Tuesday, 21 July 2015

ஓய்ந்த மெல்லிசைக்கு அஞ்சலி




                                           






மெல்லிசை மன்னனே

இன்னிசை வேந்தனே

இசையின் இமயமே

இனிய தமிழர்களின் இதயமே !

இன்னுயிரை இசைக்குள்ளே  இங்கீந்து

எவ்வுலகம் பறந்தாய்!?

படைப்பாற்றல் கொண்டு

தேனருவியாய் தெள்ளமுத

கானங்கள் தந்த உனக்கு

படைக்கின்றேன் கவி அஞ்சலி !


'மூன்று வயதில் பாடுவேனாம் '

 உதித்தது எண்ணத்தில்

 உதிர்த்த அம்மாவின்  வார்த்தைகள்

பின்னாளில் தெரிந்தேன்

பாடியதெல்லாம் உன் பாட்டன்றோ  !

இசை கேட்க விரும்பி

திசை சுற்றி திரும்பிய

கணங்கள் காலங்கள் 

கண்ணாமூச்சி  ஆடும் கண்ணுக்குள் !

எனக்குள் எழுந்த

இசை என்னும் விருட்சம்

 நீ போட்ட முதல் விதையால் !

சிறு வயது சினிமா ரசிகனாய்

பெரிய திரையில் உன் பெயர் கண்டு

கூட்டத்தோடு  கைகள் தட்டியதும்

களிப்பூட்டிய கானங்கள் கேட்டு

குதூகலத்தின் உச்சியை எட்டியதும்

கூட்டம் கூடி பாட்டுப் பாடி

உன் இசை உன் புகழ் பேசியதும்

மூடிய விழியில் வந்து போகும்

வர்ண ஜாலங்கள்!

நெஞ்சம் விட்டு நீங்காது

வேறெங்கும் போகாது

காலத்தால் தீராது

நீ கொடுத்த இனிய ராகங்கள்!

ஆயிரமாயிரம் பாடல்களை

அழியாத கோலங்களாய்

அள்ளித் தெளித்துவிட்டு

ஆறடிக்குள் அடங்கிப் போனாயே!

காலன் உடல் கொண்டு போனால் என்ன

உன் உயிர் தந்து போனானே

காவியமாய் நீ படைத்த

கானங்கள் விட்டுப்  போனானே!

ஒவ்வொரு முறை உன் ராகம்

காற்றுவெளியில் தவழும்போதும்

காதுகளில் தேனாய் தடவும்போதும்

இனி உயிர்த்தெழுந்து  நிற்பாயே!

உடலுக்குதான்  வயது எண்பத்தேழு

உயிருக்கு வயது எண்ணில்  ஏது !? 

உன் பாட்டு உன் கானம்

ஊரெல்லாம் தாலாட்டும்

உன் தூக்கம் உன் உறக்கம்

உன் பாட்டே தாலாட்டும் !









Thursday, 2 July 2015

இசை ராட்சஷன் - 11 ( The Musical Legend )


                                                     

                                       

                              இளையராஜாவின் பாடல்களை இப்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்கிறார்களே , இளையராஜா இதுபோல பழைய இசை அமைப்பாளர்களின் பாடல்களை செய்ததுண்டா ?

                                  ஒரு வார பத்திரிக்கையில் ஒரு வாசகரின் கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் கீழே .

                            

       "  இளையராஜாவைப் போல சென்சிபிலான கலைஞரை காண்பது அரிது. கதைக்குத்  தேவைப்படாத எதையும்  சும்மா பரபரப்புக்காக செய்ய மாட்டார் . 1986 இல் சிவாஜி, பத்மினி ஜோடி நடித்த  படம்  ' தாய்க்கு ஒரு தாலாட்டு  ' . அந்த ஜோடியின் கடைசி டூயட்டுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அட்டகாசமான பாட்டு அது.   டி. எம். எஸ் , சுசீலா பாடியிருந்தார்கள் . இணையத்தில் கிடைத்தால் தேடி கேளுங்கள்.

                                         இந்தப் பாடலை கேட்டு முடித்ததுமே  அப்படியே ' புதிய பறவை '  படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன்  இசையில் ' உன்னை ஒன்று கேட்பேன் ' பாடலையும் கேளுங்கள். எம்.எஸ்.வி. க்கு எவ்வளவு  கௌரவமான tribute செய்திருக்கிறார் என்பதும் , இளையராஜா ஏன் மேஸ்ட்ரோ என்பதும் புரியும்.

                                            ரீமிக்ஸ் என்றால் இடையிடையே மேற்கத்திய கத்தல்களை செருகுவது மட்டுமல்ல என்கிற பாடத்தை இளையராஜாவிடமிருந்து  இன்றைய இளம் இசை அமைப்பாளார்கள் கற்றுக் கொள்ள வேண்டும். "

                                           இதை வாசித்தவுடன் எனக்கும் அது மிகச் சரியெனவே பட்டது . எத்தனையோ ஜனங்கள்  பழைய பாடல்களில், உள்ளம் உருகி உயிர் உருகி , தன்னையே மறந்து தவித்து லயித்து  ரசித்துக் கேட்டதை , அதன் ஆன்மா சிதைத்து ரீமிக்ஸ் செய்து கற்பழித்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இசையமைப்பாளர்கள்.   ரீமிக்ஸ் செய்வதில் இளையராஜாவின்  பெருமை என்னவெனில் தான் இசையமைத்த பாடல்களை தானே ரீமிக்ஸ் செய்து கொடுப்பதுதான் .  சமீபத்தில் ' மேகா '  என்ற படத்தில் 'புத்தம் புது காலை ', ஷமிதாப்  என்ற படத்தில் ' ஆசைய  காத்துல தூது விட்டு ' என்பதின் ஹிந்தி வடிவமும் எடுத்துக்காட்டுகள்.  இளையராஜாவே ஆனாலும் அந்தப்  பழைய பாடல்களில் இருந்த ஜீவன் இப்போது கொடுத்த பாடல்களில் இல்லாதது போல என் மனதில் பட்டது.  குரல்களும் இசைக் கருவிகளும் மாறியது காரணமாக இருக்கலாம் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அவரே  நமக்குச் சொன்னவர்தானே!  ' நான் கடவுள் ' படத்தில் பாடப்பட்ட 'மாதா உன் கோவிலில் ' என்ற பாடல் விதிவிலக்கு.


                                     கர்னாடக இசை புரியாத மக்கள் கூட்டம் மெல்லிசை என்ற சினிமா இசைக்கு அடிமையாகிப் போனதின் விளைவு , கர்னாடக இசை பண்ணவும் பேணவும் தெரிந்த சில மேல் தட்டு மேதைகளுக்கு எரிச்சலை மூட்டியதால் , இளையராஜாவிற்கு முந்தைய இசை அமைப்பாளர்களையும் 
இளையராஜாவையும் கீழ்மைப் படுத்தவே முனைந்தார்கள்.  பக்திக்காக மட்டுமே பயன்பட்டு வந்த கர்னாடக இசையை சினிமாவின் இசைக்குள்ளும் சிலர் புகுத்தியதை கடவுளுக்கு விரோதமாக பார்த்தார்கள். கர்னாடக இசை தனித்துவமிக்கதாகவும் மெல்லிசை சுயம் இழந்த தனித்துவமற்ற இசையாகவும் அவர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் கர்னாடக இசையே நாடோடிப் பாட்டுகளிலிருந்து திருடப்பட்டு உருமாற்றம் அடைந்ததாக பல இசை ஆய்வாளர்கள் உண்மை எடுத்தியம்புகிறார்கள்.  அது மறைக்கப்பட்டு வந்துள்ளது.


        மெல்லிசை ஒரு கலவை இசை என்பதில் ஐயமில்லை என்றாலும் , அதிலும் கர்நாடக இசையின் ராகத்தில் அமைத்து மேனாட்டு சங்கீதம் கலந்து அழகிய கலவையாக கொடுக்கப்படும்போது , மக்களுக்கு புரிந்த மொழியில் எளிய இசையாக அது போற்றப்படுகிறது.  மக்களின் மனசுக்குள் நர்த்தனமாடுகிறது. உணர்வுகளில் ஊறி கலந்து உற்சாகப்படுத்துகிறது.  இளையராஜாவின் இசை அதில் முக்கியப் பங்கெடுத்திருக்கிறது . ராகம் ஏதும் அறியாத ஜனங்கள் அவ்வளவு ரசிக்கையில் , ராகங்கள் புரிந்து தெளிந்த இசை வல்லுனர்கள் இளையராஜாவின் இசையின் அழகுகளை இன்னும் இன்னும் வியந்து ரசிக்கிறார்கள் . மேலோட்டமாக கேட்பவர்களே இன்புறும்போது  ஆழ்ந்து ரசிப்பவர்கள் பிரமிப்பதில் வியப்பில்லை. அவர்களுக்குத் தெரியும் ....'அவர்' யார் என்று?      

                                       உதாரணத்திற்கு ஒரு காணொளியில் , ஒரு இசைக் கலைஞர் ஒருவர்  ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த மொசார்ட் இசை வல்லுனரின் சிம்பொனி இசையிலிருந்து ஒரு பகுதியை வயலினில் வாசிக்க எல்லோரும் ரசிப்பதும் ,  வாசித்துக்கொண்டே அந்த சிம்போனியை அகத்தூண்டலாக எடுத்து இளையராஜா இசைத்திருக்கும் ஒரு பாடலை விடாமல் தொடர ,   அங்குள்ள எல்லோரும் அதைவிட உற்சாகமடைவதும் , மீண்டும் அவர் அந்த சிம்பொனிக்கு வருவதும் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.  இது இளையராஜாவின் படைப்பாற்றலுக்கு சரியான சான்று என்று எடுத்துக் கொள்ளலாம்.
                 
                                                   


                 'ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை ' என்று அவரே எழுதி இசையமைத்துப் பாடியது இங்கு நிரூபணமாகிறது.  ' ஏற்கனவே எங்கெங்கோ இருப்பதைத்தான் நான் மீண்டும் படைக்கிறேன். புதிதாய் இசைக்க ஒன்றுமில்லை '  என சொல்லாமல் சொல்கிறார் இளையராஜா.  ஆனால் நமக்கோ அவரின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொன்றாக தனித்துத் தெரிகிறது.


                                      சரி மீண்டும் 1979 க்கு வருவோம் . ' அன்பே சங்கீதா ' என்ற படத்தில் ' கீதா...சங்கீதா.. சங்கீதமே... சௌபாக்யமே .. ஜீவ அமுதம் உன் மோகனம் .. ' என்றொரு மனசு மயக்கும் காதல் கீதம் மோகன கல்யாணி ராகத்தில் இசைக்கப்பட்டிருக்கும். ஜெயச்சந்திரனும் ஜென்சியும் இணைந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள்.   ' லால..லலலா  லால..லலலா ' என்ற ஹம்மிங்குடன் ஜென்சி ஆரம்பிக்க மௌத் ஆர்கன் சப்தத்தில் அதே மெலடி ஒலிக்க , கேட்க ஆரம்பிக்கும்போதே உடலை விட்டு மனசு பறக்கும் சுகானுபவம் தோன்றும்.   மீண்டும் ஹம்மிங் மீண்டும் இசைப் பின்னணியோடு வயலின்களில் ஆலாபனை செய்து கிடாரை வீணை போல இசைத்து,  ஜெயச்சந்திரன் 'கீ..தா...' என்று பல்லவி ஆரம்பிக்க  மனசு இன்னும் உயர பறக்கும் .

                 
                                அப்போது படம் பார்க்கவில்லை. தயவு செய்து பார்த்து விடாதே என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு வாரம்தான் தியேட்டரில் ஓடியது. பாட்டு மட்டும் காதுகளில் அடிக்கடி ஒலித்தது. பாடல் கேட்கும்போதெல்லாம் மனசு கிடந்து தவிக்கும்.  இளையராஜாவின் பாட்டுக்காக  படம் பார்ப்போமா என்று நினைப்பேன் . அப்படி நிறைய படங்கள் பார்த்ததில் நொந்து போக வேண்டி வந்தது. இளையராஜாவின் சில பாடல்களுக்காக  படம் முழுவதும் உட்கார வேண்டியிருக்கும் . பாட்டு ரசிக்கலாம் ; படம் ரசிக்க முடியாது.  இளையராஜா அற்புதமாய் இசைக் கோர்வை செய்திருக்கும் இடங்களில் எல்லாம் படம் பிடித்திருக்கும் லட்சணம் கண்றாவியாக இருக்கும்.  அதை சகிக்க முடியாது.  அதனால் போகப் போக பாடல்கள் மட்டுமே கேட்டுப் பழகினேன் . இளையராஜாவின் இசைக்கு நான் செய்யும் கற்பனை எனக்கு திருப்தியாக இருந்தது.  


                                        முதல் இடையிசையில்  வயலினில் கேள்வி கேட்க குழலால் பதில் சொல்வது போல் ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை பிரமாதம் . கூடவே கிடாரிலும் அழகு மீட்டிக் கொடுக்க பின்னனியில் பாஸ் கிடாரின் இசைக் கோர்வையும் சேர  ,  ' பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் ...மதனோற்சவம் ' என ஸ்பஷ்டமாக ஜெயச்சந்திரன் சரணம் பாடும்போது வார்த்தைகளின் தெளிவில் கூடுதல் இனிமை சேர்த்தது போல இருக்கும்.  கூர்ந்து கேட்டால் இரண்டாம் இடையிசையிலும் பாஸ் கிடாரின் ஆட்சி தனித்துத் தெரியும் . பெண் குரலில் வார்த்தை சுத்தம் கொஞ்சம் குறைவே ! காட்சியை விட பாடல் கேட்பது சுகம்.


                                               

                                  அதே படத்தில் அடுத்த பாடல் சூப்பர் ஹிட் !  ரேடியோவில் ஒலி  பரப்பாத நாளே இல்லை என்று சொல்லுமளவிற்கு  அவ்வளவு பிரபலம். எஸ்.பி பி.யின் மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.  படத்தில் தேங்காய்  சீனிவாசன்   பாடுவது போல் காட்சி.  காட்சியை பார்த்தவுடன் அதிர்ச்சி .  உயிர் உருக பாடும் எஸ்.பி.பி யின் குரலுக்கு அவர் பொருத்தமானவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பாடலை அண்ணன் தங்கையான எஸ்.பி.பி மற்றும் சைலஜா சேர்ந்து பாடியிருப்பார்கள். சைலஜாவிற்கு முதல் பாடல். ஹம்மிங் மட்டுமே கொடுத்திருப்பார். பாட்டின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் சைலஜாவின் குரல் இனிக்கும்.


                                சிறு வயதில் இந்தப் பாட்டைக் கேட்டு நெக்குருகி போயிருக்கிறேன்.  பாட்டின் மெலடி மனசை பிசைவது போல ஒரு சிறு வலியை ஏற்படுத்தியது . பாட முயன்று தோற்றிருக்கிறேன் . பாட்டை கேட்டு பல சந்தர்ப்பங்களில் அசையாமல் நின்றிருக்கிறேன் . சில நேரங்களில் அழுதுமிருக்கிறேன் . ஒரு சில பாடல்கள் என்னை இம்சைக்கு உள்ளாக்கும் . அதில் இந்தப் பாடலும் ஒன்று என்பதை உளப்பூர்வமாக நான் சொல்ல வேண்டும்.  எஸ்.பி. பி யின் குரலில் இழையோடும் சோகம் கேட்பவர் யாரையும் தாக்கும் .  எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் இப்போதும் பசுமையாய் இருக்கும் இந்தப் பாடலுக்காக இளையராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

         
                              '  சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது ..... '  என்ற  வாலி அவர்கள்  எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது.  இப்போதும் அப்படியே ஒலிக்கிறது.     இரண்டு  சரணம் ,  இரண்டு  வேறுபட்ட  இடையிசையோடு  உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய்  எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின்  ஹம்மிங்  கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும் .  இது போன்ற பாடல்களை இளையராஜாவே மீண்டும் கொடுக்க இயலுமா என்று  சொல்ல முடியாது.  அந்த இசை வரம் அவருக்கு அவர் வணங்கும் இறைவனால் கொடுப்பட்டது.  அதை ராஜா நமக்குக் கொடுத்திருப்பது நமது பாக்கியம் என்றே கருதுகிறேன்.   


                                         

                                 இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பீதோவன், மொசார்ட், பாக் போன்ற மேனாட்டு இசை அறிஞர்களைப் பற்றி பேச்சு பரவலாயிற்று . அதற்கு முன்னர் ஒரு சிலரே அவர்களை அறிவர்.   அந்த இசை மேதைகளோடு ராஜாவின் இசையை ஒப்பீடு செய்யும் மன நிலையை இசை ரசிகர்கள் பலருக்கும் ஏற்படுத்தியதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். என்னுடைய இசை நண்பர் ஒருவர் இளையராஜாவின் இசை பற்றிய பேச்சு வந்தபோது , ' பல இசை அமைப்பாளர்களின்  இசை  RHYTHM  BASED ,  ராஜாவின் இசை INSTRUMENTAL BASED . மேனாட்டுக்காரன் இசையெல்லாம் அப்படிப்பட்டதே ! அதனால்தான் இளையராஜா அவர்களோடு ஒப்பிடப்படுகிறார்  '  என்றார்.  மேலே கண்ட பாடல்களை கேட்கின்றபோது அது உண்மை என்பதை அறிகிறேன்.


                              பாஸ் கிடாரின் உபயோகம் பெரும்பாலும் எல்லா இசை அமைப்பாளார்களின் பாடல்களிலும் இருக்கும் .  ஆனால்  இளையராஜாவின் பாஸ் கிடார் தனித்துவம் மிக்கது.  கூர்ந்து கேட்கும்போது நம்மை குதூகலத்தில் ஆழ்த்தும் . ஒரு ஆனந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அவர் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாஸ் கிடாரின் பங்களிப்பை அதன் நாதத்தை  எத்தனை பேர் கவனித்திருக்கப் போகிறார்கள்?  உண்மையான இசைக் கலைஞர்கள் அதன் மகத்துவத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அதில் ஒருவர் விக்கி என்ற இசைக் கலைஞர் . ' சொல்வனம் ' என்ற இணைய இதழில் ' பாஸ் கிடார் தில்லானா ' என்ற தலைப்பில் இளையராஜா பாஸ் கிடாரை  எந்தப் பாடல்களில் எல்லாம் பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார் என்பதையும் அதற்கு உடனுழைத்த இசைக் கலைஞர்கள்  பற்றிய விபரத்தையும் தன் இனிய இசை அனுபவங்களோடு அழகாக பரிமாறியிருக்கிறார்.  கீழ்க் கண்ட பதிவில் அதை பார்த்தீர்கள் என்றால் பாஸ் கிடார் இசையை சுகித்துச் செல்லும் இனிய  அனுபவம் கிட்டும். 

           
                                http://solvanam.com/?p=23134




..............................தொடர்வேன் .................................



                 




Wednesday, 27 May 2015

இசை ராட்சஷன் - 10 ( The Musical Legend )





                                             

                                           

                          ' எனக்கு இசை தெரியவில்லை என்று இளையராஜா கூறுகிறாரே?' என்ற ஒரு வாசகனின் கேள்விக்கு,   ' அறிவாகிய மாபெரும் கடலின் கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன் நான் என்றார் விஞ்ஞானிகளுக்கெல்லாம்  விஞ்ஞானியான  ஐசக்  நியூட்டன் . போலவே இளையராஜா மாதிரியான ஞானிகளுக்கே உரித்தான தன்னடக்கம் இது .
அவரது இசையைக்  கேட்டு ரசிக்காத தமிழனே உலகில் இல்லை என்பதுதான் உண்மை. '  என்பது ஒரு வார பத்திரிகையில் கொடுக்கப்பட்ட பதில்.

                       
                         எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச்சுவடிலும் சுவடுகள்  பதிக்கும் பாதைகளின் பயணங்களிலும்  கணக்கற்ற பாடங்கள் இருக்கும் . அந்தப் பாடங்களைப் படித்துக் கொண்டே இசைப் பயணம் தொடங்கி நம்மையெல்லாம் இன்ப உலாவிற்கு அழைத்துச் சென்றவர் இளையராஜா .
தொழில் நுட்பங்களும்  மென் பொருட்களும் மலிந்து பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்  யார் வேண்டுமென்றாலும் இசை அமைக்கலாம் . ஆனால் ஆன்மாவை  ஊடுருவும் இசையை உருவாக்க ,  வெறும் கருவிகளை விட ஆத்மார்த்தமான  ஈடுபாடு வேண்டும் . அது எந்த இசை அமைப்பாளரிடம் உளதோ அவரே சிறந்த இசை அமைப்பாளர் . அந்த வகையில் இந்தியாவில் பல இசை அமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என்பதை எந்த இசைக் கலைஞரும் ஏற்றுக் கொள்வர்.

                         
                          இசைக் கருவிகளிலும் மேனாட்டு இசை அறிவிலும் கர்னாடக இசையிலும் தேர்ச்சி பெற்ற பிறகே இளையராஜா அவர்கள் இசை உலகத்தில் புகுந்து தன் இசை ஆற்றலை ஊற்று போல ஓடச் செய்தார் . அந்தத் தீரா நதியில் முங்கிக் குளித்து குடித்து தேனுண்ட வண்டாய்  மயங்கிக் கிடந்த நாட்களை மறந்து போக முடியுமா!? திகட்டாத அமிர்தமாய் தேனோடையாய் பாய்ந்த இசை அமுதை அள்ளிப் பருகிய காலத்தை கடந்தும்தான் போக முடியுமா!?
   
                   
                        1979 இல் இளையராஜா அளித்த இசை விருந்து  இப்போதும்  என் நினைவுக் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டே இருக்கிறது.

                             
                   

No.
Film Name
# Songs
1.
Aaril irunthu arubathu varai
3
1979
2.
Agal vilakku
4
1979
3.
Amma evarikaina amma - Telugu
6
1979
4.
Anbe sangeethaa
4
1979
5.
Annai or aalayam
7
1979
6.
Azhage unnai aarathikkiren
7
1979
7.
Chakkalaththi
6
1979
8.
Dharma yuththam
4
1979
9.
Erra gulaabeelu - Telugu
2
1979
10.
Kadavul amaiththa medai
6
1979
11.
Kalyaana raaman
5
1979
12.
Kavari maan
7
1979
13.
Lakshmi
4
1979
14.
Mugaththil mugam paarkkalaam
3
1979
15.
Muthal iravu
5
1979
16.
Naan vaazhavaippen
5
1979
17.
Nallathoru kudumbam
6
1979
18.
Niram maaratha pookkal
5
1979
19.
Nuvve naa srimathi - Telugu
5
1979
20.
O inti katha - Telugu
3
1979
21.
Pagalil oru iravu
5
1979
22.
Pancha bhoothalu - Telugu
5
1979
23.
Pattaakkaththi bairavan
7
1979
24.
Ponnu oorukku puthusu
6
1979
25.
Poonthalir
5
1979
26.
Priya - Kannada
5
1979
27.
Puthiya vaarppukkal
4
1979
28.
Rosaappoo ravikkaikaari
4
1979
29.
Uthirip pookkal
6
1979
30.
Vetrikku oruvan
4
1979
31.
Yugandhar - Telugu
5
1979





                               ' ஆறிலிருந்து அறுபது வரை ' என்ற திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் தனி.  'ரஜினி படம் ' என்ற சந்தோசத்துடன்  'பைட்,  ஸ்டைல், சேசிங்' என்று பின்னி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன்   சென்று பார்த்தால் உள்ளே உட்கார வைத்து அழ வைத்துவிட்டார்கள் .  அந்த சமயத்தில் பாட்டை மட்டுமே ரசித்தேன் ; படம் ரசிக்கவில்லை. காலம் செல்லத்தான் ரஜினிக்கு அது ஒரு நல்ல திரைப்படம் , அவருடைய குணச்சித்திர நடிப்பாற்றலை வெளிக்கொணர்ந்த முக்கியமான திரைப்படம் என்பதை புரிந்து கொண்டேன் .


                                         

                            படத்தில் முதல் பாடல் ' ஆண்  பிள்ளை என்றாலும் ...சாண் பிள்ளைதானன்றோ ...' என்று  சசிரேகாவும் ஷைலஜாவும் இணைந்து  பாடியிருப்பர் .  படத்தின் பாடல்கள் அனைத்தும் பஞ்சு அருணாச்சலம் . இந்தப் பாடலில் எளிமையான வார்த்தைகளில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் குடும்பப் பொறுப்பையும்  சிறு வயதிலேயே சுமக்கும் மூத்த குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும்படி எழுதியிருப்பார்.  பாடலுக்குத்  தகுந்த இனிமையான இசை.  ' பரிதாபம் அந்தோ பரிதாபம் ' என்ற வார்த்தைகளுக்கு அழுத்தமாக  கொடுக்கப்பட்டிருக்கும் மெலடி சட்டென என்னை நெகிழ வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் .  தந்தையை இழந்த சிறுவன் ஒருவன் தன் அம்மா தம்பி தங்கைகளை காப்பாற்ற ' குரங்கு பெடல் ' போட்டபடி சைக்கிள் ஓட்டி உழைத்து சம்பாதிக்கும் காட்சியை பார்த்தவுடன் என்னைக் கொண்டு கற்பனை செய்து பார்த்து கண் கலங்கிய ஞாபகம் இன்னும் மனசுக்குள் உட்கார்ந்து இருக்கிறது. காட்சியா நம்மை கலங்கடித்திருக்கும் என்று பின்னர் யோசித்தபோது,  இக்காட்சியின் பின்னணியில் படைக்கப்பட்ட இசையே காரணமென்பதை அதன் பிறகு அந்தப் பாடலை கேட்கும்போது புரிந்து கொண்டேன்.  இசைதான் என்னை அழ வைத்திருக்க முடியும் .
இளையராஜாவிற்கே அந்தப் பெருமை.


                                அதே படத்தில் அடுத்த பாடல் 'கண்மணியே ...காதல் என்பது கற்பனையோ..' என்ற  அன்றும் இன்றும் என்றும்  எவர் கிரீன் பாடல். எப்போது கேட்டாலும்  எங்கு கேட்டாலும் அதற்குக் காதைக் கொடுக்காமல் என்னால் இருக்கவே முடியாது . பாட்டைக் கேட்டு பரவசமடையாமல் போனதே கிடையாது. எஸ்.பி.பி யும் ஜானகியும் சேர்ந்து கனிந்துருகி பாடியிருப்பார்கள். நம்மையும் உருக வைத்துவிடுவார்கள் . மூச்சு விடாமல் பாடப்பட்ட நீண்ட பல்லவி  உள்ள  பாடல்  இது   என்பதை    இளையராஜாவே  சொல்லியிருக்கிறார்.  ஆனால் மூச்சு விடாமல் பாடப்பட்ட பாட்டாக ராஜாவின்  வேறொரு பாடலைச் சொல்லுவார்கள். மேலும்  எஸ்.பி.பி அவர்கள் மூச்சு விடாமல் பாடப்பட்டதாக தொழில்நுட்பம் கொண்டு காட்டப்பட்டது என்பார்.  மேனாட்டு இசைக் கலப்போடு மோகன ராகத்தில் பின்னப்பட்ட இதயம் தொடும் அழகான மெலடி.அந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.  என்னவிதமான கருவி இசைத்து ஆரம்பிக்கிறார் என்பதை சொல்ல முடியாத அளவிற்கு கிடாரோடு வேறு இசைக்கருவிகள் கலந்து டிரம்சில் ஜாஸ் இசையோடு பல்லவி ஆரம்பிக்கும் அழகே தனி.  கடைசி வரை ஜாஸ் இசையோடு பாடல் செல்லப் போகிறது என்று பார்த்தால் இரண்டாம் இடையிசையில் கொட்டு மேளத்தோடு நாதஸ்வரம் கலந்து கொடுத்து மீண்டும் மேற்கத்திய பாணியில் ஜானகியின் ஹம்மிங்கோடு இசையை தொடரும் அற்புதத்தை நான் அப்போதே ரசித்தேன்.  என் இசை நண்பர்களோடு சேர்ந்து அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றிப்  பேசிப் பேசி மாய்ந்து போயிருக்கிறேன் . அது  ராஜாவிற்கே உரிய படைப்பாற்றல்.

                                             
                           முதல் இடையிசையில் ஜானகியின் குரலில் ஹம்மிங் இரு வேறு  மெலடிகளாக பின்னிப் பிணைந்து வரும் . அது இரு வேறு கவிதை ஒரே நேரத்தில் சொல்லப்படுவது போல் உள்ள கவுண்டர் பாய்ன்ட் அழகு . அன்று கேட்டதை விட இன்று கேட்கும்போது இன்னும் பாடலுக்கு மெருகேறிய தோற்றம் ஏன் மனதுக்குள் தோன்றவேண்டும் ?  இப்போதுள்ள இசையமைப்பாளர்களால் அது சாத்தியமாகிறது. அவர்களின் இசையை கேட்டுவிட்டு மீண்டும் இது போன்ற இளையராஜாவின் பாடல்களுக்கு வந்தால்  அந்த அற்புதம் மனதுக்குள் நிகழ்வதை உணர முடிகிறது.  இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் இளையராஜாவை எனக்கு ஞாபகம் மூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
                                                       
                                                                                                                       
                                ' மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா ..'  என்று  சரணத்தில் மேல் ஸ்தாயில் எஸ்.பி.பி பாட அவருடைய குரலிலேயே, 'லாலல .. லாலலா ..' என்று ஹம்மிங் கீழ் ஸ்தாயில் சேர என்ன சுகானுபவம் !
போலவே ஜானகி பாடும்  வரிகளுக்கும் அதே மாதிரியான கலவை கொடுக்கப்பட்டிருக்கும் . ஏதோ பற்பல வண்ணங்கள் தெளித்து  புது ஓவியம் உருவாவதைப் போல் பாடல் படைக்கப்பட்ட அழகை இன்னும் விரித்துச் சொல்ல வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படுகிறது.


                                 '   வாழ்க்கையே வேஷம் ...இதில் பாசமென்ன நேசமென்ன..' என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். குடும்பத்திற்காக வாழ்ந்து கெட்டவனின்  தத்துவமாக பாடல் வரிகளில் சோகத்தை சுகமாக சேர்த்து இளையராஜா வழங்கிய பாடல்.  வித்தியாசமாய்  கிடாரில் சோகமாய் ஆரம்பித்து வயலின், குழல் போன்றவற்றை இழையோட விட்டு பல்லவி  ஆரம்பிக்கும் . இடையில் குழந்தையை தாலாட்டும் ஒரு பெண்ணின் குரலில் அந்த ஆரிராரோ  சோகத்திற்கு கூடுதலாக சுகம் சேர்த்திருக்கும் . இடையிசையில் கிடார் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு புதுமையான ஒன்று. பெரும்பாலும் வயலின், வீணை , குழல் போன்ற கருவிகளே அதிகமாக சோகத்திற்கு பயன்படுத்துவார்கள்.  கிடாரில் சோக கீதம் ரசனையானது.  அவரின் அபார இசைத் திறமைக்கு இது கூட சான்றே!

                                                   
                                              எழவு வீட்டில் 
                                              கவலையான பாவனையில்
                                              உம்மென்று அமர்ந்திருக்கையில்
                                              தூரத்திலிருந்து
                                              காற்றில் மிதந்து வரும்
                                              இளையராஜாவின்
                                              துள்ளலிசைப் பாடலைக் கேட்டு
                                              உதடுகள் பழக்கதோஷத்தில்
                                              முணுமுணுத்து விடாதிருக்க
                                              மேல் வரிசை பற்களால்
                                              கீழ் உதட்டை இறுகக் கடித்தபடியே
                                               இருக்க வேண்டியதாகிவிட்டது
                                               அந்தப் பாடல் காற்றில் கரைந்து
                                               கடந்து செல்லும்வரை!


                         
                                     மேற்கண்ட கவிதை விகடனில் ' சொல்வனம் ' என்ற பகுதியில் ஒரு பொதுஜனத்தின் கவிதை .  அதற்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு கூட  ' ஏய் ...பாடல் ஒன்று ' என்ற இளையராஜாவின் பாடலிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது.  நம் வாழ்வில் இது போன்ற கணங்களும் அனுபவங்களும் யதார்த்தமாய் நிகழ்ந்திருக்கலாம் .  ஒரு சாவு வீட்டில் அமர்ந்திருக்கும்போது காற்றில் மிதந்து வரும் இளையராஜாவின் பாடல் எந்த அளவிற்கு பாதித்திருக்க இப்படி தன் உணர்வினை கவிதையாகக் கொட்டியிருப்பார்.  யதார்த்த வாழ்க்கையில் மனிதனுக்குள் ஏற்படும் உள்ளார்ந்த உணர்வுகளை இசையினால் வெளிக்கொணரும் ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு  என்பதை தன் ஒவ்வொரு பாட்டிலும் நிரூபித்திருப்பார். ஒரு கதாபாத்திரம் குறிப்பிட்ட சூழலுக்கு வெளிப்படுத்தும் உணர்வினை தானே வாழ்ந்து பார்த்தது போல் அனுபவித்து இசையாக படைப்பது நமது உணர்வினையும் உயிரையும் ஊடுருவத்தானே  செய்யும் .
மனசு நோகும்போது, வேண்டாத எண்ணங்களால்  வேகும்போது  ஏற்படும் மனச்சலிப்பை  விரட்டி, மருந்து தடவி, பாடலினால் நம் உணர்வினைக் கூட்டி, இசையின் இனிமையால் கற்பனையில் எங்கோ கூட்டிச் செல்லும் பாதையைக் காட்டி , புதுப் புது தரிசனங்களை  உருவாக்கும் வல்லமை இசைஞானியின் பாடலுக்கும் இடையிசைக்கும் உண்டென்பது  அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.


                                அது போலவே    எல்லாவிதமான உணர்வுகளுக்கும் நடைமுறைகளுக்கும்  இளையராஜா பாடல் அமைத்திருக்கிறார் . சோகம், சுகம் , ஏக்கம், வெட்கம், துக்கம், நேசம், பாசம், பரிவு, காதல், மோதல், நக்கல், நய்யாண்டி, வீரம்,தீரம், தாலாட்டு , பாராட்டு, நீராட்டு விளையாட்டு,  இன்பம், துன்பம், தாய்மை, சகோதரத்துவம் , ஒப்பாரி, விரகம், கரகம் , ஒயிலாட்டம் , மயிலாட்டம் , சிலம்பாட்டம், தப்பாட்டம், குத்தாட்டம் ,  நட்பு, பயம், மிரட்டல், சவால், பக்தி, முக்தி, உல்லாசம் , உற்சாகம்  போன்ற விசயங்களுக்கும் சொல்ல மறந்த இன்னும் பல விசயங்களுக்கும் இளையராஜா படைத்திருக்கும் பாடல்கள் எண்ணிலடங்காதவை.  மக்களின்  மனசைப்  படித்து  இசையாய்  படைத்த இளையராஜா,  காலங்காலமாய் மக்களிடையே ஊறிக் கிடந்த இசை கேட்டு,  அதை தன்  கற்பனையையும் ஆற்றலையும் திறமையையும் கலந்து கட்டிக் கொடுத்ததை,  தமிழக மக்கள் தாங்கள் கேட்டுப் பழகிய நெருக்கமான இசையாக பார்த்தார்கள்.  வரவேற்றார்கள்; கொண்டாடினார்கள்.  மக்களின் இசை நாயகன் என்று சொன்னால் அது அவருக்குப்  பொருந்தும்.

                                     
                                       79 இல் இளையராஜா இசையமைத்த படங்கள் ஏராளம் . அதில் அமைந்த அற்புதமான பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை. ' அகல் விளக்கு  ' என்றொரு படத்தில்  ' ஏதோ நினைவுகள் ...கனவுகள் மனதிலே மலருதே ...' என்ற பாடல் நிச்சயம் ஒவ்வொரு இசை ரசிகனும் சந்தித்த ஏகாந்த ராகமாகத்தான் இருக்கும். என் மாமா மகன் ஒருவர் ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி குறிப்பிட்டுச் சொன்ன பிறகே நானும் உற்றுக் கவனித்தேன் . அப்போதே அந்தப் பாடலின் ராகம் என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது. ஜேசுதாசும் சைலஜாவும் இணைந்து பாடும் அந்தக் காதல் காவியப் பாடலில்தான் என்னவொரு ரம்மியம்.


                                             'ம்...ம்ம்....' என்ற ஜேசுதாசின் ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்க பாஸ் கிடார் , செல்லோ , வயலின் கலந்து இசைக் கோர்வை சேர சைலஜா ஹம்மிங்கோடு நீட்டி ஆலாபனை செய்ய பல்லவி தொடரும் அழகு பேரானந்தம் தரக் கூடியது. முதல் இடையிசையில் எல்லா கருவிகளும் கலந்து ஒன்றோடொன்று மேவி தாலாட்டிச் செல்லும் . கிடார் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் . இரண்டாம் இடையிசையில் கிடாரோடு வயலின்களின் கவிதைத் தொகுப்பு மழைச்சாரல் போல் பொழியப்பட்டிருக்கும்.  பாடல் முழுமையும் மெளனமாக கேட்டு முடித்த பின்னரும் காதுகளில் அந்த இனிய கானத்தின் ரீங்காரம் இம்சை செய்வதை உணர முடியும் .

                                                     
                                          அந்தப் படத்தின் மற்ற பாடல்கள் பிரபலமாகவில்லை . ரேடியோக்களிலும் கேட்ட ஞாபகம் இல்லை . இப்போது கேட்டால் இசையின் தரத்தில் குறைவுமில்லை. ஏனோ மக்களைச் சேரவில்லை.ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியிருக்கும் இசைஞானியின்  பாடல்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் மக்களால் மிகப் பெரும் வரவேற்பு பெற்றவை . சில நூறு பாடல்கள் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் இளையராஜா ரசிகர்கள் எல்லா பாடல்களையும் கேட்டு ரசித்தவர்களாகவே இருப்பார்கள்.  அதில் நானும் ஒருவன்.



.......................தொடர்வேன்...............................




                                         
                                         
                                   



                              



படத்தில் 
படத்தில் முதல

Wednesday, 29 April 2015

இசை ராட்சஷன் - 9 ( The Musical Legend )


                                             திரையிசையின்  முதல் நவீனம்

                                              பண்ணைப்புரத்து  புல்லாங்குழல்

                                              தென்னகத்து வடக்கு இசை மோகத்தை

                                               புரட்டிப்போட்டு  நமது

                                                கிராமியத்தையும் பாரம்பரியத்தையும்
           
                                                திரட்டிக் கொடுத்த அகத்தியன்

                                                இசை மாணாக்கர்களின் பல்கலைக்கழகம்

                                               ' பாக் 'கையும்  'பீத்தொவனை'யும் தமிழுக்கு

                                                 பரிச்சயம் செய்த பாவலன்

                                                 திரையிசையின்  திருவண்ணாமலை

                                                 அவரின் ஆயிரம் படங்கள்

                                                  இன்னிசையின் காலடித் தடங்கள்

                                                  அவரின் ஒரு வாசகம்

                                                   எங்களின் திருவாசகம்

                                                   குருபரனும் ஒருபரனுமாகிய  இசைஞானி !

ஒரு விழாவில் இளையராஜாவை விளிப்பதற்காக  வாசிக்கப்பட்ட கவிதை .
இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ; மிகையானதல்ல.
                                               

                                 

                          பாரம்பரிய  கர்னாடக  இசையை மட்டும் சினிமாவில் கொடுத்து வந்தபோது அதை அதிகம் கொண்டாடாத மக்கள் கூட்டம் மெல்லிசையாக மாற்றப்பட்டபோது  அதிகம் கொண்டாடவும் வரவேற்கவும் செய்தார்கள் . இளையராஜாவிற்கு முன்னால் இருந்த எத்தனையோ இசை விற்பன்னர்கள் மெல்லிசையை சினிமாவிற்கான அழகான திரையிசையாக உருமாற்றினார்கள் .  மக்களை தங்களின் இசையாலும் பாடல்களாலும்  அழவும் சிரிக்கவும் உருகவும் வைத்தார்கள் . ஏனென்றால் அந்தப் பாடல்கள் எல்லாம் மக்களின் எளிய வாழ்க்கையையும் அனுபவங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவையாய் இருந்தன. ஆனாலும் மக்கள் அந்தப் பாடல்களையெல்லாம் நடிகரின் பாடல்கள் என்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.    இசையமைப்பாளர்கள் மறைக்கப்பட்டிருந்தார்கள்.


                       இளையராஜாவின் வருகைக்கு பின்பு  நடிகரின் பாடல்கள் என்று பேசப்படுவது மறைந்துபோய்  இசையமைப்பாளரின் பாடல்கள் என்று பரவலாய் பேசப்பட்டது . 1978 இல் வந்த பாடல்களே அந்த நிலையை அடைந்தன என்பது கண்கூடு.  78 இல் வந்த திரைப்படங்களில் '   முள்ளும் மலரும்' என்ற படம் இசையிலும் இயக்கத்திலும் ஒரு மறுமலர்ச்சியை  ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

                                                             
                                     

                        ' முள்ளும் மலரும்  ' ரஜினி நடிப்பில் மகேந்திரன் அவர்கள் இயக்கிய வெற்றிப் படம். தமிழ்த் திரைப்படக் காவியங்களுள் ஒன்று . ரஜினி வித்தியாசமான முரட்டு அண்ணன் பாத்திரமேற்று நடித்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்திற்கென்று சொல்லப்படும் குறிப்பிடத்தகுந்த படங்களுள் இதுவும் ஒன்று . இளையராஜா இப்படத்தில் ஒரு இசை யாகம் நடத்தியிருப்பார். படம்  முழுவதும்  ஆங்காங்கே அவருடைய  முத்திரை பதிக்கும் அக்மார்க் இசைத்துணுக்கு இசைக்கப்பட்டு வந்திருக்கும். கதாபாத்திரங்களோடு  நாம் ஒன்றிப்போகுமளவிற்கு கதை மட்டுமல்ல , இசையும் நம்மைத் தூண்டும் .

                                             

                         அப்போதெல்லாம் ஊரில் ஒரு தியேட்டரில் மட்டுமே படம் ரிலீசாகி ஓடும். இன்னொரு தியேட்டருக்குச் செல்ல வேண்டும் என்றால் இன்னொரு ஊருக்குத்தான் போக வேண்டும் காசு கொழுத்தவர்கள் அப்படிச் செய்யலாம் ; சிலர் செய்தார்கள் . நான் வெறும் ஒரு ரூபாய் பத்து பைசாவை கையில் வைத்துக்கொண்டு ஆறு கிலோமீட்டர் நடந்தே வந்து படம் பார்த்துவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்தேன் . குடும்பத்தோடு சேர்ந்து படம் பார்த்த நிகழ்வுகள் அப்போது குறைந்து போனது . பிறகு அடியோடு நின்றும் போனது. முதலில் அண்ணன் படம் பார்த்துவிட்டு வந்து  கதை சொல்லுவார். அப்பா வெளியூர் போனாரென்றால் படம் பார்த்து கதை சொல்லுவார். நான் அம்மாவை நச்சரித்து படத்திற்குக் கூட்டிப் போகச் சொல்லுவேன் . 'நீ தனியாக பார்த்துவிட்டு வா'  என்று ' சுருமாட்டு காசு ' கொடுப்பார்கள். சினிமா டிக்கெட் எடுக்க மட்டுமே கொடுப்பார்கள். பக்கத்தில் போகச் சொல்லி கொடுப்பதை கையில் வைத்துக் கொண்டு நான் நடந்தே அவ்வளவு தூரம் சென்று படம் பார்ப்பேன்.


                         சினிமா பார்க்கும் ஆசைக்கு அப்போது அளவேயில்லை . இளையராஜாவின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் போதும் , அந்தப் படத்தை பார்த்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவேன் . அதில் நிறைய ' மொக்கை ' படங்களும் உண்டு. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது. என்  10 வயதில் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகரில் ' மாங்குடி மைனர் ' என்ற படம் பார்ப்பதற்கு தனியாக டவுன்பஸ் ஏறிப்போய் படம் பார்த்துத் திரும்பியிருக்கிறேன் . திருட்டுபயம். கடத்தல் பயம் எதுவுமே இருந்ததில்லை. அதைச் சொல்லி யாரும் பயமுறுத்தியதுமில்லை. பிரயாணங்கள் , தனி அனுபவங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தன . ஆனால் இன்று நம் பிள்ளைகளை தனியாக அனுப்ப பயப்படுகிறோம், தயங்குகிறோம் . காலமாற்றம் கண் முன்னே தெரிகிறது.


                     அப்படி தேடிப்போய் பார்த்த முள்ளும் மலரும் படத்தில் ' செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் '  என்ற கண்ணதாசனின் கவித்துவ வரிகளில் ஜேசுதாசின் குரலில் கேட்ட காவியப் பாடல் கொடுத்த சுகாபனுபவம் இப்போதும் இனிக்கிறது . பௌலி ராகம் ஆதி தாளத்தில் என்றென்றும் அழியாத அந்தப் பாடல் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் இனிய சங்கீதம் . இயற்கை அழகின் கட்டுக்குள் மயங்கி ரசிக்கும் நாயகனின் கற்பனையாக பாடல் ஒலிக்கும் . படத்தில் மலைப்பாதையில் வண்டி வளைந்து வளைந்து செல்லும்போது எதிர்ப்படும் இயற்கைக் காட்சிகளை நயந்து நயந்து வர்ணிக்கும் அழகான இசையை இளையராஜா கொடுத்திருப்பார். அவர் இசையே ஒரு கவிதைதான் ! மூன்று சரணங்கள், மூன்று வெவ்வேறு இடையிசை , மனது வருடும் சுகமாய் ஜேசுதாசின் தேன் குரல்,  சிக்காத வார்த்தைகளில் திகட்டாத கவிதை என்று எதைச் சொல்வது , எதை விடுவது என்று தெரியவில்லை. மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்பது தெரியாத அளவிற்கு கனகச்சிதமாக இரண்டும் பொருந்தியிருக்கும் . ஜேசுதாசின் பல பாடல்களில் இதற்கு தனி முத்திரை உண்டு.

                                                                                                   

                ஜேசுதாசின் ஹம்மிங்கோடு  பாடல் ஆரம்பிக்கும்போதே நம் மனதும் ரீங்காரமிட ஆரம்பித்து விடும். குழலையும் வயலினையும் பிரதானமாய்க்  கொண்டே பின்புல இசையில் நமை மயக்குவார் ராஜா.  காட்சியோடு பாடலை கேட்டால் நாமும் பறவைகளாகிப் போகுமளவு மனசும் இளகிப் போகும்.  மலைகளின் மேடு பள்ளங்களைப் போல் சிலர் உள்ளங்களையும் ஏன் படைத்தாய் இறைவா என்று இயற்கை  வர்ணனைகளோடு வாழ்க்கைத்  தத்துவத்தையும் போகிற போக்கில் சாதாரணமாக கவிஞர் சொல்லிவிட்டுப் போவார்.
கிளாசிக் ...!


                       '  ராமன்  ஆண்டாலும்  ராவணன் ஆண்டாலும்  எனக்கொரு கவலையில்லே '  என்ற  கங்கைஅமரன்  பாடலுக்கு எஸ்.,பி. பி அவர்களின் குரல் கச்சிதம். திமிர்த்தனம், அகம்பாவம், ஆணவத்தோடு பாடப்படும் பாடலுக்கு அவரை விட பொருத்தமான உணர்ச்சிகளை யாராலும் கொடுத்துவிட முடியாது. மலை சாதியினரோடு குடித்துவிட்டு நாயகன் ஆடிப்பாடுவது போன்ற காட்சி . எவரையும் துச்சமாக எடுத்தெறிந்து பேசும்  பாத்திரத்தில் ரஜினி பிரமாதமாக நடிக்க , எஸ்.பி.பி அதைவிட பொருத்தமாய் பாட ,  இருவரையும் மிஞ்சும் அளவிற்கு பாடலுக்கான  இசையை இளையராஜா அற்புதமாக கொடுத்திருப்பார்.   அந்தோலிகா  என்ற ராகத்தின் அடிப்படையில்  நாடோடிப் பாடலாக கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்னால்  இளையராஜாவின் இசை முன்னோர்கள் மலை ஜாதியினர் ஆடிப்பாடும்  பல பாடல்களை அழகாக கொடுத்துள்ளார்கள். இளையராஜா அவர்களுக்கு சளைக்காத வகையில் இந்தப் பாடலை இன்னும் அழகாக கொடுத்திருப்பதாகவே நான் உணர்ந்தேன்.
                                             
                                                       

                      அட்டகாசமான தாள நடை, மணி ஒலியுடன் ஷெனாய்  மற்றும்   பெண்களின் குரலிசையோடு பாடல் ஆரம்பிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிந்து விடும் . கோரஸ் இடையில் தாள நடையும் மாறும். வித்தியாசமான இசைக் கருவிகளின் நாதம் ஒலிக்கும் .  'லே...லேலேலேலே ...' என்று கோரசாக பாடிவிட்டு அதையே  "அம்மனை கும்பிட்டா நமக்கெல்லாம் நல்லதே நடக்குதே " என்ற  வார்த்தைகள் கொண்டும் பாடப்படுவது புதுமையாக இருக்கும். பல்லவி முடிந்து தாளநடை மாறி  மீண்டும் பழைய நடைக்குத் திரும்பி சரணம் பாடப்படும் இடங்கள் எல்லாம் இளையராஜாவின் தனி முத்திரை .  பறை ஒலியுடன் இந்தப் பாடல் முழுமையுமே வித்தியாசமான முயற்சி  மற்றும் புதுமை . நான் அதுவரை அப்படியொரு இசையை கேட்டதில்லை.

               
                             இன்னொரு சுவையான செய்தி பகிர வேண்டும் . ராமன் ஆண்டாலும் பாடல் எழுதப்பட்ட விதத்தை ஒரு நண்பர் அழகாக விவரித்துள்ளார்.

                              முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.
அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.
கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை
அதனால் கங்கை அமரனையே எழுதவைக்கலாம் என்று முடிவெடுத்து கங்கை அமரன் எழுதினார்..
"உலகம் அது ஒரு கழுதைய மாதிரி தினசரி சுழலுதடா
பொதிதானே அந்தக் கழுதையும் தூக்குது
சரிதானே பூமி பலரையும் தாங்குது
டேய் கழுத கண்டதத் திங்குது
பூமியே மனுஷனத் திங்குதடா"
இதைப் படித்துவிட்டு இளையராஜாவும், இயக்குனர் மகேந்திரனும், இல்லை இதுபோல வேண்டாம் "நாயகன் உலகத்தையே தூக்கி எறிந்து விட்டு I don’t care" என்று பாடுவது போல இருக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின் எழுதிய வரிகள் தான்..
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”
  
                         மத்யமாவதி ராகத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் ஜென்சி பாடிய மற்றுமொரு துள்ளலான பாடல் , 'அடி பெண்ணே ...பொன்னூஞ்சல் ஆடும் இளமை ' . ஜென்சிக்கு அவர் பெயர் சொல்லும் அழகான பாடல்.  ஆசிரியையாக பணி  புரிந்து கொண்டிருந்தபோது  இளையராஜா அவருக்கு பல பாடல்கள் பாட வாய்ப்பு கொடுத்தார்.  வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர பாடகியாக வரும்படி இளையராஜா கேட்டுக்கொண்டபோது அதை உதாசீனப்படுத்தினார். ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். நிறைய வாய்ப்புகளை இழந்தார். இப்போது அதைக் குறித்து வருத்தப்படுவதாக ஒரு பேட்டியில் ஜென்சி குறிப்பிட்டிருந்தார்.
நல்ல பாடகியாக வலம் வந்திருக்க வேண்டியவர்.
             
                                                 

                       திரைப்படத்தில்   தன் அண்ணனின் மேலதிகாரி தன்னை மணம் புரிய விருப்பம் தெரிவித்ததைக் கேட்டவுடன் நாயகிக்கு ஏற்படும் இனம் புரியா கனவு கற்பனையோடு  எல்லையில்லா சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக பாடல் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும் . இயக்குனர் கேட்டதற்கு மேல் இளையராஜா கொடுத்திருப்பார்.  பெண்ணின் மனது கிடந்து தவிக்கும் தவிப்பை இசையில் கொண்டு வந்திருப்பார்.  ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஐந்து நிமிடப் பாடலில் படைத்திருக்கும் இளையராஜாவின் இசைக் கற்பனை  அபாரம் .



                          அதே படத்தில்  ' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ...நெய் மணக்கும் கத்திரிக்கா ...'  என்றொரு மணமணக்கும் பாடல் உண்டு. வாணி ஜெயராமின் அழுத்தந்திருத்தமான குரலில் கங்கை அமரனின் கை வண்ணத்தில் கேட்கும்போதே மனதில் வந்து ஒட்டிக் கொண்ட பாட்டு. படத்தில் பார்த்தவுடன் காட்சியும் பிடித்துப் போனது.  படத்தில் நாயகி ஒரு போஜனப் பிரியை . சுருக்கமாக  ' சாப்பாட்டு ராமி ' . முதலிரவில் ஒரு பாட்டு பாடச் சொல்லி ரஜினி கேட்கப் போக படாபட் ஜெயலக்ஷ்மி பாடுவதாக சூழல் காட்டப்பட்டிருக்கும் . நாவில் சுவையூறும் பதார்த்தங்களைக் கொண்டு பாடல் எழுதப்பட்டிருக்க அந்தச் சூழலுக்கு வெகு பொருத்தமான இசையை இளையராஜா கொடுத்திருப்பார்.


                         நெல்லுச் சோறு பற்றி அதிசயம் போல் பாடல் எழுதப்பட்டிருக்கிறதே, மிகைப்படுத்துகிறார்களோ என்று சந்தேகித்து என் தந்தையிடம் அது பற்றி கேட்டேன் . ஏனென்றால் எங்கள் வீட்டில் தினமும் அதுதானே சாப்பாடு. பாடலில் பெரிய விஷயம் போல காட்டியுள்ளார்களே என்று கேட்டபோது அவர் சொன்னார்: " எங்கள் காலத்தில் நெல்லுச் சோறு அதிசயம்தான்! ஏதாவது பண்டிகை விஷேசங்கள் வரும்போது மட்டுமே சோறு சாப்பிடுவோம் . இட்லி தோசை கூட தீபாவளி , கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் மட்டுமே செய்வார்கள். மற்றபடி தினமும் கம்பு, கேழ்வரகு ,சோளம்  கூழாகவோ கஞ்சியாகவோ சாப்பிடுவோம் . காய்கறி எல்லாம் கிடைக்காது . வெங்காயம், மிளகாய் , ஊறுகாய் , துவையல் இதுதான் தொட்டுக்கிறதுக்கு ! நீ சாப்பிடும் சோறு எங்களுக்கு அபூர்வம் . "

                                                   

                            கிராமத்து மண்ணின் யதார்த்த வாழ்க்கை நடைமுறையின் வெளிப்பாடுகள் பாடலாக அரங்கேற்றப்படும்போதேல்லாம்  அது வெற்றிப்பாடலாக வலம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்தப் பாடலும் அதில் அடக்கம்.  தினசரி சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொண்டு பாடல் எழுதி அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை எளிய கருவிகள் மூலம் நாடோடி பாடலாக அழகான இசையோடும் கிராமத்து வாசனையோடும் இளையராஜா கொடுத்திருப்பார்.
கடம், மோர்சிங் போன்ற கருவிகளின் ஆதிக்கம் அதிகம் தெரியும் . படம் பார்க்கும்போது பக்கத்தில் இருந்த ' பெரிசுகள் ' கொடுத்த கமெண்ட் இன்னும் சுவாரசியாமனது . ' அடடா... பிரமாதம் ...ஸ் ....' என்று ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டவர்களை எல்லாம் சந்தித்தேன்.  சில நேரங்களில் திரைப்படங்களில் வரும் நகைச்சுவைகளை  விட பொது மக்களிடமிருந்து வரும் ஜோக்குகளுக்கு
தியேட்டரே சிரிக்கும். அந்த அனுபவங்கள் இப்போது இல்லை . காலாவாதியாகிப் போனது.


                                  அதே 78 இல்  '  சட்டம் என் கையில்  '  என்ற திரைப்படம் வெளிவந்தது. கமல்ஹாசன் இரட்டை வேடம் . படம் காரம் மணம் கலந்த மசாலா . அந்த வயதுக்கு பிடித்தமானதாக இருந்தது.  இப்போது பார்க்கும்போது  பிடிக்கவில்லை. ஆனால் இளையராஜாவின் இசை. அப்போதும் இப்போதும் அப்படியே புத்தம் புதிதாய் அதன் பரிமாணம் மாறாமல் சுகந்த மணம் மாறாமல் இருக்கிறது.  ஆழ்ந்து அனுபவித்து  சுகித்தவர்களுக்கு  அது புரியும் .

                                                   


                                 ' சொர்க்கம் மதுவிலே ...சொக்கும் அழகிலே  ' என்ற இளமைத் துள்ளலான பாடல் கேட்ட மாத்திரத்தில் அசரடித்தப் பாடல். கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பி பட்டை கிளப்பிய பாடல்.  சிலோன் வானொலியில் இசைச் செல்வம் நிகழ்ச்சியில் அதிக நாட்களாய் முதல் தரம் பிடித்தப் பாடல்.  மேலைநாட்டு இசையை தமிழிசைக்கேற்றாற்போல் மாற்றி அமைக்கப்பட்ட பாடல் . இன்னும் தமிழகத்தின் பல இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ' அங்கிங்கு ' இசைக் குழுவினர் எங்கு சென்றாலும்  இந்தப் பாடலை பெரும்பாலும் தங்கள் நிகழ்ச்சியில் இப்போதும்  அப்படியே கொடுக்கிறார்கள்.  கேட்கும் கூட்டம் பரவசமடைவதையும்    பார்த்திருக்கிறேன் .  அந்தப் பாடலின் கிரேஸ் இன்னும் தீர்ந்தபாடில்லை .

                                               

                                கிடார் கார்ட் ஆரம்பித்து ட்ரம்பெட் சேர்ந்து பெண்களின் கோரஸ் ஒலியுடன் பல்லவி அட்டகாசமாக ஆரம்பிக்கும்போதே வினோத இசை உலகுக்குள் சென்றுவிடுவோம் . மோனோ ரெக்கார்டிங்கில் பாடல் ஒலிக்கும்போதே இசைக் கருவிகளின் மாயாஜாலம் அற்புதமாக இருந்தது . இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் அதே பாடல் இசைக்கப்பட்டால் இன்றுள்ள இளைஞர் பட்டாளங்களுக்கு மேனாட்டு இசைக்கலப்பின் அதிசயம் புரியும் .  இடையிசையில் பெண்கள் கோரஸின் காட்டுக் கூச்சலும் எஸ்.பி.பி யின் கர்ஜிக்கும் பின்னணியும் அப்போது திரையில் பார்த்தபோது பரபரவென பற்றிக்கொள்ளும் உற்சாக உணர்வு கிளம்பியது. படத்தில் கமல் பெண்களை கொஞ்சுவார்;  பாடலில் எஸ்.பி.பி வார்த்தைகளை கொஞ்சுவார்; இளையராஜா இசையில் எல்லோரையும் மிஞ்சுவார்.  ( 37 வருடங்கள் ஆச்சு ! இப்போதும் லண்டனில் நடந்த சூப்பர் சிங்கர் world tour 2015 என்ற நிகழ்ச்சியில் SPB அவர்கள் வெற்றி பெற்ற குழந்தைகளோடு சேர்ந்து பாடுகையில்  அதில் சொர்க்கம் மதுவிலே என்ற  பாடலை அட்டகாசமாக பாடினார் . லண்டன் வாழ் தமிழ் மக்களே மறக்கவில்லை . அப்படி ரசித்தார்கள் . நாம் எப்படி மறப்பது? )


                             ' ஆழக்கடலில் தேடிய முத்து...ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு    '  என்ற பாட்டு  வித்தியாசமான தாலாட்டுப்  பாட்டு.  இந்தப் பாடல் மட்டுமன்றி  படத்தின் பாடல்கள்  அனைத்தும் கண்ணதாசன் . மலேசியா வாசுதேவன் , ஜானகி அவர்களின் குரலில் சுகமான பாடல் . முதல் சரணம் முடிந்து இடையிசையில் 'ஏ..ஏ....ஏ ...னா ....   ' என்று தூரத்தில் கேட்பதுபோல்  நீட்டி முழங்கும் ஒரு ஆண் குரலின் ஹம்மிங் ஒலி இனம் புரியா  சுகமான இம்சையை ஏற்படுத்தும். இளையராஜாவின்  தனித்துவம் இப்படிப்பட்ட குரலிசையில் தனியே தெரியும். அது ராஜாவின் ட்ரேட் மார்க் !
             
                                                         

                               ' கடைத்தேங்காயோ...வழிப்புள்ளை  யாரோ ..' என்றொரு குத்துப்பாடலில் தாரை தப்பட்டையும் டிரம்ஸும் கொண்டு  கிராமிய நடையும்  மேனாட்டு இசை நடையும்  கலந்து கொடுக்கப்பட்டிருக்கும்.  சேரியில் வளரும் நாயகனுக்கும் பணக்கார நாயகனுக்கும் ஒரே நாளில் நடக்கும் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதாக காட்டப்பட்டிருக்கும் சூழலுக்கு இசைக்கப்பட்ட பாடல் என்பதால் இளையராஜா இரண்டும் கலந்து அழகாக பின்னிக் கொடுத்திருப்பார்.  வாசுவும் கம்பீரமாக பாடியிருப்பார்.

                                                   
         
                                     ' ஒரே  இடம் ...நிரந்தரம் .. இதோ உன் துணை ...இதோ என் இசை..'  என்ற பாடலுக்கு மறைமுகமாக தன்  இசையைத்தான் இளையராஜா குறிப்பிடுகிறாரோ என நினைக்கத் தோன்றும் அளவிற்கு அசத்தலான இசையை வழங்கியிருப்பார்.  சுசீலா அவர்களின் மயக்கும் குரலில் ட்ரம்பெட் ஒலியுடன் பாடல் கேட்டால் மனசும் மயங்கும் . இடையிசையில் மேனாட்டு இசைக் கலப்பில்  ஆண்  குரலில் வரும் ஹம்மிங் வேறுலகம் கூட்டிச் செல்லும் .

                                                   

                                  ராஜா   ஜானகிக்கு அதிக வாய்ப்புகள்  கொடுத்திருந்தாலும் சுசீலாவும் இளையராஜாவின் இசையில் நல்ல பல பாடல்கள் பாடியிருக்கிறார்.  ராஜா இசையமைப்பாளராய்  ஆவதற்கு முன் ஜி .கே. வெங்கடேஷின் உதவியாளராய் வேலை செய்தார் . ஒரு சமயம் வெங்கடேஷின் இசையில் சுசீலா பாடும்போது அபஸ்வரமாய்  ஓரிடத்தில் பாட  கிடார்  இசைத்துக் கொண்டிருந்த இளையராஜா அதைச் சுட்டிக் காட்டினார்.  சுசீலா ராஜாவின் கிடார் வாசிப்பில்தான் தவறு என வாதிட்டார். ராஜா ஏற்றுக் கொள்ளவில்லை . சுசீலாவிற்கு தன்மானப் பிரச்சனை . ராஜா கூடத்தை விட்டு வெளியேறினால்தான் தொடர்ந்து பாடுவேன் என அடம் பிடித்தார்.  ராஜா மெளனமாக வெளியேறினார். பிறகே ஒலிப்பதிவு  நடந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன் .  ஆனாலும் இளையராஜா சுசீலாவிற்கு தன் முதல் படத்திலேயே  பாட வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகும் அவரிசையில் சுசீலா  பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
                                     

                                  '  சொன்னது நீதானா  ' என்ற படத்தில் ஜெயச்சந்திரன் குரலில்   ' வெள்ளி  நிலாவினிலே ..தமிழ் வீணை வந்தது '

                                 ' திருக்கல்யாணம் '  என்ற படத்தில் ஜெயச்சந்திரன், ஜானகி குரலில்   ' அலையே கடல் அலையே '

                                    ' வாழ நினைத்தால் வாழலாம் ' என்ற படத்தில்  ஜானகியின் குரலில்  ' வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா ...'

                                 ' வட்டத்துக்குள் சதுரம் ' என்ற படத்தில்  ஜானகி மற்றும் சசிரேகா குரலில் ' இதோ இதோ என் நெஞ்சிலே ...ஒரே பாடல்.. ' ,  ஜிக்கி அவர்களின் குரலில்  ' காதலென்னும் காவியம் ...கன்னி நெஞ்சின் ஓவியம் ..'


                              மேற்குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் நான் இலங்கை வானொலியில் மட்டுமே கேட்டு இன்புற்றிருக்கிறேன் .  ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைத்  தரும். வெள்ளி நிலாவினிலே என்ற பாடலை ஒரு பாட்டுப் போட்டியில் நான் பாடியது நினைவிருக்கிறது.  இதோ இதோ என் நெஞ்சிலே என்ற பாடல் இப்போதும் டி வி களில் ஒலிபரப்பப்படும்போது  பால்ய கால நினைவுகள் அலைகளாய் வந்து நெஞ்சில் மோதுகின்றன.


                      வெவ்வேறு சூழலுக்கு வெவ்வேறு விதமான மெலடி வெவ்வேறு பின்னணி இசை , வெவ்வேறு ஜானர் . ஆனால் எல்லாமே ஒரே ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படுகிறது எனும்போது இளையராஜாவை  பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியாது . ஒரு பாட்டில் உள்ள எல்லாவற்றையும் அவரே ஆள்கிறார் ; அவரே முடிவு செய்கிறார் ; அவரே படைக்கின்றார் . ஆனால் தனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது என்று தாழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறார்.

                   
                       சமீபத்தில் ஒரு திரைப்படப் பாடல்  வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியது : -  "  எனக்கு இசையைத் தவிர எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் எப்படி இசையமைத்தேனோ   அதுபோலதான் இப்போதும் அமைக்கிறேன் .  பாடல்களை கம்போஸ் செய்ய நேரம் எடுப்பேன். ஆர்கெஸ்ட்ராவை  ஒருங்கிணைக்க அரை மணி நேரம் போதும். எனக்கு இசை தெரியவில்லை. அதனால்தான் இசையமைக்க இன்னும் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறேன் . எனக்கும் உங்களுக்கும் தெரியாத இசை நிறைய இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் அது வந்து கொண்டே இருக்கிறது. ' ருத்ரம்மாதேவி ' என்ற படத்திற்காக லண்டனில் உலகப் புகழ் பெற்ற சிம்பொனி இசைக் குழுவுக்கு நான் அனுப்பிய நோட்ஸ்களைப் பார்த்துவிட்டு எங்களால் வாசிக்க முடியவில்லை என்றார்கள். நான் இப்படிதான் படைக்கிறேன். இது இறைவன் கொடுத்த வரம்.  " . அவர் நிறைய பேசியிருப்பார். பத்திரிக்கையில் பேச்சின் சாராம்சத்தை சுருக்கமாக கொடுத்துள்ளார்கள்.



.........................தொடர்வேன்......................
                                               

                                               
                                                 
                                               

Wednesday, 1 April 2015

வாட்ஸ் ஆப்புகள்



                                                   
             
                      இசைப் பதிவுகளுக்கு இடையில் கொஞ்சம்  ரிலாக்ஸ் செய்துவிட்டு போகலாம் என்றுதான் இந்தப் பதிவுக்கு வந்தேன் .
                                   
                                           
         
                 வாட்ஸப்  இப்போது இளையோர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . வாட்ஸப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் நம்மை ஒரு மாதிரியாக மற்றவர்கள் பார்க்கிறார்கள் .
           

                   ஊடகங்கள்  இப்போது இதை பயன்படுத்தி உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை பெற முயல்கிறது.  யார் அநியாயம் செய்தாலும் எங்கு அக்கிரமங்கள் நடந்தாலும் அதை  யாராவது  வீடியோ எடுத்து    வாட்ஸப்பில் 
பரப்பி விடுகிறார்கள் .  ஊடகங்களும் ஒலி  பரப்புகின்றன .  அதை ஒரு சாட்சியாகக் கருதி நீதி மன்றமும் வழக்கை  எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன . வாட்ஸப்  சிலருக்கு கிலி ஏற்படுத்தி இருக்கிறது . 
                                               


                  என் மனைவியுடன் சேர்ந்து பணியாற்றுபவர் ஒருவர் அவர் கணவரிடம் சென்று  ' ஏங்க ...தடவுற போன் ஒன்னு வாங்கிக் கொடுங்க ...' என்று கேட்க அவர் சிறிது நேரங்கழித்து புரிந்து கொண்டு ' டச் போனா..? ' என கேட்டிருக்கிறார்.  ' ஆமா..மா ...அதேதான்  எல்லோரும்   வாட்ஸப்  பயன்படுத்துறாங்க எனக்கு ஒண்ணும் தெரியலைன்னு  கிண்டல் செய்றாங்க ..' என்று புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி கற்றுக் கொண்டுவிட்டார்.  வாட்ஸப்   கற்றுக் கொள்வதும் கையாள்வதும் எல்லோருக்கும் எளிதான விசயமாகிப் போனதால் எல்லா வயதினரும் பயன்படுத்துகிறார்கள் .

                           
                     வாட்ஸப்பில் பாட்டு,  போட்டோ, ஆடியோ , வீடியோ , கமெண்ட்   என்று எதை வேண்டுமென்றாலும் அனுப்பலாம் என்பதால் நக்கல், நையாண்டி , கிண்டல் , கேலி, ஆச்சரியம், அதிசயம் , அசிங்கம் ...etc  வருகிறது; போகிறது.  கட்டுப்பாடுகளே இல்லை .  வீட்டுக்குள் நுழைந்தால் பிள்ளைகள் எடுத்துப் பார்த்து விடுவார்களோ என்று பயப்பட வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு குஷியாக இருந்த  வாட்ஸப் விஷயங்கள் போகப் போக ,  'இன்னிக்கு எவன் என்னத்தை அனுப்பினானோ ...? ' என்று யோசிக்க வைக்க ஆரம்பித்து விட்டன .  இந்திய அரசாங்கம் தடை செய்த கொடூரமான மனிதத் தலையை வெட்டி எறியும் காட்சிகள் கூட பரப்பப்படுகிறது.  என் நண்பர் ஒருவருக்கு அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு மயக்கம் வந்து விட்டதாம் .  எப்படியோ சமாளித்துவிட்டார்.  இப்போது வாட்ஸப் உள்ளே செல்ல தயங்குகிறார்.  மனுசனை அது என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!?

             
                     சின்னப் பசங்கள் கையில் அது அதிகம் விளையாடுகிறது.  எதையாவது பார்த்துக் கொண்டே அலைகிறார்கள் . பத்து பேர் சேர்ந்து கொண்டு அரட்டை அடிக்கிறார்கள் வாயை திறக்காமலேயே! கேட்டால் 'குரூப் சாட் '  என்கிறார்கள்.   அவர்கள் பார்ப்பது மறுக்கப்பட்டால் கோபம் தலைக்கேறுகிறது. என்ன செய்ய?  உள்ளறையில் படுத்திருக்கும் என்னை என் மகள்  ' அப்பா டீ  குடிக்க  ஹாலுக்கு வாங்க ' என்று  வாட்ஸப்பில் செய்தி அனுப்புகிறாள்.  நானும் அந்த வாட்ஸப்பில் மேய்ந்து கொண்டிருப்பதால் உடனே செய்தி என்னை எட்டுகிறது.
                                                       

                       சில பேர் பக்கம் பக்கமாய் எழுதி அனுப்புகிறார்கள் . வாசிக்க பொறுமை இல்லை. ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் என் நண்பனுக்கு ஒரு பெரிய செய்தியை பகிர்வதற்காக அனுப்பினேன்.  எனக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துவிட்டான்.  ' வாட்ஸப்  சின்ன சின்ன செய்தி அனுப்பத்தானே ஒழிய இப்படி  ' எஸ்ஸே ' அனுப்புறதுக்கு இல்ல . அமெரிக்காவில் எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா ?....'  என்று வசை பாட ஆரம்பித்துவிட்டான் . வாட்ஸப்பினால் அமெரிக்காவிலிருந்து நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.  அதன் பிறகு,  '  ஹாய் ...நலமா ...பிள்ளைகள் நலமா ...ஹவ் ஆர் யூ ...ஹி ...' என்ற வார்த்தைகள் தவிர வேறு எதையும் அவனுக்கு அனுப்புவதே கிடையாது.


                      வாட்ஸப்பில் சிக்கிக் கொண்டு நிறைய பேர் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் . எனக்கு அந்த அளவுக்கு பைத்தியம் இல்லை. அளவோடு பயன்படுத்துகிறேன்.  அதனால் நிறைய விசயங்களை பார்க்காமலேயே அழிக்க ஆரம்பித்து விட்டேன்.  திறந்தால்  போதும்  நூறு விஷயங்கள் வந்து கொட்டும் .  அத்தனையும் பார்த்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே  ஆகும் . என் நேரத்தை  தின்று தீர்த்துவிடும் . நானே சென்சார் செய்து விடுகிறேன் .

                   சமீபத்தில்  ஆசிரிய நண்பர் ஒருவர் ,  ' சார் ...வேண்டியவங்களுக்கு பழைய வினாத் தாளை  வாட்ஸப்பில் அனுப்பக் கூட பயமாயிருக்கு ... எதுக்கு உள்ள தூக்கி வைப்பான் என்றே தெரிய மாட்டேங்குது  ' என்று அங்கலாய்த்தார் இப்படி நமது பின்னணியில்  ஒளிந்திருக்கும்ஏகப்பட்ட பிரச்சனைகளோடுதான்  வாட்ஸப்பிலும் நாம்  மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

               
                    அப்படி நான் ரசித்து மகிழ்ந்த விசயங்களில் சில ஆடியோப் பதிவுகள் நகைச்சுவையாக இருந்தன . பார்ப்போம்.



                                           ஆடியோப் பதிவு ஒன்று



(  ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து  ஒரு பெண் ஊழியர் பேசுகிறார் . எதிர் முனையில் ஓர் ஆண் பதில் சொல்கிறார். )

பெண் :     சார்   ரா.... சாருங்களா ?

ஆண் :      ஆமா ...நீங்க?

பெண் :    சார் ...நாங்க இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுறோம் ...ஏற்கனவே                  உங்களுக்கு சொல்லி இருந்தோம் இல்லியா ...நீங்க வாங்க         வரேன்னு     சொல்லி இருந்தீங்க இல்லியா ...

ஆண்  :   நான் ஆபிசில் இருக்கேன் ... நீங்க சொல்லுங்க .. என்ன இன்சூரன்ஸ்?

பெண் :  அப்புறம் பேசவா ...?

ஆண்  :  இல்ல ... சொல்லுங்க என்ன இன்சூரன்ஸ்ங்க ...?

பெண் :  லைப் இன்சூரன்ஸ்.. ஏற்கனவே சொல்லியாச்சு ..உங்க வீட்டில                                 அவங்களுக்கு ஒரு  லட்சம் மதிப்புள்ள பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  ஒரு லட்சம் cash ஷா மேடம் ?

பெண் :  இல்லை  இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு

ஆண்  :  எங்க விழுந்துச்சுங்க ...?

பெண்  :  இன்சூரன்ஸ் ஆபிஸ்ல .. ஆயிரம் நம்பர் குலுக்கியதில அவங்களுக்கு                     இன்சூரன்ஸ் பாலிசி விழுந்திருக்கு சார் ..நீங்க வந்து
                  வாங்கிக்கறேன்னு சொன்னீங்க ...

ஆண்  :   அவர் உங்க ஆபீஸ்ல தெரியாம விட்டுட்டு வந்திருப்பாரு ...எடுத்து
                   வைங்க ...அவருகிட்ட சொல்றேன்

பெண் :     வருவாங்களா அவங்க ...ஏன்னா கவருமென்டுல இருந்து வந்து
                    கொடுக்கிறாங்க...மேனேஜர் வந்து கொடுப்பாரு

ஆண் :      மேடம் அவரு விட்டுட்டு வந்திருப்பாருன்னு
                சொன்னீங்கல்ல   எடுத்து வைங்க மேடம்...


பெண் :   அவர் விட்டுட்டு வந்தாருன்னு நான் சொல்லலை .

ஆண்  :   நீங்கதானே மேடம் விழுந்திருச்சுன்னு சொன்னீங்க

பெண் :     சார் நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்குங்க ..அவங்களுக்கு ஒரு                               லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி
                    விழுந்திருக்குன்னுதான் சொன்னேன் ..

ஆண்  :     ஒரு   லட்சம் மதிப்புள்ள  பிரிஜ்ஜா ....?

பெண்  :    பிரிஜ் இல்ல ... பாலிசி சார் ..

ஆண்  :      என்னது பால் பாக்கெட்டா ....?

பெண் :      வைங்க சார் போனை... பாலிசின்னு சொல்றேன் ...பிரிஜா ..பால்
                      பாக்கெட்டானு  கேட்டுகிட்டு ...ஆளைப் பாருங்க



                                       ஆடியோப் பதிவு இரண்டு


( எர்வா மாட்டின் என்ற ஒரு product விற்பனை சம்பந்தமான பரிவர்த்தனை )


பெண் :   அதை யூஸ் பண்ணீங்களா ?

ஆண்  :   நான் மூணு நாலு பாட்டில் யூஸ் பண்ணிட்டேன்.

பெண் :  ஒரு பாட்டில்தானே வாங்கியிருக்கீங்க .
                  ஒரு பாட்டில்தான் இருக்கு

ஆண் :   ஒண்ணுதான் இருக்கா ...என்கிட்டே நாலு பாட்டில் இருக்கே

பெண் :   ஒரு பாட்டில்தான் நீங்க வாங்கியிருக்கீங்கன்னு இருக்கு .

ஆண்  :  உங்க கம்ப்யூடரில் ஏதோ பிரச்னை ...நான் நாலு பாட்டில்
                   எர்வா மாட்டின் வாங்கினேன் .

பெண் :   இன்னொன்னு வேணுமா சார்

ஆண்  :   முதல் பாட்டில் வாங்கி யூஸ் பண்ணதுல கொஞ்சம் முடிதான்
                   போயிருந்துச்சும்மா

பெண்  :  எப்படி நீங்கயூஸ் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ...?

ஆண்  :    அவங்க எப்படி சொன்னாங்களோ அப்படிதான்மா யூஸ் பண்ணேன்
                    எனக்கு முதல்ல நல்லா முடி இருந்துச்சும்மா ...கொஞ்சம் முடி
                     போச்சு ...எல்லோரும் சொன்னாங்கன்னு  டிவியில பார்த்துட்டு
                     உங்க ஆயில் வாங்கி தேச்சேன் .. கூடுதலா முடி போச்சு ...

பெண் :    ஓ . கே  சார்

ஆண்   :    அடுத்தடுத்து வாங்கி தேச்சதுல எல்லா முடியும் கொட்டிப் போயி
                     இப்ப மொட்டை மண்டையா நிக்கிறேன் ...ஒரு போட்டோ
                      வேணுமின்னா எடுத்து அனுப்பட்டுமா ...?

பெண்  :    சார் புரோட்டின் ரொம்ப கம்மியா இருந்தா அப்படி கொட்டும் சார் ..
                    ஆனா எங்க பிராடெக்ட் யூஸ் பண்ணா வேரில போயி முடி நல்லா
                     வளரும் சார்..யூஸ் பண்ண பண்ண கண்டிப்பா உங்களுக்கு முடி
                       வரும் சார் ...

ஆண்  :      எப்ப வரும்னு சொல்றீங்க ...?

பெண் :   யூஸ் பண்ணிகிட்டே இருந்தா வரும் சார் ...

ஆண்  :   தேய்க்க தேய்க்க எல்லாம் கொட்டிப்   போச்சு..
                  போனதுக்கப்புறம் இனிமே தேய்ச்சா
                  முடி வருமா...?

பெண் :   கண்டிப்பா வரும் .

ஆண்  :  ஒருவேளை மழை பெய்ஞ்சா வருமோ...?  வெயில் காலம் அதனால
                   வர மாட்டீங்குதோ ..?


பெண் :    அப்படி இல்லை சார் ... கண்டிப்பா வளரும் சார்


ஆண்  :    ஒரு பாட்டில் தேச்சப்ப கொட்டிப் போச்சு ..  ரெண்டாவது மூணாவது
                      தேய்ங்கன்னு  சொன்னாங்க ...மொத்தமா போச்சேம்மா ...

பெண் :    முதல் பாட்டில் தேய்க்கும்போது  பொடுகு போகும் ...அடுத்தடுத்து
                   தேய்ச்சா வளரும்

ஆண்  :   இது எங்கிருந்து வருது ....பிரேசிலா ...:

பெண்  :   அமேசான் காட்டிலிருந்து மூலிகை மூலம் தயார் செய்றாங்க சார்

ஆண்  :   அமேசான் பிரேசிலில்தானே இருக்கு

பெண் :   ஒரு நிமிசம் ...( யாரிடமோ கேட்கிறார் )... சவுத் ஆப்பிரிக்காவில்
                   இருக்கு சார் .

ஆண்  :  அப்படியா ...?  அங்க இருக்கிறவங்களுக்கு இதை விக்கிறீங்களா ...?
                  அங்க இருக்கறவங்க தலை சொட்டையா இருக்குறதா என் பிரண்டு
                    சொல்றாரு .

பெண்  :  எல்லோரும் நல்ல ரிசல்ட் கொடுக்கிறாங்க ..யாரும் ராங் ரிசல்ட்
                   சொல்றதில்லை சார் ...

ஆண்  :   என் பிரன்ட்ஸ் நாலு பேரு இதே மாதிரி எல்லாம் கொட்டிப்
                  போச்சுன்னு சொல்றாங்க ...அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது நாலு                                 பாட்டில் வேஸ்ட் பண்ணிட்டேன் ...நாலாயிரம் போச்சு ..முடியும்
                    போச்சு

பெண் :   கண்டிப்பா நான் கம்பிளைன்ட் பதிவு பண்றேன்  சார் ..

ஆண்  :  என்னை கம்பிளைன்ட்  பண்றீங்களா

பெண் :   இல்ல சார் உங்க கம்பிளைன்ட்ட கம்பெனிக்கு சொல்றேன்

ஆண்  :  அது சரி ...போன முடிக்கு என்ன பதில் சொல்லப்  போறீங்க ...இதில
                  இன்னொரு பாட்டில் வாங்கச் சொல்றீங்க

பெண் :  ஆமா சார் யூஸ் பண்ணா கண்டிப்பா வளரும் சார் .. பொல்லுசன்
                ஏதாவது  இருந்ததுனா பிராபிலம் இருக்கும்

ஆண்  :  அப்ப  தேய்ச்சுட்டு  வீட்டுக்குளேயே கிடக்கச் சொல்றீகளா .. வேலை
                  வெட்டிக்கு போக வேணாமா ...?

பெண் :  இல்ல சார் கண்டிப்பா வளரும் சார் . கர்சீப் கட்டிக்கிட்டு ஹெல்மெட்
                  போடுங்க சார் .

ஆண் :    சொட்டை தலையாப் போச்சு ....அதுக்கு என்ன பதில் சொல்லப்                                     போறீங்க  ...நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு விக் வாங்கி கொடுங்கம்மா
                   வெளியில தலை காட்ட முடியில 


பெண் :  உங்க தரப்புல கம்பிளைன்ட் பண்றேன் சார் .. கால் வரும் சார்

ஆண்    :   கால் வந்து என்ன பண்ண... முடி வரணுமே  ...நாலாயிரம் ரூபா
                   திருப்பி தருவதா சொன்னா கூட எனக்கு முடி வளந்திரும்னு  
                   தோணுது ..அந்த  ஆறுதல்லேயே ...
 

பெண் :   யூஸ் பண்ணுங்க சார் ...உங்களுக்கு கண்டிப்பா வளரும் சார்

ஆண்  :   திரும்பவும் யூஸ் பண்ணவா ....அம்புட்டும் போச்சுன்னு
                 சொல்லிகிட்டு இருக்கேன் ...திரும்ப யூஸ் பண்ண சொல்றீங்களே