்துவர் என்பதே பலருக்குத் தெரியாது. ரஹ்மானின் வருகைக்குப் பிறகே இ.ராஜா தன் போக்கை மாற்றிகொண்டார் என்பதே உண்மை. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. நான் இதைப் பற்றி பேசினால் மற்றொரு நீண்ட அநாகரீக வாதம் எழும்பும். எனக்கு அதில் விருப்பமில்லை. என் தகுதிக்கு இணையானவர்களாக இல்லாதவர்களிடம் நான் எதுவும் பேச விரும்பாத காரணத்தினால் சில கருத்துக்களை தவிர்க்கிறேன். புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சி உங்களுக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.

    மதிமாறன் என்ற இளையராஜா அபிமானி எழுதியிருப்பதை படிக்கவும்.

    http://mathimaran.wordpress.com/2014/12/08/msv-sivaji-998/

    வேலுமணி சரவணகுமார் says:
    6:50 முப இல் திசெம்பர்10, 2014
    இந்த பாடல் விஷயம் மட்டுமல்ல பலவிசயங்களும் இப்படிதான்.
    நாம் கேள்விப்படும் வரை அல்லது அனுபவப்படும்வரை நமக்கு தெரிந்ததுதான் உண்மை என்று நம்பி இருப்போம்.அதை நிருபிப்பதற்காக வாதிட்டுகொண்டும் இருப்போம். பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நேருகையில் மட்டுமே நாம் முன்னர் கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொள்ள நேரிடுவதை நாம் கண்குடாக கண்டிருப்போம்.
    இதுவரையிலும் தங்கள் கேள்விப்பட்ட பாடல்தான் அவ்வகையில் முதல் முயற்சி என கருதிகொண்டிருந்தவர்கள் நண்பர் மதிமாறன் முலம் ஒரு தகவலை அறிந்துகொண்டபின்னர் இன்னொரு உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
    அதே போல மதிமாறனைவிட வயதிலோ அனுபவத்திலோ முத்தவர்கள் இதற்கும் முன்னர் கலையுலகில் இவ்வகையிலொரு பாடலை குறிப்பிட்டு நமக்கு சொன்னாலும் நாம் ஏற்றுகொள்ள நேரிடும்.
    இந்நிலையில் மாற்றம் என்பது நமது நிலைபாட்டில் தானே தவிர அது உண்மையை என்றும் பாதிப்பதில்லை என்பதை பகுத்தறிவுடன் ஆராய்ந்தால் புரிந்துகொள்ளாலாம்.

    என்னுடைய கருத்தும் இதுவே.

    ReplyDelete
  6. வாங்க காரிகன்

    எங்கே வாராமல் போய் விடுவீர்களோ என்று நினைத்தேன் . மறுபடியும் வந்ததற்கு நன்றி. இளையராஜா பற்றிய உங்கள் கணிப்பீடுகள் தவறாக சொல்லப்படும்போது மட்டுமே விமர்சனங்களும் விசனங்களும் அதிகமாய் தலை தூக்கும் . மற்றபடி உங்கள் ரசனை யாவரும் அறிந்ததே !

    இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள் என்பது ஆங்காங்கே உங்களின் பதிவிலும் சில பின்னூட்டங்களிலும் நான் அறிந்திருக்கிறேன் . இளையராஜாவை விட அவருக்கு முன்னோர்களை நீங்கள் அதிகம் ரசிக்கிறீர்கள் என்பது புரிகிறது. முன்னோர்களின் இசையை நாங்களும் ரசிப்போம். இப்போதும் ரசிப்போம் . இளையராஜாவை கூடுதலாக ரசிப்போம் . அவ்வளவுதான்.

    இளையராஜா ரசிகர்கள் இனிமேல்தான் என் பதிவிற்குள் வருவார்கள். வரமாட்டார்கள் என்று எப்படி உறுதியாகச் சொல்லுவீர்கள் .

    ஹிந்தி இசையில் மயங்கிக் கிடந்த மக்களை இளையராஜாவின் இசை திசை திருப்பவில்லை என்று ஒரு உண்மையை மறைக்காதீர்கள் .
    அந்தக் காலத்தில் குமுதத்தில் வந்த அரசு பதிலைப் பாருங்கள்.

    கேள்வி : எம்.எஸ் .வி , இளையராஜா , ரகுமான் ஒப்பிடவும்.

    அரசு பதில்: எம்.எஸ்.வி காலத்தில் தமிழக மக்கள் ஹிந்தி பாடல்கள் கேட்டார்கள் . இளையராஜா காலத்தில் தமிழர்கள் தமிழ் பாடல்கள் கேட்டார்கள் . ரகுமான் காலத்தில் ஹிந்திக்காரர்கள் தமிழ்ப் பாடல்கள் கேட்கிறார்கள் .

    நடைமுறை யதார்த்தம் ஒன்று இல்லாமல் இப்படி பதில் வெளி வந்திருக்க முடியாது .





    ReplyDelete
  7. T.சௌந்தர்11 December 2014 at 02:15

    திரு சார்ல்ஸ் அவர்களே

    தங்கள் பதிவுகளைப் படித்தேன்.ரசித்தேன்.
    வாழ்த்துக்கள்.
    இந்தப் பதிவின் எழுத்தோட்டம் மெருகேறி இருக்கிறது.1978 இல் வெளிவந்த ஒவ்வொரு படத்திலும்மிக நல்ல பாடல்கள் உள்ளன.

    தாங்கள் குறிப்பிட்டது போல இளையராஜா பற்றி அந்தக் காலங்களில் அதிகம் தெரிந்திருக்கவில்லை.யாரோ புதியவர் என்றே பேசிக்கொண்டதை அறிந்திருந்தோம்.ஆனால் அவரது பாடல்கள் பேரலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    இசையில் ராட்சஷன் என்பதை எப்போதோ அவர் நிலை நிறுத்தி விட்டார் இசையில் உங்கள் ரசனையையும் வெளிப்படுத்தும் விதத்தில் எழுத்தை கொண்டுவாருங்கள்.

    .
    தங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார்ல்ஸ் .

    வாழ்க ...வளர்க .

    T.சௌந்தர்

    ReplyDelete
  8. சௌந்தர் சார்

    வணக்கம். தங்களின் வருகை எனக்குப் பெரிய உவகை. சிறுவயதிலிருந்து இசை ஆர்வம் மட்டுமல்ல எழுத்து ஆர்வமும் எனக்கு உண்டு . திரு அமுதவன் , திரு. காரிகன் மற்றும் உங்களின் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தவுடன் உறங்கிக் கிடந்த எழுத்தாற்றல் எழும்ப ஆரம்பித்தது. ஆக நான் எழுத ஆரம்பித்ததற்கு நீங்களும் ஒரு காரணமே!
    உங்களைப் போல என்னால் எழுத முடியாது . நீங்கள் இசை நுணுக்கங்களும் அறிந்தவர், எழுத்து நுணுக்கங்களும் தெரிந்தவர் . உங்கள் அளவிற்கு என்னால் சொல்ல முடியாவிட்டாலும் என் அனுபவம் வாயிலாக நான் அறிந்ததை தெரிந்ததை மனம் திறந்து பேச விழைகின்றேன். நான் இசை படித்தவன் அல்ல ..ரசித்தவன் . இப்போதும் ரசித்துக் கொண்டிருப்பவன் . முடிந்தவரை இசை ரசனையை மேன்மையாக எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றேன்.

    ReplyDelete
  9. சார்ல்ஸ்

    உங்கள் பதிவு ராஜா ரசிகர்களை மகிழ்விக்கிறது.இப்படி ராஜாவின் இசையை பற்றி எழுதுவதால் சில பாடல்களை மீண்டும் கேட்க வைக்கிறீர்கள்."தாலாட்டு பிள்ளை உண்டு "- " மாதா உன்கோவிலில் " - " உறவுகள் தொடர்கதை " போன்ற நல்ல பாடல்கள் நம் நெஞ்சங்களை விட்டு விலகுமா ,,?
    இசைஞானியின் பாடல்கள் ஒலிக்காத நாட்கள் உண்டா ? தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி !

    சந்தடி சாக்கில் காரிகன் ராஜ ரசிகர்களுக்கு வழமையான புத்திமதியும் கூறி சென்றுள்ளார். ராஜ ரசிகர்களுக்கு "புரியாமல் " இருக்கிற விசயங்களையும் கூறி சென்றுள்ளார்.

    // " என் தகுதிக்கு இணையானவர்களாக இல்லாதவர்களிடம் நான் எதுவும் பேச விரும்பாத காரணத்தினால் சில கருத்துக்களை தவிர்க்கிறேன். புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சி உங்களுக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். // காரிகன்

    ராஜா ரசிகர்கள் அவரது தகுதிக்கு இணையானவர்கள் இல்லை என்கிறாரா ?

    மதிமாறன் என்ற இளையராஜா அபிமானி எழுதியதற்கு லிங்கும் கொடுத்துள்ளார் .அதில் இருக்கிற சங்கதிகளை அவரே ஒத்துக் கொள்ளுவாரோ தெரியாது என்பது தான் இங்கே முக்கியமானது.

    மதிமாறன் பதிவிற்கு வந்த பின்னூட்டத்தை தந்திருக்கிறார் காரிகன்.இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜ ரசிகர்கள் என்ன விதமாக எடுத்துச் சொன்னாலும் , அது எவ்வளவு உண்மையானாலும் தனது கருத்தை மாற்றிவிட்டேன் என்று ஒத்துக் கொள்ள தைரியம் இல்லாத காரிகன் கூறியிருப்பது தான் வேடிக்கை .

    // ....,,,,,அனுபவப்படும்வரை நமக்கு தெரிந்ததுதான் உண்மை என்று நம்பி இருப்போம்.அதை நிருபிப்பதற்காக வாதிட்டுகொண்டும் இருப்போம். பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நேருகையில் மட்டுமே நாம் முன்னர் கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொள்ள நேரிடுவதை நாம் கண்குடாக கண்டிருப்போம்....../// வேலுமணி சரவணகுமார்

    இதெல்லாம் ராஜ ரசிகர்களுக்கு மட்டும் தான் அவர் சொல்வது.அவரது அதிகாரத்தில் " ராஜா சிகாமணிகளுக்கு " மட்டும் தான்! அவருக்கல்ல !

    ஏனென்றால் காரிகன் உயர்ந்த இடத்தில் இருக்கிறாராம் ,,,,,!!!!???
    // என் தகுதிக்கு இணையானவர்களாக இல்லாதவர்களிடம் ....."

    முக்கியமாக தமிழிசை ,தமிழிசை என்று காரிகன் அடிக்கடி கூறுகிறார் .அப்படியென்றால் என்ன என்று கேட்கின்றோம். பதில் சொல்வாரா ..?

    சார்ல்ஸ் , உங்களுக்கு வாழ்த்து சொல்லவும் பயமாக இருக்கிறது , ஏனென்றால் அதையும் சும்மா ஒப்புக்கு என்று காரிகன் வர்ணிக்கத் தொடங்கி விடுவார்.


    ReplyDelete
  10. விமல்

    காரிகன் வாத்தியார் வேடம் போடுகிறார்.அவர் சொல்வதை மட்டும் நாம் கேட்க வேண்டும்.அப்படி கேட்காவிட்டால் பிரின்சிப்பால் வந்து விடுவார்.அவர் யார் என்று அறிவீர்களல்லவா!

    ReplyDelete
  11. வாங்க விமல்

    காரிகன் இளையராஜா பற்றி எந்த தவறான கருத்துகளை வெளிப்படுத்தினாலும் உண்மை என்ன என்பதை எடுத்துரைக்க ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் சலிக்காமலும் சளைக்காமலும் பதில் சொல்லுவார் . நாமும் சலிக்காமல் அவருக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருப்போம் . அவர் எந்த பின்னூட்டத்தைச் சுட்டிக் காட்டினாரோ அதே பின்னூட்டக் கருத்துக்கள் அவருக்கும் பொருந்தும்படி ஆகிவிடும் .

    ReplyDelete
  12. சார்ல்ஸ்

    எங்கே சளைக்காமல் பதில் சொல்லும் தனது கற்பனைகளை எல்லாம் உண்மை என்று கருதும் , ராஜ ரசிகர்களுடன் விதண்டாவாதம் நடாத்தும் எழுத்து சூரர்களைக் காணவில்லை.!!?

    காரிகன் போல பாடல்களை வரிசைப்படுத்தி நானும் ஒரு பதிவை விரைவில் எழுதப் போகிறேன்.ஆனால் எம் எஸ் வீ யை உரச மாட்டேன்.

    விமல்

    ReplyDelete
  13. http://www.malartharu.org/2014/12/facebook-status-collection.html

    ReplyDelete
  14. ஐந்தாவது பதிவிற்கான காலம் ஆகியும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .... வந்து விட்டது... வளரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சார்

      இந்தப் பக்கம் இன்னும் விசிட் அடிக்கலையே என்று நினைத்தேன் . வந்துவிட்டீர்கள். உங்களின் ' கட்டப் பஞ்சாயத்து ' உண்மையிலேயே பெரிய பஞ்சாயத்தாகிப் போனது . காரசார விவாதங்களை நீங்களும் சந்திப்பதற்கு ஒருவகையில் நான் காரணமாகிப் போய்விட்டேனோ என்று கூட நினைத்தேன் . நாக்கில் தேன் வைத்துப் பேசும் மனிதர்கள், தேள் வைத்துப் பேசும் மனிதர்கள் சிலரை இப்போது அடையாளம் கண்டிருப்பீர்கள் . அவர்களின் தளங்களில் நீங்கள் ஏற்படுத்திய சூடு இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது .

      Delete
  15. எங்கே சளைக்காமல் பொய்களை கூறும் காரிகனும் அமுதவனும் இப்போ மெல்ல திறந்தது கதவு படத்தில் இளையராஜா ஒன்றும் செய்யவில்லை என்பது போல ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
    மெல்லத் திறந்து கதவு படத்தில் எம் எஸ் வீ - ராஜா சேர்ந்து இசையமைத்தார்க்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். இவர்கள் இப்போ இல்லை எம் எஸ் வீ தான் எல்லாம் இசையமைத்தார் , ஆனால் இளையராஜாவுக்கே பெயர் பொய் விட்டது என்று புலம்புகிறார்கள்.

    ராஜாவின் வேண்டுகொளுக்கினனாக எம் எஸ் வீ மெட்டு போட்டார் அதற்க்கு ராஜா பின்னணி இசைத்தார் , அந்த இனிமையான பின்னணி இசையின் தாக்கமே அவை ராஜ பாடல்கள் என என்ன வைத்தது என்று பாடம் சொல்லி கொடுத்தேன்,எனது கருத்தை " Isai விமர்சகர் " காரிகன் வெளியிட மறுக்கிறார் .

    நான் போட்ட போட்டில் ஓடி ஒளிந்து கொண்டு காரிகன் ,தன்னை தானே புகழ்ந்து வெவேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டு கொண்டு சவிடால் அடிக்கிறார்.

    விமல்

    ReplyDelete
    Replies
    1. வாங்க விமல்

      காரிகன் உங்கள் மேல் ரொம்பவும் காண்டு ஆகித் திரிகிறார் . அவர் தளத்தில் உங்களை அனுமதிக்காததை வைத்தே நீங்கள் முடிவு செய்யலாம் . 'மெல்ல திறந்தது கதவு ' படத்தின் பாடல்கள் பதிவு சம்பந்தமாக சம்பந்தா சம்பந்தம் இல்லாமலேயே இருவரும் பேசுகிறார்கள் . நானும் வாசித்தேன் . அந்தப் படம் எம்.எஸ்.வி மெட்டு போட இளையராஜா அவர்கள் orchestration செய்தார் என கேள்வியுற்று இருக்கிறோம் . இவர்கள் புதிதாக கதை விடுகிறார்கள்.

      எம்.எஸ்.வி அவர்கள் இளையராஜாவின் இசைச் சேர்ப்பை மிகவும் பாராட்டி மகிழ்ந்ததையும் கேள்விப்பட்டோம் . எம்.எஸ்.வி யின் மெட்டும் இளையராஜா பின்னணி இசையும் சேர்ந்ததால்தான் அந்தப் பாடல்களும் படமும் மிகப் பெரிய ஹிட் . இந்தச் சாதாரண உண்மையை கூட திரிக்கிறார்களே என்று நாம் புன்னகை புரிந்து விட்டு கடந்து போவோம்.

      Delete
  16. சால்ஸ்,

    வீணாக வாதங்களை நீங்களாகவே வளர்க்க வேண்டாம். நான் விமல் கூறிய கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதற்கு காரணம் அவர் பழைய இசை அமைப்பாளர்களை செத்தா போனார்கள் என்று கூறிய மிக மட்டமான கருத்தினால்தான். அதற்காக அவர் மன வருத்தம் அடைவதாக அறிவித்தால் நான் உடனே அவர் கருத்துக்களை --எப்படி என்னை தாக்கி எழுதியிருந்தாலும் -- வெளியிடத் தயாராகவே இருக்கிறேன்.

    மற்றபடி நான் அவர் மீது காண்டு வைத்திருப்பதாக நீங்களே கற்பனை செய்து கொள்வது மடத்தனமானது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு non-existent. பல பெயர்களில் அவர் என் தளத்தில் மற்றும் உங்கள் தளத்தில் வருவது எனக்குத் தெரிந்ததே. அவருடைய கீழ்த்தரமான கருத்துக்களுக்கு நீங்கள் ஆதரவு அளிப்பது ஒரு வகையில் நான் எதிர்பார்த்ததே. உங்களிடம் நான் எதிர்பார்த்த புரிதல் இல்லை என்று தெரிகிறது. இது உங்கள் தளம் உங்கள் தரம் என்ற எண்ணத்துடன் நான் நிறுத்திக்கொள்கிறேன். என்னையும் உங்களையும் அல்லது உங்களைப் போன்றவர்களையும் எந்தக் கோடும் இணைக்க முடியாது என்று தோன்றுகிறது. வந்தனம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க காரிகன்

      நீங்கள் பல பெயர்களில் வருவதாக அவர் நினைக்கிறார் . அவர் அப்படி வருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் . இதில் இரண்டுமே உண்மை இல்லாமல் மூன்றாம் நபர் அப்படி வருகிறாரா என்றும் தெரியவில்லை . கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாதவரை உங்களின் வாதங்கள் வரவேற்புக்குரியதே! மற்றபடி யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை . அந்த அளவிற்கு அவர் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

      Delete
  17. குணசேகர் சொன்னதால் எனது தளத்திற்கு வந்ததாக சொன்னீர்கள்.
    கூடவே அது நீங்க தானே அல்லது இல்லையா என்று ஒரு கேள்வி வேறு... செம காமடி பாஸ்.
    எனது பதிவுகளை உள்ளிடவே இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இதில் குணா என்று நான் வர தற்போதைக்கு வாய்ப்பில்லை.
    அப்புறம் இளையராஜாவை இங்கே யாரும் எழுதி அவரது புகழை கூட்டவும் முடியாது அல்லது அவரது பங்களிப்பை சிதைக்கவும் முடியாது.
    தல எங்கோ எவரஸ்ட்டில் இருக்கு ...
    நாம் இங்கே அடிவாரத்தில் சண்டைப் போட்டுக்கிட்டு சட்டைய கிழிச்சுகிட்டு
    சரி சரி கூடிய விரைவில் எனக்கு ஏன் ராஜா பிடிக்கும் என்று எழுத வேண்டும் ...
    இந்த உணர்வை தந்த உங்களுக்கும் காரிகன் ஜீக்கும் நன்றிகள்.
    தலைப்பு என்ன வச்சுக்கலாம் இளயராஜா என்றோர் அனுபவம். நல்லா கீதா சீக்கிரம் எழுதுறேன்.

    ReplyDelete
    Replies
    1. மது சார்

      வாங்க வாங்க . வருகைக்கு நன்றி .

      ///இளையராஜாவை இங்கே யாரும் எழுதி அவரது புகழை கூட்டவும் முடியாது அல்லது அவரது பங்களிப்பை சிதைக்கவும் முடியாது.
      தல எங்கோ எவரஸ்ட்டில் இருக்கு ... ///

      மேலே சொன்ன உங்களது வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை . அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள் . பாட்டுக்கு பாரதி , பேச்சுக்கு அண்ணா , நடிப்புக்கு சிவாஜி என்று தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம் . அது போல 'இசைக்கு.....?' என்று கேள்வி வைத்தால் பெருபான்மையோர் இளையராஜா என்றுதான் சொல்வார்கள் .

      Delete
  18. சார்ல்ஸ்


    அப்பாடா தலை காட்டிவிட்டார் விமர்சகர்! " செத்தா போய் விட்டார் " என்று சொன்னது அவரை பாதித்து விட்டதாம் !அவர் ராஜா மற்றவர்களை ஒன்றுக்குமே விடாமல் சர்வாதிகாரம் செய்தார் என்று எழுதியதன் எதிரொலி தான். காரிகன் எப்படி எல்லாம் அநாகரீகமாக ராஜாவை கேலிபண்ணியிருப்பார் என்பதை பலரும் பார்த்திருப்போம்.

    அதற்காக இப்படி ஒரு நாடகம் நாம் நடிப்போமா

    இப்போது புதுக்கதை எழுதத் தொடங்கி விட்டார் காரிகன்.அதற்கு வசனம் எழுதுகிறார் அமுதவன்.

    எம் எஸ் வீ க்கு சேர வேண்டிய புகழை எல்லாம் ராஜாவும் ,ரசிகர்களும் தடுத்து விட்டார்கள் போன்று படம் காட்டுகிறார்கள்.

    இவர்களுக்கு எதுவுமே புரியவில்லை என்பது தான் உண்மை !

    மெல்லத் திறந்தது கதவு படம் எடுத்ததே எம் எஸ் வீ அவர்களுக்காக.! ஏ.வீ .எம் எடுத்தார்கள்.எம் எஸ் வீ க்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வதற்கு! அதற்க்கு ராஜா ஒத்துழைத்தார்.அந்தப் படத்தில் ராஜாவின் குருவும் எம் எஸ் வீ யின் நீண்ட கால நண்பருமான ஜி.கே.வெங்கடேஷும் நடித்துள்ளார்.

    "வா வெண்ணிலா " பாடல் காட்சியில் இடது பக்கம் நின்று இசை நடாத்துனராக தோன்றுவார். பாடல் கம்போசிங் போது, ராஜா " சண்டி ராணி படத்தில் வரும் " வான் மீத்திலே " பாடல் எனக்கு பிடிக்கும் ,அது போல ஒரு பாடல்வேண்டும் " என்று கேட்க எம் எஸ் வீ அதையே மாற்றி கொடுத்ததாக பல முறை சொல்லியிருக்கின்றார்.

    எம் எஸ் வீ யின் ரசிகரான ராஜா அவரின் மெட்டுக்கு பின்னணி இசை வழங்கினார்.அந்த பின்னணியின் இசையின் சிறப்பாலேயே அந்த பாடல்கள் எல்லாம் ராஜா பாடல்களாக மக்களை நினைக்க வைத்து விட்டது.அவ்வளவு சிறப்பான தனித்துவம் ராஜாவினுடையது என்பது தான் இங்கே முக்கியமாக சொல்ல வேண்டியது.ஒரு மேடையில் எம் எஸ் வீ வா வெண்ணிலா பாடலின் இடையிசையை திருப்பித் திருப்பி
    வாசிக்கச் சொல்லி என்னே அருமையாய் தம்பி போட்டிருக்கிறார் என்று
    பாராட்டினார்.

    இது தான் காரிகனுக்கும் ,அமுதவனுக்கும் குடைகிறது. எல்லா புகழும் ராஜா வில்லங்கமாக தட்டி சென்று விட்டார் என்பது போல பதறுகிறார்கள்.


    உண்மையில் எம் எஸ் வீ மீது அக்கறை இருப்பின் ராமமூர்த்தியுடன் என்னென்ன பாடலுக்கு டியூன் போட்டார் என்பதைத் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

    இன்னுமொரு முக்கிய சங்கதி கரிகனும் அமுதவனும் அறியவில்லை போலும்!

    ஆனானப்பட்ட மெல்லிசை மன்னரே " நானும் ராஜா ரசிகன் " என்று சொன்னது தான் அது!

    மெல்லிசைமன்னரையும் " ராஜாசிகாமணி " ஆக்கி விடுவார்கள்! பாவம் மெல்லிசை மன்னர்..!!

    விமல்

    ReplyDelete
    Replies
    1. விமல்

      சரியான போடு போட்டீங்க போங்க! ' மெல்லிசை மன்னரே ராஜா ரசிகமணிதான் ' என்று சூப்பராக சொன்னீர்கள். அதுதான் உண்மையும் கூட ! இளையராஜா மெல்லிசை மன்னரின் ரசிகர். எம்.எஸ் வி யோ இளையராஜாவிற்கு ரசிகர் . இந்த உண்மையை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் ?

      எம்.எஸ்.வி யின் பொருளாதார வளர்ச்சிக்காக இளையராஜா என்றொரு பேனர் தேவைப்பட்டிருக்கிறது . எம்.எஸ்.வி அவர்களுக்கு பிழைக்கத் தெரியவில்லை. தன் இசையின் மகத்துவத்தை பொருளாக மாற்றத் தெரியவில்லை. இளையராஜாவிற்கு தெரிந்திருந்தது. ரகுமானின் இப்போதைய வணிக ரீதியான பொருள் ஈட்டுக்கு இளையராஜா முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை .

      Delete
  19. சார்ல்ஸ் ,

    மெல்லிசைமன்னரை சிலர் தூக்கி நிறுத்தி வருவது ஒன்றும் அவர் மீதுள்ள அபிமானத்தால் அல்ல.நாம் அவரையும் போற்றுவோம் ராஜாவையும் போற்றுவோம்.

    அவர்களது விவாத அகராதியில் திரித்தலும் , இடையில் புகுந்து கலைஞர்களை அவமதிப்பதும் , தனி மனித நற்சான்றிதழ் வழங்குவதும் தான் சம்பிரதாயமாக உள்ளது.உண்மை எங்கோ ஒளித்திருக்கும்.

    // காரிகன் உங்கள் மேல் ரொம்பவும் காண்டு ஆகித் திரிகிறார் . // என்ற உங்கள் வார்த்தை உண்மை போல் தான் தெரிகிறது.இருக்கட்டுமே!

    /// *** அவருடைய கீழ்த்தரமான கருத்துக்களுக்கு **** // நீங்களும் ஆதரவு என்கிறார்!

    அப்படி என்ன கீழ்த் தரமாக எழுதிவிட்டேன் ,,,?இவர்கள் எழுதியதில் 5% கூட நான் எழுதவில்லை .

    நான் அவர்களின் அறியாமை மீது கல் வீசுவதால் என்னை " மட்டமான" என்கிறார் காரிகன்.
    ஏனென்றால் உண்மையான பதில் அவர்களிடமில்லை!!
    அமுதவனும் காரிகனும் விவாதத்தில் தோற்று ஓடிப் போனார்கள்.இது தான் உண்மை !என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பழையவர்களை அவமதித்து [!] விட்டேன் என்கிற துருப்புச் சீட்டை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்.

    காரிகனுடன் நான் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை ,அவரது கருத்துக்களுடனேயே மோதுகிறேன்,அவ்வளவே!

    *****எம்.எஸ்.வி யின் பொருளாதார வளர்ச்சிக்காக இளையராஜா என்றொரு பேனர் தேவைப்பட்டிருக்கிறது . எம்.எஸ்.வி அவர்களுக்கு பிழைக்கத் தெரியவில்லை. தன் இசையின் மகத்துவத்தை பொருளாக மாற்றத் தெரியவில்லை. இளையராஜாவிற்கு தெரிந்திருந்தது ****

    1000 % true.

    vimal

    ReplyDelete
  20. ராஜாவின் புகழை பரப்பும் சார்ல்ஸ் அவர்களே ,
    இளையராஜாவை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது.

    ReplyDelete
  21. வாங்க அனுஷ்

    சரியாகச் சொன்னீர்கள் . அசைப்பது என்ன அவர் திறமையை யாரும் நெருங்கவே முடியாது.

    ReplyDelete
  22. சார்ல்ஸ்

    என்ன புழு , பூச்சிகளை வெளியே காணவில்லை ? குளம் , குட்டைகளில் ஒடுங்கி இருந்தால அவர்களுக்குத் தான் நல்லது.ராஜாவை விவாதிக்கிறோம் என்ற பெயரில் வெளியே வந்தால் மரமண்டையில் போட ராஜா ரசிகர்கள் தயாராக இருக்கிறோம்.

    எந்த சபையிலும் வர நாம் தயாராக உள்ளோம்.நெஞ்சில் துணிவும் நேர்மை திறனும் இருந்தால் வரட்டும்.ஒரு கை பார்ப்போமில்ல !


    ReplyDelete
  23. சார்லஸ்

    இசை ராட்சசன் அடுத்த பகுதி இன்னும் வெளிவராமல் இருக்கிறதே . காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. சார்லஸ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .புத்தாண்டில் புதுப்பொலிவுடன் தங்கள் பதிவு வெளிவர வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. படிக்க படிக்க மெய் மறந்து போய் விட்டேன் சார்ல்ஸ். 'உறவுகள் தொடர்கதை' பாடலை நாள் முழுவதும் பாடினாலும் இன்றும் அலுக்காது. தமிழ் இசை உலகுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இளையராஜா.

    ReplyDelete
  27. வாங்க குரு

    உங்களுக்குப் புரிகிறது. சிலருக்கு அது புரிவதில்லை . இளையராஜா இசை எப்படிப்பட்ட பொக்கிஷம் என்பதை நம்மைப் போன்றோர் எடுத்துச் சொன்னால்தான் நாலுபேருக்கு புரியும் .

    ReplyDelete
  28. சார்ல்ஸ்

    எங்கே தங்கள் அடுத்த பதிவு காத்திருக்கிறோம்.

    கவுண்டர் பாயிண்ட் இசையை எம் எஸ்வீ செய்தார் என்று மதிமாறன்அரைகுறையாக எழுதப் போய் ,காத்திருந்த காகம் கவ்விக் கொண்டு விட்டது போல வார்த்தை விருப்ப நாயகர் பூசி மெழுகியிருக்கிறார் அவருக்கு நான் எழுதிய கமண்ட் வெளியிட அவருக்குத் துணிவில்லை.

    கவுண்டர்பாயிண்ட் எம் எஸ் வீ பயன்படுத்தினாரா ..?அந்த முறை அவருக்கு முன்பே அதே வகை நுட்பம் பாவிக்கப்பட்டு விட்டது.

    ராஜா செய்தது கதா பாத்திரங்களின் உணர்வை வெளிக்கொண்டுவர பயன்படுத்தியதே!அந்த கவிதையிலேயேயும் அது வெளிப்படும்.அதுதான் புதுமை.

    ராகங்கள் பற்றியும் அமுதவன் ஏதோ புலம்புகிறார்.அவருக்கும் பதில் சொல்லியுள்ளேன்,

    உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் அமுதவன் சார்.ராகங்களில் ராஜாவின் ராகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் இனிஒரு தளத்தை பாருங்கள்.

    ரீதிகௌளை ராகத்தை ராஜாவுக்கு முன் திரையில் பாவித்த இசைஞரைக் காட்டுங்கள்.உங்கள் நண்பரிடம் கேட்டு சொல்லுகள். பிறகு மீதத்தைப் பார்ப்போம்.
    சாரங் தரங்கிணி ,,,,,பாவனி யாரவது தொட்டிருப்பார்களா ..? என்று கேட்டிருக்கிறேன்.

    என் பின்னூடத்தை காணவேயில்லை.

    நாம் கேள்வி கேட்டால் ,,,,,?? ஓடி ஓளிக்கும் பேடிகள் ! வேறென்ன செய்வார்கள் ?

    அவருக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் பெரியவர் ராகம் பற்றி ஏதோ உளறத் தொடங்கியிருக்கிறார்.இப்போதாவது ராகம் என்றேதோ ஒன்று இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டார் பெரியவர்.

    விமல்

    ReplyDelete
  29. விமல் சார்

    அவர்கள் உங்களின் கேள்விகளை எதிர் கொள்ள தயங்குகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை . நான் ஒன்று கேட்டால் அவர்கள் ஒன்று சொல்வார்கள் . கவுண்டர் பாயிண்ட் முறை இளையராஜாதான் முதன் முதலில் தமிழ்த்திரை இசையில் பயன்படுத்தினார் என்பதை இசை படித்தவர்களிடமும் கேட்ட பிறகே அவர்களுக்கு நான் பின்னூட்டமிட்டேன் . ஆனாலும் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்கிறார் காரிகன். கீழே உள்ள பதிவு ஒன்றில் ஒரு இசை ரசிகர் என் கண்மணி பாடலுக்கு அழகானதொரு விளக்கமும் பாராட்டும் கொடுத்துள்ளார் . அங்கும் போய் ஒரு பொய் பிரச்சாரம் செய்திருக்கிறார் .

    http://paradesiatnewyork.blogspot.com/search?updated-min=2014-01-01T00:00:00-08:00&updated-max=2015-01-01T00:00:00-08:00&max-results=50


    இளையராஜாவிற்கு முன்னால் இதை யாராவது முயற்சித்திருக்கிறார்கள் என்று பத்திரிக்கையிலோ இணையத்திலோ எங்கும் நாம் வாசித்திருக்கவில்லை . ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என்று கேட்டால் பதில் வராது.

    என் அடுத்த பதிவு தயார் நிலையில் உள்ளது . எதிர்பார்க்கலாம் .

    காரிகனின் தளத்தில் உங்களின் பின்னூட்டங்களை புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது. விமர்சனக் கண்ணோட்டம் இல்லை என்று எடுத்துக் கொள்வோம்.



    ReplyDelete
  30. // அவர்கள் உங்களின் கேள்விகளை எதிர் கொள்ள தயங்குகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை .///

    உண்மைதான் சார்ல்ஸ்.பொய்களை எத்தனை நாள் விற்பது?
    ஓடி ஒளித்த அமுதவன் இப்போ ராகம் பற்றி எங்கோ கேட்டு வந்து புதிய காவடியைத் தூக்க பார்க்கிறார்.

    திரும்பவும் முக்களிக்கப் போகிறார் பாவம்.அவர் முன்னைப்போல வதந்திகளையே நம்பாமல் இப்போ யாரிடமோ ராகம் பற்றி கேட்டு வருகிறார்.நல்ல விஷயம்.

    அதுவும் ராஜா ரசிகர்கள் கொடுத்த சூடுக்கு பிறகு தான்.என்னுடைய பெயரை கண்டதும் நடுக்கம் போல...!!

    எனது கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாதவர்கள் , பின்பு யாரையோ தூது விடுவார்கள்! அவர்களும் மனிதர்கள் தானே விட்டு விடுங்கள் என்று !

    தங்களைப் போல எழுதும் ஆற்றல் எனக்கு இல்லாவிடினும் தகவல்களை அறிந்து கொள்ள இணையங்களில் மேய்வதுண்டு.

    மீண்டும் சந்திப்போம். Thank you.

    ReplyDelete
  31. one interesting point. a.r rehman never acknowledged anywhere so far that he had worked under ilayaraja at the initial stages. music lovers admire rahmansmodesty.but i firmly believe that he deliberately never mentioned his initial stages where he had worked under ilayaraja.....but ilayaraja inadvertently had spoken about rahmans working under him...on many occasions...

    ReplyDelete
  32. முற்றிலும் உண்மை நட்சந்தர்

    ரகுமானின் "அடக்கம் " பற்றி வானளாவப் புகழ்பவர்கள் இது பற்றி எங்குமே பேசியதில்லை.அது தான் ரகுமானின் கள்ள மௌனம்.

    இளையராஜா தவிர்ந்த அத்தனை பேரையும் ஆரம்ப காலத்தில் குமுதம் பேட்டியில் கூறினார்.

    ராஜாவை பற்றி டிஎல். மகாராஜன் செவ்வாய் கிழமை நடந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் "கவிதை கேளுங்கள் " பாடல் பற்றி கூறிய போது "இது போல ஒரு ஒரு பாடல் அமைக்க இனி ஒருவன் பிறந்து வரவேண்டும் " என்று கூறினார்.

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்