Saturday 19 December 2015

சொல்லிச் சொல்லி மாளாது ...சொன்னால் துயர் தீராது...



                                          மழை . எப்போதாவது  வரும்போது  பார்த்து மகிழ்வோம் . அடிக்கடி பெய்தால் இன்னும் மகிழ்வோம் . தொடர்ந்து பெய்தால் சற்று மிரள்வோம்.  பேய் மழையாக  இருந்தால் சற்று கலங்குவோம்.  அடிக்கடி தொடர்ந்து எப்போதும் பேய் மழையாக இருந்தால்  என்ன செய்வோம்!? மகிழ்வு மறைந்து மிரட்சி தொடங்கி மனசு கலங்கி பயத்தில் உறைந்து போவோமா இல்லையா?  அதுதான் நடந்தது.  அந்த நான்கு மாவட்டத்து லட்சக்கணக்கான மக்களுக்கும் அதுதான் நடந்தது. 

                                                         

                                      தீபாவளியை கொண்டாடிய சந்தோசம்தான் அந்த ஜனங்களுக்கு சமீபத்திய கடைசி  சந்தோசமாக இருக்கும்.  அதன் பிறகு தொடர் புயலினால் ஏற்பட்ட தொடர் மழையால் ஒரு மாத காலமாக எதையோ பறிகொடுத்தவர்களாகவே  தெரிகிறார்கள். வெள்ளம் வடிந்தாலும் சந்தோசமும் வடிந்த முகத்தோடு திரிகிறார்கள்.  உண்மையில் அவர்களில் பலர் எல்லாவற்றையுமே பறிகொடுத்தவர்கள் . வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சொத்து,சுகம், உடைமைகள்  அனைத்தும் மழை வெள்ளம் வழித்து எடுத்து விட்டுப் போய்விட்டது .  பலரது வீட்டையும் காணவில்லை.  உயிர் தவிர மிஞ்சியது ஏதும் இல்லாதவர் பலர். கெஞ்சிக் கேட்டு கையை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டவரும் பலர்.


                                  ஊரு விட்டு ஊரு வந்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் ஜனங்கள் நிறைந்த நகரம்  சென்னை. திடீரென பத்து நாட்களுக்குள்  நரகமாகிப் போகும் என யாரும் ஆருடம் கூறவில்லை.  நரகத்தையும் மரணத்தின் விளிம்பினையும்  நேரில் பார்த்ததை செரித்து விடக்கூடிய  மனநிலையில் அங்கு வாழும் மனிதர்கள் யாரும் இல்லை. ஊரை விட்டு உறவை விட்டு ஓடிப்போய் உயிர் தப்ப நினைப்பதற்குள் பல வீடுகளை மழையும் வெள்ளமும் கபளீகரம் செய்தது.  தண்ணீர் சூழ்ந்தது. உயரமான பகுதிகளில் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது.

                                                   

                                  உணவில்லை . குடி நீர் இல்லை.  மாற்றிக் கொள்ள துணி இல்லை. பலருக்கும் வாழ்க்கை சூன்யமாகிப் போனது. உயிராவது  மிஞ்சுமா என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த வேளையில் உதவிக் கரங்கள் கொஞ்சம் நீள  ஆரம்பித்தன .  அரசிடமிருந்து  அந்த  நேரத்தில் வந்த உதவி ஒன்றுமில்லை.  வந்திருந்தாலும் அது தாமதமாய் வந்தது.  அண்டை வீட்டுக்காரர்கள்,  அடுத்தத் தெருக்காரர்கள், முகமறியா நல்ல மனிதர்களின் நேசக்கரங்கள் தாங்கியதால் போன உயிர் திரும்பி வந்தது.


                                        எல்லாமே கேள்விப்பட்டதுதான்!  தென் தமிழகத்தின் மையப்பகுதியில் புயல் மழை அதிகம் பாதிக்காத மதுரையில் இருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் நிலவரம் அறிந்து கொண்டிருந்த என் போன்றோருக்கு நடந்த கலவரம் தெரியாது. மக்களின் வலி புரிந்திருக்கவும் நியாயமில்லை. அதுவும் என் கசின் சென்னையிலிருந்து வந்து சேர்ந்த பின் புரிய ஆரம்பித்தது.    அவனுடைய  குடும்பம் மதுரையில் இருந்ததால் மழையின் சொரூபம் கண்டு மிரண்டு ஓடி வந்து விட்டான். அன்றே நான் அவனை சந்தித்தபோது  அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அலைகளை என்னால் உணர முடிந்தது.  அவன் அனுபவம் அறிந்தேன்.


                                    இடுப்பளவு தண்ணீரில் சாலையைக் கடந்து எக்மோரை அவன் பயத்துடனேயே அடைந்தபோது டிக்கட் பதிவு செய்யப்பட ரயில் ரத்தானது.  கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்து  கூட்ட நெரிசலில் சமாளித்து  கோயமுத்தூர் வந்து,  பிறகு பஸ் பிடித்து மதுரை வந்து சேர்ந்தான்.
தன்னுடைய நண்பர்கள் , உடன் பணியாற்றுபவர்கள் எல்லோரும் சென்னையிலேயே மாட்டிக் கொண்டதாக வருத்தப்பட்டான்.


                                    " உயிருக்கு பயந்து நான் ஓடி வந்து விட்டேன். அடைக்கலம் தேட எனக்கு மதுரை இருக்கிறது. அவர்கள் சென்னையிலேயே வாழ்பவர்கள் . எங்கே போவார்கள்? " என்று கவலையுற்றான்.

                                    " யாருக்கும் உதவி செய்யாமல் வந்து விட்டேன் . அங்கேயே  இருந்திருக்கலாமோ  என்ற  குற்ற உணர்வு  ஏற்படுது " என்று மிகவும் ஆதங்கப்பட்டான்.

                                   " நீ ஒருவன் மட்டும் என்ன செய்து விட முடியும் ? " என்றேன்.

                                   " ஏதோ என்னால் ஆனதைச் செய்திருப்பேன். "

                                   " அவனவன் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே வழியில்லாதபோது  அடுத்தவனைப் பற்றி யோசிக்கின்றாயே?  "  என்று அன்று நான் அவனை சமாதானப்படுத்துவதற்குச் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு பொய்யாகிப் போயிருக்கிறது  என்பது  இன்று தெரிகிறது.  ஓடி ஓடி உதவி செய்த  இளைஞர்கள் ,  பிறரை காப்பாற்ற தன்னுயிரையே தந்த இளைஞன் ஒருவன்,  மழையில் அயராது பணியாற்றிய சில அரசுப் பணியாளர்கள்,  படகுகளை எடுத்துக் கொண்டு வீதி வீதியாக உதவிக்குச் சென்ற மீனவர்கள்,  தொண்டு நிறுவனங்களின் நல்ல உள்ளங்கள் ,   வெவ்வேறு  இடங்களிலிருந்து உதவி செய்ய ஓடி வந்த இனிய மனிதர்கள்  என்று  ஆயிரக்கணக்கில் உதவிக் கரங்கள் நீட்டப்பட்டதை பிற்பாடு அறிந்தேன்.


                              என்னோடு அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இடையிடையே தன நண்பர்களுக்கு போன் செய்து நிலவரம் கேட்டு கொண்டே இருந்தான். ஜெகன் என்ற ஒரு நண்பரை தொடர்பு கொண்டபோது ,  "சார் ..வீட்டைப் பூட்டிவிட்டு எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் " என்று என் கசின் சொல்ல அவரோ,  " சார்... மழை  பலமாக பெய்கிறது. என் வீட்டு வாசல் வரை தண்ணீர் வந்துவிட்டது. சாலையில் இறங்கிச் செல்ல முடியாது. நானும் மனைவி பிள்ளைகள் நலம்.  ஒன்றும் பயமில்லை.  சமாளித்து விடலாம் . காலையில் எல்லாம் ஓடி அடைந்துவிடும். "  என்றார்.


                         மழையைப் பற்றி அப்போதுதான் அவனிடம் கேட்டேன் .
                   " இப்படி ஒரு மழையை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை. வாளியிலிருந்து தண்ணீரை கொட்டினால் எப்படி கொட்டுமோ அப்படி  கொட்டிக் கொண்டிருக்கிறது.  ஒரு முறை ஆறு மணி நேரத்திற்கு தொடர்ந்தாற்போல பேய் மழை பெய்ததைப் பார்த்துவிட்டுத்தான்  எனக்கு பயம் ஏற்பட்டது. "  என்று அவன் சொன்னதைக் கேட்டு நானும் சிலிர்த்தேன்.


                       மறுநாள்  காலையில் மீண்டும் தன் நண்பரை அவன் தொடர்புகொண்டபோது அவர் போனிலேயே அழ ஆரம்பித்துவிட்டார்.

                        " சார்.. என்னாச்சு? "

                        " என் வீடு தண்ணீரில் மூழ்கிப் போச்சு . நானும் குடும்பமும் இரண்டாவது மாடியில்  அடுத்தவர்  வீட்டில் இருக்கிறோம். வீட்டில் இருந்த எல்லாம் போச்சு சார்.  லோன் போட்டு வாங்கின பொருள் எல்லாம் போச்சு . என் கண் முன்பே எல்லாம் அடிச்சிக்கிட்டு போறதை பார்த்தேன் சார் . என்ன செய்வது என்று தெரியவில்லை. " என்று மிகுந்த கவலையோடு அழுகையுடன் சொன்னார்.

                         என் கசின் முகம் வெளிறிப் போனது.  " பாவம் ... அழுகிறார்"  என்று என்னைப் பார்த்து சொல்லிக் கொண்டே அவரிடம் தொடர்ந்தான்.

                           " உயிர்தான் சார் முக்கியம் . மற்றதைப் பற்றி கவலைப் படாதீங்க.  பொருள் போனால் வாங்கிக் கொள்ளலாம் சார்.  சம்பாதிக்கத்தானே போகிறோம். பத்திரமாக இருங்கள்" என்று அவருக்கு ஆறுதல் கூறினான். சம்பாதித்துக் கொள்ளலாம்  என்று எளிதாக சொல்லி விட்டான்.  எல்லாப் பொருட்களும் இழந்துவிட்டு திரும்ப வாங்குவது அவ்வளவு எளிதான காரியமா என்ன!?  ' என் 20 வருட உழைப்பு  தண்ணியோட போச்சே ' என்று ஒரு பெரியவர் சொன்னதாக பத்திரிக்கையில் வாசித்தபோது அந்த வார்த்தைகளின் கணம் நெஞ்சில் ஆணி அறைந்தது  போல இருந்தது.

                                                             

                          அந்த நண்பர் சென்னையில் செம்பரப்பாக்கம் ஏரி அருகே அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் தரைத்தளத்தில் வீடு வாங்கி குடியேறியிருக்கிறார்.  மழை பலமாக பெய்த அந்த  இரவில் தண்ணீர் மட்டம் திடீரென உயர ஆரம்பிக்க இவர் குடும்பத்தோடு மேல் மாடிக்குச் சென்று மேலே இருந்து எட்டிப் பார்க்க,  அவர் கண் முன்னே அனைத்தும் பறிபோனதை  கண்டு பரிதவித்ததைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.  பெரும் சத்தத்தோடு வெள்ளம் அவர் வீட்டை மூழ்கடித்துச் செல்வதை கண்ணீருடன் பார்த்திருக்கிறார்.  சுனாமி வெள்ளம்  போல் தண்ணீர் தறிகெட்டு ஓடியிருக்கிறது.  என்ன நடக்கிறது  என்று அவருக்குத் தெரியவில்லை . ஒரே  இருட்டு.  தண்ணீர் மட்டம் இன்னும் ஏறியிருக்கிறது .  இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடனேயே பொழுதைக் கழித்திருக்கிறார்.


                                 என்ன நடந்தது என்று மறுநாள் தெரிந்தது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் செம்பரப்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டிருக்கிறது.  முழங்கால் அளவு தண்ணீர் மழையினால் ஏற்பட்டது என்றால் வீட்டையே மூழ்கடித்த தண்ணீர் ஏரி திறந்ததினால் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள நீண்ட நேரம் பிடித்தது.  மழையினால்  உலகம் அழியப் போவதாக அவர் நினைத்திருக்கிறார்.  கடல் ஊருக்குள் புகுந்து எல்லோரையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போகிறதோ என்ற மரண பீதியில் நடுங்கிப் போய்விட்டார். வீட்டையே பெயர்த்து எடுத்து விடுமோ என்று அச்சப்பட வைக்கும் அளவிற்கு நீரின் ஓட்டம் இருந்திருக்கிறது.  30, 000 கன அடி தண்ணீர்  திறந்ததாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.  85,000 கன  அடி  திறந்து விடப்பட்டிருக்கலாம்  என்று அனுபவம் உள்ளோர் சொல்கிறார்கள்.  ஏரி  உடைந்திருந்தால்  லட்சக்கணக்கானோர்  அழிந்து போயிருப்பார்கள்.


                                    இரவு இரண்டு மணி அளவில் நாய்களின் மரண ஓலம் அதிகமாய் கேட்க எட்டிப் பார்த்தால் ஆயிரக்கணக்கான நாய்கள் கத்தியபடியே அடித்துச் செல்லப்படுவதை  கண்டார்.  அவருடைய அனுபவத்தை என் கசின் விவரிக்க  விவரிக்க  சினிமா போலவே என் கண்களில் அந்தக் காட்சி தெரிந்தது.

                                 வளர்ப்பு பிராணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.  ஆயிரக்கணக்கில் மனிதர்களைக் காணவில்லை. சில பிணங்கள் வெள்ளத்தில் மிதந்து போயின.  அரசிடமிருந்து ஆறுதல் கூட வரவில்லை.  சேரி மக்கள் என்று யாரை தாழ்மையாக மக்கள் நினைத்து வைத்திருந்தார்களோ அவர்கள்தான் ஓடி ஓடி உதவி செய்ய வந்தார்கள். உண்மையான ஹீரோக்கள் யார் என்பது இளைய தலைமுறைக்குத் தெரிய வந்தது.  சேரிப் பகுதியிலிருந்து  வந்த இளைஞர்கள் படகுகளில் சென்று எத்தனையோ மனிதர்களையெல்லாம்   காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். செத்துப் போயிருந்த அன்பு, பரிவு, கருணை,  இரக்கம் , நேசம் , மனிதம் எல்லாமும் கூட காப்பாற்றிக் கரை சேர்க்கப்பட்டன . சினிமாவில் நல்லி எலும்பு கடித்து நாற்பது பேரை பந்தாடிக் காட்டிய நடிகர்  ராஜ்கிரண் கழுத்தளவு தண்ணீரில் காப்பாற்றப்பட்ட காட்சி யதார்த்தத்தை உரைத்தது.  மழைக்கு முன்னாள்  இளம் பெண்களால் பொறுக்கிகளாக பார்க்கப்பட்ட சில இளைஞர்கள்  ஓடி ஓடி எல்லோருக்கும் உதவி செய்ததை வைத்து ஹீரோக்களாக பார்க்கப்பட்டார்கள்.  ஹீரோ ஜீரோ ஆனதும் ஜீரோ ஹீரோ ஆனதும் மழை  கற்றுக் கொடுத்தது. 

                                                       
                                                   

                                      சேரி மக்கள் பலரும் தங்கள் குடிசைகள்  முழுவதையும் இழந்து விட்டார்கள். ஆனாலும் மழையிலும் மற்றவருக்கு முகம் சுளிக்காமல் உதவிகள் செய்திருக்கிறார்கள். ' எல்லாம் இழந்துவிட்டு உதவி செய்ய  எப்படி உங்களால் முடிகிறது ? ' என நிருபர் ஒருவர் கேட்டதற்கு , ' இதற்கு முன்னால்  எங்களிடம் என்ன இருந்தது இழப்பதற்கு? ' என்று மிகவும் சாதாரணமாக ஒரு இளைஞர் கூறியிருக்கிறார் . விளிம்பு நிலை மனிதர்களின் நிலை இன்னும் முன்னேற்றம் காணாத நிலையில்தான் இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் .
                                     

                              வெள்ளம் வடிந்தது. இயல்புநிலை திரும்பியது. தண்ணீர் கிடந்த பகுதியெல்லாம் சேறும் சகதியுமாய் ஆனது.  தொண்டுள்ளங்கள் உணவாய் உடையாய் கொடுத்த உதவிகளை சில நல்லுள்ளங்கள் பிடுங்கி , ' அமைச்சர் வராமல் ஒருத்தரும் எதுவும் கொடுக்கக் கூடாது '  என்று சொல்லி சகதியில் தூக்கி எறிந்ததை நினைத்து நெஞ்சு வலித்தது.

                                 ' எங்க ஏரியாவுக்கு 2000 உணவுப் பொட்டலம் கொடு ' என்று அரசியல் கைக்கூலிகள்  தொண்டு செய்தவர்களை அடித்துக் காயப்படுத்திய காட்சியை தொலைக்காட்சியில்  பார்த்து  கோபம் தலைக்கேறியது.

                                 அத்தியாவசியத் தேவைக்கான  பொருட்களைப்  பிடுங்கி  'ஸ்டிக்கர்' ஒட்டி அனுப்பிய குண்டர் படையின் கூத்துகள் வேதனை அளித்தது.  மழை வெள்ளத்திற்குப் பயந்து வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றவர்களின் வீட்டை சிலர் கொள்ளையடித்திருக்கிறார்கள்.  சில வீடுகளில் ஆண்கள் மட்டும் வீட்டை பாதுகாத்துக் கொண்டு கிடந்திருக்கிறார்கள். தப்பியோட முடியாத வயதானவர்களும் நோயாளிகளும் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள்.  நாள் முழுவதும் கடும் வேலை பார்த்துவிட்டு சம்பாதித்ததை அரசு டாஸ்மாக்குக்கே கொடுத்துவிட்டு நிறைந்த குடி போதையில் குடிசைகளில் படுத்துக் கிடந்தவர்களை எழுப்பக் கூட நேரமில்லாமல் போனதால் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்ற வெள்ளத்தில் அவர்கள் பிணங்களாக மிதந்து போன கதை அதிகம் வெளியில் சொல்லப்படவில்லை.  எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று சிலர் பொருட்களின் விலையை  பத்து  மடங்கு விலையேற்றம் செய்து லாபம் பார்த்திருக்கிறார்கள்.  இன்னும் பல கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.  ' போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று எளிதாக பேசிவிட்டுப் போவது போல ' பேரிடர் என்றால் அழிவு இருக்கத்தான் செய்யும் '
 என்றும் அடுத்து பேச்சு வரலாம் . சாதாரண வார்த்தைகள் . ஆனால் அதனால் ஏற்படும் வலி பெரியது.


                              பேரிடர் என்று பெயர் சூட்டி என்ன பயன்?  இது யாரால் விளைந்தது? இத்தனை அழிவுகளுக்கு   யார் காரணம் ?  இயற்கையா? மழையா?  வடி நீர்  கால்வாய்களை மறைத்து வீடு கட்டிய மனிதர்களா?வழிப்போக்குகளை அடைத்துக்  கொண்ட பிளாஸ்டிக் குப்பைகளா? ஏரிகள், கண்மாய்கள்,குளங்கள் , அணைகள் இருந்த இடங்களிலெல்லாம் வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கிய அரசு அதிகாரிகளா? அந்த வீடுகளைக் கட்டித்  தந்த பில்டர்களா?  சொந்த வீடு வாங்கும் ஆசையில் அடுக்கு மாடி வீடுகளுக்குக் குடியேறும் மனிதர்களா? முகத்துவாரத்தை மட்டுமல்ல கண்மாய், கால்வாய், ஏரிகளை தூர் வாராத அரசா? எந்த முன்னறிவிப்புமின்றி ஏரியை திறந்துவிட்ட அதிகாரிகளா? அவர்களை ஆரம்பத்திலேயே அணை திறந்து விட  உத்தரவு பிறப்பிக்காத தலைமைச் செயலரா? அவருக்கு உத்தரவு பிறப்பிக்காத தலைமையா?


                               இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யார் பதில் சொல்வது? இந்தக் கேள்விகளை யார் எங்கே கேட்பது என்றே தெரியவில்லை.  மக்களுக்கு அந்த அதிகாரம் உண்டா?  ஊடகங்கள் அதை எடுத்துரைக்கலாம். இந்த விசயத்தில் எல்லா ஊடகமும் பத்திரிக்கைகளும் ஓரணியில் நின்று கேள்விகள் எழுப்ப வேண்டும் . ஆனால் இடித்துரைக்க வேண்டிய  பெரும்பான்மையான தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் ஆளும் அரசுக்கு துதி பாடும் பரிதாபமான நிலைக்கு ஆளாகியிருக்கின்றன .  ஒரு அரசு செய்ய வேண்டிய கடமைகளைச்  சொல்வதை விடுத்து  எதிக்கட்சித் தலைவர்களை  கிண்டலும் கேலியும் பேசி யாரை திருப்திப்படுத்த முயல்கிறார்கள் என்றே தெரியவில்லை.


                                இடரும் துயரும் நிரந்தரமல்ல . பெரிய அழிவை சந்தித்தாலும் மதம் அழித்த மனிதம் பல இடங்களிலும் இருந்ததை சென்னை மக்கள் சந்தித்து விட்டார்கள். அதுவரை யாரென்றே தெரியாத அடுத்தடுத்த  வீட்டுக்காரர்கள்  சினேகமாக சிரிக்கவும் உதவவும் செய்திருக்கிறார்கள்.   நம்பிக்கை  ஒளி  படர்ந்திருக்கிறது .  என்ன நேர்ந்தாலும் இனிமேல் சமாளித்து விடுவார்கள்.   உடம்பில் ஏற்பட்ட ரணங்களை விட மனசில் ஏற்பட்ட ரணங்கள் ஆற பல காலம் பிடிக்கும் .  ரணங்கள் அழியாத  வடுக்களாக மாறிவிட்டன.  செய்யப்பட்ட  அலட்சியங்களும்  அலட்டல்களும் மக்களுக்கு படிப்பினையை தந்திருக்கிறது. இலவசங்களுக்கு மதி மயங்கி  ஓட்டு போடும் பொம்மைகளாக  இனி மாறிப்போக  மாட்டார்கள். 


       
     
                                     

Monday 23 November 2015

இசை ராட்சஷன் - 13 ( The Musical Legend )


இளையராஜா பற்றி  இணையத்தில் கொட்டிக் கிடக்கும் செய்தி பொக்கிஷங்களிலிருந்து  சில  வித்தியாசமான  செய்திகளைப்  பகிர ஆசைப்படுகின்றேன் ,

                                                       







*பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் அவர்களை பர்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா கடந்த ஆண்டு நடந்தது. விழாவிற்கு இசைஞானி இளையராஜாவோடு மெல்லிசை மன்னரும் கலந்து கொண்டார்.. மேடையின் பின்புறமிருந்த தனி அறையில் அவருக்காக காத்துக்கொண்டிருந்தார் இளையராஜா அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் உள்ளே வர, ‘அண்ணா வாங்க..’ என்று எழுந்து சென்று கையை பிடித்து வரவேற்றார் இசைஞானி. “ராஜா நலம்தானே வந்து ரொம்ப நாழியாச்சா” என்றார். “பராவாயில்லண்ணா” என்று இளையராஜா சிரிக்க எம்.எஸ்.வியும் சேர்ந்து சிரித்தார். “ஹெல்த்தை பார்த்துக்கோங்க ராஜா” என்று எம்.எஸ்.வி சொல்லவும், “நாம எப்படிண்ணா ஹெல்த்தை பார்த்துக்க முடியும் ஹெல்த் தான் நம்மை பார்த்துக்கணும என்று பதில் கொடுக்க, மனம் விட்டு சிரித்தார் மெல்லிசை மன்னர். விழா மேடைக்கு செல்லும்போது இசைஞானி, “அண்ணனை பார்த்து கூட்டிட்டுப்போங்கள்” என்று வழிவிட்டு பின்னால் நின்று கொண்டார்.




**அண்ணன் பாவலர் வரதாரஜன் அவர்களோடு இளையாராஜா கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த சமயம். திருச்சியில் கச்சேரியை முடித்து விட்டு மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள கம்யூனிஸ்ட் நண்பர் வீட்டில் தங்கியிருக்கின்றனர். அப்போது இளையராஜா வீட்டு முன் கட்டிலைப்போட்டு படுத்திருக்கிறார். தூரத்தில் புதியபறவை படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிற்து. “எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது” என்று வயலின்கள் கூட்டமாய் குரல் எழுப்ப அதில் லயித்துப் போகிறார் இளையராஜா . ' இசையமைத்தால் இப்படி இருக்கணும்  ' என்று மனதுக்குள் விதைபோட்டு வைக்கிறார்.


அந்த லட்சியம்தான் பிறகு ஒரு நாள் மெல்லத்திறந்தது கதவு படத்திற்கு அவரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை காலம் இளையராஜாவுக்கு கொடுத்தது. மெல்லிசை மன்னரை தன்னுடைய குருநாதர் இடத்தில் வைத்து பார்த்த இளையராஜாவுக்கு எம்.எஸ்.வியின் மறைவு பேரிழப்பு.

**இளையாராஜா அவர்கள் நிற்பதற்கு நேரமில்லாமல் பரபரப்பாக இருந்த எண்பதுகளி்ன்போது இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தன்னுடைய படத்திற்கு இசைய்மைக்கச்சொல்லி் இளையராஜா அவர்களை சந்திக்க ஏவி.எம். ஸ்டுடியோவிற்கு வந்து காத்திருந்தார். இந்த தகவல் ராஜா சாருக்கும் சொல்லப்பட்டது. ”இருக்கட்டும்” என்று மட்டும் சொல்லி விட்டு வேலையில் கவனமாக இருந்தார். அன்று முழுவதும் ஸ்ரீதரை ராஜா சார் சந்திக்கவேயில்லை.இப்படி இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் ஸ்ரீதர் சாருக்கு கோபம் வந்து விட்டது. விஷயம் ராஜாவிடம்  சொல்லப்பட்டது. ஒலிப்பதிவு கூடத்திலிருந்து வெளியே வந்தார் ராஜா . 



    “ நான் கடந்த மூன்று நாளா வந்து போயிகிட்டிருக்கேன். நான் யார்கிட்டேயும் இது போல போய் நின்னதில்லை. உங்க கிட்டதான் வந்திருக்கேன்” என்று கொஞ்சம் கோபத்துடன் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர் .  உடனே இளையராஜா, " மூன்று நாளும் நான் உங்களை வரச்சொல்லவில்லையே சார் ” என்று சொல்லவும் அங்கிருந்த அத்தனைபேரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். மிகப்பெரிய இயக்குனர் ஸ்ரீதர் அவரிடம் இப்படி யாரும் பேசியதில்லையே என்று  எல்லோருக்கும்  அதிர்ச்சி.




 ராஜா  பேச ஆரம்பித்தார்.  ” உங்கள் எல்லா படத்திற்கும் அண்ணன் எம்.எஸ்.வி எவ்வளவு அருமையான பாடல்களை போட்டுக்கொடுத்திருக்கிறார். அவரை விட்டு விட்டு என்கிட்ட ஏன் வந்தீங்க? ” என்று கேட்கவும் ஸ்ரீதர் ஆடிப்போய் விட்டார். தொடர்ந்து ராஜா ,  “அண்ணன் இசை வேண்டாம்னு நீங்க நினைச்சதாலதான் நான் சந்திக்கவில்லை ” என்று சொன்னார். அதன்பிறகு பல சமாதானங்கள் செய்த பிறகே இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொண்டார்.


**  "இசைஞானி இசையமைத்த முதல் பாடல் "

                அப்போது இசைஞானி இளையரஜா அவர்கள் ஜி.கே வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்திற்கான இசையமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலுக்கான டியூனை இயக்குனர் தேவராஜ் மோகனிடம் வாசித்து காட்டினார் ஜி.கே.வி. ஆனல் அந்த டியூன் இயக்குனருக்கு பிடிக்க வில்லை.

       
            நேரம் கடந்து கொண்டே போகிறது. பல டியூன்களை போட்டும் இன்னும் திருப்தி அடையவில்லை இயக்குனர். அப்போது சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்போஸிங்கில் அமர்ந்திருக்கிறார்கள். உடனே இயக்குனர் தேவராஜ் மோகன் ஜி.கே.வெங்கடேஷிடம் ,  “தம்பி ராஜா எனக்கு ஒரு டியூன் வாசிச்சு காண்பிச்சார். அது எனக்கு பிடிச்சிருந்தது” என்று சொல்லவும், “அப்போ அதையே வெச்சுக்கலாம்” என்று ஜி.கே.வி. ஓகே சொல்லிவிட்டார். உடனே பாடலை யாரை வைத்து எழுதச்சொல்லலாம் என்று யோசித்த போது கவிஞர் முத்து லிங்கத்தை வைத்து வைத்து எழுத முடிவானது. உடனே இளையரஜா அவர்கள் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வீட்டிற்கே சென்று அந்த டியூனை வாசிக்க வாசிக்க அவர் பாடல் வரிகளை எழுதிக்கொடுக்கிறார்.


           
                கிராமிய மெட்டுகளை அடிப்படையாக கொண்ட அந்த பாடல் ஒரு ராகமாளிகையாக ஒலிக்கும். “தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்த பொன்னியம்மா” என்று நதிகளின் பெருமை கூறும் அந்த பாடல்தான் இசைஞானி இளையரஜா இசையமைத்த முதல் பாடல் .  ஆனால் படத்தின் டைட்டிலில் பெயர் இருக்காது.  இந்த படம் வெளியாகும்போது இளையராஜா அவர்களின் மூத்த சகோதரர் பாவலர்  வரதராஜன் அவர்கள் படம் வெளியான திரையரங்குகளில் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை பறக்க விட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அன்று பறக்க ஆரம்பித்த இளையராஜாவின் பாட்டுக்கொடி இன்னும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.


 ** ஒரு விழாவில் இளையராஜா பேசியது .


" சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்தபோது இசைக்கருவிகளுடன்  இசைத்துக் காட்டியபோதும் எங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை.  ஆனால் மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடிக் காட்டியபோது , பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் எந்தக் கணக்கில் என்னை அறிமுகப்படுத்தினார் எனத் தெரியாது. "  



                                       
** விஜி  மேனுவல்   இந்தியாவின் தலை சிறந்த கீபோர்ட் பிளேயர்  மற்றும் பியானிஸ்ட் .  ஹன்டல்  மேனுவல்  என்பவரின்  மகனும் மாணவரும்  ஆவார். இளையராஜாவோடு  நாற்பது ஆண்டுகள்  வேலை செய்திருக்கிறார்.     பாஸ் கிடார் , ட்ரம்ஸ் , கீபோர்ட்  வாசிப்பதில்  வல்லவராக  விளங்கியதால்  சிங்கப்பூரில் உள்ள  ஒரு ராக் பேண்ட் அவரை  சேர்த்துக் கொண்டது.  இந்தியாவிலிருந்து முதன் முதலாக சென்ற  ராக் ஆர்கனிஸ்ட்  அவர் மட்டுமே! அப்போது அவர் வயது பதினேழு.  அந்த ராக் பேண்ட் இந்தியா முழுக்க பயணித்தது; இசைத்தது.  இதற்கிடையில்  சினிமாவின் இசைத் துறை அவரை உபசரித்தது.  இசை அமைப்பாளர்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை  அவரே பகிருவதை கேட்போம்.


"  ஒரு பாஸ் கிடாரிஸ்டாக ஷ்யாம் ஜோசப்  என்ற இசையமைப்பாளரிடம் என் இசைப் பயணத்தை ஆரம்பித்தேன் .  பாஸ் கிடார் வாசிப்பில் புதிய யுக்திகளை கையாண்டேன். அது எனக்கு எம்.எஸ்.வி. , கே. வி. மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களிடமும்  வேலை செய்யும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது.  அதன் பிறகு ஜி. கே. வெங்கடேஷ் அவர்களிடம் பணியாற்றியபோதுதான் இளையராஜாவை சந்தித்தேன்.  Acoustic guitarist ஆக அவர் இசைக் குழுவில் இருந்தார்.  இளையராஜா இசை உலகின் magic என்றே சொல்லலாம்.  அவரின் அபார இசைத்திறமை  எனக்கு ஆச்சரியமூட்டியது.  இளையராஜாவிற்கு  Pink Floyd , Led  Zeppelin , The  beetles , Jimi  Hendrix  போன்ற பல இசைக் குழுக்களின் இசை ஆல்பத்தை அறிமுகம் செய்தேன் . மெலடி மெட்டுக்களுக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை chords பலவற்றை பகிர்ந்து கொண்டோம்.  Western music  notation எழுதுவதில் அவருக்கிருந்த அபாரத் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  ' வரப்பிரசாதம்  '  என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த கோவர்த்தன் என்ற இசையமைப்பாளர்  சில வேலைகள் காரணமாக  இளையராஜாவை  re-recording செய்யச் சொல்லிவிட்டுப் போனார்.  Major 7th chord  மற்றும் minor 7th  chord  இரண்டுக்கும் இடையே அமையுமாறு அற்புதமான theme music ஒன்றினை இளையராஜா அமைத்ததைப் பார்த்து நான் அசந்து போனேன். "


அதன் பிறகு Jude David என்பவர்  Music notation எழுதுவதில் இளையராஜாவிற்கு  உதவி செய்திருக்கிறார்.  கோவர்த்தன் மாஸ்டரிடமிருந்து  ஜதி , தாளம் , தமிழில் ஸ்வரங்கள் எழுதுதல் போன்றவற்றையும் இளையராஜா தெளிவாகக்  கற்றறிந்தார் . இந்தச் செய்திகளை பகிரும் விஜி மேனுவல் இன்னும்  தொடர்கிறார்.


"  சில படங்கள் இளையராஜாவோடு பணியாற்றிய பிறகு இளையராஜா என்னை அழைத்து அவருடைய மைத்துனர் சசி என்பவருக்கு பாஸ் கிடார் கற்றுக் கொடுக்கச் சொன்னார். நானும் பல நாட்கள் செலவழித்து கற்றுக் கொடுத்தேன். சசி நன்கு தேறிய  பிறகு  நான் கீபோர்ட் பக்கம் நகர்ந்து விட்டேன் .  அதன் பிறகு பல  ஆண்டுகள் ஆர்கனிஸ்டாக  இளையராஜாவோடு பணி  புரிந்தேன்.  பிரியா படத்தில் ' டார்லிங் டார்லிங் ' பாட்டுக்கு முன்பு ஆரம்பிக்கும் பாஸ் கிடார் பீஸ் ,  ராஜ பார்வை படத்தில் கமல் தனியாக வாசிக்கும் வயலினை நரசிம்மன் இசைக்க அதன் கூடவே வரும் கீபோர்ட் இசையை நான் வாசித்தது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். இளையராஜா இல்லாமல் அது சாத்தியமாய் இருக்காது. "


                                    
                                               


                      இளையராஜா பற்றி இன்னும் பல செய்திகள் குவிந்து கிடக்கின்றன . இந்தப் பதிவிலேயே எல்லாவற்றையும் பகிர முடியாது.  ராட்சசன் இன்னும் பல காலம் வளர்ந்து கொண்டுதான் செல்லும் .  அவருடைய  பாடல்களுக்குள் செல்வோம்.

                   
                         1979 ல் வந்த படங்களில் ' சக்களத்தி '  என்றொரு படம் பார்த்து விட்டு வீடு திரும்புகையில் பக்கத்துக்கு வீட்டு  பாட்டிகள் இரண்டு பேர்   ' என்ன சினிமா பார்த்தாய் ? '  என்று கேட்டார்கள் . நான் படத்தின் பேரைச் சொன்னவுடன்  பலமாக சிரித்தார்கள்.  எனக்கு கோபம் வந்ததால் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.  நீண்ட நாட்கள் கழித்துதான் தெரிந்தது .  அவர்கள் இருவருக்கும் ஒரே  கணவன்.  சக்களத்திக்கு அர்த்தம் அதன் பிறகு  தெரிந்தது.


                         அந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இருந்தாலும் ' என்ன பாட்டு பாட ' , ' வாடை வாட்டுது '  என்ற இரு பாடல்கள் ஹிட் ஆகின.  இரண்டையும் இளையராஜாவின் இளமைக் குரலில் கேட்கலாம்.  புலமைப் பித்தன்,  முத்துலிங்கம் இருவரும் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள் .

                          ' என்ன பாட்டு பாட ....என்ன தாளம் போட..'  என்ற பாடல் டைட்டில் பாடல்.  மாட்டு வண்டி ஒட்டிக் கொண்டே நாயகன் பாடுவது காட்சி .  அதற்கேற்றார்போல  ராஜா  மாடுகள்  ஓடும்போது  அசையும்  கழுத்துச் சலங்கையின் ஒலியை தாளமாக வைத்து  மிகவும் பொருத்தமாக பாடல் இசைத்திருப்பார்.  அந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரபரப்பாக ஒலிபரப்பப்பட்டது.  அசையும் சதங்கையும் இசையும் இந்தப் பாட்டைக் கேட்டால் நம்மையும் தாளம் போட வைக்கும்.  ஷெனாய் பயன்பாடு இந்தப் பாட்டில் அதிகம் .  மாட்டைப் பார்த்துப்  பேசுவதை பாடலாக மாற்றியிருப்பார்கள்.  கிராமத்தில் மனிதர்கள் விலங்குகளோடு பேசி பழகிக்  கொள்ளும் பாச உணர்வுகளை  எளிதாக  புரியும்  வண்ணம்  பாடல்  கொடுக்கப்பட்டிருக்கும். எளிமையான நாட்டுப்புறப்  பாடலை இளையராஜா இனிமையாக கொடுத்திருக்கிறார்.  மாயமாலகௌளை  என்ற ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 

                     
                                  
                                                 


                                    ' வாடை வாட்டுது ...ஒரு போர்வை கேட்குது ..' என்ற பாடல் பிரபலம் ஆன அடுத்த பாடல் என்று சொல்லலாம்.  வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் ஒரு கிராமத்து நாயகன்  மனைவியுடன் கொண்ட ஊடலால் விரக தாபத்தோடு  எழுப்பும் மன உணர்வுகளை பாட்டாக பாடுவதை இளையராஜாவின் இசை அப்படியே படம் பிடித்துக் காட்டும்.  சூழலுக்கு மிகவும் பொருத்தமான பாடல் . இரவின் தனிமை , கிராமத்துச சூழலின் ஓசைகள் , ராக்கோழி சப்தம், பூச்சிகளின்  ரீங்காரம் என பின்னணியை இசைக் கருவிகளிலேயே  கொண்டு வரும் அந்த கற்பனையும் லாவகமும் இளையராஜாவிற்கு கை வந்த கலையல்லவா!   கண் மூடி கேட்கும்போது  ஒரு குளிரான இரவை  நாமும் உணர்வோம் ; இனம் புரியா சோகத்தில் நாமும் உழல்வோம் .


                                    
                                            


                          ' தர்மயுத்தம்  '  வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் எனக்கு ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய படம்.  ரஜினியின் நடிப்பை வெகுவாக ரசித்த படம்.  இளையராஜாவின் மிரட்டலான  இசை என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.  பௌர்ணமி  இரவில் நாயகனுக்கு ஏற்படும் வெறித்தனத்தை படு மிரட்டலாக எடுத்திருப்பார்கள்.  அதற்கு ராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசை படம் பார்க்கும் எல்லோருக்கும் நிச்சயம் கிலியை  ஏற்படுத்தும்.  சிகப்பு ரோஜாக்கள் திரைப்பட இசையைப் போலவே இந்தப் படத்திலும்  அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு பின்னணி இசை மிரட்டும்.

                        இந்தப்  படத்தில் இரண்டு பாடல்கள் மெகா ஹிட் .  அண்ணன் தங்கை பாசத்திற்கு சிவாஜிக்குப் பிறகு அதிகம் பாராட்டப்பட்டவர் ரஜினி . தங்கைக்காக  ரஜினி பாடுவதாக ஒரு பாடல்  இசைக்கப்பட்டிருக்கும் . கண்ணதாசனின் அழகிய வரிகளில்,  மலேசியா வாசுதேவனின்  சுத்தமான உச்சரிப்பில்,  தெளிந்த குரலில்  ' ஒரு தங்க ரதத்தில்  பொன் மஞ்சள் நிலவு  '  என்ற அந்தப் பாடல் இப்போதும் புத்துணர்வை ஊட்டும்.  நினைவலைகள் பின்னோக்கிப் போகும் .  மகத்தான அந்த இசை நெஞ்சத்தை தாலாட்டும்.   மோகன ராகத்தில் இதயத்தை வருடும் அழகிய பாடல்.  தங்கைக்கென்று  இசைக்கப்பட்ட பாடல்களில் இதுவும் சாகா வரம் பெற்ற பாடல் என்று சொல்லலாம். 



                         மூன்று சரணங்கள் மூன்று  இடையிசையில்  வித்தியாசம் காட்டி நம்மை இசை இன்பத்தில் இளையராஜா திளைக்க வைத்திருப்பார்.  பாட்டின் ஆரம்ப இசை பல்லவியின் மெலோடியை கிடார்  கார்ட்ஸ் , மாண்டலின் கொண்டு ஆரம்பித்து மெலிதான ட்ரம்ஸ் சேர்த்து குழலால் ஆலாபனை செய்து கூட்டமாய் வயலின் சேர்க்கும் 
அழகிலே நாம் ஊஞ்சலாட ஆரம்பிக்கலாம்.  பாடல் முடியும் வரை ஊஞ்சலாடிக் கொண்டேதான் இருப்போம். அது தெரிந்துதான் இயக்குனர் ஆர். சி . சக்தி  காட்சியிலும்  ஊஞ்சலாடலை சேர்த்திருப்பார் போலும்!

                                  
                                             


                          சரணத்தில்  ' தங்கையல்ல ......' என்று  ஒரு ஆலாபனை  கொடுத்து மீண்டும் '  தங்கையல்ல  தாயானவள்  ..கோடி பாடல் நான் பாட பொருளானாள் '  என்று முடிக்கும் இடம் சுகமானது.  சிறு வயதில் பாடிக் கொண்டு அலைந்தது எல்லாம் இப்போது  நினைவுப்பறவையாய் சிறகடிக்கிறது .


                         அதே படத்தில்  ' ஆகாய கங்கை பூந்தேன் மலர்ச்சூடி ' என்ற காதல் டூயட் பாடலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா!? மத்யமாவதி ராகத்தில் எம்.ஜி . வல்லபன்  எழுதிய பாடலுக்கு வாசுதேவனும் ஜானகியும் இணைந்து சுவை கூட்டி கொடுத்திருப்பார்கள்.  அற்புதமான மெலோடியில் இளையராஜாவின் முத்தாய்ப்பான
பாடல்.  ஜானகி ' தா...தான தனா...'  என்ற  ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்கும்போதே  பரபரப்பு  நம்மையும் தொற்றிக் கொள்ளும் . ' தேன் வந்து  பாயுது காதினிலே ' என்பது மொழிக்கு மட்டுமா ...மொழியோடு சேர்ந்த இசைக்கும்  பொருந்தும்; இந்தப் பாடலுக்கும் பொருந்தும்.  இளையராஜாவை ' ராக தேவன் ' என அழைப்பதில் தவறேதுமில்லை.  பாடல் கேட்கும்போது குளிர்ந்த காற்று நம்மை மென்மையாய் தழுவிச் செல்லும் உணர்வு பூப்பதில் அதியசமும் இல்லை.

                         ஜானகியின் ஹம்மிங் முடிந்து பெல் ஒலியுடன் வித்தியாசமான பல இசைக்கருவிகளின்  நாதத்தோடு பல்லவி ஆரம்பிக்கும் லாவகம் மிகவும் சுகமானது.  எந்தப் பாடலாக இருந்தாலும்  ஒரு  பாடலின் போக்கிற்கு  instrumentation  இப்படிதான் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் இளையராஜாவிற்கு நிகர் அவரே !  சமீபத்தில் எஸ்.பி.பி அவர்களே  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதைச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு செய்யப்பட்டிருக்கும்   instrumentation  மிகப் பிரமாதம்.  பல்லவியில் வாசு பாடி முடிக்க ' குங்குமத் தேரில்  ' என்று ஆரம்பிக்கும் ஜானகியின் இளமை கொஞ்சும் குரலை வெகுவாக ரசிக்கலாம்.   புதுமையான  இரண்டு இடையிசைகளுக்காகவே  பலமுறை இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன். இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் சேர்ந்து இசைகருவிகளின் கூட்டமும் சங்கமிக்கும் அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்பம் தரும்.  

                                   
                                                

                        இடையிசை முழுவதும் பல கருவிகளின் சங்கமம் இருந்தாலும் வயலின்களின் ஆக்கிரமிப்பு எல்லாவற்றையும் விட சற்று தூக்கலாகவே தெரியும் . இப்படிப்பட்ட இசைக்கோர்வைகளை  ஒன்றிணைத்து  இசை மாலையாக தொடுக்கும் இளையராஜாவின்  கற்பனா சக்தியை  எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.  பாடல் கேட்டுக் கொண்டிருக்கும்போதே நமக்கும் இறக்கை முளைத்து பறக்கும் தேவதைகள் ஆகிப் போவோம் .  ராஜாவின் இசைக்கு நம்மை தேவதையாக்கும் வல்லமை உண்டு.  இசையை கேட்கத் தெரிந்தவரல்ல உணரத் தெரிந்தவருக்கே அது புரியும் .  

                        இசைக்கத் தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு.  இசையின் வேர்களை இதயத்தில் பரப்பி  ஆழ்மனத்தின் ஆணிவேராய்  ஊன்றி நமது ஆன்மாவையே  அசைத்துப் பார்க்கும் இசைக் கலைஞர்கள் ஒரு சிலரே!  அதில் இளையராஜாவும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  


....................தொடர்வேன் .....................







                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   





Saturday 10 October 2015

பொய்களில் ஒளியாத உண்மைகள்



                  வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியிலும் அதன் அர்த்தம் புரிந்து வாழ்தல் என்பது அவ்வளவு கடினமான காரியமாக பலர் நினைக்கிறார்கள் . எப்போதும் இன்பம் வேண்டும்; நினைத்ததெல்லாம் பெற வேண்டும்;  அத்தனையும் கிடைக்கவேண்டும் ; ஆனந்தமாய் வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பமாய் இருக்கிறது. கொஞ்சம் சலனம் ஏற்பட்டாலும் அதை பெருந்துயரமாய் எண்ணி கலங்குதலும் வருந்துதலும் இந்தக் காலத்து இளைஞர்கள்  பெரும்பான்மையோருக்கு  வழக்கமாகி வருகிறது.

               குறிப்பாக பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களைச் சொல்லலாம் . சிறு ஏமாற்றத்திற்குக் கூட தாங்கும் தன்மையை மனது இழந்து , திரும்பவும் வராத இடத்திற்கே போகத் துடிப்பது வெட்கக் கேடான விஷயம் . சட்டென்று வானிலை மாறி பட்டென்று பெய்யும் மாரியைப்போல நினைத்தவுடன்  தவறான முடிவெடுக்கத் துணிகிறார்கள். தற்கொலை எண்ணங்கள் தலைதூக்கி விடுகின்றன.

                                                     

                         

                    வாழ்க்கை முழுவதும் வசந்தம் மட்டும் வீசி விடுமா என்ன!? சின்னச் சின்ன கஷ்டங்களும் நஷ்டங்களும் தோல்விகளும் ஏமாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். எதிர்த்து நின்று போராடும் போராட்டக்  குணங்களை வளர்த்துக் கொள்ளாமல் துவண்டு போகும் மன நிலையை வளர்ப்பது ஒரு பாவச் செயல் . இருளுக்குள் சிக்கிக் கொண்டு திசை தெரியாமல் போனதைப் போல் திரியும் இந்த இளைஞர்களை யார் வழி நடத்துவது?

                       பெற்றோரா.... ஆசிரியரா... நண்பர்களா ...உறவினரா..சமூகமா ...ஊடகமா... அரசாங்கமா ...யார் வழி காட்டுவது? பள்ளிகளிகளிலும் கல்லூரிகளிலும் மன வளப் பயிற்சிக்கென்று பாடங்கள் வைக்கப்பட வேண்டும் என்ற  கல்வியாளர்களின் கருத்து காற்றில் காணாமல் போனது. படிக்கவேண்டிய பாடங்கள் தலைக்கு மேல் செல்லும் வெள்ளம் போல வைத்துக் கொண்டு வழிகாட்டும் கல்வி, நன்னெறிக் கல்வி  போன்றவற்றை புகட்டுவதற்கு ஆசிரியர்களுக்கும் நேரம் இல்லாமல் போனதுதான் உண்மை.
ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் செய்தது பணி ; இப்போது செய்வது வேலை . அந்த நிலைமைக்கு ஆசிரியர்கள்  ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.  எப்பாடு பட்டாவது பாடத் திட்டத்தை முடிக்க ஓடுவதே குறிக்கோளாக மாறிப்போனது.

                        தனிப்பட்ட மாணவனை ஆசிரியர் அறிய முடியா அவல நிலை உருவாகிப் போனது.  என் கடன் syllabus முடித்துக் கொடுப்பதே என்ற நிர்ப்பந்தந்ததிலும் ஒப்பந்தத்திலும் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான  கல்வி நிறுவனங்களில்  இன்று இதுதான் நிலை.  ஒவ்வொரு மாணவனும் நல்லொழுக்கத்தில் வளர ஆசிரியரின்  பங்கு  உள்ளது .ஆனால் ஆசிரியருக்கு மட்டுமே பங்கு உள்ளதா என்பது இன்று கேட்கப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

                          சமீப காலமாகத்தான் இளம் பருவத்தினரின் தற்கொலைச் செய்திகள் அதிகமாக பத்திரிக்கைகளில் தென்படுகின்றன.  15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்  அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.  அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட செய்திகள் குறைவாகவே இருந்தன. ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள். சிறு தவறு செய்தாலும் அடி உதை என்று வாங்கிக் கொண்டு திரிந்த பலர் இன்று நல்ல நிலையில் சமூக அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். தங்கள் ஆசிரியர்களை நன்றிப் பெருக்குடன் நினைத்தும் பார்க்கிறார்கள்.  ஆசிரியர்களின் கட்டுப்பாடான கண்டிப்பு  எதையும் தாங்கும் இதயங்களை வளர்த்தது என்பது மிகையல்ல ...உண்மை!


                      ஆனால் இப்போது ஆசிரியருக்கு மாணவரைக் கண்டிக்கவோ சிறு தண்டனை கொடுக்கவோ கூட உரிமையில்லை. கண்டித்தால் அது சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு குற்றமான செயலாக சட்டமிடப்பட்டிருப்பதால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது . அதுவும் மறுக்க முடியாத உண்மை.


                       தற்கொலைச் சாவிற்கான காரணங்கள் மிகவும் அற்பமானவை. தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி,  நண்பனின் புறக்கணிப்பு  , பெற்றோரின் கண்டிப்பு, ஆசிரியரின் அவமதிப்பு, படிப்புக்கேற்ற வேலையின்மை போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக காட்டப்படுகின்றன. சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் மன அழுத்தங்களை வளர்த்துக் கொள்வது கூட ஒழுக்கக்கேடுதான்!

                      இன்று 40 வயதினை கடந்தவர்கள் மேற்சொன்ன எல்லா தோல்விகளையும் கடந்து வந்தவர்களாக இருப்பார்கள்.  ஒவ்வொன்றுக்கும் தற்கொலையே தீர்வு என்றால் 30 வயதை பெருன்பான்மையோர் கடந்து வந்திருக்க முடியாது. காலம் போன போக்கில் வாழ்க்கையை போகவிட்டதும் சட்டையில்  தூசியை தட்டிவிட்டுப் போனதை போல பல இடர்ப்பாடுகளைக் கடந்ததும் கஷ்ட நஷ்டங்களை போராடி வென்றதும் அவர்கள்  சாதாரணமாக சந்தித்திருப்பார்கள்.  இதுவும் கடந்து போகும் என நினைத்ததெல்லாம் மெல்ல நடந்துதான் போனது. காத்திருந்துதான் கடந்து வந்திருப்பார்கள். காலமென்னும் நதியில் பல குப்பைக் கூளங்களோடுதான்  நாமெல்லாம் நீந்திச் செல்ல வேண்டியிருந்தது. இப்போதும் அது ஒரு தொடர்கதை . மேடு பள்ளங்கள் இல்லா பயணமா ?  பிரச்சனைகள் இல்லா வாழ்க்கையா?

                      There is a solution for everything என்ற ஒரு தன்னம்பிக்கை சொற்றொடரைக் கொண்டு எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்று திருப்தி அடையலாம். ஆனால் இளையோர் சிலருக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. தற்கொலையை தீர்வாக  நினைக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் அந்த முடிவினால் மிஞ்சியிருப்பது இழப்பு ஒன்றே!
பெற்றவர் மற்றவர் செலுத்திய அன்பின் தருணங்கள்  அநியாயமாக  வீணாகிப் போவதோடு காலம் உள்ளவரையில் பிரிவை நினைத்து வருந்தும் ரணங்களாகி வேதனையை அவர்களின் வாழ்க்கையோடு ஒட்ட வைத்து விடுகின்றன.


                     ஒரு ஆசிரியையின் மகன் +2  படித்துக் கொண்டிருந்தான் . ஒரு ஞாயிறு காலை வீட்டில் எல்லோரும் சர்ச்சுக்குப் புறப்பட்டபோது  டியூசன் போகவேண்டுமென கூறி  அவர்களோடு செல்ல மறுத்திருக்கிறான்.  மற்றவர்கள் சர்ச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது  தூக்கில் தொங்கிய அவன் பிணத்தைக்  கண்டு அதிர்ந்தார்கள்.  இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

               
                இன்னொரு சம்பவம் .  நல்ல மதிப்பெண்களோடு  நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் தன அம்மாவிற்கு டீ போட்டு கொடுத்துவிட்டு  படிக்கப் போகிறேன் என்று சொல்லி  தன்  தனியறைக்குச் சென்றவன்  நீண்ட நேரம் வெளிவரவில்லை . தூக்கில் தொங்கிப்போனான் . காரணம் தெரியவில்லை.


                 மேற்சொன்ன சம்பவம் இரண்டிலும் பெற்றோர் அறிய முடியாதவாறு   எந்தவிதமான சலனத்தையும் முகத்தில் வெளிக்காட்டாமலேயே  இருந்து அந்த மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டார்கள் . எப்படிப்பட்ட மன அழுத்தம் அவர்களை இம்சை செய்தது என்பது யாரும் அறியாதது.

                 
                  நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் விருப்பத்திற்கேற்ப வளர்க்க வேண்டும் என நினைத்து குழந்தைகளின் கனவுகளை எல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறார்கள் .  தங்களால் அடைய முடியாத உயரத்தை தன்  பிள்ளைகள் எட்டிவிட வேண்டுமென்று  அவர்களை பாடுபடுத்துகிறார்கள்.  புரிபவன் முயல்கிறான்; சகிப்பவன் சங்கடங்களை  ஏற்றுக் கொள்கிறான்;  முடியாதவன்  ஓடிப் போகிறான்;  தாங்காதவன் தன்னையே மாய்த்துக் கொள்கிறான்.


                   எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பகிர்ந்த பழைய செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது.

                 ***   சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது.  வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல . வாசகரின் தந்தை எழுதியது.  தன்னை அறிமுகம் செய்து கொண்டார் . மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். ஓய்வு பெற்றுவிட்டார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப் படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலை பார்க்கிறார்கள். அங்கேயே குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.  இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.


             அவரது பிரச்னை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம் . ஆகவே குளிர் நாடுகளில் சென்று வாழ முடியாது.  அவருக்கு ஆஸ்துமா பிரச்னை உண்டு. பிள்ளைகள்  இரண்டாண்டுக்கு ஒருமுறை கூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்து நாட்கள் தங்குவார்கள்.  உடனே கிளம்பி விடுவார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்து மணி நேரம் பெற்றோரிடம் செலவளித்தால் அதிகம்.  " உங்களின் நூல்களை அதிகம் வாங்கிச் செல்கிறான். நீங்கள் ஏன் இதைப் பற்றி அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான் " என்றார்.


              இம்மாதிரியான குடும்ப விசயங்களில் தலையிடக் கூடாது என்பது என் கொள்கை. ஆனால் அவர் திரும்பவும் மின்னஞ்சலில் வலியுறுத்தியதால்   அவர் மின்னஞ்சலை  அவருடைய மகனுக்கு அப்படியே திருப்பிவிட்டேன்.   அவர் மகன் ஒரு வாரம் கழித்து மிக நீளமான  பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  என்னை அது பல கோணங்களில் சிந்திக்க வைத்தது.
\

                   " நான் திருச்சியில் 22 வருடம் வாழ்ந்திருக்கிறேன்.  ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை.  22 வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப் பற்றி ஒரு நல்ல நினைவு கூட இல்லை" என்றார் அவரது மகன்.


                      அவரது தந்தை அவரை நல்ல பொறியாளராக  ஆக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல். கே. ஜி யில் சேருவதற்கு முன்பாகவே ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.  அம்மாவும் பாடம் மட்டுமே நடத்தினார்கள்.  பள்ளிக்கூடப் படிப்பு , டியூசன் , வீட்டுப்படிப்பு தவிர வேறு  இளைமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக் கிழமை என்றாலும் பாடம் பாடம் பாடங்கள்தான்.  கோடை விடுமுறை வந்தால் ஆங்கில மொழியறிவு சிறப்புப் பயிற்சி , கணிதத் திறமை வகுப்பு என்று ஓட வேண்டும்.  தீபாவளி , பொங்கல்  நாட்களில் கூட கொண்டாட்டம் இல்லை. அப்போதும் படிப்புதான்.

                      "  சில சமயம் இரவில் படுத்து சிந்திப்பேன்.  இளைமைக் காலத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று! எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சி கூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒரு முறை எண்ணிக் கொண்டேன். சரி , ஒன்றிரண்டு துயர நினைவாவது இருக்கிறதா என்று!  அப்படியாவது என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாகமாக தொடர்புபடுத்திக் கொள்ளலாமே  என்று பார்த்தால் அப்படி  ஒரு நினைவும் கிடையாது.  


             வீட்டை விட மோசம் பள்ளிக்கூடம். அது தனியார் பள்ளி.  மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றுத் தரும் செலவேறிய பள்ளி.  அங்கே பிள்ளைகளைச் சேர்க்க வரிசை கட்டி நிற்பார்கள். பள்ளிக்குள் நுழைவது முதல்  வெளியே செல்லும் கணம் வரை ஆசிரியர்கள் கூடவே இருப்பார்கள்.  பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்! அந்தப் படிப்பிலும் சுவாரசியமில்லை . பள்ளிப் படிப்புக்கு வெளியே எதையும் வாசித்ததுமில்லை. யாருமே இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை.  நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை  அச்சு அசலாக அப்படியே திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்  "  என்று எழுதியிருந்தார்.

     
                 அப்படியே பொறியியல் முடித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத்  தெரிந்தது  மனித வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சிகள் நிறைந்தது  என்று!  பயணங்கள், நண்பர்களுடனான  சந்திப்புகள்,  இலக்கிய வாசிப்பு , இசை என்று எதையும்  சந்திக்காமலேயே வாழ்ந்திருக்கிறார்.

                     "  எந்த இடத்தில்  நாம் மகிழ்ச்சியாக  இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம்   படிந்து விடுகிறது.  அதுதான் நமது ஊர் என நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் மிகவும் பிடித்திருக்கின்றன . திருச்சி  எனக்கு அந்நிய ஊராகத் தெரிகிறது.  ஒரே நாளில் ஊர் சலித்து விடுகிறது.  என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரை மணி நேரம் என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது. 22  வருடமும் படி படி என்று மட்டுமே சொன்ன இரு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான் ! அவர்களை நேசிக்க அவர்களைப் பற்றி ஒன்றும் எனக்கு தெரியாது.  பேசுவதற்கோ பகிர்வதற்கோ  ஒன்றுமில்லை.  22 வருடமாக எந்தப் பொது விசயமும் அவர்கள் என்னுடன் உரையாடியதில்லை.  படிப்பைப் பற்றியும் எதிர்காலம் பற்றிய கவலைகளையும் மட்டுமே கொட்டிக் கொண்டே இருப்பார்கள். இப்போதும் என்ன சம்பாதிக்கிறாய் என்ன சேமித்தாய் என்று பயம் காட்ட மட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே , பயணம் செய்யாதே  என்று அவர்கள் வாழ்ந்தது போலவே என்னையும் வாழச் சொல்லுகிறார்கள்.


                     நீங்களே சொல்லுங்கள் . அரை மணி நேரம் பேசுவதற்கு எந்த விசயமும் இல்லாதவர்களிடம் நாம் செயற்கையாக முயன்றாலும் பேச முடியுமா?  முற்றிலும் அந்நியமாகத் தெரியும் ஊரில் எவ்வளவு நாள் வாழ முடியும் ? நன்றிக்காக ஐந்து நாள் இருக்கலாம். அதற்கு மேல் என்ன செய்வது?"என்று மகன் எழுதியிருந்தார்.


                      அதை அப்படியே அவர் தந்தைக்கு  அனுப்பினேன். மீண்டும் அவர் தந்தை  ,  " வரும் தீபாவளிக்காவது வந்து விட்டு போகச் சொல்லுங்கள் " என்று மின்னஞ்சல் அனுப்பினார்.  " தீபாவளி  என்பது இளமையில் கொண்டாட வேண்டிய ஒரு பண்டிகை.  அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்த பின் அந்த நினைவுகளைதான் கொண்டாடிக் கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார்.  நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டுவிட்டீர்கள் என்கிறார் "  என்று பதில் எழுதினேன் .  அவர் ஒரு பதிலும் போடவில்லை.

       
                         வாழ்க்கை என்பது எதிர்காலத்திற்கான  போராட்டம் அல்ல வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதே ! அதற்காகத்தான் பண்டிகைகளும் திருவிழாக்களும் உருவாக்கப்பட்டன. நாளை முக்கியம்தான். ஆனால் இன்று அதை விட முக்கியம் .  ***

               
                                         

                       சுஜாதா குறிப்பிட்டிருக்கும் பெற்றோர் பிள்ளைகள் போல கொஞ்சம் பேர்  நமது தெருவுக்குள்  அல்லது  உறவினர்களில்  அல்லது நண்பர்களில் இருக்கவே  செய்கிறார்கள்.  அவர்கள் எல்லோரும் வாழும்போதே இறந்தவர்கள் ;  இறந்த பின்னும் வாழ்பவர்களாக  முடியாது.


                        பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து ஆளாக்கி வளர்த்து ஏதோ ஊருக்கு தத்துக் கொடுத்து விட்டு  அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் இது போன்ற பரிதாப பெற்றோரின் ஏக்கத்தை ஒரு கவிதை ஒன்றில் வாசிக்க நேர்ந்தபோது மனம் கனத்தது.  


                                              மகனே ............

                                              நீ பிறந்த அன்று

                                              தோட்டத்தில் வைத்தோம்

                                              ஒரு தென்னங்கன்று

                                              எங்கள் வியர்வையில்

                                               நீ உயர்ந்தாய்

                                               நாங்கள் வார்த்த தண்ணீரில்

                                               தென்னை வளர்ந்தது

                                                எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

                                                உனக்கு இன்பம் தருகிறது
                                                   
                                               இங்கே இருக்கும் தென்னை மரம்

                                                எங்கள் இருவருக்கும்

                                                சுக நிழலும் சுவை நீரும் தருகிறது

                                                 ஒரு நாள் ....

                                                  நீ   ஈமெயிலில்  மூழ்கியிருக்கும்போது

                                                எங்களை  ஈ   மொய்த்த சேதி வந்து சேரும்

                                                 இறுதிப் பயணத்தில் நீ இல்லாமற் போனாலும்

                                                 தென்னை ஓலை

                                                 எங்கள் கடைசி மஞ்சமாகும்.
                                                       







                     





Tuesday 8 September 2015

இசை ராட்சஷன் - 12 ( The Musical Legend )




                                          இசைஞானியின் புதுமைகள்

                                               
                                                   
                                       


*  ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ , அழகான லொகேஷன்களோ  வார அல்லது மாதக்கணக்கில்  நேரமோ இளையராஜாவிற்குத் தேவைப்பட்டதில்லை . ' தென்றல் வந்து தீண்டும்போது '
என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்!

*   இளையராஜா வெறும் அரை நாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் ' நூறாவது நாள்,

*   சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரெக்கார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம் . மூன்றே நாளில் ஐந்து இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப் படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது.

*  எல்லோரும் பாடலுக்கான இசையை ஒரு கருவி மூலம் வாசித்துத்தான் காட்டுவார்கள்.  ஆனால் ராஜா மட்டும்தான் பாடலுக்கான இசையை 'பக்கா' நோட்ஸ் எடுத்து இசைக்கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

*   அமிர்தவர்ஷிணி என்ற மழையை வரவழைக்கும் ராகத்தை ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில், ' தூங்காத விழிகள் ரெண்டு ' என்ற பாடல் மூலம்  இசைத்து,  மழையை வரவழைத்தவர்  இசைஞானி.

*   பாடலின் மெட்டும் அதற்கான  100 %  இசைக்கோர்ப்பையும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் முழுமை , ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய்  கையாளும் பாங்கு, இசை ஆளுமை எல்லாமே மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

*   இசைஞானிதான் முதல்முறையாக ரீதிகௌளை  என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார். ' கவிக்குயில் ' படத்தில் '  சின்னக் கண்ணன்  அழைக்கிறான் '  என்ற பாடல்தான் அது!

*   சர்வதேச இசை நுட்பமான  counterpoint  யுக்தியை  முதன் முதலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்  இளையராஜாதான் . உதாரணத்திற்கு பல பாடல்கள் இருந்தாலும் ' சிட்டுக் குருவி  ' படத்தில் ' என் கண்மணி ' என்ற பாடலைச் சொல்லலாம் . வேறு இந்திய இசையமைப்பாளர்கள்  அதற்கு முன்னர் அதை பயன்படுத்தியதில்லை .


*    இந்தியத் திரையிசையில் ' காயத்ரி ' என்ற படத்தில் முதன் முதலாக ராஜா ' ' எலெக்ட்ரிக் பியானோ ' உபயோகப்படுத்தினார்.


*    செஞ்சுருட்டி ராகத்தில் ராஜா இசையமைத்த ஒரே பாடல் ' பதினாறு வயதினிலே '  படத்தில் ' ஆட்டுக் குட்டி முட்டையிட்டு ' என்ற பாடல் .

*  உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் செய்து பார்த்திராத பரீட்சார்த்தமான விஷயம் என்னவெனில்,  வேறு இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து படமாக்கப்பட்ட பாடலின் சவுண்ட் ட்ராக்கை நீக்கிவிட்டு , உதடசைவு , உடலசைவு , காட்சி தேவை அனைத்துக்கும் பொருத்தமான புதிய இசையை உருவாக்கி  அதை வெற்றிக்கனியாக்கி , எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியவர்  இசைஞானி . படம் ' ஹே ராம் ' .

*   முன்பெல்லாம் பின்னணி இசைக்கோர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனர்கள்   இசையமைப்பாளரிடம் வந்தமர்ந்து அந்தப் படத்தில் உள்ளது போல போடுங்கள் , இந்தப் படத்தில் வந்தது போல போடுங்கள் என்று  ஆலோசனை சொல்வார்கள் .  இளையராஜா ஒரு ரீலை திரையில் பார்த்ததும் உடனே இசைக் குறிப்புகளை எழுதி இசையமைத்துக் கொடுப்பார் . பெரும்பாலும் மறுப்பதற்கான வாய்ப்பே இயக்குனருக்கு இருக்காது.

*  ஆசியாவிலேயே  முதன்முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி அவர்களே! சிம்பொனி கம்போஸ் செய்ய குறைந்தது ஆறு மாதமாவது ஆகும் . ஆனால் வெறும் 13 நாட்களில் கம்போஸ் செய்து மற்ற கம்போசர்களை மிரள வைத்தவர் இசைஞானி.

*  குரல் சரியில்லாதபோது  ' காதலின்  தீபம் ஒன்று ' என்ற தம்பிக்கு எந்த ஊரு படப் பாடலை விசிலாலேயே டியூன் அமைத்து  பதிவு செய்து  பின்பு பாடகரை பாட வைத்தார்.

*   படத்தின் கதையை கேட்காமல் சூழ்நிலைகளை மட்டுமே கேட்டு இசையமைத்த படம்  ' கரகாட்டக்காரன் ' .

*  வசனமே  இல்லாத காட்சியில் இசையாலும் பாட்டாலும் அவ்விடத்தை நிரப்பி பார்வையாளரை ரசிக்க வைப்பதில் ராஜா கிரேட் . இரு பாத்திரப் படைப்புகளின் மௌனத்தின் மன உணர்வுகளை பார்வையாளருக்கு தன்  இசையால் புரிய வைத்துவிடுவதில் அற்புத ஆற்றல் கொண்டவர் இளையராஜா . கடலோரக் கவிதைகள் படத்தில் '  தாஸ் தாஸ் ...சின்னப்ப தாஸ் தாஸ் '  ,  ஹே ராம் படத்தில் ' இசையில் தொடங்குதம்மா'  போன்ற பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.

                                                     
   

*    ரீரெக்கார்டிங் செய்வதற்கு முன்னர் ஒரு முறை அல்லது  இரு முறை படத்தை போட்டு பார்த்துவிட்டு , மூன்றாம் முறை திரைப்படம் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிப்பார் . கடைசிக் காட்சி வரை எழுதியதை எல்லோரும் சேர்ந்து இசைத்துப் பார்த்தால் மிகச் சரியாக எல்லா இடங்களிலும் இசை கனக்கச்சிதமாய்  பொருந்தும்படி இருக்கும் .  அந்த அளவிற்கு எந்த இசையமைப்பாளரும் நோட்ஸ் எழுதிவிட முடியாது.

*  இந்தியாவிலேயே பின்னணி இசையை முழு கேசட்டில் பதிவு செய்யப்பட்டு வெளி வந்து ஹிட்டான  படம் இளையராஜாவின் இசையில் வந்த ' பிள்ளை நிலா' .

*   நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் ' பருவமே ... புதிய பாடல் பாடு ' என்ற பாட்டுக்கு ஓடும் மனிதர் இருவரின் காலடிச் சத்தத்திற்கு தாளத்திற்கு தகுந்தபடி தொடைகளைத் தட்டி ஒலி  எழுப்பி  புதிய  பரிமாணம் தந்தவர் இளையராஜா .

*  இந்தியாவில் முதன்முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வாங்கியவர் இளையராஜா. படம் ' பழசி ராஜா ' .


*    முதன் முறையாக படத்தின் பாடல்களை ஸ்டீரியோ ஒலிப்பதிவு  முறையில் பதிவு செய்த படம் ' ப்ரியா '.

*  137  இசைக்கருவிகள் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடல் தளபதி படத்தில் ' சுந்தரி கண்ணால் ஒரு சேதி  ' .


*  இசைஞானி இசையமைத்த  பாடல்களை வாங்கி ,  அதன் பிறகு கதை எழுதி படமாக்கிய இரண்டு  ஹிட் படங்கள்  ' வைதேகி காத்திருந்தாள் ',  'அரண்மனைக் கிளி ' .

* இந்தியாவில் முதன்முறையாக கம்பியூட்டர் பயன்படுத்தி இசையமைத்தவர் ராஜா. படம் ' புன்னகை மன்னன் '.


* ' பஞ்சமுகி ' என்றொரு புதிய ராகம் கண்டறிந்து கொடுத்தவர் ராகதேவன் .  ஆனால் இதுவரை அந்த ராகத்தில் அவர் சினிமா பாடல் இசைத்ததில்லை. ரகசியமாக வைத்துள்ளார்.

*     பொதுவாக ஒரு படத்திற்கான இசைகோர்ப்பினை  இரண்டு அல்லது மூன்று நாளில் முடிப்பவர் ராஜா. ஆனால் அதிகபட்சமாக 24  நாட்கள் பின்னணி இசைக்காக அவர் எடுத்துக் கொண்ட படம் ' காலாபாணி  ' ( தமிழில் '  ' சிறைச்சாலை '  )


* ஆரம்பத்தில் கிடார், தபேலா கலைஞர்களுடன்  ஆர்மோனியம் கொண்டு  பாடலுக்கு  டியூன் போட்டவர் காலப் போக்கில்  கண்களை மூடி சிந்தனை செய்து  கற்பனையில் இசை வடிவங்களை செதுக்க ஆரம்பித்துவிட்டார் . கற்பனா சக்தியிலேயே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டார் . ஆர்மோனியம் கூட இல்லாமல் இசைக் குறிப்பு எழுதும் இந்த இசை ஆற்றல் இளையராஜாவைத் தவிர இந்திய இசையமைப்பாளர்கள் யாரிடமும் இல்லை.


*  இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்ல , நல்ல கவிஞரும் கூட! காவியக் கவிஞர்  வாலி  அவர்களுக்கே வெண்பா காற்றுக் கொடுத்தவர் இளையராஜா . அந்த விசயத்தில் ராஜா தனக்கு குரு என்று வாலி அவர்களே அவரை புகழ்ந்திருக்கிறார்.


Success  in  life  depends upon  two important  things 

Vision seeing the invisible   &    Mission  doing  the impossible 


     இளையராஜாவின் இசை தரும் பிரமிப்புகளை பார்க்கும்போது மேற்சொன்ன வாக்கியம்  அவர்  அடைந்த  வெற்றிக்கு பொருத்தமாய் அமைகிறது.  இசையில் யாராலும் காணாததை கண்டவர் , யாராலும் முடியாததைச் செய்தவர்.

                இதுபோல இன்னும் பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம் ஒரு பதிவிலேயே எல்லாவற்றையும் அடக்கி விட முடியாது.  நீண்டு கொண்டே செல்லும்  அவருடைய சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல . அத்தகைய சாதனைகளை அடைவதற்கு அவர் உழைத்ததும் கொஞ்சமல்ல; ஓடியதும் தேடியதும் கொஞ்சமல்ல.  இசையை தன் உணவாய்  உயிராய்  மூச்சாய் மாற்றிக் கொண்டார்.  அதனால்தான் இசையுலகில் ஒரு உன்னத நிலையை அடைந்தார்.

                மீண்டும் 1979 க்கு வந்தோமென்றால் ' அன்னை ஒர்  ஆலயம்  ' என்றொரு மாபெரும் வெற்றிப் படம் கண் முன் தெரிகிறது.  சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பில்  வெளி வந்து நூறு நாட்களையும் தாண்டி ஓடிய படம் .  ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் சொல்லலாம்.


              அந்தப் படத்தின் அபார வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் .  யானை வரும் முன்னே மணியோசை வருகிறதோ இல்லையோ இளையராஜாவின் ஒரு இசைத் துணுக்கு ஒன்று ஒலிப்பது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.  டிரம்பெட் ஒலியுடன் அந்த இசைத் துணுக்கு டைட்டில் இசைக்கப்படும்போதே ஆரம்பிக்கும் . யானை காட்டப்படும்போதெல்லாம்
அந்த துள்ளலான டிரம்பெட்  இசை திரைப்படம் பார்ப்போர் அனைவரையும் தாளமிட வைத்ததை கண்டிருக்கிறேன் .  நான் எவ்வளவு குதூகலத்துடன் பார்த்தேனோ அதே உற்சாகம் இப்போது பார்க்கும் குழந்தைகளிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.


                  தேவர் அவர்கள் விலங்குகளை கொண்டு படம் எடுப்பதில் வல்லவர். அதனால் விலங்குகளை வைத்து அவர் எடுத்த எந்த படமும் தோல்வி அடைந்ததில்லை.  " குழந்தைகளுக்கு பிடிச்சதே விலங்குகள்தான் . மனுஷங்க மாதிரி அதுங்க என்ன சாகசம் செஞ்சாலும் ஏன் எதுக்குன்னு கேள்விகேட்காம கை தட்டி ரசிப்பாங்க. அந்த ரசனைக்கு தீனி போடணும். குழந்தைகளை குஷிப்படுத்தணும்  " என்பது தேவர் வாக்கு. அவருடைய வெற்றி சூத்திரமும் அதுவே!


                அன்னை ஒர்  ஆலயம் படத்தில்  ஆறு பாடல்கள் .  பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியுள்ளார்.  அதில்  ' அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே  '  என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் . பிள்ளையார் கோவில் திருவிழாக்களில் பக்தி பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்த்து விடுவார்கள். மிகவும் துள்ளலான பாடல் . எஸ்.பி. பி  மற்றும் சுசீலா இணைந்து பாடியிருப்பார்கள்.  யார் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டாலும்  மீண்டும் முணுமுணுப்பார்கள் .  அவ்வளவு உற்சாகமான பாடல் .

                 
                     ஒருமுறை என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவருடன் இந்தப் படத்தைப்  பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தபோது ,  " அந்தக் காலத்தில் இந்தப் படம் பார்த்திருப்பீர்களே !  பாட்டெல்லாம்  எப்படி!? " என்றேன் . " ஆமாமா... இந்தப் படத்தை மறக்க முடியுமா ? இந்தப் படத்தில் ஸ்ரீ ப்ரியாவை பார்த்துதானே நான் வயசுக்கே வந்தேன்  " என்று சிரிக்காமல் சொன்னவரைப் பார்த்து  நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.

                      'அப்பனே  ' பாடல்  முழுவதும் டிரம்பெட் , கிடார் ,  டிரம்ஸ்  அதிகமாய் நிறைக்கும்.   பல்லவியில்  ' பிள்ளையாரப்பனே ' என்று முடிக்கும்போது இடைச்செருகலாக கொடுக்கப்படும் கிடார் ஒலி அப்போதே என்னை அசத்தியது.  பாடல் முழுக்க  மேற்கத்திய இசை பாணியில் அமைந்திருக்கும் . ஒரு யானைக் குட்டியை சமாதானம் செய்ய பாடப்படும் சூழலுக்கு மிகப் பொருத்தமாக இசையை வழங்கியிருப்பார் இளையராஜா . மூன்று சரணம், மூன்று வெவ்வேறு இடையிசை என்று பிரமாதமாக கொடுத்திருப்பார்.

                                               

                      யானைக் குட்டி செய்யும் சேட்டைகளுக்காக  மற்ற குழந்தைகள் படத்திற்கு மீண்டும் மீண்டும் செல்கையில் நான் இளையராஜாவின் இசைக்காகவும்  மீண்டும்  படத்திற்குச் சென்றிருக்கிறேன். இளையராஜாவின் இசை மெருகேருவதையும்  என் மனதிற்குள் ஒரு இசைப் பிரளயத்தை உருவாக்குவதையும் நான் உணர்ந்தேன்.  இந்தப் படம் ஒரு காரணமாய் அமைந்தது.

                      ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை   '  என்ற சாருகேசி  ராகத்தில் அமைந்த   பாடல் அடுத்த பிரபலமான அம்மா பாடல் என்று சொல்லலாம். இளையராஜா அம்மாவிற்காக இசைத்த பாடல்களில் ஒன்று கூட சோடை போனதில்லை .  தாய்ப் பாசத்திற்காக இசைக்கப்பட்ட பாடல்களில் இந்தப் பாடல் குறிப்பிடத் தகுந்த பாடல் .   டி .எம். சௌந்திரராஜன்  தனது கணீர்  குரலில் தாயைப் பிரிந்து தவிக்கும் ஒரு பிள்ளையின்  பிரிவுற்ற  துயர உணர்ச்சிகளை பிழிந்து எடுத்துத் தந்து விடுவார்.  அதற்குக் கொடுக்கப்படும் பின்னணி இசை நமது மனதையும் உருக்கி விடும்.  ' அ..ம்..மா  ' என்று  சப்தமாக கூவியழைக்கும் குரலுக்குப் பின் வழக்கமாக தமிழ்த் திரையில்  காட்டப்படும் இடி , மின்னல், புயல், மழை , பூகம்ப   காட்சிகளுக்கு பின்னணியாக வயலின்களின் பெருத்த ஆரவார இசையைத் தரும் ராஜா ,  எல்லாம் ஓய்ந்த பின் மென்மையாக ஒரு ஒற்றை வயலின் மற்றும் குழல் கொண்டு  கொடுக்கும் இசை ,  புயலுக்குப் பின் அமைதி என்ற வார்த்தைகளின் அர்த்தம் சொல்வது போலவே இருக்கும். இசை கொண்டு பேச முடியுமா என கேட்டால் அங்கு அது  பேசியிருக்கும்  அற்புதத்தை என்னவென்று சொல்வது!
                               
                                             

                             முதல் இடையிசை பரபரப்பாக ஆரம்பித்து மென்மையாக செல்வது காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும் . சூழலை காட்சியாக கற்பனை செய்து காட்டிவிடுவது  எளிது . அதை இசையாக கற்பனை செய்து கொடுப்பது  கடினமானது.   இளையராஜா அந்தப் பணியை அழகாக செய்து கொடுத்திருப்பார்.  இரண்டாம் இடையிசையில் தன்  தாயை கோவிலில்  நாயகன் சந்தித்ததை  எண்ணி  கலங்குவதாக  காட்டப்படும்போது ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை  இன்னும் அழகானது .  கோவில் மணியோசையுடன் குழலும் மிருதங்கமும் இழையோடி வயலினில் கலந்தாடி மொத்தத்தில் இசையில் விளையாடி இருக்கும் விந்தை வியப்புக்குரியது. இசைக்கப்பட்ட பிறகே காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சூழலை மனதில் வாங்கி உணர்வுகளை இசையாக கொடுப்பது ராஜாவிற்கு கை வந்த கலை. அதை செம்மையாக செய்து காட்டுவது மேதமை. காட்சிகளோடு என்னை ஒன்ற வைத்ததில் இசையின் பங்கு முக்கியமானது.     ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை  ' என்ற வார்த்தைகள் அம்மாவை இழந்த எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும் . அம்மாவை நேசிப்பவர்கள் இந்தப் பாடலையும் நிச்சயம் நேசிப்பார்கள்.  இந்தப் பாடலை கேட்க நேரும்போதெல்லாம் மனது சட்டென அமைதியாவதை இப்போதும் உணர முடிகிறது. கண  நேரத்தில் அம்மாவின் முகம் வந்து போகிறது.


                                  அதே படத்தில் ' நதியோரம் ...நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது மெல்ல ' என்ற பாடல் சுத்த தன்யாசி ராகத்தில் அமைக்கப்பட்ட அற்புதமான பாடல் .  எஸ்.பி.பி ,சுசீலா இணைந்து பாடிய சுகமான ராகம் . காதல் பாடல்களில் இருக்கும் சுகானுபவத்தைத் தரும் பாடல். இருவரும் இளமைத் துள்ளலோடு பாடியிருப்பார்கள்.  கேட்கும் நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இரண்டு இடையிசைகளும் மயக்கும் .  இரண்டாவது  சரணத்தில் ' தேயிலைத் தோட்டம் தேவதையாட்டம் ' என்று ஆரம்பிப்பதால் மலைத் தோட்டம் பின்னணியாக காட்டப்படும் . அதற்கேற்றாற்போல் 'லுலுலு ...லுலு ' என்றொலிக்கும்  மலை வாசம் செய்யும் பெண்களின் குரலிசை சேர்த்திருப்பது அற்புதமாக இருக்கும். இரண்டாம்  இடையிசையே   வித்தியாசமான நடையில் ஒலிக்கும் . அது இசைஞானிக்கே உரிய  சிறப்பு. இதுபோன்று  இசையில்  நடை மாறி மீண்டும் பாடலுக்குள் கொண்டு வரும் லாவகத்தை  பல பாடல்களில்  ரசித்திருக்கிறேன்.

                                                 
                                             
                       அதே படத்தில்  ' நந்தவனத்தில் வந்த குயிலே ' என்றொரு உற்சாகப் பாடலும் ' நிலவு நேரம் இரவு காயும்  ' என்ற போதையூட்டும் பாடலும் , 'மலையருவி மணிக்குருவி ' என்ற மலைஜாதிப் பெண்  பாடுவது போன்ற    பரபரப்பான பாடலும் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு தனி ரகம்.


                         அதே ஆண்டில் வந்த இன்னொரு  திரைப்படம் , ' அழகே உன்னை ஆராதிக்கிறேன் ' . திரைப்படம் வந்து சிறிது நாட்கள் கழித்து பலரும் படத்தைப் பற்றியும் பாடல்கள் பற்றியும் பேச ஆரம்பித்த பிறகு நான் திரைப்படம் பார்த்தேன்.  ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் . ஆனால் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது . பாடல்களுக்காக படம் ஓடியது. ஸ்ரீதர் படம் என்றாலே சிறப்பாக பாடல்கள் அமைந்து விடுவது ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கும் ரசனையா இல்லையேல் இசை அமைப்பாளாரின் கரிசனையா என்று தெரியவில்லை.  படம் ஓடாவிட்டாலும் பாடல்கள் எல்லாம் படு ஹிட் அடிப்பது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது.  இளையராஜா அந்தப் படத்தில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.  

                                   '  குறிஞ்சி மலரில் வடிந்த '
                                   '  நானே நானா யாரோதானா '
                                   '  அபிஷேக நேரத்தில்  '
                                   '  என் கல்யாண வைபோகம் '
                                   '   தனிமையில் யாரிவள் '
                                   '  அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் '
                                   '   ஹே ...மஸ்தானா  '

  அந்தப் படத்தில்  மேற்கண்ட அத்தனை பாடல்களையும் எழுதியது வார்த்தைச் சித்தர் வாலி .   '   ஹே ...மஸ்தானா  '  என்ற பாடல் தவிர அத்தனைப் பாடல்களும்  பிரபலமானவை . மஸ்தானா பாடல் வந்த புதிதில் ஒலி  பெருக்கிகளில் அதிகம் பரப்பப்பட்டது.  காலப் போக்கில் அந்தப் பாடல் எங்கும் கேட்கப்படவில்லை. ஆனால் மற்ற பாடல்கள் எல்லாம் இப்போதும் வானொலியில் இசைக்கப்படுகிறது.

                   
                                 
                                                   

                                 
                          ' அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்  ' என்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல் மனதை மென்மையாய் வருடியது .  கிடார் ஒலியுடன் ஆரம்பிக்கும் முன்னிசை மனதை விட்டு அகன்றதேயில்லை . நீண்ட நாட்களாய் அந்த நாதத்தை என் வாயாலேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் .   இப்போது கேட்டாலும் சுவையே !

                 
                              அது ஒரு சிறிய பாடல் என்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய   மெலடி அந்தப் பாட்டில் உண்டு .  தான் நேசிக்கும் பெண்ணை எந்த விதத்திலும் சலனப்படுத்த நினையாத ஒரு ஆண்மகனின் மன நிலையை சுட்டும் பாடலாக இளையராஜா இசையமைத்திருப்பார்.  இடையிசையில் குழலும் விசில் ஒலியும் கலந்து கொடுத்த இசைக் கோர்வை அற்புதமானது.   காதலின் வலியைச் சொல்லும் பாடல் .  அந்த  அனுபவம் கடந்தவர் அப்பாடலை மறக்க இயலாது. 


                             '  நானே நானா யாரோதானா  '  என்ற பாடல் வாணி ஜெயராம் அவர்களின் தெளிவான தேன் குரலில்  கேட்டபோது குரலாலும் இசையாலும் மயங்கினேன் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தையாக இருக்கும். கேட்டபோதெல்லாம் மதி மயங்கி மனம் கனிந்து உடல் கட்டுண்டு கிடந்தேன் . இப்போது கேட்டாலும்  இசை மெல்ல மெல்ல நம்மை பறக்கச் செய்யும்; நம்மையே மறக்கச் செய்யும் . இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களின் பெண் குரலுக்கு வாணி ஒருவரே போதுமென ராஜா ஏன் முடிவெடுத்தார் என்று தெரியாது.  ஆனால் எல்லாப் பாடல்களும் வாணியின் குரலால் மெருகேறின . ராஜாவின் தேர்வு சரியானதாக இருந்தது.


                                  ஹரிகாம்போதி ராகத்தில் இசைக்கப்பட்ட   '  நானே நானா' பாடலில் மதுவின் மயக்கத்தில் ஒரு பெண் பாடுவதாக உள்ள சூழலுக்கு ஏற்றாற்போல்,  முன்னிசை லீட் கிடாருடன் ஆரம்பித்து பேஸ் புல்லாங்குழலின் நாதத்தை கலந்து , மேற்கத்திய பாணியில் பாடல் கொண்டு செல்லப்பட்டிருக்கும் விதம் , அந்தக் காலத்தில் கேட்க மிகவும் புதுமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது.  மெல்லிய சோகம் இழையோட பாடல் இசைக்கப்பட்ட விதம் நம்மை உறுத்தவோ வருத்தவோ செய்யாது. உற்சாகத்தையே கொடுக்கும் .


                                       டிரிப்பில் பாங்கோஸ் , டிரம்ஸ் இரண்டும் கலந்து செல்லும் தாள கதி ரசனையானது.  நானே நானா என்று வாணி அவர்கள் ஆரம்பிக்கும்போது கொடுக்கப்படும்  பாங்கோஸ் ஒலியை  பள்ளிக்கூடத்து  நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி வாயாலேயே ஓசை எழுப்பி ரசித்த சம்பவம் பசுமையாய் இன்னும் நெஞ்சினில் நிறைந்திருக்கிறது. பாடலை மட்டுமல்ல முன்னிசை இடையிசையில் வரும் மெல்லிசையைக் கூட  குரலாலேயே இசைத்து மகிழ்வது இன்னும் நினைவிருக்கிறது.
         
                             
                                           


                                இரண்டாம் இடையிசையின் ஆரம்பத்தில் பரபரப்பான வயலின் இசை அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை உணர்த்தும் இசையாக தோன்றும் . அதன் பிறகு கிடாரும் வயலினும் பின்னிப் பின்னி வரும் இசைக்கோர்வை  இளையராஜாவின் கைவண்ணத்தில் செய்யப்பட அழகோவியம் . '  பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு,உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ' என்ற வரிகள் ரசிக்கத் தகுந்தவை . அதன் பிறகு உச்சஸ்தாயில் வாணி பாடும்போது கூடவே இழைந்து வரும் வயலின் நாதத்தை இன்னும் ரசிக்கலாம் . மொத்தத்தில் ஆறு பாடல்கள் அறுசுவை உணவு என்று சொன்னாலும் ஒவ்வொரு பாடலிலும் அறுசுவை உணவை இளையராஜா கொடுத்திருப்பார்.

                             
                            '  குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை  ' என்ற பாடல் மோகன ராகத்தில் அமைக்கப்பட்ட அழகிய கீதம்.  திரைப்படம் வந்த புதிதில் சிலோன் வானொலியில் ஒளிபரப்பாத நாட்களே  இல்லை என்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமான பாடல். எஸ்.பி.பி யும் வாணியும் காதல் ரசம் சொட்டும்படி அழகாக பாடியிருப்பார்கள்.  குழலின் நாதத்தோடு உற்சாகமாக ஆரம்பித்து கிடார்  சிந்தசைசர்  எல்லாம் கலந்து  தபேலாவுடன் பல்லவி ஆரம்பிக்கும்போதே மனசு இறக்கை கட்டி பறக்கும் .  மூன்று முத்தான சரணங்களுக்கு மூன்று சத்தான இடையிசை கொடுத்த இளையராஜாவின் கற்பனை வளம் அபாரமானது.  வாலியின் வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை ; ராஜாவின்  இசைகோர்வைகளுக்கும் பஞ்சமில்லை . ஒன்றை மிஞ்சும் வண்ணம் இன்னொன்று அமைந்திருக்கும்.

                                                 

                       ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  ' என்ற பாடல் மத்யமாவதி ராகத்தில் வாணி அவர்களின்  தேன் குரலில் அமைந்த மறக்க முடியாத  மென்மையான பாடல்.  அந்தப் பாடல் கேட்க நேரும்போதெல்லாம் வயல்வெளியின் நடுவில்  அமைந்த வீடும் வைகை ஆற்றில் குளித்து மகிழ்ந்த காலங்களும் ஆற்று ஓரத்து நாணல்களும் சோலைகளும் தென்னந்தோப்புகளும் நினைவுக்கடலில் அலைகள்  போல வந்து மோதுவதை தவிர்க்க முடிவதில்லை.  அந்தப் பாடலின் நயமும் லயமும் இசையும் பலமுறை  என்னைக்  கட்டிப் போடும்.  புல்லாங்குழல் வயலின் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பின்னி விளையாடும் . தபேலாவின் வித்தியாசமான நடை ராஜாவிற்கு உரிய டிரேட் மார்க் என்று சொல்லலாம் . சரணத்தை கூர்ந்து கேட்கும்போது தபேலாவின் தனித்துவ நடை பாட்டுக்கு பரதநாட்டியமாடும் .      ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  '  என்று பல்லவி ஆரம்பித்து முதல் வரி முடிக்க என்னென்னவோ இசைக் கருவிகளின் கலவைகளை எல்லாம் இசைக்கச் செய்து எங்கெங்கோ நம்மை கூட்டிச் சென்று மீண்டும் பாடலுக்குக் கொண்டு வரும் சுகம் கேட்ட காலத்திலிருந்து இன்று வரை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

                                               


                          சண்முகப்பிரியா   ராகத்தில்    பாலு      அவர்களின் மன்மதக் குரலில்  அமைந்த  ' அபிஷேக நேரத்தில் '  பிரமாதமான குத்து பாடல். இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. நான் அந்தப் பாடலில் அதிக அக்கறை செலுத்தியதில்லை. ஆனாலும் பாடலை ரசித்திருக்கிறேன் . பரிச்சயம் இல்லாத வித்தியாசமான இசைக் கருவிகளின் ஒலியெல்லாம் அந்தப் பாடலில் கேட்க நேர்ந்தது.   துள்ளலான பாடல்.  குத்துப் பாடல்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் நல்ல விருந்தாக அமைந்தது .

                           ' தனிமையில் ....யாரிவள் ' என்றொரு புதுமையான , கேளிக்கை விடுதியில் பாடுவது  போன்றமைந்த , மேற்கத்திய சாயல் கொண்ட பாடல். அப்போது கேட்டபோது அதன் இசையும் தாளமும் என்னை மிரட்டியது. ஹிப்பிஸ் கலாசாரம் அதிகம் பரவியிருந்த காலகட்டத்தை பிரதிலிக்கும் பாடலாக அமைந்திருந்தது. வாணி அவர்கள் அழகாக பாடியிருந்தாலும் முனகல் சத்தங்கள் அவரின் குரல்  போல இல்லை.

                         இந்தப் பாடல்களை துல்லியமாக மீண்டும் கேட்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இரண்டாம் முறை மூன்றாம் முறையெல்லாம் திரைப்படத்திற்குச்  சென்றதுண்டு.  இசையை ரசிக்கும் என்னைப் போன்ற நிறைய ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து  திரைப்படங்களை வாழவைத்துக் கொண்டிருந்தோம் . இளையராஜாவின் இசைக்காகவே சினிமாவுக்கு சென்ற கூட்டம் நிறைய இருந்தது.  ராஜா தன் இசை மூலம் எல்லோரையும் வரவேற்றார்; அழைத்தார்.  ஆனால்  இப்போது இசைக்காக ஒரு திரைப்படத்திற்குச் செல்வோரின் கூட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

...........................தொடர்வேன் ..............................