Wednesday 30 January 2013

யாரிவள்

மகத்தானவள் 
மதுரசமானவள் 
தாலி கட்டிய  வேலிக்குத் 
தாயுமானவள் 
வேலிக்கே வேலியுமானவள் 
சகியாய்  சகோதரியாய் 
சதையுமானவள் !
உள்ளமும் தாங்குவாள் 
உடலும் தாங்குவாள் 
உணர்விலும் ஊனிலும் 
கலந்திடுவாள் 
உள்ளத்தின் ஆழத்தில் 
உறைந்திடுவாள் 
கண்மணிபோல் காத்திடுவாள் 
காலமெல்லாம் கனிந்திடுவாள் 
கனிய காதல் புரிந்திடுவாள் 
கண்ணிமைப் பொழுதும் 
நினைந்திடுவாள் 
கண்களின் நீரில் 
நனைந்திடுவாள் 
மந்திரம் தந்திரம் 
புரிந்திடுவாள் 
மன்மத பானம் 
தந்திடுவாள் 
மலர்க் குடையாய் 
மலர்ந்திடுவாள் 
விரும்பிய போதெல்லாம் 
விருந்திடுவாள் 
உண்மையை மட்டும் 
விரும்பிடுவாள் 
ஊமையாய் சிலநேரம் 
இருந்திடுவாள் 
வாழ்விலும் தாழ்விலும் 
வந்திடுவாள் 
நோவிலும் சாவிலும் 
நொந்திடுவாள் 
கல்லறை செல்லும் 
காலம் வரை 
காதலோடு வாழ்ந்திடுவாள் !
 

No comments:

Post a Comment

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்