Thursday, 19 March 2015

இசை ராட்சஷன் - 8






                                                     இசை ராட்சஷன் -  8
                                                 
                                                   (  The  Musical Legend  )

                     
                                      தமிழ்த் திரையிசைக்குள்  இளையராஜா பிரவேசித்தபோது   நாட்டுப்புற இசை மட்டுமே  கொடுத்து வந்ததாக பலர் நினைத்தனர் .   ஆனால்  தனது முதல் திரைப்படத்திலிருந்தே கர்னாடக இசை , மேலை நாட்டு செவ்வியல் இசை , நாட்டுப்புற  இசை மூன்றையும் கலந்துதான்  கொடுத்து வந்திருக்கிறார் . ' கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக ' என்ற தெய்வப் புலவரின் வாக்கினுக்கேற்ப தான் பயின்ற கர்னாடக இசை , மேலை நாட்டு இசையை அதன் வர்ணம் மாறாதபடி கலந்து கலப்பிசையாக கொடுத்த பாடல்கள் ஏராளம் . மேலோட்டமாக பார்த்தால் இளையராஜாவின் பாடல்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும் .  கூர்ந்து நோக்கும்போது கற்றுத் தேர்ந்த வித்தைகளைக்  கலவையாக்கி  சுவை குழைத்து இனிமை கூட்டி புதுமை சேர்த்துக் கொடுத்திருப்பார்.  மண் வாசமும் மக்கள் நேசமும் கொண்ட பல பாடல்கள் அவர் படைப்பாற்றலின் சிகரங்கள் ; நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணிகள் ; வார்த்தைகளில் வடிக்க இயலா பிரமிப்புகள்.

                                                     


                                  1968 இல் பிழைப்பிற்காக  பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு சென்னையை அடைந்து , மாஸ்டர் தனராஜிடம் மேலைநாட்டு செவ்வியல் இசை பயின்று , டி .வி . கோபாலகிருஷ்ணனிடம்  கர்னாடக இசை கற்று டிரினிட்டி இசைக் கல்லூரி நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று,  கிடார் கருவி பயின்றதில் தங்கப்பதக்கம் பெற்று ,  ஜி . கே. வெங்கடேஷ்  என்ற இசையமைப்பாளரிடம் துணை  இசையமைப்பாளராய் பணியாற்றி அதன் பிறகே  ' அன்னக்கிளி '  படத்திற்கு இசையமைப்பாளராய் பஞ்சு அருணாசலம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார்.  முதல் படமே மிகப் பெரிய வெற்றி . அந்த வெற்றியை அடைய அவர் பல மேடு பள்ளங்களை தாண்டி வரவேண்டியிருந்தது.  ஒரே படத்திலேயே தனது மொத்த ஆற்றலையும் அவர் வடித்துவிடவில்லை.  அவரது இசை வற்றாத ஊற்று , நிற்காத நதி ,  இறைக்காத கேணி , சறுக்காத ஏணி ,  மாறாத அமுதசுரபி ,  தீராத அட்சய பாத்திரம் . இளையராஜாவின் இசை நம் மக்களின் கலாச்சாரத்தோடு கலந்து நிற்கின்ற பண்பாட்டு அடையாளம் . அதனால்தான் ஆயிரம் படங்களையும் தாண்டி போய்க் கொண்டேயிருக்கிறார்.

                     
                            இத்தனை சிறப்புகளை பெற்ற மனிதராக விஸ்வரூபம் எடுத்து இசை ராஜ்ஜியத்தில்  பல இசை விநோதங்களை  படைக்கப் போகிறார் என்பது தெரியாமலே நான் அவர் இசை கேட்டு ரசித்து வளர்ந்து வந்திருக்கிறேன்.

                       1978 இல் எனக்கு கிடைக்கக் கூடிய ' பாக்கெட் மணி ' சேமிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது . எனது அண்ணனிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனது மூத்த அண்ணன் என்னையும் இளைய அண்ணனையும் அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க கிளம்பினார். சினிமா முடிந்து மாலை வேளையில் ஹோட்டல் , பிறகு நடையோரக் கடைகளில் ஷாப்பிங் என்று அது ஆனந்தமான நேரம்.  ஒரு முறை நானும் எனது சேமிப்பை எடுத்துக் கொண்டு அண்ணன்களை  அது போலவே அழைத்துக்கொண்டு சென்றேன் . அண்ணன் காட்டிய வழியில் சினிமா, ஹோட்டல் , பிளாட்பார ஷாப்பிங் இத்யாதி என்று அதைப்  போலவே செய்தேன் . அண்ணன் என்ன வாங்கினாரோ அதைப் போலவே சின்னச்  சின்ன பொருட்கள் வாங்கினேன் . அவர் என்ன செய்தாரோ அதையே நானும் செய்தேன் . என் பிள்ளைகளும் இப்போது அப்படித்தான் இருக்கிறார்கள். மூத்தவள் என்ன செய்தாலும் இளையவள் பின்பற்றுவாள். அவளுக்குப் பிடித்தால் இவளுக்கும் பிடிக்கும் . இது என்ன பரம்பரை குணமா !?  பிள்ளைகளின் செய்கைகள் எனக்கு பின்னோக்கிப் போக தூண்டுகிறது .

                         
                                    அப்படி நான்  அண்ணன்களை  அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள  குளிரூட்டப்பட்ட ஒரு திரையரங்கிற்குச் சென்றேன் . ஒரு சில ஏ.சி தியேட்டர்களே அப்போது இருந்தன .  அந்தக் காலகட்டத்தில் ஏ .சி  அரங்கத்தில் படம் பார்ப்பதை பெரிய கௌரவமாக நினைப்போம் .  நான் ஏ.சி தியேட்டரில் படம் பார்த்தேன் என்பதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொள்வேன் . அதை ஆச்சரியமாக கேட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்.   ஏ.சி தியேட்டரில் அந்தப் படம் பார்த்து மிரண்டு போனேன் . படமும் இசையும் என்னை வெகுவாக மிரட்டியது.  அந்தப் படம்,  '  சிகப்பு ரோஜாக்கள் ' .


                         பாரதிராஜாவின் மூன்றாவது படம். ' கிராமத்துப் பின்னணியை விட்டால் பாரதிராஜாவிற்கு ஒன்றும் தெரியாது ' என விமர்சனம் வந்தவுடன் , 'எனக்கு நகரச் சூழல் வைத்தும் படம் எடுக்கத் தெரியும் ' என சவாலாகவே எடுக்கப்பட்ட திரைப்படம் . அதை முதல் படமாக பாரதிராஜா எடுக்க நினைத்தார். ராஜ்கண்ணு அவர்கள் வேறு கதை எதிர்பார்த்ததால் பதினாறு  வயதினிலே நமக்கு கிடைத்தது .  இல்லாவிட்டால் காலத்தின் கோலம்  மாறியிருக்கும் .  சிகப்பு ரோஜாக்கள் ஏறக் குறைய ஆங்கில சினிமாவிற்கு நிகராக எடுக்கப்பட்ட திரைப்படம் . வெற்றிப்படம். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பங்கு 50 சதவீதம் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது . அப்பப்பா ! என்ன ஒரு இசை ஆக்ரமிப்பு !

                     
                            அந்த  நேரத்தில் உள்ளடக்கமான குளிரூட்டப்பட்ட அரங்கில் படம் பார்த்து மிரண்ட அனுபவம் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கிறது. இளையராஜாவின் பின்னணி இசையை நீக்கிவிட்டு படம் பார்த்தால் எந்த மிரட்டுலும் தெரியாது.  படத்திற்கு உயிரே இளையராஜாவின் இசைதான்!  இந்தப் படத்திலிருந்துதான் ராஜாவின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரு குறிப்பிட்ட  இசைத்துணுக்கை  பின்னணியாக படம் முழுவதும் ஆங்காங்கே வருமாறு இசைத்திருப்பார். கமலஹாசன் சாதாரணப் பார்வை கொண்டு பார்க்கையில் மென்மையாகவும் விஷமப் புன்னகையுடன்
பார்க்கையில் வித்தியாசமான மிரட்டல் இசையும் கொடுத்திருப்பார். ஒரு திகில் படம் பார்க்கும் அனுபவம் இசையினால் ஏற்பட்டது.  படத்தின் பிற்பாதியில் மிரட்டும் இசையின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்லும் .
                                                 

                              கிளைமாக்ஸ் காட்சிகளில் படபடப்பும் பரபரப்பும் என்னைத் தொற்றிக் கொண்டது. தோட்டத்தின் மண்ணுக்குள்ளிருந்து கை ஒன்று நீள்வதைப் பார்க்கும் நாயகி அலறிக்கொண்டே ஓடுவதும்  ரத்த வெறி கொண்ட பூனை துரத்துவதும்  நாயகனும் அவளை கொலை செய்ய விரட்டுவதுமான பரபரப்பான காட்சிகளில் பூனையின் அலறல் சப்தம் கலந்து நூறு  வயலின்கள்  வாசிக்கப்படும்  பின்னணி இசை கொடுத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருப்பார் இளையராஜா. மனதை விட்டு நீங்காத அனுபவம் . திகில் படங்கள் பார்த்தால் கால்களைத் தூக்கி மேலே வைத்துக் கொள்வேன் . காலை ஏதோ ஒன்று பிடித்து இழுத்து விடுமென்று நான்தான் அப்படி பயப்படுகிறேன் என்று பார்த்தால் பக்கத்தில் அண்ணன்களும் காலை தூக்கி வைத்தபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

                                அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்  மட்டுமே !  ' இந்த மின்மினிக்கிக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது ...'  என்றொரு அழகான உற்சாகமான டூயட் பாடல். வாசுதேவனும் ஜானகியும் சேர்ந்து பாடி கலக்கியிருப்பார்கள். இனிமையான மெலடி . கேட்பவருக்கு உற்சாகம் உடனே தொற்றிக் கொள்ளும்  .இசையமைப்பு. வயலினால் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். கண்ணதாசனின் வார்த்தைச் சிக்கல் இல்லா வரிகள் . சங்கராபரணம் என்ற ராகத்தை அடிப்படியாகக் கொண்டு ஏக தாளத்தில்  வடிவமைக்கப்பட்டப் பாடல் . பாட்டின் இசைக்கேற்றவாறு காட்சியமைப்பிலும் பாரதிராஜா பின்னி எடுத்திருப்பார். இளமை கொலுவிருக்கும் கமலஹாசன், ஸ்ரீதேவி இருவரின் காதல் ஆட்டமும் ஓட்டமும் பேசுவதும் சிரிப்பதும் சுற்றுவதும் அழகிய காட்சியாக விரிக்கப்பட்டிருக்கும். பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்தால் மக்களையெல்லாம் இன்பக்கடலில் மூழ்க வைத்து எழ வைப்பதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் . அப்போது இருவரும் இணைந்தால் வெற்றி ஒன்றைத் தவிர வேறில்லை .


                               '  தோட்டத்திலே பல பூக்கள் உண்டு ..நீதானே சிகப்பு ரோஜா ..' என்ற ஆண் குரலுக்கு , ' இன்றும் என்றும் என்னை உன்னுடனே ...நான் தந்தேன் என் ஆசை ராஜா ...' என்று பெண் குரல் பதில் பாட ,  ' மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன் ... ன ...ன...ன ...ன ..ன  இனி தடை என்ன  அருகினில் இருக்கிறேன் ..'  என்று கேள்வி பதிலாக மாற்றி மாற்றி இருவரும் பாட கடைசியில் , ' னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன ..னான ..னான..னா ' என்ற ஹம்மிங்கோடு சரணம் முடியும் . ஹம்மிங் வரும் இடத்தில் வார்த்தைகள் போட்டு நிரப்பி இருக்கலாம் . ஆனால் ஹம்மிங் வைத்து முடிப்பது புதுமையாக இருந்தது. சரணம் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் , விதி எல்லாம் வேறுபடுத்தி இசையமைப்பது  இளையராஜாவின் புது முயற்சி. இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் நம்மை வேறுலகம் கூட்டிச் செல்லும் பாட்டின் முடிவில் ஜானகி கலகலவென சிரித்து முடிப்பது நமக்கும் புன்னகை பூக்க வைக்கும் .

                                           

                                பாடகர்கள் பாடுவதோடு  பாட்டில் நடிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் . இல்லாவிடில் பாடலுக்குத் தேவையான உணர்ச்சிகள்  காணாமல் போய்விடும் . டி.எம்.எஸ் , பாலு ,  ஜானகி ,  சுசீலா ,  எல்.ஆர்.ஈஸ்வரி  போன்ற பாடகர்கள் பாடும் பாட்டினில் அத்துணை உணர்ச்சிகளையும்  வெளிப்படுத்துவதில் முக்கியமானவர்கள்.  ' அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..' என்ற பாடலுக்கு டி.எம்.எஸ் அவர்கள் ஒலிப்பதிவுக் கூடத்திற்குள்ளேயே ஓடி ஓடி மூச்சு வாங்கி தத்ரூபமாக பாடினார்  என்பது ஒரு உதாரணம் .  போலவே ஜானகி அவர்கள் பாடலில் நடிப்பது மட்டுமல்லாது ஐந்து வயது குழந்தை போலவும் என்பது வயது பாட்டி போலவும்   குரல் மாற்றிப் பாடுவதில் வல்லவர்.  பாடிக்கொண்டே நடிப்பது நடித்துக் கொண்டே பாடுவது இரண்டுமே கடினமானது. குரல் மாற்றிப் பாடுவது அதை விட கடினமானது. ஆனால்  பாட்டில் சிரிப்பதும்  அழுவதும் ஜானகி அவர்களுக்கு  சுலபமாக வரும்.


                              ' நினைவோ ஒரு பறவை ' இன்னொரு சுகமான கீதம் .   வாலியின் வைர வரிகளில் கமலஹாசன் மற்றும் ஜானகி சேர்ந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள். திசுர  நடையில்  மென்மையாய் ஆரம்பித்து சுகமாய் பயணம் செய்யும் பாடல். காட்சியமைப்பையும்  பாரதிராஜா அழகிய கவிதை போலவே வடித்திருப்பார்.  பாடியவர்களா அல்லது இசைக்கருவிகளா எது நமை தாலாட்டுகிறது என்பதைச் சொல்ல முடியாத அளவிற்கு இசையின் வலிமை இருக்கும் .  '  ஹும் ...ஹும் ...' என்று ஜானகி கிடார் கார்டுகளுடன் காதல் வழிந்தோடும்  ஹம்மிங் கொடுத்து , ' நினைவோ ஒரு பறவை  ' என்று  ஆரம்பிக்க , கமலஹாசன்  '  பா ...ப..ப .பாப ...பா.. ' என்று   உச்சஸ்தாயில் ஹம்மிங்  கொடுத்துக் கொண்டே வர , ஜானகி பல்லவி பாடி முடிக்க , ஹம்மிங் முடித்து கமல்  பல்லவியை மீண்டும் பாட ஆரம்பமே அமர்க்களமான இசையோடு அமையும் .


                               இந்தப் பாடலுக்கு இடையிசை அற்புதமானது . ஒரு டிரம்பெட்  கருவி ஒலிக்கப்படும்போது  கோவில் மணியோசை இருமுறை சேருவது  வார்த்தைகளில் வடிக்க இயலா கலவை. அருமையான கற்பனை . இசைக்கருவிகளின் நாதம் ஒன்றின் மேல் ஒன்று மேவி வரும்  லாவகம் இளையராஜாவின் சிறப்பு . இசைக்கருவிகளின்   INTERPRETATION  , SUPERIMPOSITION  என்பது அந்த வயதுக்கு எனக்கு புரிந்திராவிட்டாலும் இளையராஜாவின் இசை மாயத்தை கேட்டுணரும் ஞானம் இருந்தது. அப்போதே இசையில் அவர் காட்டிய வித்தை  இப்போது இன்னும் தெளிவாக தெரிகிறது .


 ஆண்          ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்

பெண்          அதுவல்லவோ பருகாத தேன் அதை  இன்னும் நீ பருகாததேன்

ஆண்         அதற்காகத்தான் அலைபாய்கிறேன்

பெண்         வந்தேன் தரவந்தேன்

                           



பெண்        பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ

ஆண்       அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்

பெண்       மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

ஆண்       நீ தான் இனி நான் தான்


                             ஆண்  குரலும் பெண் குரலும் கேள்வி பதிலாய்  பாடிக்கொண்டே வர இறுதியில் பெண் பாடி ஆண் ஹம்மிங் கொடுப்பதும் ஆண் பாடி பெண் ஹம்மிங் கொடுத்து முடிப்பதும் கேட்பதற்கு அலாதி ஆனந்தமாக இருக்கும் . பல்லவி எப்படி ஆரம்பித்ததோ அப்படியே இறுதியிலும் முடியும்.  கமலஹாசனுக்கு இது அவர் பெயர் சொல்லும் பாடல் . இந்தப் பாடல் ஆரம்பித்து  இறுதிவரை  ஏதோ படகொன்றில் மெதுவாக ஆடி காற்றில் நகரும் அனுபவமாய் வயலின் இழைத்து இசைத்துப் பாடலை நகர்த்தும் விதத்தில் இளையராஜா உயர்ந்து நிற்பார். அபார கற்பனைத் திறன்!


                             அதே வருடத்தில்  ' ப்ரியா ' என்றொரு திரைப்படம் வெளிவந்தது. இளையராஜாவின் இசையும் பாடல்களும் முதன்முறையாக ஸ்டீரியோபோனிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. அதுவரை  'மோனோ ரெக்கார்டிங்' என்ற சாதாரண பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் எல்லாம் மயக்கும் பாடல்களாக கொடுத்து வந்த இளையராஜா  புதிய தொழில்நுட்பத்திலும்  மனதுருக்கும் பாடல்களைக் கொடுத்தார்.

                                           

                                இசைப் பதிவில் புது உலகம் பிறந்தது. பாடல்களில் பதிவு செய்யப்பட்ட   இசைக் கருவிகளின்  ஒலி அழகாக பிரித்துக் கொடுக்கப்பட்டது.
பாடல்களின் ஓசை நயம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டது. சின்னச் சின்ன இசைக் கருவிகளின் சப்தம் கூட அழகாக கேட்கும் வண்ணம் கொடுக்கப்பட்டது.  இப்போது அதை விட பெரிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் அந்தக் காலத்தில்  முதன்முதலாக ஸ்டீரியோ  ரெகார்டிங்  கேட்டபோது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் நினைவிருக்கிறது. பாடங்கள் படித்தது தேர்வு எழுதியது எல்லாம் நினைவில் இல்லை.


                                      ' ப்ரியா ' திரைப்படம் பார்த்தது நன்றாக நினைவில் உள்ளது.
ஒரு மதிய நேரத்தில், சுட்டெரிக்கும் வெயிலில், வியர்வைக் கசகசப்பில் கூட்டத்தில் முட்டி மோதி, டிக்கெட் கொடுக்கப்படும் கவுண்டர் அருகே கஷ்டப்பட்டு சென்று வாங்கி, நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, சட்டையெல்லாம் கசங்கிப் போய் கிழிந்து போய், தியேட்டருக்குள்ளே நுழைந்து ரசிகர்களின் விசில் சத்தத்தோடு படத்தைப் பார்த்தேன்.    அப்படி படம் பார்க்கும் சுகமே அலாதி சுகம் . எதையோ சாதித்த உணர்வு . சுகமான நினைவு.


                                       படத்தில் முதல் பாடல் ' டார்லிங் டார்லிங் டார்லிங்  ' . வெள்ளைக்குயில் என்று எஸ்.பி.பி அவர்கள் அன்புடன் அழைக்கும் சுசீலாவின் இனிய குரலில் ஆரம்பிக்கும். முதல் பாட்டுக்கே  விசில் சத்தம் பறந்தது.  ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஸ்ரீதேவிக்கும் கிடைத்தது . கதாநாயகிகளை  திரையில் முதலில் காட்டும்போது கைதட்டல் கேட்பதை மதுரையில்தான் பார்த்திருக்கிறேன் . பாடலின் பல்லவி ஆரம்பிக்கும் முன் ட்ரம்பெட் ஒலியுடன் அட்டகாசமாக வயலின்,  ட்ரிப்பில் பாங்கோஸ் சேர்ந்து முதல் BGM ஆரம்பிக்கும் .  BoneyM  குழுவினரின் ஆல்பத்தில் வந்த பாடலின் முதல் வரியை அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு  இந்தப் பாடலை வடிவமைத்தார் இளையராஜா . ஏக தாளத்தில் அமைத்த சுவாரசியமான பாடல் . படத்தில் எல்லா பாடல்களையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்கிறார் .  தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் . அவருக்கு தன் நன்றிப் பூக்களை காணிக்கையாக அழகிய இசை மாலையாக பின்னிக் கொடுத்திருப்பார் இளையராஜா.  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

                                           

.                                    
                                       வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படத்திற்குத் தனித்த சிறப்பான இசையை இதற்கு முன்னர்  எம்.எஸ்.வி அவர்களிடம் கண்டிருக்கிறேன் .  இளையராஜாவும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார்.    வெளிநாடுகளை சினிமாவில் காட்டும்போதே பின்னணி இசைக்கென்று புதிய பரிமாணம் கிடைத்துவிடும் . இதுவரை கேட்டிராத இசைக்கருவிகளின் நாதம் ஒலிக்கும். வெளிநாட்டு இசை இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை இசையமைப்பாளர்கள் உருவாக்கினார்கள்.  ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாரம்பரிய இசை ஒன்று உண்டு. அதைத்தான் வாசித்தளித்தார்களா  இல்லை கற்பனையா என்ற  ஆராய்ச்சி செய்ததில்லை . கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் . பிரியா படத்தின் பின்னணி இசையும் அப்படித்தான் இருந்தது. இப்போதுள்ள படங்களில் வெளிநாடுகளை காட்டும்போது பிரத்தியேக இசையெல்லாம் கொடுப்பதில்லை.


                                          ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று '  என்ற பாடல் வித்தியாசமான தாள நடையில் ஜேசுதாஸ் ஜானகி அவர்களின் குரல்களில் காப்பி ராகத்தில் திசுர நடையில் ஒலிக்கும் என்றும் அழியா இனிய கானம் . காலத்தால் அழிக்க முடியா காதல் கீதம். கிடார் கார்ட்ஸ் ஆரம்பித்து ஜானகி ஹம்மிங் கொடுக்க ஜேசுதாஸ் ஹம்மிங் தொடர ஆரம்பமே அமர்க்களமாக இரு தேவதைகளின் தேவ கானம் போலவே இருக்கும். பாடலின் இடையிசையில் ஷெனாய்  பயன்படுத்தப்படிருக்கும். ஷெனாய் ஒலிக்கப்படும்போது  தாள நடையும் மாறி வரும் .  பொதுவாக இந்த ஷெனாய் சோக கீதங்களுக்கே இசைக்கப்படும் இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டு  வந்தது. சந்தோசமான கீதங்களுக்கும் அதை இசைக்கச் செய்தவர் இளையராஜா .  இந்தப் பாடல் மட்டுமல்ல . அதன் பிறகு வந்த ஏராளமான சந்தோசப் பாடல்களில் ஷெனாய் பயன்படுத்தியிருப்பார் .

                                                     

                                           சிறு வயதில் பாடல் கேட்டபோது அதைப் பற்றி எதுவும் அறிந்ததில்லை. நாட்டில் முக்கியமான தலைவர்கள் மறைந்து போனால் வானொலியில் அன்றைய நாள்  முழுவதும் இசைக்கப்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு இசைக்கருவிதான் ஷெனாய் என்பது அப்போது தெரியாது . ஆனால் கேட்கும்போதே  மனசுக்குள் ஆழப் புதைந்த துக்கமெல்லாம் நினைவலைகளில் வந்து மோதும் உணர்வினைத் தரும். இந்தப் பாடலில் அதன் நாதம் கேட்டபோது  எங்கோ கேட்ட நினைவு எழும்பியது. புதுமையாகவும் தெரிந்தது. சோகத்திற்கு இசைப்பதை சுகத்திற்கும் இசைக்கின்ற இளையராஜாவின் கற்பனையை நான் வெகுவாக ரசித்திருக்கிறேன்.  வீணையின் நாதமும் இந்தப் பாடலில் அதிக சுகம் தரும் .


                                               ' அக்கரைச் சீமை அழகினிலே  '  என்ற பாடல் ஜேசுதாஸ் தனித்துப் பாடியது.  ஏக தாளத்தில் அமைந்த உற்சாகமான பாடல்.  இந்தப் பாடலும் வெளிநாட்டு இசையில் வந்த ஒரு பாடலை அகத்தூண்டலாக எடுத்துக் கொண்டு இளையராஜா தனது பாணியில் அழகாக கொடுத்திருப்பார்.
( "Akarai Cheemai" song was loosely inspired by "Kites by Simon Dupree and the Big Sound. )
சிங்கப்பூர் மக்களின் பண்பாடு கலாச்சாரம் போற்றும் பாடல் . வயலினின் ஆக்ரமிப்பை பாடல் முழுவதும் கேட்கலாம் . ஆரம்ப இசையே அமர்க்களமாக அமையும் . கிடாரில் ஆரம்பித்து வயலின் தொடர்ந்து புல்லாகுழல் இழைத்து மீண்டும் வயலின் இசைத்து நிறுத்த ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பது கேட்க அலாதி ஆனந்தம்.  மூன்று சரணம் , மூன்று வெவ்வேறு இடையிசை என்று பாடல் அற்புதமாக இருக்கும்.  இரண்டாம் இடையிசையில் வரும் குரலிசை மனதை கொள்ளை கொள்ளும் . பல்லவி, சரணம்   ஒலிக்கப்படும்போது  கூடவே இசைக்கப்படும் வயலின் நம்மை எங்கெங்கோ இட்டுச் செல்லும் .

                                               

                             ' என்னுயிர் நீதானே  ' என்ற பாடல் ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி குரல்களில் காப்பி ராகத்தில் உருவாக்கப்பட்ட பாடல். இந்தப் படத்திற்கு உருவான முதல் பாடல் இதுதான் என சொல்லப்படுகிறது.  ஆரம்பமே வேற்று மொழியில் இருக்கும்.   ' ஹத்தியக்கு ஷூக்காவா ..ஸ்லாலுவத்கு சின்தாவா ...'
என்று பாடல் ஆரம்பிக்கும். என்னுயிர் நீதானே... உன்னுயிர் நான்தானே  என்பதே அதன் அர்த்தம்  எனப் புரிந்தது. இந்தப் பாடலும் வித்தியாசமான பாடல் . சந்தோசமான காதல் கீதம். ஜென்சி அவர்களின் குரலும் வித்தியாசமானதே.  கேரளத்திலிருந்து வந்த ஒரு மலையாளக் குயில்.
 .இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களில் வலம் வந்தார்.  மூக்கிலிருந்து பாடுவதாக குற்றச்சாட்டு உண்டு . ஆனாலும்  அதுவும் அழகாகவே இருக்கும் .


                                     ' ஸ்ரீ ராமனின்  ஸ்ரீ தேவியே  ' என்ற பாடல் க்ளைமாக்ஸ்   காட்சியில் வரும் கடைசி பாடல் .  ஜேசுதாஸ் குரலில் அமர்க்களமான பாடல் .
முழுக்க முழுக்க வயலின் கொண்டு இழைக்கப்படும் பாடல். இளையராஜா ஒரு இசை விளையாட்டையே நடத்தியிருப்பார். பரபரப்பான காட்சி . கடத்தி அடைக்கப்பட்ட நாயகி எந்த கட்டடத்தில் இருக்கிறாள் என்பதை குறிப்பால் உணர்த்தச் சொல்லி நாயகன் பாடல் பாடுவதாக கொடுக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜாவின் இசை கற்பனைக்குத் தகுந்தாற்போல காட்சி அமைத்திட இயக்குனர் சிரமப்பட்டிருப்பார்.  பெரும்பான்மையான படங்களில் இளையராஜாவின்  இசையமைப்புக்குப் பொருத்தமான காட்சிகள் சரியாக எடுக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.  இந்தப் பாடலில் கோவில் மணியோசையோடு ஆரம்பித்து வயலினால் வேகம் கூட்டி கிடாரில் மென்மையாக்கி ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பதே அற்புதமாக அமைந்திருக்கும். இடையிசையில் மீண்டும் வேகம் கூட்டுவதும் ட்ரம்பட் கொண்டு குறைப்பதும் இறுதியில் ஏதோ நடக்கப் போவதைப் போல வயலின் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உச்சஸ்தாயில் முடிப்பதும் இசையிலேயே கதையை சொல்லிவிடும் இளையராஜாவின் இசை யுக்தி அபாரம்.

                                         

                                     பிரியா  படத்தில் ஐந்து பாடல்களும் ஐந்து விதம் . ஐந்தும் வித்தியாசமானவை . கேட்க கேட்கத் திகட்டாத தேனமுது. இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சௌத்ரி இளையராஜாவை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்தப் படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்த விதம் பற்றியும் சிகப்பு ரோஜாக்கள் பாடல்கள் அமைத்த விதம் பற்றியும் இளையராஜா சொல்வதை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம் .


             http://cinema.maalaimalar.com/2013/03/30233025/Priya-in-the-film-Music-Music.html


                                ஷெனாய் வாத்தியக்கருவியை இளையராஜா  பிரியா படத்தின் பாடலான ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று' என்ற பாடலில் பயன்படுத்திய விதத்தை வியந்து சொல்லியிருந்தேன் . பாடலின் விளக்கம் தடைப்படும் என்று   அங்கே நீட்டிக்காமல்  மீண்டும் அதைப் பற்றி  சொல்ல இங்கு ஒரு  'லிங் 'குடன்  வருகிறேன். தமிழ்நாட்டின் சிறந்த தமிழ்ப் பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களின் குமாரன் திரு . சுகா என்பவர் கீழ்க்கண்ட பதிவு ஒன்றைத் தந்திருக்கிறார்.
                                     

     

                  
         உலகின் மிகப் பிரபல ஷெனாய் வித்வான் மேன்மைமிகு உஸ்தாத்  பிஸ்மில்லா கான் அவர்களின் சீடர் பண்டிட் பாலேஷ்  என்பவர்  இளையராஜாவிடம்  ஷெனாய்  கலைஞராக பல ஆண்டுகள் பணி  புரிந்து வருகிறார்.   இளையராஜாவிற்கு முந்தைய அல்லது பிந்தைய எத்தனையோ இந்திய இசையமைப்பாளர்களிடம் அவர்  வேலை செய்திருந்தாலும் இளையராஜாவிடம் பணியாற்றியபோது  ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களையும் புதுமையான அணுகுமுறைகளையும் இளையராஜாவின் இசைத் திறமையையும் மற்ற இசையமைப்பாளரிடமிருந்து எந்த அளவு இசை அறிவிலும் நுணுக்கக்கங்களிலும் வேறுபட்டிருக்கிறார் என்பதையும்  நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதை சுகா அழகாக பதிவிட்டிருக்கிறார்.  தவறாமல் வாசியுங்கள் . 

                     http://venuvanam.com/?m=201104
                        
                           


...............................தொடர்வேன் ................................................




Monday, 16 February 2015

இசை ராட்சஷன் - 7


                                                   இசை ராட்சஷன் - 7

                                   ( The Musical Legend  ) 

                            
                               
                         கர்னாடக இசையின் ஆதி நாட்டுப்புற இசை என்ற ஆய்வு இசை ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு நிரூபணமும் செய்யப்பட்டிருக்கிறது.  மக்களால் மண் சார்ந்த இசையாக மக்களிசை என்று உருவான இசையே நாட்டுப்புற இசை . நாட்டுப்புற இசையின் வேர்களிலிருந்து பல ராகங்கள் உருவாகி  கர்னாடக இசையாக உருமாறிய வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு சொல்கிறது.  நாட்டுப்புற இசை பாமரரும்  புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையானது . கர்னாடக இசை குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டும் புரிந்து கொள்வதும் கற்றுக் கொள்வதும் ஆளுமை செய்வதும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

                   தமிழ்த் திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும் கொடுக்கப்பட்ட பின்னரே பாமர ஜனங்களும் அதை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். இளையராஜாவின் வருகைக்கு முன்னர் பல இசை முன்னோர்களால் படைக்கப்பட்ட அற்புத பாடல்கள் போலவே இளையராஜாவும் நாட்டுப்புறப் பாடல்களை அனாயசமாக கையாண்டார் .  தனது இசை முன்னோர்கள் கொடுத்த படைப்புகளையும் தாண்டி செவ்வியல் இசை கலந்த நாட்டுப்புற பாடல்களை   கொடுத்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.

                                                 

                      ' ஞானதேசிகன் '  என்ற இயற்பெயர் கொண்டு பிறந்து, கிறித்தவராக ' ' டேனியல் ' என்ற  பெயரும்   கொண்டு , வீட்டில் ' ராசய்யா ' என்று அன்பொழுக அழைக்கப்பட்டு,  திரையுலகத்திற்காக  'இளையராஜா ' என்று உருவெடுத்தவர்  நமது இளையராஜா .  தமிழகத்தின் கடைக்கோடியில் பண்ணைபுரத்தில் பிறந்து வளர்ந்து, மக்களிசை கேட்டு, இசையின்பால் ஈர்க்கப்பட்டு,  பெண் குரலில் பாடிக் கொண்டு, நாடகங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று ஊர் ஊராக தன் சகோதரர்களுடன் சுற்றி இசைக்கச்சேரி நடத்தி, சென்னைக்குக் குடி புகுந்து,  இசை அறிவை வளர்த்துக் கொண்டு , சினிமா உலகத்தில் பிரவேசித்தவருக்கு என்ன கொடுத்தால் இந்த ஜனங்களுக்குப் பிடிக்கும் என்பது தெரிந்து கொடுத்த இசைஞானம் அளப்பற்கரியது.  நாடக இசையிலிருந்துதான் இந்த சினிமா இசை வளர்ந்திருக்க முடியும் என்பதால் இளையராஜாவிற்கு அந்த நாடக  இசை  அனுபவம்  ஏற்கனவே இருந்தது ; அதனால் அவரால் சிறப்பானதொரு இசை வழங்க முடிந்தது .


                                   1978 இல் இளையராஜாவின் இசைப்பயணத்தில் நானும் பயணித்துக்கொண்டிருந்த காலம் . குறுகிய  ஹாஸ்டல்  வாழ்க்கை முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டேன்.  டேப்ரெக்கார்டர் வசதி படைத்தோர் வீட்டில் மட்டும் இருக்கும். எனக்கு வாய்த்தது  ரேடியோ மட்டுமே! சிலோன் வானொலி ஒலிபரப்பாத பாட்டுக்களா! எத்தனையோ இசை அமுதங்களை  அள்ளி வழங்கிய  அட்சயபாத்திரமல்லவா !  பாட்டுக்கள்  கேட்டுக்கொண்டே தூங்கிப் போன காலமும் பாட்டுக்கள்  கேட்பதற்காகவே தூங்காத காலமும் நெஞ்சில் நிழலாடுகின்றது.  அரை மணிக்கொரு முறை வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு காலத்துப் பாடல்களை ஒலிபரப்புவதில்  இலங்கை வானொலியை முந்தவே முடியாது.

                   
                               அந்த சமயத்தில் ' இளமை ஊஞ்சலாடுகிறது '  என்ற ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் வெளிவந்தது.  ரஜினி , கமல் என்று இரு மெகா ஸ்டார்கள் இணைந்து நடித்த  படம் . அவர்களின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக்கு சென்று கொண்டிருந்த காலமது. எம்.ஜி. ஆர் , சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார்களாக பேசப்பட்டு வந்தார்கள். திரைப்படம் பெரிய ஹிட். பாடல்கள் அதைவிட பெரிய ஹிட்.


                                 இலங்கை வானொலியில்  'இசைச்செல்வம்'  என்ற நிகழ்ச்சி  ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு மணி நேரம் நடத்தப்படும். பல புதிய பாடல்கள் ஒலிபரப்பப்படும் . மக்களை எது அதிகமாய் கவருகின்றதோ அந்தப் பாடலுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து  அப்பாடல் எந்தத்  தரத்தில் இடம் பிடிக்கிறது  என்பதை தேன்குரல் அறிவிப்பாளர்  கே.எஸ் . ராஜா  அறிவிப்பார்.  கடைசியாக  இருக்கும்  பாடல் அந்த வாரம் வெளியேற்றப்படும்.  புதிய பாடல் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் .  ' என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு  ' என்ற பாடல் அப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.  ஒரே வாரத்தில் மூன்றாம் இடம் பிடித்தது. அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஏறக்குறைய  என் நினைவில் உள்ளவரை 30 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக முதலிடத்தைப்  பிடித்தது .


                                 என்ன ஒரு இளமைத் துள்ளலான பாடல்! கிடார் , டிரம்பெட் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடல் .  கிடாரை  இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா என என்னை வியக்க வைத்தது . தான் காதலித்தப் பெண்ணொருத்தித் தன் நண்பனுடன் சேர்ந்து வந்து தானாடும் நடன நிகழ்ச்சியை  காண அமர்ந்திருப்பதை பார்க்கும் நாயகன் உற்சாக உணர்வு சட்டென வடிந்துபோய் ஏமாற்றம், பிரிவு, நம்பிக்கைத் துரோகம் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொள்ள முடியாமல் வெடித்து , 'வார்த்தைத்  தவறி விட்டாய் கண்ணம்மா ...மார்பு துடிக்குதடி '  என்று வேதனைக் குரலோடு பாடல் பாடி ஆடுவதாக காட்சி. கமலஹாசனின் ஆவேசமான ஆட்டம், எஸ்.பி.பி யின் இளமை பீறிடும் உணர்ச்சிப் பூர்வமான குரல், 'அதுக்கும் மேல'  இளையராஜாவின் அட்டகாசமான இசையமைப்பு என்று எல்லாம் பொருந்தி நம்மையும் கலங்கடிக்கும்  பாடல் அது. சொல்லப்பட்ட சூழலை மனதில் உள்வாங்கி  அதை அப்படியே இசைமாலையாக கொடுத்திருப்பார் இளையராஜா. நாயகி அங்கிருக்கவும் இயலாமல் நகரவும் முடியாமல் தவிப்பதை மேலை நாட்டு இசைக்கலப்பில் அழகாக  எடுத்துரைப்பார்.


                             'உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில்  மறைந்திருக்கும் துளி விஷம் ' என்ற வரிகள் சரணத்தில் பாடப்பட்டு  ஒரு இடையிசை வந்து மறுபடியும் அதே வரிகள் பாடப்படும். அடுத்த சரணத்திலும் அது போலவேதான்!  அந்த இடையிசைக்கு ரஜினி செய்யும் மேனரிசம் இப்போதும் ரசிக்கலாம் . அதற்காகவே அந்த இடையிசையை கூர்ந்து கேட்டு ரசிப்பேன் .  அவ்வளவு ஆர்ப்பாட்டமாய் ஒலிக்கும் பாடல் எல்லா இசையும் நிறுத்தப்பட்டு மீண்டும் தொகையறா வரிகளோடு  முடிவதெல்லாம் எனக்கு புதுமையாக தெரிந்தது. இன்று அந்தப் படம் , நடிகர், நடனம் , நடனத்திற்கான உடை , இசையமைத்தவர் , பாடியவர் எல்லாம் பழசு . ஆனால் அந்த இசை மட்டும் எனக்கு புதுசு. ஏன் என்று எளிதாக கேட்கும் அளவிற்கு விளக்கம் எளிதாக சொல்ல முடியவில்லை.

                           
                                           

                         
                             அதே படத்தில் ' ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது ' என்ற இனிய கானம் கேட்பவரை காதல் கொள்ளச் செய்யும் ; காதலிப்போரை முணுமுணு க்கச் சொல்லும்; காதலிக்காதவரை ஏங்கச் சொல்லும் . அன்று அந்தப் பாடல் கேட்டு நிறைய இளைஞர்கள் அப்படித்தான் திரிந்தார்கள்.
படம் மட்டுமா  ' இளமை ஊஞ்சலாடுகிறது ' ...இப்போது கேட்டாலும் பாட்டைப் பாடிய பாலுவிற்கும் வாணி அவர்களுக்குமல்லவா குரலில் இளமை ஊஞ்சலாடுகிறது . இருவரும் இணைந்து கனிந்து குரலில் அப்படி ஒரு குழைவைக் கூட்டிச் சேர்க்கும் வித்தையை கொண்டுவந்திருப்பார்கள். அந்தக் கனிவிற்கும் குழைவிற்கும் இளையராஜாவின் அருமையான இன்னிசையே காரணம்.  'கற்பனைகளில் ...சுகம்... சுகம்...' என்று எஸ்.பி.பி கொஞ்சிப் பாடும்போதே கேட்பவருக்கும் சுகம்தான்! சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பில் இந்தப் பாடலையும்  நிச்சயம்  சேர்க்கலாம் .

                     
                         
                         
       
                          மலேசியா வாசுதேவன் குரலில் ' தண்ணி கருத்துருச்சு ...அங்கு தவளை சத்தம் கேட்டுருச்சு  ' என்ற பாடல் ஊரெல்லாம் உற்சாகப்படுத்திய குத்துப் பாடல்.  பாடலின் பின்னணியில் காட்சிகள் கொஞ்சம் அடல்ஸ் ஒன்லி . நாயகனும் நாயகனின் தோழியும் ஒன்று கூடுவதாக வரும் காட்சியமைப்பில் வெளியே நாடோடிக் கூட்டத்து ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடலுக்கு முகவுரையாக ஆடிப் பாடி மகிழ்வதின் பின்னணியில் இப்பாடல் ஒலிக்கும். மலேசியா வாசுதேவனின் குரல் குத்துப் பாட்டுக்கும் நாடோடிப் பாட்டுக்கும் சரியாக பொருந்தும் . யாருக்கு எந்தப் பாடல் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை தேர்வு செய்வதிலும் ஒரு இசையமைப்பாளனின் பங்கு இருக்கிறது . இளையராஜா அதிலும் கெட்டிக்காரர்.


                           ' ஏ .....காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள ...கண்ணும் கண்ணும் பேசுறப்போ வார்த்தையில்ல ...'  என்ற வரிகள் வரும்போது பாட்டின் போக்கும் இசையின் போக்கும் வித்தியாசமாய் இருக்கும் . பின்னணியில் இருவரின் உணர்ச்சிகளும் இலைமறை காயாக அதற்கேற்றார்போல காட்டப்பட்டிருப்பதை பார்த்தபோது எனக்கும் பற்றிக் கொண்டதெல்லாம் பகிர முடியாது . இளையராஜாவின் இசையும் சேர்ந்து பற்ற வைத்தது.

                 http://play.raaga.com/tamil/album/Illamai-Oonjaladuthu-songs-T0000059


                எல்லா பாட்டுக்களும் வாலி அவர்களின் கை வண்ணமே! வார்த்தைச் சித்தர் என்று ஏன் அழைக்கிறார்கள் என இப்போது புரிகிறது . 'கிண்ணத்தில் தேன் வடித்து ' , ' நீ கேட்டால் '  என்ற மேலும் இரு அருமையான வித்தியாசமான பாடல்களும் அதே படத்தில் உண்டு . அந்நேரத்தில் நான் அதை அதிகம் ரசிக்கவில்லை. இப்போது கேட்டால் ஐந்து பாடல்களும் ஐந்து விதமான வித்தியாசம் கொண்ட பாடல்கள் என்பது புரிகிறது .  இன்னும் இன்னும் கேட்கத் தூண்டும் இளையராஜாவின் இசைக்குத்தான் எத்துனை பலம் !


                    ' இது எப்படி இருக்கு ' என்றொரு படம் . ஜேசுதாஸ்   மற்றும் ஜானகி குரலில் '  எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ ' என்ற பாடலை கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போனது. இயற்கையின் அழகையெல்லாம் அள்ளிக் குடித்து விடத் தோன்றும் அழகியல் உணர்வோடு காதலின் மென்மையையும்  சேர்த்து வெளிக்காட்டும் நாயகனும் நாயகியும் ஆடிப் பாடுவதாக அமைக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜா இசையை அள்ளித் தெளித்த வண்ணம் அற்புதமானது. பாடல் கேட்கும்போதெல்லாம் இறக்கை முளைத்துப்  பறப்பதைப் போன்ற உணர்வு.  ' குக்கூ ....குகுகுக்கூ ...' என்று இரு குயில்களின் குரலொலி போல் குரலிசை சேர்த்து பின்னணி இசை அமைத்திருப்பார்.  நாமும் பறவைகளாகாமல் என்ன செய்ய?
                                                                            
                                             
               
          'கண்ணன் ஒரு கைக்குழந்தை '  என்ற திரைப்படத்தில்  ' மேகமே ...தூதாக வா ... அழகின் ஆராதனை ' என்று எஸ்.பி பி. மற்றும் சுசீலாவின் ஜோடிக் குரல்களோடு ஒரு உல்லாசப் பாடல். பகடி ராகத்தில் அமைக்கப்பட்ட  இளமையும் இனிமையும் ததும்பும் பாடல்.  காதல் பாடல்கள் பல இசையமைப்பாளர்கள் அமைத்து   இருக்கிறார்கள்.  அதே விதமான உணர்வை  அதை விட மேலான உணர்வை  இவர் பாடல்களும் ஏற்படுத்துவதே இளையராஜாவின் சிறப்பு.

                                                                                 

 



 அதே  படத்தில் ' மோக சங்கீதம் ...நிலவே.. நிலவே... அதைக் கேட்க
 வந்தாயோ ..' என்ற பாடல்  சுசீலாவின் குரலில் மிக மென்மையான பாடல்.  ஆனால் இலங்கை வானொலியில் அதிகம் ஒலி  பரப்பியதில்லை. கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும்  அழகான மெலடி . அத்திப் பூ வரிசையில் இடம் பெற்றது ஏன்  என்பதற்கு என்ன காரணம் சொல்ல!? தெரியவில்லை. 
 

      அடுத்து அதே 78  இல்   வந்து  தமிழகத்தைக்  கலக்கிய பாரதிராஜாவின்  இரண்டாவது படம் ' கிழக்கே போகும் ரயில் ' . இளையராஜாவின் இசை மணிமகுடத்தில் இன்னொமொரு நவரத்தினக்கல் இந்தப் படம் . பாடல் காட்சிகளை புதுமையாக எடுப்பதில் வல்லவர் பாரதிராஜா . அதற்கேற்ற அற்புத இசையை இளையராஜா கொடுக்க மக்களுக்கு அது பெரிய கொண்டாட்டம் . படமும் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.

                                                      


       மதுரையில் புறநகர் பகுதியில் நாங்கள் குடியிருந்ததால் வீட்டிற்கு அருகே ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது . எனக்கு ரொம்பவும் வசதி . படமும் பார்க்கலாம். பாட்டுக்களும் கேட்டுக்கொள்ளலாம் . அதனால் வாரம் இரண்டு படங்களாவது பார்த்துவிடுவேன்.  பாட்டுக்கள் கேட்பதற்காகவே சினிமாவிற்கு போனது அதிகம் . சினிமா தியேட்டரில் பாடல்கள் கேட்பது சுகானந்த அனுபவம் . அரங்கமே இசையால் நிரம்பும் .  மனதுக்குள் அப்படியே இறங்கும் . அப்படிதான் கிழக்கே போகும் ரயில் படத்தின் பாடல்களை விரும்பி கேட்டேன். ஒரே வாரத்தில் மூன்று தடவை சினிமா கொட்டகை போய் படம் பார்த்தேன்.  சில நேரங்களில் கையில் காசு இல்லாவிட்டால் முக்கியமான பாட்டு கேட்க அரங்கத்தை ஒட்டி வெளியே நின்று கேட்டு  ரசித்திருக்கிறேன். 




                             அந்தப் படத்தில் ' மாஞ்சோலைக் கிளிதானோ ..மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ ...'  என்ற பாடல் தேனிசைக் குரல் ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய மகத்துவமான பாடல். கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் முத்திரைப் பதிக்கும் தேன்மதுரத் தமிழ் வரிகளில் தென்னையையும் தலையசைக்க வைக்கும் அழகிய செவ்வியல் இசை கலந்த  மெல்லிசை. ஒரு பெண்ணை வர்ணிக்க அதிகமான சொற்கள் பயன்படுத்தப்பட்ட நீண்ட பல்லவி அல்லது சரணம்  உள்ள பாடல் என்று முத்துலிங்கம் சமீபத்தில் சொன்னதாக ஞாபகம்.  மிருதங்கம் , வீணை, புல்லாங்குழல்   பிரதானமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.    பாட்டின்
ஆரம்பத்தில் மிருதங்கம் , தபேலா , சதங்கை  கலந்து அழகிய தாளலயத்தில் நடை வாசிக்கப்பட்டு , சட்டென நிறுத்தி, 'மாஞ்சோலை கிளிதானோ' என மென்மையாக ஆரம்பிக்க, பூக்கள் சொரியும் இசை போல் இடையிசை ஒலித்து 'மான்தானோ ' என தொடர, குயிலின் சப்தத்தை கூட்டிச் சேர்த்து பாடலை மீண்டும் மெல்லிய வேகத்தில் கொண்டு போய் இரண்டாம் சரணத்தில் கூடுதல் வேகம் பிடிக்கும் அந்த லாவகமான இசை இளையராஜாவின் தனி முத்திரை. 



                    
        ' மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ ...அங்கம் ஒரு தங்கக் குடம் ..அழகினில் மங்கை ஒரு கங்கை நதி ...உலகினில் துள்ளும் இதழ் தேன்தான்  அள்ளும் கரம் நான்தான் ...வஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன் ...கண் காவியம் பண் பாடிடும் பெண் ஓவியம் செந்தாமரையே ....'  என்றொலிக்கும் வரிகளில் வேகமான நடையில் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தி மீண்டும் பழைய நடைக்கு பாடலின் இசை மாறுவது  புல்லரிக்க வைக்கும் . ஒரே மூச்சில் அந்த வரிகள் பாடப்பட்டிருக்கும் . கடினமான பாடல் ; ஆனால்  காவியப் பாடல் . மறக்க முடியுமா ? அப்போது ஒன்றும் தெரியவில்லை . இப்போது பார்த்தால்  நாயகியின் நடன அசைவுகள் சகிக்க முடியவில்லை  .  
                         


                 ' பூவரசம்பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதி வந்தாச்சு' என்று ஜானகி அவர்களின் குரலில் குயிலே பாடுவதைப்  போல ஒலிக்கும் உற்சாகமான பாடலை  இப்போது கேட்டாலும் நெஞ்சுக்குள் சந்தோசப் பூ மழை பெய்யும்.  அந்தக் காலத்தில் கேட்டபோது அடிக்கடி பாடிக் கொண்டலைந்தேன் . கங்கை அமரன் எழுதிய பாடல் வரிகள் சாதாரணமானவை . ஒரு கிராமத்துப் பெண்ணொருத்தி பட்டணம் போய் வேலை தேடும்  தன் காதலன் எப்போது திரும்புவான் என ஏங்கி காத்திருக்கும் வேளையில் கிழக்கே போகும் ரயிலின் கடைசிப் பெட்டியின்  பின்புறத்தை கரும்பலகையாக்கி அவன் சேதி அனுப்பியதை கண்டவுடன் உற்சாகமாக பாடும் பின்னணிக்கு ஏற்றாற்போல் பாடல் எழுதப்பட்டிருக்கும் . ஆனால் எல்லாவற்றையும் மிஞ்சியது போல இளையராஜா அதற்குக் கொடுத்திருக்கும் இசையில் மயங்காமல் இருக்கவே முடியாது.  ' கரகர வண்டி காமாட்சி வண்டி ...கிழக்கே போகும் பொள்ளாச்சி வண்டி ...' என்று பாடிக்கொண்டே தட்டாமாலை சுற்றி கீழே விழுந்தவுடன் உலகமே சுற்றுவது போலிருக்கும் அனுபவம் எல்லாம் சிறுவயதில் நானும் செய்து பார்த்திருப்பதால் அந்தக் காட்சியை ரசித்ததோடு , தலை சுற்றும் பின்னணிக்கு ராஜா கொடுக்கும் பின்னணி இசை வயலினில் வாசிக்கப்படுவதையும் ரசித்திருக்கிறேன் .  
                            
                                                                 
                                   
              
                       பாட்டின் ஆரம்பத்தில் ஜானகி மெதுவாய் பாடலை நீட்டி முழக்கி சட்டென சிறிது வேகம் பிடிக்கும் டெம்போவில் பாட உண்மையில் ஒரு ரயில் மெதுவாக கிளம்ப ஆரம்பித்து வேகம் பிடிப்பதைப் போலவே இசைக் கோர்ப்பு செய்திருப்பது வித்தியாசமாகவும்  புதுமையானதாகவும் இருக்கும் . பின்னணி இசையை கூர்ந்து நோக்கினால் உண்மையிலேயே ரயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை இளையராஜா பாட்டில் கொண்டு வந்திருப்பார். தொடர்ந்து ஜானகி , ரயில் எழுப்பும் சங்கொலி  போலவே  கூ... என கூவுவதும்  ரயில் சப்தப் பின்னணியில் பல்லவி பாடுவதும் பல்லவி முடிந்து இடைசையில் ஒற்றை வயலினோடு சேர்ந்து இசைக்கருவியா குரலா என பிரித்தறிய முடியாமல்   குலவையிடுவது போல் ஒலி எழுப்புவதும் சொல்லவொண்ணா  கற்பனை.  ரயிலை விட்டு உடல் பறந்து வெளியே போய்விட்டு மீண்டும் ரயிலுக்குள் வந்தது போன்று இடையிசை முடிந்து சரணம் ஆரம்பிக்கும் . ரயிலின் ஓசையை  தாளமாகக்         கொண்டு இளையராஜாவின் முன்னோர்கள்  சிலர் பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள் . அதுவும் கேட்க நன்றாக இருந்தாலும் இந்தப் பாடல் புதுமையானதே!
 


                             
                               '  கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ .. ' என்று துர்கா ராகத்தில் கண்ணதாசனின் வரிகளில்  மலேசியா வாசுதேவன் , ஜானகி அவர்களின் இனிய குரல்களில் இளையராஜா ஆனந்த மயமான காதல் கானம் ஒன்றை அதே படத்தில் கொடுத்தார். மக்கள் எல்லோரும் அவர் இசையில் ஏன் மதி மயங்கிப் போயிருந்தார்கள் என்பது எனக்கு அப்போதே புரிந்தது . அதையும் அப்போதுதான் கவனித்தேன் . பாட்டில் மூன்று சரணங்கள் . மூன்றுக்கும் மூன்றுவிதமான இடையிசையை கொடுத்திருக்கிறார் . மற்ற எல்லா படங்களின் பாடல்களை மீண்டும் கேட்டுப் பார்த்த பிறகு அது தெளிவானது. ஆரம்பப் பாட்டிலிருந்தே வெவ்வேறு விதமான பி.ஜி.எம் . ராஜாவின் முன்னோர்கள் பெரும்பாலும் அப்படி கொடுத்ததில்லை. மூன்று சரணம் மூன்றுக்கும் ஒரே பி.ஜி.எம் . இதுபோல அப்போது கவனிக்க மறந்த எத்தனையோ விசயங்களை இப்போது கவனிக்கும்போது இளையராஜாவின் பாடல்களில் உள்ள புதுமைகளை எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். 
                             
                                 


                          பொதுவாக ஒரு பாடலில் சரணம் முடிந்து பல்லவி முழுவதும் மீண்டும் பாடப்படும் வழக்கம் இருந்தது . இளையராஜாவின் பாடல்களில் அதிலும் சில புதுமைகள் இருந்தன. முதல் சரணம் முடிந்து பல்லவியின் முதல் வரியோடு இடையிசை சேர்ப்பது,   முதல் சரணம் முடிந்து பல்லவி இல்லாமலே இடையிசை கொடுத்து அடுத்த சரணம் பாடப்படுவது , முதல் சரணம் முடிந்து பல்லவி அனுபல்லவி, மீண்டும் பல்லவி, பிறகு இடையிசை என்று கொண்டு செல்வது   என பலவிதமான யுக்திகளில்  தனது பாடல்களை கொடுத்தவர் இளையராஜா . 


                                  ' மலர்களே நாதஸ்வரங்கள்  ' என ஆரம்பிக்கும் ஹம்சத்வனி ராகத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அவர்களின் இனிய குரல்களில் காதல் கானம் அப்போதும் இப்போதும் கேட்டவுடன் மனதுக்குள் மகிழ்ச்சியை மழைச் சாரலாய் தூவிடும் .  ' கற்பகப் பூச்செண்டு ..கருநீலக் கண்ணில்...' என்று வாசுதேவன் நீட்டிப் பாட ஜானகி  தொடர்ந்து ஹம்மிங் கொடுப்பது  அவ்வளவு அற்புதமாக இருக்கும். நம்மை எங்கெங்கோ கூட்டிச் செல்லும்.  நாயகன் நாயகியோடு தன்  திருமணக் கோலத்தை கற்பனைக்குக் கொண்டு வருவதை மங்கள வாத்தியங்களோடு நாதஸ்வரம் இசைத்து அருமையாக ராஜா கொடுத்திருப்பார். 


                              பாரதிராஜா படத்திற்கென்றே இளையராஜா  தனித்த இசை ராஜாங்கம் நடத்துவார். ராஜாவின் இசைக்காகவே விரும்பி மீண்டும் மீண்டும் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான காட்சிகள் வரும்போதெல்லாம் புதுமையான பின்னணி இசையால் என் இதயத்தை வருடியிருக்கிறார். கிராமத்துப் பின்னணி கொண்ட படம் என்றால் இளையராஜாவிற்கு கிராமத்துத் தேவதைகள் எல்லாம் கூடி வந்து வாழ்த்துப் பா பாடியது போல இசை ஆசிர்வாதம் கிடைத்துவிடும். இசையில்  பிரமாதப்படுத்தி  பின்னி எடுத்து விடுவார். 

                                  
                                 என்னைப் போன்ற லட்சகணக்கான  ரசிகர்கள் பலர் பலமுறை ஒரே திரைப் படத்திற்குச் சென்று ரசித்ததால்தான்  நூறு நாட்களைத் தாண்டியும் படங்கள் ஓடியிருக்கின்றன. அதற்கு பல இசையமைப்பாளர்கள் போலவே இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் என்றால் அதில் பொய்யில்லை ; மிகையில்லை. மிகவும் சுமாரான படங்கள் இளையராஜாவின் இசைக்காகவே வெற்றிப் படங்களாக மாறி அதிக நாட்கள் ஓடின. ஓடாத படங்களுக்கும் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.  அதனால்தான் ஒரே ஆண்டில் 50 திரைப்படங்கள் கூட கொடுக்க முடிந்தது. அவர் உழைப்பு யாராலும் எளிதில் ஈடு  செய்து விட முடியாத அயராத உழைப்பு; அற்புதமான உழைப்பு. இசைக்காக கொஞ்சமும் அசராமல் கடந்த 38 வருடங்களாக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்.  நலிந்த இதயங்களை  இசையால் கொள்ளை கொண்டிருக்கிறார். 


                              ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு வாசகர்  " இளையராஜா ஆயிரம் படங்கள் இசையமைத்து சாதனை புரிந்தது பற்றி...? " என கேள்வி எழுப்பியிருக்கிறார். 

                                    
                                சொல்லப்பட்ட பதில் கீழே.     
                          
                                ஆயிரம் படங்கள்  என்பது மட்டுமல்ல . அவரது இசை ஞானத்தால் அவர் படைத்த அத்தனையுமே முத்துக்கள் என்பதுதான் மகத்தான சாதனை. பெரிய படம், சிறிய படம் என்றெல்லாம் வித்தியாசம் பாராமல் எல்லா படத்திற்கும் ஒரே மாதிரியாக உயிரைக் கொடுத்து கடந்த நாற்பது ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவரது உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை நாம் தந்திருக்கிறோமா என்று தெரியவில்லை . அவரும் இதையெல்லாம் எதிர்பார்த்து உழைப்பதில்லை. எனவேதான் அவர் ஞானி. 


...................................தொடர்வேன்............................
                  
 

Sunday, 18 January 2015

இசை ராட்சஷன் - 6



                                                      இசை ராட்சஷன் - 6

                                                        ( The Musical Legend  )        


                                  1978 இல் இளையராஜா இசையமைத்த பாடல்களின் மெருகு கூடிக்கொண்டே சென்றது . தமிழகத்து மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து இசையைக் கொடுப்பதில் வல்லவராக அவர் உருமாறினார் . ஒரு பாடலைப் போல இன்னொரு பாடல் இருந்தது என்று எவரும் கூறிவிட முடியாதபடிக்கு அவருடைய இசைத் தேர்வு பாராட்டும்படி அமைந்தது. பாட்டுக்கும் மெட்டமைத்தார். மெட்டுக்கும் பாட்டு எழுத வைத்தார். காலப் போக்கில் மெட்டுகளுக்கு பாடல் அமைக்கப்படும் யுக்தி அதிகமானது. எதிர்காலத்தில் தன்னுடைய    அண்ணன்  பாவலர் வரதராஜன் அவர்களின் பாட்டுகளுக்கு மெட்டு கட்டி அதையும் ஹிட் ஆக்கியவர்  இளையராஜா.

                                     


                                அவர் இசையில் இசைக்கருவிகளின் நாதம் வித்தியாசமாய் ஒலித்தது . ரசிக்கும்படி இருந்தது. மற்ற இசையமைப்பாளர்களும் இசைக்கருவிகள் பயன்படுத்தி பாடல் அமைத்தார்கள்.  ராஜாவின் பாடல்களில் மட்டும் ஏன் அந்த வித்தியாசம் தெரிந்தது என்பதற்கு அப்போது என்னிடம் விடையில்லை . ஆனாலும் தெரிந்தது. அதுவே இளையராஜாவின் சிறப்பு , மகிமை, திறமை , புதுமை. புதியதொரு புத்துணர்வூட்டும் இசையை கொடுப்பதில் இளையராஜாவிற்கு நிகராக அப்போது யாருமேயில்லை.


                                   அதே காலகட்டத்தில் அவருடைய இசை முன்னோர்களும் இசையமைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அதிகமாகவோ கூட இசையமைத்தார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. சொற்ப படங்களின் பாட்டுகள் வெற்றியடைந்தன. தமிழகத்து  மூலை முடுக்குகளில் எல்லாம் ராஜாவின் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன . ஒவ்வொரு  படத்திலும்  இரண்டு மூன்று பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்ததை காண முடிந்தது. சில பாடல்கள் நெஞ்சைத் தாலாட்டின ,  சில  நெஞ்சில் தீ மூட்டின . சில பாடல்கள் பன்னீர் தெளித்தன , சில கண்ணீர் வரவழைத்தன .  சில பாடல்கள் போதையைத் தந்தன, சில பாதையைக் காட்டின . சில பாடல்கள் ஆனந்தம் தந்தன , சில ஆர்ப்பரிப்பைத் தந்தன.  தொடர்ந்து அவரிசை கேட்கும் ஆர்வத்தைத் தந்தன .  வார்த்தை ஜாலங்களுக்காய்  வெற்றி பெற்ற பழைய பாடல்கள் உண்டு. வார்த்தைகள் எப்படி இருந்தாலும் இசைக்காக வெற்றி பெற்ற ராஜாவின் பாடல்கள் அதிகம் .


                             சிறு வயதில் இத்தனை விஷயங்கள் புரிபடாமல் இருந்தது. இப்போதுதான் அவர் பாடல்களுக்கிருந்த வரவேற்பு  , அதற்கான காரணங்கள்
தெளிவாக தெரிகின்றன .  1978 இல் ' சிட்டுக் குருவி ' என்ற படத்தில் ' என் கண்மணி உன் காதலி '  என்றொரு புதுமையான பாடல் கேட்டு பிரமித்துப் போனேன். வித்தியாசமான பாடல் . இளமை ததும்பும் இனிமையான பாடல். ஒரு குரல் பாடும்போதே அதே குரல் அதன் மேல் விரவி வருவது போன்ற அமைப்பு.  இரண்டு டியூன்கள் பின்னி வரும் . இருவித  மெலோடியும்  ஒன்றை ஒன்று குறுக்கிடும் . அந்த வகை புதுமைப் பாடல் counter point வகையில் இசைக்கப்பட்ட பாடல் என்பது அப்போது தெரியாது . இளையராஜா பேட்டியில்
சொன்ன பிறகு புரிந்தது . இணைய தளத்தில் பல இசை ரசிகர்கள் பகிரும் செய்திகளின் அடிப்படையில் இப்போது அதன் பரிமாணம் புரிகிறது.


                         கேள்விக்கு பதிலாய்  இரு வேறு மெட்டுகளை ஒரே பாட்டில் சேர்ப்பது இந்த வகை. ஒரு குரல் ஒரு மெட்டில் பாடும்போது அவரின் மனசாட்சிக் குரல் வேறு மெட்டில் அதைத் தொடர்வது  கவுன்ட்டர் பாயிண்ட்
என்று இளையராஜா சொல்லி தெரிந்தது .  பாலுவும் சுசீலாவும் கேள்வியாக ஒரு மெட்டில் பாடிக்கொண்டே வர  இன்னொரு மெட்டில்  அவர்களது குரலே பதில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் . இது வித்தியாசமானதொரு முயற்சி . இதற்கு முன்னர் தமிழ்த் திரையிசையில் இளையராஜாவின் இசை முன்னோர்கள்  இதைச் செய்திருப்பதாக நான் கேள்வியுற்றதில்லை . மேலைநாட்டு இசை பிரபலங்கள் செய்திருக்கிறார்கள்.  அதை அகத் தூண்டலாக எடுத்துக்கொண்ட இளையராஜா புதிய முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இசைத்து வெற்றியும் கண்டார்.  இயக்குனர்கள்  தேவராஜ்- மோகன்  இருவருமே இந்தப் பாடலமைப்புப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லாததால் பாடலை மாற்ற முடிவெடுத்தார்கள் . இளையராஜாவிற்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர்கள் என்ற முறையில் ராஜா அப்பாடலை நிராகரிக்காமல்  அவர்களை சமாதானப்படுத்தி  இசையமைத்துக் காண்பித்தார்.  பாடலை ஹிட் ஆக்கினார்.


                         உற்சாகமாய் ஒலிக்கும் அந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.  எஸ்.பி. பி அவர்களுக்கு இந்த மாதிரி பரிசோதனை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல! அழகாகப்  பாடி அசத்தியிருப்பார். சுசீலா அவர்களும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார்.  காரணம் இளையராஜாவின் இசை அந்த அளவிற்கு அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கவேண்டும் .  ஒரு டவுன் பஸ் பயணத்தில் நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே வரும்போது அவர்களின் உடலிலிருந்து உருவங்கள் பிரிந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே பாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும் . கண்டக்டரின் குரல் அவ்வப்போது இடைமறிக்கும் . நாமும் பஸ்ஸில் பயணம் செய்வது போலவே பாடல் இசைக்கப்பட்டிருக்கும் . அப்போது  திரையோடு  நாமும் சங்கமிக்கும் அளவிற்கு திரைப்படங்களும் திரையிசையும்  இருந்தன. இப்போது பெரும்பான்மையான படத்தோடும் பாடலோடும் ஒன்றிக்க முடிவதில்லை.  மனதில் ஒட்டுவதில்லை.

         
                         என் கண்மணி என்ற பாடல் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இளையராஜா அவர்களே ஒரு பேட்டியில் சொன்னதை ராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் அழகான பதிவு ஒன்றில்  தந்திருக்கிறார்.  ராஜா நேரடியாக சொல்வதை காணொளியிலும் காணலாம்.

                         http://isaignanibakthan.blogspot.in/2010/12/blog-post.html


                                 


                              அதே படத்தில் ' உன்னை நம்பி நெத்தியிலே'  என்றொரு  சுசீலா பாடும்  கிராமத்து வாசனை தடவிய  நாடோடிப் பாடல் . நாடோடிப் பாட்டு போல தெரியாதவாறு இளையராஜா அற்புதமாகக் கொடுத்திருப்பார். சோகமான சுகராகத்தில் அமைந்த பாடல் . பிரிந்துபோன காதலன் எப்போது திரும்பி வருவான் என ஏங்கித் தவிக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் மனக்குமுறலாய் அப்பாடல் ஒலிக்கும்.  கேட்ட மாத்திரத்தில் இனம் புரியா சோகம் வந்து நம் இதயத்தை அப்பிக் கொள்ளும் . படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் தலைவனைப்  பிரிந்த தலைவியின் புலம்பலை அழகாக
பாட்டெல்லாம் பாடி செய்யுள் விளக்கித்  தந்தபோது  புரியாதது  இந்தப் பாட்டைக் கேட்டவுடன் புரிந்தது.  போதிக்கும்போது புரியாததெல்லாம் பாதிக்கும்போது புரிந்தது.


                        வெள்ளைக் குயில் சுசீலா அதை அழகாக பாடியிருப்பார்.  இனம் புரியா சோகம் இதயத்தைக் கவ்வும் வண்ணம் பாடலும் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டிருக்கும்.  அழகிய வனத்து  ஆலமரத்தின் நிழலில்  நின்று கொண்டு  நாயகன் விட்டுப் போன திசையைத் தொட்டுவிடும் தூரம்வரை பார்வையிட்டு  பாடும் பாடலுக்கு  ஏற்றாற்போல உணர்வுகளை வயலினில் இழையோட வைத்திருப்பார் இளையராஜா . புல்லாங்குழலிலும் அதை நமக்கு புரிய வைத்திருப்பார் . பாட்டிடையே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருப்பவனின் ' ஓ........ஹ ' என்ற  மேய்ச்சல் ஒலியும் ஆடுகளின் பதில் ஒலியும்  சோகத்திற்கு கட்டியம் கூறும் சுருதியுடன்  சேர்த்திருப்பார்.  கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த கலைஞனின் கற்பனை ஊற்று இசையிலேயே கிராமத்துப் பின்னணியை கொண்டு வந்துவிட்ட உணர்வு அலாதியானது.

                                                  

       
  
     ' அடடடா ...மாமரக்கிளியே   உன்னை இன்னும் நான் மறக்கலையே ' என்ற பாடலும் இருமுறை ஒலிக்கும் .  பால்ய வயதில் நாயகனும் நாயகியும் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்த காலத்தில் பாடிய பாட்டை வாலிபத்தில் நாயகனை சந்திக்கும் வேளையில் நாயகி மீண்டும் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும் . சூழலுக்கு ஏற்றாற்போல பாடலின் இசை  பாந்தமாய் அமைத்திருக்கும் . சிறுவர்கள் விளையாடிக் கொண்டே பாடும் பாடல்கள் போலவே  அந்தப் பாடல் ஒலிக்கும் . கேட்டவுடன் மனசுக்குள் புகுந்து கொண்ட பாடல். கதையோட்டத்தோடு கலந்த பாடல்களை அனாயசமாக இளையராஜா கையாள்வார். தேவராஜ், மோகன் இருவருக்கும் தன் நன்றியை தெரிவிக்கும் முகமாக அத்தனைப் பாடல்களையும் தித்திக்கும் பாடல்களாக ராஜா கொடுத்திருப்பார். இப்போதும் தித்திக்கின்றது. ஜானகி அவர்களின் குரலில் அற்புதமான பாடல் .

  

        
                     ' தியாகம் '  என்ற நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவந்த நேரத்தில் எங்களது குடும்பம் மதுரைக்கு குடி பெயர்கிறது. கிராமத்து வாழ்க்கை முடிந்து நரக வாழ்க்கைக்கு ...இல்லை ....நகர வாழ்க்கைக்கு  காலம் இட்டுச் சென்றது .  முழுமையாக  குடிபெயருமுன் மதுரையில் உள்ள ஒரு கிறித்துவப் பள்ளியில் என் தந்தை என்னைச் சேர்த்தார் . குடும்பம் இன்னும் மதுரை வராததால் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன் . ஹாஸ்டல் அப்போது நரகமாய் தெரிந்தது. அடிக்கடி வீட்டு நினைவும் அம்மாவின் நினைவும் வந்து கண்கள் குளமாகி ஒரு மூலையில் சென்று அழுதுகொண்டிருப்பேன். கிராமத்தில் சுதந்திரப் பறவையாய் படபடத்து பறந்துகொண்டு திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு பாடல்கள் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த என்னை கூண்டுக்குள் கொண்டு வந்து அடைத்ததைப் போல் உணர்ந்தேன். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு ,பள்ளிக்கூடம், விளையாட்டு, தூக்கம் என அட்டவணை போட்டபடி எல்லாம்  நடக்கும். எல்லோரும் அதை ஒழுங்குடன் தொடரவேண்டும். ஒழுங்கு தவறினால் உதை  விழும்.  
                         
            காலை 5 மணிக்கு மணியடித்து எழுப்பி விட்டு முகம் கழுவி உடை மாற்றியோ மாற்றாமலோ ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ளவேண்டும்.  கிராமத்தில் 8 மணிக்கு எழுந்து 10 மணிக்கு பள்ளிக்கூடம் போனதெல்லாம் மாறிப்போனது. சுதந்திரம் சுக்குநூறாய் போனதை நினைத்து கவலை கொண்டிருந்த காலத்தில் ஒரே ஆறுதல் இசைதான்!
                        
               மதியச் சாப்பாடு வேளையில் மட்டும் ஒலிப்பேழை  மூலம் பாடல்கள் ஒலிக்கப்படும். அப்போதுதான் ' தியாகம் '  படத்தின் பாடல்கள் கேட்க நேரிட்டது. இளையராஜாவின் இசையில் இனிமையான பாடல்கள் என் மனசுக்குள் மழைச்சாரலை உணரவைத்தன . முகத்தில் புன்னகைப் பூக்களை மலர வைத்தன. இப்போதும் அந்தப் படத்தின் பாடல்கள் காற்றில் தவழும்போது மனசுக்குள் வலி ஏற்படுத்திய ஹாஸ்டல் நினைவு மயிலிறகு வருடும் அனுபவ சிலிர்ப்பு தருவதை உணர முடிகிறது. அன்று வெறுப்பை ஏற்படுத்திய ஹாஸ்டல் அனுபவங்கள் இன்று கட்டுப்பாடு ஒழுக்கம் கற்றுத் தந்த பாடங்களாய்  பார்க்கத் தோன்றுகிறது.  அன்றைய வலிகள் இன்று  முன்னேற்றப் பாதையின் வழிகளாய் தெரிகின்றன. தியாகம் படத்தின் பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் இந்த சுகமான நினைவுகள்  இப்போது அந்தப் பாடல்களைக் கேட்டாலும் எனக்குள் அலை போல எழுந்து அடங்கும். 
                    
            ' வசந்த கால கோலங்கள் ' என்று ஜானகி அவர்களின் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் தேன் கூட்டைப்  பிழிந்தெடுத்த தேன் மழை . சிலுசிலுவென முகத்தில் மோதும் தென்றல் காற்று. சோகத்தை சுகமாய் மாற்றித் தரும் அற்புதப் பாடல்.  கண்ணதாசனின் வரிகளில் பாடல் மக்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்றது . நாயகன் ஒழுக்கக் கேடானவன் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் நாயகி தன் விதி நினைத்து நொந்து பாடும் சூழலில் ' நல்லவேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் ...நன்றி நன்றி தேவா உன்னை மறக்கமுடியுமா '  என்று சிறிய அழுகையோடு  ஜானகி கொடுக்கும் சங்கதி எனக்கும் மறக்க முடியாது . நல்ல இசையை நல்ல பாடகரிடம் கொடுக்கும்போது அவர்கள் மென்மேலும் மெருகு சேர்ப்பது நம்மை எப்படியெல்லாம் பரவசப்படுத்துகிறது என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். 
                           
              
 அதே படத்தில் இன்னுமொரு  ஹிட் பாடல் 'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ' என்ற  டி .எம் எஸ் அவர்களின் கணீர்  குரலில் வந்த பாடல். ஒருமுறை அவருடைய புதல்வரிடம் ' அப்பாவின் பாடல்களில் எந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் '  என கேட்டபோது  இந்தப் பாடலை குறிப்பிட்டுச் சொன்னார் .  எனக்கும் இந்தப் பாடலின் மீது  அளவிட முடியாத பிரியம்  உண்டு. தனித்திருக்கும்போதோ  கவலை கொள்ளும்போதோ வாய்விட்டுப்  பாடுவேன்.  எம்.எஸ்.வி யின் இசைச் சாயலில் பாடல் இசைக்கப்பட்டிருக்கும் . சிவாஜி படம் என்றால் சோகப்பாடல் இல்லாமல் இருக்குமா!? பெரும்பாலும் அவருடைய படங்களில் சோக கீதங்கள் காலத்தால் அழிக்க முடியாத  எந்தக் காலத்திலும்  அளிக்க முடியாத இனிய கீதங்கள். இளையராஜாவும் அதன் தன்மையோ குணமோ மாறாமல் கொடுத்திருப்பார்.  சாதாரண வார்த்தைகள் கொண்டு அழகான தத்துவம் சொன்ன கண்ணதாசனின் வரிகளுக்கு  உயிரோட்டம் இசையில் இருக்கும் . ' மனிதனம்மா மயங்குகிறேன் ...தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே  ' என்ற வரிகள் பாடல் கேட்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.  இப்போது பாடல் கேட்டாலும் ஹாஸ்டல் வாழ்க்கை ஞாபகம் மலரும் நினைவுகளாய் மனதுக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது . 
                       
        அதே படத்தில்  ' தேன் மல்லி பூவே ' என்றொரு தேனிசைப் பாடலும் கேட்க சுகமானது.  டி .எம்.எஸ் , ஜானகி  டூயட்டில் இனிய கானம் . இதிலும் எம்.எஸ்.வி தெரிவார். ஆனால் பாடலுக்கான பின்னணி இசை அது இளையராஜா என்று காட்டிக் கொடுத்துவிடும் . 
 
                           ' காற்றினிலே வரும் கீதம் ' என்ற திரைப்படம் அம்மாவோடு பார்த்த ஞாபகம் . எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் மீரா படத்தில் பாடிய மிகவும் பிரபலமான பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து முத்துராமன் ,கவிதா நடிப்பில் உருவான படம் . அந்த நேரத்தில் கவிதாவிற்கு ரசிகர் மன்றம் மதுரையில்தான் வைத்தார்கள் .  மதுரையில் படம் ஓடினால் அந்தப் படம் ஹிட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை சினிமாக்காரர்களிடம் அப்போது இருந்தது. 
ஏன் இப்போதும் கூட சிலரிடம் உண்டு . மதுரையை மையமாக வைத்து காட்சி அமைத்தால் படம் ஓடும் என்று நினைக்கிறார்கள். 
           
                 'கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் ' பாடலைக் கேட்டு படம் பார்த்தபோதே அசந்து போனேன். அந்தப் படத்தில் இதைவிட ஹிட் பாடல் இருந்தாலும் இந்தப் பாடல் எனக்குள் ஏற்படுத்திய பரவசம் வார்த்தைகள் கொண்டு வடிக்க முடியாதது.  ஒரு தேவலோக கானம் போன்றே ஒலிக்கும் . படத்தின் காட்சியிலும் நாயகி தேவதையைப் போலவே தோன்றுவார் . நேரடியாகவும் ஆவி போலவும் வந்து  பாடுவதாய் இருமுறை படத்தில் பாடல் ஒலிக்கும் . படம் முழுவதும் இந்தப் பாடலின் ஹம்மிங் ஒலித்துக்  கொண்டேயிருக்கும் . பாடல் ஆரம்பிக்கும்போது ஜானகி அவர்களின் குரலில் எந்த இசைக் கருவியும் இல்லாமல் ஹம்மிங் ஆரம்பிக்கும் . ஏதோ ஒரு மாய உலகத்திலிருந்து ஒலிப்பது போலவே கேட்கும் அந்த ஹம்மிங் முடிந்து வயலினோடு சலங்கையும் சேர்ந்து இசை எழும்பும் . அப்போதே மனசு இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. முதல் BGM  முடிந்து மென்மையாக ஜானகி அவர்கள் கண்டேன் எங்கும் என்று ஆரம்பிக்க அத்துடன் தபேலா சேர்ந்து கொள்ள அந்த சுகானுபவத்தை என்னவென்று சொல்லத் தெரியவில்லை . 
                       
        இரண்டாம் சரணத்திற்கு முன்பு  BGM வித்தியாசமான பாதையில் சென்று  வேறு ஒரு ஹம்மிங் கொடுத்து மீண்டும் அதே பாதைக்குத் திரும்பி வருவது நான் அதுவரை கேட்டிராத புதிய பாணியாக தெரிந்தது. இதற்கு முன்னர் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் கேட்டிராத இசை   இளையராஜாவிடம் தெரிந்தது. இப்போது அந்தப் பாடல் கேட்டாலும் தென்றல் தாலாட்டும்  சுகமும் காலைப் பணியுணரும் சிலிர்ப்பும்  ஏற்படுகிறது . இரண்டாம் முறை அதே பாடல் வாணி ஜெயராமின் குரலில் வித்தியாசமான பின்னணி இசையோடு கொடுக்கப்பட்டிருக்கும் .  மறைந்து போன நாயகி மீண்டும் அதே பாடலை பாடிக்கொண்டிருப்பதைக் காணும் நாயகனின் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் இசையிலேயே இளையராஜா அழகாக கொடுத்திருப்பார். இரு வேறு பின்னனி   இசையோடு ஒரே பாடல் இசைப்பதை இளையராஜாவின் இசை முன்னோர்களும் செய்திருக்கிறார்கள் .
முகநூல் நண்பரின் செய்தி .

பிருந்தாவனசாரங்கா ,மத்யமாவதி போன்ற ராகங்களுக்கு நெருக்கமான "ஸ்ரீராகத்தில்" யாராலும் இது போலதொரு ஒரு பாடல் அமைக்க முடியுமா? எங்கள் ராஜாவைத் தவிர.இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம், ஜானகியின் தேனான குரலும் ராஜாவின் இனிய இசையும் எப்பொழுதும் என்னை என் பால்ய நாட்களுக்குக் கொண்டு சென்று விடுகிறது. Thank you Raja.










                            அதே படத்தில் ' சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் '  என்று ஜெயச்சந்திரனின் மயக்கும் மந்திரக் குரலில் பாடல் கேட்டபோது மனசெல்லாம் மத்தாப்பு. ஒரு படகோட்டி பாடல் பாடினால் 'ஐலசா ' என்ற ஓசை வரும்  குரலிசையோடுதான் இதுவரை பாடல் கேட்டிருந்திரிப்பேன்.  ' தய்யரத் தய்யா ' என்ற ஓசை ஒலிக்கும் பாடல் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது . பாடலின் ஆரம்பமே 'தய்யரத் தய்யா ' என்றே குரலிசையோடு ஒலிக்கும் . இந்தப் பாடலுக்கான இசை எங்கிருந்து வந்தது என்பது தெரியாவிடினும் என்னை எங்கோ கூட்டிச் சென்றது உண்மை . பாடலின் ஒவ்வொரு வரிக்கும் 'தய்யரத் தய்யா ' என்ற குரலிசை கூடவே வந்து நம்மை குதூகலமாக்கும்.  '  ஏ ..குரிய ஏலவாலி தண்டேல வாலி  தய்யரத் தய்யா ' என்று பல்லவியின் முடிவிலும் சரணத்தின் முடிவிலும் ஒலிக்கும் வார்த்தைகள் எந்த மொழி என்று தெரியவில்லை .  ஆனால் கேட்க சுவையாக இருக்கும். பாடலின் கடைசி பல்லவியில்   'தய்யரத் தய்யா' என்ற கோரசோடு  'ஆ..ஹா ' என்ற குரலிசையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே வருவது இன்னும் சிறப்பு.   ஒரு நாடோடிப் பாடலை எல்லோரும் இன்றுவரை முணுமுணுக்கும் வண்ணம் அம்சமாக கொடுத்திருக்கும் இளையராஜாவின் கற்பனை வளம் வார்த்தைகளால் அளவிட முடியாதது .  என்னுடைய ஹாஸ்டல் வாழ்க்கையில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியின்போது இந்தப் பாடலை நான் பாடிய ஞாபகம் இருக்கிறது. 
                         
            ' ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் ' என்ற பாடல் மிக மென்மையாக ஆரம்பிக்கும் பாடல் . ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி அவர்களின் குரலில் வந்த தேவ கானம் என்று சொல்லலாம் . இந்தப் பாடல் அப்போதைய சிலோன் வானொலியில் ஒலிக்காத நாளில்லை. பாடலின் கடைசி பல்லவியில் ஆண் குரல் பாட பெண் ஹம்மிங் கொடுப்பதும் பெண் குரல் பாட ஆண் ஹம்மிங் கொடுத்து முடிப்பதும் நமக்கு மயக்கம் ஏற்படுத்தும்.  படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல் . இளையராஜாவின் மணிமகுடத்தில் இதுவும் ஒரு வைரக்கல் . கிடார், வயலின், புல்லாங்குழல் மூன்றையும் முக்கிய கருவிகளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடல் . ராஜாவின் பின்னணி இசைக்கு பயன்படுத்தப்ப்பட்டிருக்கும் இசைக் கருவிகள் மீது அப்போது என் பார்வை விழுந்தது . அதற்கு முன்னால் அப்படியெல்லாம் யோசித்ததேயில்லை.  பாடலைக் கேட்டு ரசித்ததோடு சரி.  இளையராஜாவின் இந்தப் படத்தின்  பாடல்களை கேட்ட பிறகே அவர் பயன்படுத்திய இசைக்கருவிகள் மீது ஒரு ஆர்வம் உருவானது.  அதற்கு முன்னர் எந்த இசையமைப்பாளரும் அந்த ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியதில்லை . இளையராஜாவை கவனித்தபிறகே மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன் . ஒரு சில பாடல்கள் தவிர இளையராஜா ஏற்படுத்திய  பிரமிப்பை அவர்கள் எனக்கு ஏற்படுத்தவில்லை. 
                   
                     
                        http://play.raaga.com/tamil/album/Kaatrinile-Varum-Geetham-T0001299
                
                   
                                
              கர்னாடக இசையின் பிதாமகனாக போற்றப்படும் செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் இளையராஜாவின் இசை ஞானம் பற்றி சுருங்க அழகாக பேசியிருக்கிறார். கர்னாடக சங்கீதத்தில் அதிக ஞானம்                            
                 
                               
இருந்தால்தான்  சினிமாவிற்கான மெல்லிசையில் திறம்பட செயல்பட முடியும் என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார் .  இளையராஜாவிற்கு கர்னாடக சங்கீதம் தெரியுமா என சந்தேகம் கொள்வோர்  சிலருக்கு இவர் விளக்கம் தேவைப்படுவதால் இந்த காணொளி இங்கே அரங்கேறியிருக்கிறது. 
 
                   
    திரைப்படங்களில் இளையராஜா இசைத்திருக்கும் பலவிதமான இசைத் துணுக்குகளை ஒரு தொகுப்பாக ரசிகர் ஒருவர் கொடுத்திருப்பதை கேட்கும்போது  ' இளையராஜா இசை கேட்பதற்கு ராகம் , தாளம், பல்லவி தெரிந்திருக்கவேண்டும் என்று  அவசியமில்லை. தான் உணருவதை மற்றவர்களையும் உணர வைத்துவிடுவார் ' என்று ஒரு இளைய இயக்குனர் சொல்லியிருப்பதை உறுதி செய்கிறது. இளையராஜாவின் இசைக்கோலங்கள் கேட்கக் கேட்க ஆனந்தக்கடலில் மிதந்து கொண்டிருக்கும் அழகிய அனுபவம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. 
...................................தொடர்வேன்..................................