Tuesday, 8 September 2015

இசை ராட்சஷன் - 12 ( The Musical Legend )




                                          இசைஞானியின் புதுமைகள்

                                               
                                                   
                                       


*  ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ , அழகான லொகேஷன்களோ  வார அல்லது மாதக்கணக்கில்  நேரமோ இளையராஜாவிற்குத் தேவைப்பட்டதில்லை . ' தென்றல் வந்து தீண்டும்போது '
என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்!

*   இளையராஜா வெறும் அரை நாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் ' நூறாவது நாள்,

*   சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரெக்கார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம் . மூன்றே நாளில் ஐந்து இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப் படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது.

*  எல்லோரும் பாடலுக்கான இசையை ஒரு கருவி மூலம் வாசித்துத்தான் காட்டுவார்கள்.  ஆனால் ராஜா மட்டும்தான் பாடலுக்கான இசையை 'பக்கா' நோட்ஸ் எடுத்து இசைக்கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

*   அமிர்தவர்ஷிணி என்ற மழையை வரவழைக்கும் ராகத்தை ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில், ' தூங்காத விழிகள் ரெண்டு ' என்ற பாடல் மூலம்  இசைத்து,  மழையை வரவழைத்தவர்  இசைஞானி.

*   பாடலின் மெட்டும் அதற்கான  100 %  இசைக்கோர்ப்பையும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் முழுமை , ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய்  கையாளும் பாங்கு, இசை ஆளுமை எல்லாமே மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

*   இசைஞானிதான் முதல்முறையாக ரீதிகௌளை  என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார். ' கவிக்குயில் ' படத்தில் '  சின்னக் கண்ணன்  அழைக்கிறான் '  என்ற பாடல்தான் அது!

*   சர்வதேச இசை நுட்பமான  counterpoint  யுக்தியை  முதன் முதலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்  இளையராஜாதான் . உதாரணத்திற்கு பல பாடல்கள் இருந்தாலும் ' சிட்டுக் குருவி  ' படத்தில் ' என் கண்மணி ' என்ற பாடலைச் சொல்லலாம் . வேறு இந்திய இசையமைப்பாளர்கள்  அதற்கு முன்னர் அதை பயன்படுத்தியதில்லை .


*    இந்தியத் திரையிசையில் ' காயத்ரி ' என்ற படத்தில் முதன் முதலாக ராஜா ' ' எலெக்ட்ரிக் பியானோ ' உபயோகப்படுத்தினார்.


*    செஞ்சுருட்டி ராகத்தில் ராஜா இசையமைத்த ஒரே பாடல் ' பதினாறு வயதினிலே '  படத்தில் ' ஆட்டுக் குட்டி முட்டையிட்டு ' என்ற பாடல் .

*  உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் செய்து பார்த்திராத பரீட்சார்த்தமான விஷயம் என்னவெனில்,  வேறு இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து படமாக்கப்பட்ட பாடலின் சவுண்ட் ட்ராக்கை நீக்கிவிட்டு , உதடசைவு , உடலசைவு , காட்சி தேவை அனைத்துக்கும் பொருத்தமான புதிய இசையை உருவாக்கி  அதை வெற்றிக்கனியாக்கி , எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியவர்  இசைஞானி . படம் ' ஹே ராம் ' .

*   முன்பெல்லாம் பின்னணி இசைக்கோர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனர்கள்   இசையமைப்பாளரிடம் வந்தமர்ந்து அந்தப் படத்தில் உள்ளது போல போடுங்கள் , இந்தப் படத்தில் வந்தது போல போடுங்கள் என்று  ஆலோசனை சொல்வார்கள் .  இளையராஜா ஒரு ரீலை திரையில் பார்த்ததும் உடனே இசைக் குறிப்புகளை எழுதி இசையமைத்துக் கொடுப்பார் . பெரும்பாலும் மறுப்பதற்கான வாய்ப்பே இயக்குனருக்கு இருக்காது.

*  ஆசியாவிலேயே  முதன்முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி அவர்களே! சிம்பொனி கம்போஸ் செய்ய குறைந்தது ஆறு மாதமாவது ஆகும் . ஆனால் வெறும் 13 நாட்களில் கம்போஸ் செய்து மற்ற கம்போசர்களை மிரள வைத்தவர் இசைஞானி.

*  குரல் சரியில்லாதபோது  ' காதலின்  தீபம் ஒன்று ' என்ற தம்பிக்கு எந்த ஊரு படப் பாடலை விசிலாலேயே டியூன் அமைத்து  பதிவு செய்து  பின்பு பாடகரை பாட வைத்தார்.

*   படத்தின் கதையை கேட்காமல் சூழ்நிலைகளை மட்டுமே கேட்டு இசையமைத்த படம்  ' கரகாட்டக்காரன் ' .

*  வசனமே  இல்லாத காட்சியில் இசையாலும் பாட்டாலும் அவ்விடத்தை நிரப்பி பார்வையாளரை ரசிக்க வைப்பதில் ராஜா கிரேட் . இரு பாத்திரப் படைப்புகளின் மௌனத்தின் மன உணர்வுகளை பார்வையாளருக்கு தன்  இசையால் புரிய வைத்துவிடுவதில் அற்புத ஆற்றல் கொண்டவர் இளையராஜா . கடலோரக் கவிதைகள் படத்தில் '  தாஸ் தாஸ் ...சின்னப்ப தாஸ் தாஸ் '  ,  ஹே ராம் படத்தில் ' இசையில் தொடங்குதம்மா'  போன்ற பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.

                                                     
   

*    ரீரெக்கார்டிங் செய்வதற்கு முன்னர் ஒரு முறை அல்லது  இரு முறை படத்தை போட்டு பார்த்துவிட்டு , மூன்றாம் முறை திரைப்படம் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிப்பார் . கடைசிக் காட்சி வரை எழுதியதை எல்லோரும் சேர்ந்து இசைத்துப் பார்த்தால் மிகச் சரியாக எல்லா இடங்களிலும் இசை கனக்கச்சிதமாய்  பொருந்தும்படி இருக்கும் .  அந்த அளவிற்கு எந்த இசையமைப்பாளரும் நோட்ஸ் எழுதிவிட முடியாது.

*  இந்தியாவிலேயே பின்னணி இசையை முழு கேசட்டில் பதிவு செய்யப்பட்டு வெளி வந்து ஹிட்டான  படம் இளையராஜாவின் இசையில் வந்த ' பிள்ளை நிலா' .

*   நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் ' பருவமே ... புதிய பாடல் பாடு ' என்ற பாட்டுக்கு ஓடும் மனிதர் இருவரின் காலடிச் சத்தத்திற்கு தாளத்திற்கு தகுந்தபடி தொடைகளைத் தட்டி ஒலி  எழுப்பி  புதிய  பரிமாணம் தந்தவர் இளையராஜா .

*  இந்தியாவில் முதன்முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வாங்கியவர் இளையராஜா. படம் ' பழசி ராஜா ' .


*    முதன் முறையாக படத்தின் பாடல்களை ஸ்டீரியோ ஒலிப்பதிவு  முறையில் பதிவு செய்த படம் ' ப்ரியா '.

*  137  இசைக்கருவிகள் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடல் தளபதி படத்தில் ' சுந்தரி கண்ணால் ஒரு சேதி  ' .


*  இசைஞானி இசையமைத்த  பாடல்களை வாங்கி ,  அதன் பிறகு கதை எழுதி படமாக்கிய இரண்டு  ஹிட் படங்கள்  ' வைதேகி காத்திருந்தாள் ',  'அரண்மனைக் கிளி ' .

* இந்தியாவில் முதன்முறையாக கம்பியூட்டர் பயன்படுத்தி இசையமைத்தவர் ராஜா. படம் ' புன்னகை மன்னன் '.


* ' பஞ்சமுகி ' என்றொரு புதிய ராகம் கண்டறிந்து கொடுத்தவர் ராகதேவன் .  ஆனால் இதுவரை அந்த ராகத்தில் அவர் சினிமா பாடல் இசைத்ததில்லை. ரகசியமாக வைத்துள்ளார்.

*     பொதுவாக ஒரு படத்திற்கான இசைகோர்ப்பினை  இரண்டு அல்லது மூன்று நாளில் முடிப்பவர் ராஜா. ஆனால் அதிகபட்சமாக 24  நாட்கள் பின்னணி இசைக்காக அவர் எடுத்துக் கொண்ட படம் ' காலாபாணி  ' ( தமிழில் '  ' சிறைச்சாலை '  )


* ஆரம்பத்தில் கிடார், தபேலா கலைஞர்களுடன்  ஆர்மோனியம் கொண்டு  பாடலுக்கு  டியூன் போட்டவர் காலப் போக்கில்  கண்களை மூடி சிந்தனை செய்து  கற்பனையில் இசை வடிவங்களை செதுக்க ஆரம்பித்துவிட்டார் . கற்பனா சக்தியிலேயே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டார் . ஆர்மோனியம் கூட இல்லாமல் இசைக் குறிப்பு எழுதும் இந்த இசை ஆற்றல் இளையராஜாவைத் தவிர இந்திய இசையமைப்பாளர்கள் யாரிடமும் இல்லை.


*  இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்ல , நல்ல கவிஞரும் கூட! காவியக் கவிஞர்  வாலி  அவர்களுக்கே வெண்பா காற்றுக் கொடுத்தவர் இளையராஜா . அந்த விசயத்தில் ராஜா தனக்கு குரு என்று வாலி அவர்களே அவரை புகழ்ந்திருக்கிறார்.


Success  in  life  depends upon  two important  things 

Vision seeing the invisible   &    Mission  doing  the impossible 


     இளையராஜாவின் இசை தரும் பிரமிப்புகளை பார்க்கும்போது மேற்சொன்ன வாக்கியம்  அவர்  அடைந்த  வெற்றிக்கு பொருத்தமாய் அமைகிறது.  இசையில் யாராலும் காணாததை கண்டவர் , யாராலும் முடியாததைச் செய்தவர்.

                இதுபோல இன்னும் பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம் ஒரு பதிவிலேயே எல்லாவற்றையும் அடக்கி விட முடியாது.  நீண்டு கொண்டே செல்லும்  அவருடைய சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல . அத்தகைய சாதனைகளை அடைவதற்கு அவர் உழைத்ததும் கொஞ்சமல்ல; ஓடியதும் தேடியதும் கொஞ்சமல்ல.  இசையை தன் உணவாய்  உயிராய்  மூச்சாய் மாற்றிக் கொண்டார்.  அதனால்தான் இசையுலகில் ஒரு உன்னத நிலையை அடைந்தார்.

                மீண்டும் 1979 க்கு வந்தோமென்றால் ' அன்னை ஒர்  ஆலயம்  ' என்றொரு மாபெரும் வெற்றிப் படம் கண் முன் தெரிகிறது.  சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பில்  வெளி வந்து நூறு நாட்களையும் தாண்டி ஓடிய படம் .  ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் சொல்லலாம்.


              அந்தப் படத்தின் அபார வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் .  யானை வரும் முன்னே மணியோசை வருகிறதோ இல்லையோ இளையராஜாவின் ஒரு இசைத் துணுக்கு ஒன்று ஒலிப்பது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.  டிரம்பெட் ஒலியுடன் அந்த இசைத் துணுக்கு டைட்டில் இசைக்கப்படும்போதே ஆரம்பிக்கும் . யானை காட்டப்படும்போதெல்லாம்
அந்த துள்ளலான டிரம்பெட்  இசை திரைப்படம் பார்ப்போர் அனைவரையும் தாளமிட வைத்ததை கண்டிருக்கிறேன் .  நான் எவ்வளவு குதூகலத்துடன் பார்த்தேனோ அதே உற்சாகம் இப்போது பார்க்கும் குழந்தைகளிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.


                  தேவர் அவர்கள் விலங்குகளை கொண்டு படம் எடுப்பதில் வல்லவர். அதனால் விலங்குகளை வைத்து அவர் எடுத்த எந்த படமும் தோல்வி அடைந்ததில்லை.  " குழந்தைகளுக்கு பிடிச்சதே விலங்குகள்தான் . மனுஷங்க மாதிரி அதுங்க என்ன சாகசம் செஞ்சாலும் ஏன் எதுக்குன்னு கேள்விகேட்காம கை தட்டி ரசிப்பாங்க. அந்த ரசனைக்கு தீனி போடணும். குழந்தைகளை குஷிப்படுத்தணும்  " என்பது தேவர் வாக்கு. அவருடைய வெற்றி சூத்திரமும் அதுவே!


                அன்னை ஒர்  ஆலயம் படத்தில்  ஆறு பாடல்கள் .  பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியுள்ளார்.  அதில்  ' அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே  '  என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் . பிள்ளையார் கோவில் திருவிழாக்களில் பக்தி பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்த்து விடுவார்கள். மிகவும் துள்ளலான பாடல் . எஸ்.பி. பி  மற்றும் சுசீலா இணைந்து பாடியிருப்பார்கள்.  யார் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டாலும்  மீண்டும் முணுமுணுப்பார்கள் .  அவ்வளவு உற்சாகமான பாடல் .

                 
                     ஒருமுறை என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவருடன் இந்தப் படத்தைப்  பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தபோது ,  " அந்தக் காலத்தில் இந்தப் படம் பார்த்திருப்பீர்களே !  பாட்டெல்லாம்  எப்படி!? " என்றேன் . " ஆமாமா... இந்தப் படத்தை மறக்க முடியுமா ? இந்தப் படத்தில் ஸ்ரீ ப்ரியாவை பார்த்துதானே நான் வயசுக்கே வந்தேன்  " என்று சிரிக்காமல் சொன்னவரைப் பார்த்து  நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.

                      'அப்பனே  ' பாடல்  முழுவதும் டிரம்பெட் , கிடார் ,  டிரம்ஸ்  அதிகமாய் நிறைக்கும்.   பல்லவியில்  ' பிள்ளையாரப்பனே ' என்று முடிக்கும்போது இடைச்செருகலாக கொடுக்கப்படும் கிடார் ஒலி அப்போதே என்னை அசத்தியது.  பாடல் முழுக்க  மேற்கத்திய இசை பாணியில் அமைந்திருக்கும் . ஒரு யானைக் குட்டியை சமாதானம் செய்ய பாடப்படும் சூழலுக்கு மிகப் பொருத்தமாக இசையை வழங்கியிருப்பார் இளையராஜா . மூன்று சரணம், மூன்று வெவ்வேறு இடையிசை என்று பிரமாதமாக கொடுத்திருப்பார்.

                                               

                      யானைக் குட்டி செய்யும் சேட்டைகளுக்காக  மற்ற குழந்தைகள் படத்திற்கு மீண்டும் மீண்டும் செல்கையில் நான் இளையராஜாவின் இசைக்காகவும்  மீண்டும்  படத்திற்குச் சென்றிருக்கிறேன். இளையராஜாவின் இசை மெருகேருவதையும்  என் மனதிற்குள் ஒரு இசைப் பிரளயத்தை உருவாக்குவதையும் நான் உணர்ந்தேன்.  இந்தப் படம் ஒரு காரணமாய் அமைந்தது.

                      ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை   '  என்ற சாருகேசி  ராகத்தில் அமைந்த   பாடல் அடுத்த பிரபலமான அம்மா பாடல் என்று சொல்லலாம். இளையராஜா அம்மாவிற்காக இசைத்த பாடல்களில் ஒன்று கூட சோடை போனதில்லை .  தாய்ப் பாசத்திற்காக இசைக்கப்பட்ட பாடல்களில் இந்தப் பாடல் குறிப்பிடத் தகுந்த பாடல் .   டி .எம். சௌந்திரராஜன்  தனது கணீர்  குரலில் தாயைப் பிரிந்து தவிக்கும் ஒரு பிள்ளையின்  பிரிவுற்ற  துயர உணர்ச்சிகளை பிழிந்து எடுத்துத் தந்து விடுவார்.  அதற்குக் கொடுக்கப்படும் பின்னணி இசை நமது மனதையும் உருக்கி விடும்.  ' அ..ம்..மா  ' என்று  சப்தமாக கூவியழைக்கும் குரலுக்குப் பின் வழக்கமாக தமிழ்த் திரையில்  காட்டப்படும் இடி , மின்னல், புயல், மழை , பூகம்ப   காட்சிகளுக்கு பின்னணியாக வயலின்களின் பெருத்த ஆரவார இசையைத் தரும் ராஜா ,  எல்லாம் ஓய்ந்த பின் மென்மையாக ஒரு ஒற்றை வயலின் மற்றும் குழல் கொண்டு  கொடுக்கும் இசை ,  புயலுக்குப் பின் அமைதி என்ற வார்த்தைகளின் அர்த்தம் சொல்வது போலவே இருக்கும். இசை கொண்டு பேச முடியுமா என கேட்டால் அங்கு அது  பேசியிருக்கும்  அற்புதத்தை என்னவென்று சொல்வது!
                               
                                             

                             முதல் இடையிசை பரபரப்பாக ஆரம்பித்து மென்மையாக செல்வது காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும் . சூழலை காட்சியாக கற்பனை செய்து காட்டிவிடுவது  எளிது . அதை இசையாக கற்பனை செய்து கொடுப்பது  கடினமானது.   இளையராஜா அந்தப் பணியை அழகாக செய்து கொடுத்திருப்பார்.  இரண்டாம் இடையிசையில் தன்  தாயை கோவிலில்  நாயகன் சந்தித்ததை  எண்ணி  கலங்குவதாக  காட்டப்படும்போது ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை  இன்னும் அழகானது .  கோவில் மணியோசையுடன் குழலும் மிருதங்கமும் இழையோடி வயலினில் கலந்தாடி மொத்தத்தில் இசையில் விளையாடி இருக்கும் விந்தை வியப்புக்குரியது. இசைக்கப்பட்ட பிறகே காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சூழலை மனதில் வாங்கி உணர்வுகளை இசையாக கொடுப்பது ராஜாவிற்கு கை வந்த கலை. அதை செம்மையாக செய்து காட்டுவது மேதமை. காட்சிகளோடு என்னை ஒன்ற வைத்ததில் இசையின் பங்கு முக்கியமானது.     ' அம்மா நீ சுமந்த பிள்ளை ...சிறகொடிந்த கிள்ளை  ' என்ற வார்த்தைகள் அம்மாவை இழந்த எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும் . அம்மாவை நேசிப்பவர்கள் இந்தப் பாடலையும் நிச்சயம் நேசிப்பார்கள்.  இந்தப் பாடலை கேட்க நேரும்போதெல்லாம் மனது சட்டென அமைதியாவதை இப்போதும் உணர முடிகிறது. கண  நேரத்தில் அம்மாவின் முகம் வந்து போகிறது.


                                  அதே படத்தில் ' நதியோரம் ...நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது மெல்ல ' என்ற பாடல் சுத்த தன்யாசி ராகத்தில் அமைக்கப்பட்ட அற்புதமான பாடல் .  எஸ்.பி.பி ,சுசீலா இணைந்து பாடிய சுகமான ராகம் . காதல் பாடல்களில் இருக்கும் சுகானுபவத்தைத் தரும் பாடல். இருவரும் இளமைத் துள்ளலோடு பாடியிருப்பார்கள்.  கேட்கும் நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இரண்டு இடையிசைகளும் மயக்கும் .  இரண்டாவது  சரணத்தில் ' தேயிலைத் தோட்டம் தேவதையாட்டம் ' என்று ஆரம்பிப்பதால் மலைத் தோட்டம் பின்னணியாக காட்டப்படும் . அதற்கேற்றாற்போல் 'லுலுலு ...லுலு ' என்றொலிக்கும்  மலை வாசம் செய்யும் பெண்களின் குரலிசை சேர்த்திருப்பது அற்புதமாக இருக்கும். இரண்டாம்  இடையிசையே   வித்தியாசமான நடையில் ஒலிக்கும் . அது இசைஞானிக்கே உரிய  சிறப்பு. இதுபோன்று  இசையில்  நடை மாறி மீண்டும் பாடலுக்குள் கொண்டு வரும் லாவகத்தை  பல பாடல்களில்  ரசித்திருக்கிறேன்.

                                                 
                                             
                       அதே படத்தில்  ' நந்தவனத்தில் வந்த குயிலே ' என்றொரு உற்சாகப் பாடலும் ' நிலவு நேரம் இரவு காயும்  ' என்ற போதையூட்டும் பாடலும் , 'மலையருவி மணிக்குருவி ' என்ற மலைஜாதிப் பெண்  பாடுவது போன்ற    பரபரப்பான பாடலும் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு தனி ரகம்.


                         அதே ஆண்டில் வந்த இன்னொரு  திரைப்படம் , ' அழகே உன்னை ஆராதிக்கிறேன் ' . திரைப்படம் வந்து சிறிது நாட்கள் கழித்து பலரும் படத்தைப் பற்றியும் பாடல்கள் பற்றியும் பேச ஆரம்பித்த பிறகு நான் திரைப்படம் பார்த்தேன்.  ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் . ஆனால் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது . பாடல்களுக்காக படம் ஓடியது. ஸ்ரீதர் படம் என்றாலே சிறப்பாக பாடல்கள் அமைந்து விடுவது ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கும் ரசனையா இல்லையேல் இசை அமைப்பாளாரின் கரிசனையா என்று தெரியவில்லை.  படம் ஓடாவிட்டாலும் பாடல்கள் எல்லாம் படு ஹிட் அடிப்பது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது.  இளையராஜா அந்தப் படத்தில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.  

                                   '  குறிஞ்சி மலரில் வடிந்த '
                                   '  நானே நானா யாரோதானா '
                                   '  அபிஷேக நேரத்தில்  '
                                   '  என் கல்யாண வைபோகம் '
                                   '   தனிமையில் யாரிவள் '
                                   '  அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் '
                                   '   ஹே ...மஸ்தானா  '

  அந்தப் படத்தில்  மேற்கண்ட அத்தனை பாடல்களையும் எழுதியது வார்த்தைச் சித்தர் வாலி .   '   ஹே ...மஸ்தானா  '  என்ற பாடல் தவிர அத்தனைப் பாடல்களும்  பிரபலமானவை . மஸ்தானா பாடல் வந்த புதிதில் ஒலி  பெருக்கிகளில் அதிகம் பரப்பப்பட்டது.  காலப் போக்கில் அந்தப் பாடல் எங்கும் கேட்கப்படவில்லை. ஆனால் மற்ற பாடல்கள் எல்லாம் இப்போதும் வானொலியில் இசைக்கப்படுகிறது.

                   
                                 
                                                   

                                 
                          ' அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்  ' என்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல் மனதை மென்மையாய் வருடியது .  கிடார் ஒலியுடன் ஆரம்பிக்கும் முன்னிசை மனதை விட்டு அகன்றதேயில்லை . நீண்ட நாட்களாய் அந்த நாதத்தை என் வாயாலேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் .   இப்போது கேட்டாலும் சுவையே !

                 
                              அது ஒரு சிறிய பாடல் என்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய   மெலடி அந்தப் பாட்டில் உண்டு .  தான் நேசிக்கும் பெண்ணை எந்த விதத்திலும் சலனப்படுத்த நினையாத ஒரு ஆண்மகனின் மன நிலையை சுட்டும் பாடலாக இளையராஜா இசையமைத்திருப்பார்.  இடையிசையில் குழலும் விசில் ஒலியும் கலந்து கொடுத்த இசைக் கோர்வை அற்புதமானது.   காதலின் வலியைச் சொல்லும் பாடல் .  அந்த  அனுபவம் கடந்தவர் அப்பாடலை மறக்க இயலாது. 


                             '  நானே நானா யாரோதானா  '  என்ற பாடல் வாணி ஜெயராம் அவர்களின் தெளிவான தேன் குரலில்  கேட்டபோது குரலாலும் இசையாலும் மயங்கினேன் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தையாக இருக்கும். கேட்டபோதெல்லாம் மதி மயங்கி மனம் கனிந்து உடல் கட்டுண்டு கிடந்தேன் . இப்போது கேட்டாலும்  இசை மெல்ல மெல்ல நம்மை பறக்கச் செய்யும்; நம்மையே மறக்கச் செய்யும் . இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களின் பெண் குரலுக்கு வாணி ஒருவரே போதுமென ராஜா ஏன் முடிவெடுத்தார் என்று தெரியாது.  ஆனால் எல்லாப் பாடல்களும் வாணியின் குரலால் மெருகேறின . ராஜாவின் தேர்வு சரியானதாக இருந்தது.


                                  ஹரிகாம்போதி ராகத்தில் இசைக்கப்பட்ட   '  நானே நானா' பாடலில் மதுவின் மயக்கத்தில் ஒரு பெண் பாடுவதாக உள்ள சூழலுக்கு ஏற்றாற்போல்,  முன்னிசை லீட் கிடாருடன் ஆரம்பித்து பேஸ் புல்லாங்குழலின் நாதத்தை கலந்து , மேற்கத்திய பாணியில் பாடல் கொண்டு செல்லப்பட்டிருக்கும் விதம் , அந்தக் காலத்தில் கேட்க மிகவும் புதுமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது.  மெல்லிய சோகம் இழையோட பாடல் இசைக்கப்பட்ட விதம் நம்மை உறுத்தவோ வருத்தவோ செய்யாது. உற்சாகத்தையே கொடுக்கும் .


                                       டிரிப்பில் பாங்கோஸ் , டிரம்ஸ் இரண்டும் கலந்து செல்லும் தாள கதி ரசனையானது.  நானே நானா என்று வாணி அவர்கள் ஆரம்பிக்கும்போது கொடுக்கப்படும்  பாங்கோஸ் ஒலியை  பள்ளிக்கூடத்து  நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி வாயாலேயே ஓசை எழுப்பி ரசித்த சம்பவம் பசுமையாய் இன்னும் நெஞ்சினில் நிறைந்திருக்கிறது. பாடலை மட்டுமல்ல முன்னிசை இடையிசையில் வரும் மெல்லிசையைக் கூட  குரலாலேயே இசைத்து மகிழ்வது இன்னும் நினைவிருக்கிறது.
         
                             
                                           


                                இரண்டாம் இடையிசையின் ஆரம்பத்தில் பரபரப்பான வயலின் இசை அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை உணர்த்தும் இசையாக தோன்றும் . அதன் பிறகு கிடாரும் வயலினும் பின்னிப் பின்னி வரும் இசைக்கோர்வை  இளையராஜாவின் கைவண்ணத்தில் செய்யப்பட அழகோவியம் . '  பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு,உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ' என்ற வரிகள் ரசிக்கத் தகுந்தவை . அதன் பிறகு உச்சஸ்தாயில் வாணி பாடும்போது கூடவே இழைந்து வரும் வயலின் நாதத்தை இன்னும் ரசிக்கலாம் . மொத்தத்தில் ஆறு பாடல்கள் அறுசுவை உணவு என்று சொன்னாலும் ஒவ்வொரு பாடலிலும் அறுசுவை உணவை இளையராஜா கொடுத்திருப்பார்.

                             
                            '  குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை  ' என்ற பாடல் மோகன ராகத்தில் அமைக்கப்பட்ட அழகிய கீதம்.  திரைப்படம் வந்த புதிதில் சிலோன் வானொலியில் ஒளிபரப்பாத நாட்களே  இல்லை என்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமான பாடல். எஸ்.பி.பி யும் வாணியும் காதல் ரசம் சொட்டும்படி அழகாக பாடியிருப்பார்கள்.  குழலின் நாதத்தோடு உற்சாகமாக ஆரம்பித்து கிடார்  சிந்தசைசர்  எல்லாம் கலந்து  தபேலாவுடன் பல்லவி ஆரம்பிக்கும்போதே மனசு இறக்கை கட்டி பறக்கும் .  மூன்று முத்தான சரணங்களுக்கு மூன்று சத்தான இடையிசை கொடுத்த இளையராஜாவின் கற்பனை வளம் அபாரமானது.  வாலியின் வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை ; ராஜாவின்  இசைகோர்வைகளுக்கும் பஞ்சமில்லை . ஒன்றை மிஞ்சும் வண்ணம் இன்னொன்று அமைந்திருக்கும்.

                                                 

                       ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  ' என்ற பாடல் மத்யமாவதி ராகத்தில் வாணி அவர்களின்  தேன் குரலில் அமைந்த மறக்க முடியாத  மென்மையான பாடல்.  அந்தப் பாடல் கேட்க நேரும்போதெல்லாம் வயல்வெளியின் நடுவில்  அமைந்த வீடும் வைகை ஆற்றில் குளித்து மகிழ்ந்த காலங்களும் ஆற்று ஓரத்து நாணல்களும் சோலைகளும் தென்னந்தோப்புகளும் நினைவுக்கடலில் அலைகள்  போல வந்து மோதுவதை தவிர்க்க முடிவதில்லை.  அந்தப் பாடலின் நயமும் லயமும் இசையும் பலமுறை  என்னைக்  கட்டிப் போடும்.  புல்லாங்குழல் வயலின் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பின்னி விளையாடும் . தபேலாவின் வித்தியாசமான நடை ராஜாவிற்கு உரிய டிரேட் மார்க் என்று சொல்லலாம் . சரணத்தை கூர்ந்து கேட்கும்போது தபேலாவின் தனித்துவ நடை பாட்டுக்கு பரதநாட்டியமாடும் .      ' என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்  '  என்று பல்லவி ஆரம்பித்து முதல் வரி முடிக்க என்னென்னவோ இசைக் கருவிகளின் கலவைகளை எல்லாம் இசைக்கச் செய்து எங்கெங்கோ நம்மை கூட்டிச் சென்று மீண்டும் பாடலுக்குக் கொண்டு வரும் சுகம் கேட்ட காலத்திலிருந்து இன்று வரை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

                                               


                          சண்முகப்பிரியா   ராகத்தில்    பாலு      அவர்களின் மன்மதக் குரலில்  அமைந்த  ' அபிஷேக நேரத்தில் '  பிரமாதமான குத்து பாடல். இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. நான் அந்தப் பாடலில் அதிக அக்கறை செலுத்தியதில்லை. ஆனாலும் பாடலை ரசித்திருக்கிறேன் . பரிச்சயம் இல்லாத வித்தியாசமான இசைக் கருவிகளின் ஒலியெல்லாம் அந்தப் பாடலில் கேட்க நேர்ந்தது.   துள்ளலான பாடல்.  குத்துப் பாடல்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு அந்தப் பாடல் நல்ல விருந்தாக அமைந்தது .

                           ' தனிமையில் ....யாரிவள் ' என்றொரு புதுமையான , கேளிக்கை விடுதியில் பாடுவது  போன்றமைந்த , மேற்கத்திய சாயல் கொண்ட பாடல். அப்போது கேட்டபோது அதன் இசையும் தாளமும் என்னை மிரட்டியது. ஹிப்பிஸ் கலாசாரம் அதிகம் பரவியிருந்த காலகட்டத்தை பிரதிலிக்கும் பாடலாக அமைந்திருந்தது. வாணி அவர்கள் அழகாக பாடியிருந்தாலும் முனகல் சத்தங்கள் அவரின் குரல்  போல இல்லை.

                         இந்தப் பாடல்களை துல்லியமாக மீண்டும் கேட்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இரண்டாம் முறை மூன்றாம் முறையெல்லாம் திரைப்படத்திற்குச்  சென்றதுண்டு.  இசையை ரசிக்கும் என்னைப் போன்ற நிறைய ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து  திரைப்படங்களை வாழவைத்துக் கொண்டிருந்தோம் . இளையராஜாவின் இசைக்காகவே சினிமாவுக்கு சென்ற கூட்டம் நிறைய இருந்தது.  ராஜா தன் இசை மூலம் எல்லோரையும் வரவேற்றார்; அழைத்தார்.  ஆனால்  இப்போது இசைக்காக ஒரு திரைப்படத்திற்குச் செல்வோரின் கூட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

...........................தொடர்வேன் ..............................




Wednesday, 5 August 2015

அக்கினிச் சிறகு சாய்ந்ததே...


                                                 

                                 இந்திய திருநாட்டின் முன்னால் ஜனாதிபதி , அறிவியல் மாமேதை , மக்களின் நாயகன் , மாணவர்களின் ஹீரோ , அணு விஞ்ஞானி , இந்திய ஏவுகணை நாயகன் , மக்களின் இதயம் வென்ற மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டதை கணத்த  இதயத்தோடு இந்தியர் அனைவரும் பகிர்ந்து கொண்டோம் .


                             குறிப்பாக தமிழர் ஒவ்வொருவரும் மூலைக்கு மூலை தங்களின் இதயம் திறந்த கண்ணீர் அஞ்சலியை  வெளிப்படுத்திய விதம்  அளப்பற்கரியது.  சண்டையில்லை, சச்சரவில்லை,  கூச்சலிடவில்லை,  கல்லெறியவில்லை , கலாட்டா செய்யவில்லை,  காயங்கள் ஏதுமில்லை,  வஞ்சமில்லை , வன்முறையில்லை ,  பிரியாணி  குவார்ட்டருக்கு ஆசைப்பட்டு கூட்டம் சேரவில்லை ,  அடக்கம் செய்யப்படும் வரை தற்கொலையில்லை  ,  தடிகள் எடுத்துக் கொண்டு  தொங்கிக் கொண்டு கொக்கரித்துக் கொண்டு தடியர்களோடு சாரை சாரையாக கார்கள் செல்லவில்லை .  தமிழகம் முழுக்க அமைதி .  இது  எப்படி சாத்தியமாயிற்று?
அப்துல் கலாம் அண்ணலின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

                                               
                                   ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
                                   உழைத்தது  போதுமென்று  உறங்குகிறாயோ
                                   ஊரார்க்கு அழுதவனே  உறங்குகிறாயோ
                                   ஊராரை அழவைத்து  உறங்குகிறாயோ

                                   நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா - தன்
                                   வீடு பார்க்காமல்  வாழ்வு பார்க்காமல்
                                    நாடு முன்னேற  நாளும்  உழைத்தவனை

                                    பதவி இருந்தாலும் பதவி போனாலும்
                                    உதவி புரிவானடா
                                     தனை பெற்ற தாயைவிட பிறந்த நாடுதான்
                                     பெரிது என்பானடா

                                      வலிமை இருந்த போதும் மிக
                                       எளிமையோடு இருந்தான்
                                       பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள்
                                       கறுப்பு  காந்தி  இவனே


                         'காமராஜ் ' திரைப்படத்திற்காக   இளையராஜா அவர்கள் இசையமைத்துப் பாடியது  அப்துல் கலாம் அவர்களுக்கும் சரியாகப் பொருந்துகிறது. ஏனென்றால்  பள்ளிச்சாலைகள்  தந்த தலைவனுக்கும் அந்தச் சாலைகளில்  பயிலும் மாணவர்களைக் கண்ட தலைவனுக்கும் நோக்கம் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.

                         கனவு காணுங்கள்.   உறக்கத்தில் வருவதல்ல உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு ... அந்தக் கனவை காணுங்கள் ...அதை நனவாக்க பாடுபடுங்கள்  என்று இந்தியாவின்  ஒவ்வொரு மூலையிலும் உள்ள மாணவர்களைப் பார்த்து முழங்கிக் கொண்டே இருந்தவர்  மூச்சடங்கிப் போய்விட்டார் .

                         இந்தியா வல்லரசாக வேண்டும் என்று  கனவு கண்ட அந்த மகானின் இறப்பும் கனவாக இருக்கக் கூடாதா என இளைஞர்கள் ஏங்குகின்றனர்  ஆனால் அவர் கனவின் அர்த்தம் வேறு என்பதை அவர்களும் அறிவர்.

                           நிற்கலாம், நடக்கலாம், உடுக்கலாம், படுக்கலாம் , உறங்கலாம் என்றிருந்த இளையோரை  எழுப்பி படிக்கலாம் , உழைக்கலாம், விழிக்கலாம், சிந்திக்கலாம் , சாதிக்கலாம் என்று வழிகாட்டிய  சிந்தனை சிற்பி கலாம்  இன்று நம்மோடு இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு.  அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம்.
             

                        பாவம் புதைக்கும் இடத்தில் ஒரு புண்ணியம் விதைக்கப்பட்டுள்ளதாக எல்லோரும் பரவசமடைகிறார்கள்.  ஒரு புண்ணிய ஆத்மா   எண்ணியதெல்லாம்  பண்ணியதெல்லாம் வெறும்  கனவாகவே  போய் விடக் கூடாது  என ஒவ்வொரு மனிதரும் நினைக்கும் வண்ணம் உறுதியான எண்ணங்களை  விதைத்துவிட்டு போயிருக்கிறார் . அவர் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவர்  எண்ணங்களை   ஈடேற்றும்   பல   விருட்சங்கள் புறப்படலாம். ராமேஸ்வரத்தில் அவர் பிறப்பு  ஒரு சம்பவம் . ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக மாறிப் போனது.


                     '   நீங்கள் பல பதவிகள் வகித்திருந்தாலும்  பல நிலைகளில் வாழ்ந்திருந்தாலும் என்னவாக அறியப்பட விரும்புகிறீர்கள் ?  '  என்று அவருடைய உதவியாளர் கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் 'ஆசிரியராக' என்று பதில் சொன்னதாக பத்திரிகையில் வந்தது .  நாட்டின் மிகப் பெரிய பதவியில் இருந்தவர் அந்தப் பதவியை எவ்வளவு துச்சமாக மனதில் நினைத்திருந்தால் இப்படி ஒரு பதிலைச் சொல்லுவார். அதனால்தான் குடியரசுத் தலைவராக இருந்தபோது கூட கல்வி நிலையங்களில் அதிகமான மாணவர்களைச் சந்தித்தார் . சிந்திக்க வைத்தார்.  ஆசிரியர் பணியை அவ்வளவு நேசித்திருக்கிறாரே!  நமக்கெல்லாம் அவர் ஹீரோ . அவருக்கு யார் ஹீரோ என்று வினவியபோது  தனது ஆசிரியர்கள் மூவரைத்தானே குறிப்பிட்டார்.  அவருடைய ஆசிரியர் பக்தி குறிப்பிடத் தகுந்தது.


               இந்தியாவின் எதிர்காலம்  நிகழ்  கால மாணவர்களாலேயே உருவாகும் என ஆணித்தரமாக நம்பினார்.  அவருக்கு முன்னாலும் பின்னாலும் வந்த ஜனாதிபதிகள் தங்கள் உறவினர்களோடு ஊரைச் சுற்றிப்  பார்க்க சென்றபோது  அவர் மாணவர்களைச் சுற்றி வந்தாரே !
 அந்த மாமனிதரை மறந்து போகுமா இந்த மாணவ சமுதாயம் ? அடுத்து வரும் மாணவத் தலை முறைகளுக்கும் அவர் கனவை விதைத்து விட்டுத்தானேச்  செல்லும் .

                                                 
         
     
           ஒருமுறை  அவருக்கு போதித்த தத்துவ பேராசிரியர்  ஒருவர் கடவுளை மறுத்திருக்கிறார்.  அறிவியல் ரீதியாக கடவுள் இல்லை என வாதிட்டிருக்கிறார்.  ஐம்புலன்களாலும் கடவுளை நாம் உணரவேயில்லை என்று சாதித்திருக்கிறார்.  அப்துல் கலாம் எழுந்து அறிவியல் பூர்வமாக பல விளக்கங்கள் கொடுத்துவிட்டு மற்ற மாணவர்களைப் பார்த்து ,  " நண்பர்களே !யாராவது பேராசிரியரின்  மூளையைப் பார்த்திருக்கிறீர்களா ?  தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா?  அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா ?  அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா?  ஐம்புலன்களாலும் உணரவில்லை . அப்படியென்றால் எல்லா பரிசோதிக்கத்தக்க வழிமுறைகளிலிருந்தும்  அறிவியல் சொல்கிறது அவருக்கு மூளை இல்லை என்று! சரிதானா? " என பேசியிருக்கிறார்.

            " எனக்கு மூளை உண்டென்று நீ நம்பித்தான் ஆக வேண்டும் "   என்று பேராசிரியர்  பதிலுரைக்க  , கலாம் அவர்கள் அமைதியாக , "  அதுதான் அய்யா... இவ்வளவு நேரம் நான்  சொல்ல வந்தது . ஐம்புலன்களாலும் உணர முடியாத கடவுளையும் நாம் நம்பித்தான் ஆக  வேண்டும். மனிதனையும் கடவுளையும் இணைக்கும்  ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை.  அதுதான் இந்த உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கி கொண்டிருக்கிறது.  நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையில்லை . கடவுளையும் நம்பத்தான் வேண்டும். " என்று வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

             
                    பல்வேறு விதமான  சுவையான சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிறைய உண்டு .  பொக்ரான் அணு குண்டு சோதனை காலத்தில், ராணுவ வீரர்களோடு வீரராக  ராணுவ உடையணிந்து ,  பாலைவனத்தில் வழக்கமாக பயிற்சி எடுப்பது போல பிரமையூட்டி , அமெரிக்காவின் கழுகுக் கண்களை ஏமாற்றி,  சோதனையை தம்  குழுவினருடன் வெற்றிகரமாக செய்து முடித்து  சாதனை புரிந்தவர் கலாம் அவர்கள்.  இல்லாவிடில் உலகத்திற்கே போலிஸ்காரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா நம்மை அணு குண்டு சோதனை செய்ய அனுமதித்திருக்குமா?

                  அதன் விளைவாக அந்த நேரத்தில்  இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ,  இந்தியா வந்திறங்கியவுடன் தான் பார்க்க விரும்பிய நபராக,  பிரதமரையோ ஜனாதிபதியையோ அவர் குறிப்பிடவில்லை.  அமெரிக்காவின் கண்ணையே கட்டி விட்டு அணு ஆயுதச் சோதனை நடத்திய குழுவின் தலைவரான  அப்துல் கலாமை பார்க்க வேண்டும் என்றே குறிப்பிட்டார் . உலகத்து வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருவதற்கான வெளிச்சக்  கீற்று அப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது . அது அப்துல் கலாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.  ஆனால் அதே அப்துல் கலாம் 2020 இல் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற வேண்டும் என கூக்குரலிட்டார்.  இளையோரை  அதற்கான கனவு காணச் சொன்னார்.  இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . வல்லரசு ஆகுமா என்று சொல்ல கலாம் இல்லை . ஆனால்  காலம் சொல்லும்.

         
                        மாணவர்களிடம் கேள்விகள் கேட்பது அவர் வழக்கம் . போலவே  மாணவர்களையும் அவரைப் பார்த்து  கேள்விகள்  கேட்கச்சொல்லுவார். ஒரு முறை அப்படி கேட்கப்பட்ட கேள்விகளில் எது சிறந்த கேள்வி  என்று அவரிடம் கேட்கப்பட்டபோது ,   '  உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி யார்?  ' என்ற கேள்விதான் என்றார் . அதற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டபோது ,
' உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி ஒரு குழந்தைதான் . ஏனென்றால் அதுதான் எப்போதும் ஆராய்ச்சி மனப்பான்மையிலேயே இருக்கும் . குழந்தையின் கையில் எதைக் கொடுத்தாலும் ஆராயும் . ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வேண்டிய மனப்பான்மையும் அதுவே '  என பதிலுரைத்தார்.


                      மற்றொரு  சம்பவம்.  ஒரு திங்கட்கிழமையில் மதுரை அரவிந்த் கண்   மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்த நேரம்.        
கண் ஆபரேசனுக்காக பலர் காத்திருந்தனர் . ஒரு பெரியவரும் காத்திருந்தார். டாக்டர்கள் பற்றாக்குறையால் தலைமை டாக்டர்  ஒரு சிலரை மறு நாள் வந்து ஆபரேசன் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தார் . அந்தப் பெரியவரிடமும்   
அவ்வாறே வருமாறு கூறினார் . தான் தொலைவிலிருந்து வந்திருப்பதாகவும் துணைக்கு யாரும் இல்லாததையும் அந்தப் பெரியவர் குறிப்பிட்டார்.  ஆபரேசனுக்கு  ரூபாய் 1500 செலவாகும் என்று சொன்னார்கள் . தன்னிடம் போதிய பணம் இல்லை என பெரியவர் குறிப்பிட தலைமை டாக்டர் ,  ' பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை.  நீங்கள்  இலவசப் பிரிவில் சேர்ந்து 
கொள்ளுங்கள் . பணமில்லாமலேயே ஆபரேசன் நாளைதான் செய்ய முடியும் . 
இன்று இங்கு தங்குங்கள் . மற்றவை எல்லாம் எங்கள் ஊழியர்கள் பார்த்துக்  கொள்வார்கள்  '  என பரிவுடன் அவரை இலவசப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். 


                     கொஞ்ச நேரத்தில் காக்கி யூனிபார்ம் அணிந்த காவலர் கூட்டம் ஒன்று மருத்துவமனையில் யாரையோ தேடிக் கொண்டிருந்தது.  செய்தி தலைமை டாக்டருக்கு  தெரிய வர விபரம் கேட்டிருக்கிறார்.   Z பிரிவு பாதுகாப்பில் உள்ள அணு விஞ்ஞானி ஒருவர் இங்கு வந்திருப்பதாகவும் தன்  உறவினர் ஒருவரிடம் மட்டும் சொல்லிவிட்டு  தங்களுக்கு அறிவிக்காமல் அவர் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்கள்.  ஊழியர்கள் எல்லோரும் அவரைத் தேடுகிறார்கள். எங்கும் அவர் கிடைக்கவில்லை. மருத்துவமனை பரபரப்பாகி விட்டது.

                       பணம் செலுத்தி பார்க்கும் பிரிவில் அவர் இல்லாவிடில் வேறு எங்கு போயிருக்க முடியும் என்ற குழப்பத்தோடு இலவசப் பிரிவுக்குள் சென்று பல வயோதிகர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்று பார்த்தால்  அந்தப் பெரியவர் மேல் சட்டை  இல்லாமல் வேட்டியோடு ஒரு பாய் விரித்து  தரையில் அமர்ந்திருந்தார்.  அவர்தான் நமது அப்துல் கலாம் .


                      ' என்ன சார் இப்படி செய்துவிட்டீர்களே ? உங்களை நீங்கள் அணு விஞ்ஞானி என்று அறிமுகம் செய்திருக்கலாமே ! உங்களுக்கு வேண்டியதை செய்திருப்போமே  ' என்று தலைமை டாக்டர் வருத்தப்பட , ' நான் யாரென்று சொல்லியிருந்தால் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்குமா? இப்படி ஒரு சேவையை நான் எங்கும் பார்த்ததில்லை. இவ்வளவு கூட்டத்திலும் வேலைப் பளுவிலும் யாரும் முகம் சுளிக்கவில்லையே! இரண்டு கண்ணும் தெரியாத ஒரு பெரியவருக்கு இங்கு பணி  புரியும்  சின்னஞ்சிறு  செவிலியர்கள் பாத்ரூம் அழைத்துச் சென்று சேவை  புரிந்ததையும்  சாப்பாடு ஊட்டி விட்டதையும்  நேரில் கண்டேன்.  அவர்களிடமிருந்து நானல்லவோ நிறைய கற்றுக் கொண்டேன் . ' என்று பதிலுரைத்தார் . அதன் பின்பு ஜனாதிபதி ஆன பிறகு அரவிந்தின் முக்கிய நிகழ்ச்சிகளில்  அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

                             
                       

               இது போன்ற இன்னும் அவர் வாழ்வில் நடந்த பற்பல  நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம் . எப்போதும் எந்த சூழலிலும் அனுபவமும் அறிவும் தேடுபவராகவே  அவர் இருந்திருக்கிறார்.  அன்னாரது மறைவு இளைஞர்களின் வாழ்விலும் சிந்தனையிலும் எழுச்சியை எழுப்பட்டும். ராமேஸ்வரத்தில் அவருடைய நினைவிடத்தில் வந்து செல்லும் இளைஞர்களும் மாணவர்களும் இந்தியா வல்லரசாகும் கனவை நனவாக்கும் உறுதியை சூளுரைத்துவிட்டுச் செல்கிறார்கள் . அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கட்டும்.  





                                 

Tuesday, 21 July 2015

ஓய்ந்த மெல்லிசைக்கு அஞ்சலி




                                           






மெல்லிசை மன்னனே

இன்னிசை வேந்தனே

இசையின் இமயமே

இனிய தமிழர்களின் இதயமே !

இன்னுயிரை இசைக்குள்ளே  இங்கீந்து

எவ்வுலகம் பறந்தாய்!?

படைப்பாற்றல் கொண்டு

தேனருவியாய் தெள்ளமுத

கானங்கள் தந்த உனக்கு

படைக்கின்றேன் கவி அஞ்சலி !


'மூன்று வயதில் பாடுவேனாம் '

 உதித்தது எண்ணத்தில்

 உதிர்த்த அம்மாவின்  வார்த்தைகள்

பின்னாளில் தெரிந்தேன்

பாடியதெல்லாம் உன் பாட்டன்றோ  !

இசை கேட்க விரும்பி

திசை சுற்றி திரும்பிய

கணங்கள் காலங்கள் 

கண்ணாமூச்சி  ஆடும் கண்ணுக்குள் !

எனக்குள் எழுந்த

இசை என்னும் விருட்சம்

 நீ போட்ட முதல் விதையால் !

சிறு வயது சினிமா ரசிகனாய்

பெரிய திரையில் உன் பெயர் கண்டு

கூட்டத்தோடு  கைகள் தட்டியதும்

களிப்பூட்டிய கானங்கள் கேட்டு

குதூகலத்தின் உச்சியை எட்டியதும்

கூட்டம் கூடி பாட்டுப் பாடி

உன் இசை உன் புகழ் பேசியதும்

மூடிய விழியில் வந்து போகும்

வர்ண ஜாலங்கள்!

நெஞ்சம் விட்டு நீங்காது

வேறெங்கும் போகாது

காலத்தால் தீராது

நீ கொடுத்த இனிய ராகங்கள்!

ஆயிரமாயிரம் பாடல்களை

அழியாத கோலங்களாய்

அள்ளித் தெளித்துவிட்டு

ஆறடிக்குள் அடங்கிப் போனாயே!

காலன் உடல் கொண்டு போனால் என்ன

உன் உயிர் தந்து போனானே

காவியமாய் நீ படைத்த

கானங்கள் விட்டுப்  போனானே!

ஒவ்வொரு முறை உன் ராகம்

காற்றுவெளியில் தவழும்போதும்

காதுகளில் தேனாய் தடவும்போதும்

இனி உயிர்த்தெழுந்து  நிற்பாயே!

உடலுக்குதான்  வயது எண்பத்தேழு

உயிருக்கு வயது எண்ணில்  ஏது !? 

உன் பாட்டு உன் கானம்

ஊரெல்லாம் தாலாட்டும்

உன் தூக்கம் உன் உறக்கம்

உன் பாட்டே தாலாட்டும் !









Thursday, 2 July 2015

இசை ராட்சஷன் - 11 ( The Musical Legend )


                                                     

                                       

                              இளையராஜாவின் பாடல்களை இப்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்கிறார்களே , இளையராஜா இதுபோல பழைய இசை அமைப்பாளர்களின் பாடல்களை செய்ததுண்டா ?

                                  ஒரு வார பத்திரிக்கையில் ஒரு வாசகரின் கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் கீழே .

                            

       "  இளையராஜாவைப் போல சென்சிபிலான கலைஞரை காண்பது அரிது. கதைக்குத்  தேவைப்படாத எதையும்  சும்மா பரபரப்புக்காக செய்ய மாட்டார் . 1986 இல் சிவாஜி, பத்மினி ஜோடி நடித்த  படம்  ' தாய்க்கு ஒரு தாலாட்டு  ' . அந்த ஜோடியின் கடைசி டூயட்டுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அட்டகாசமான பாட்டு அது.   டி. எம். எஸ் , சுசீலா பாடியிருந்தார்கள் . இணையத்தில் கிடைத்தால் தேடி கேளுங்கள்.

                                         இந்தப் பாடலை கேட்டு முடித்ததுமே  அப்படியே ' புதிய பறவை '  படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன்  இசையில் ' உன்னை ஒன்று கேட்பேன் ' பாடலையும் கேளுங்கள். எம்.எஸ்.வி. க்கு எவ்வளவு  கௌரவமான tribute செய்திருக்கிறார் என்பதும் , இளையராஜா ஏன் மேஸ்ட்ரோ என்பதும் புரியும்.

                                            ரீமிக்ஸ் என்றால் இடையிடையே மேற்கத்திய கத்தல்களை செருகுவது மட்டுமல்ல என்கிற பாடத்தை இளையராஜாவிடமிருந்து  இன்றைய இளம் இசை அமைப்பாளார்கள் கற்றுக் கொள்ள வேண்டும். "

                                           இதை வாசித்தவுடன் எனக்கும் அது மிகச் சரியெனவே பட்டது . எத்தனையோ ஜனங்கள்  பழைய பாடல்களில், உள்ளம் உருகி உயிர் உருகி , தன்னையே மறந்து தவித்து லயித்து  ரசித்துக் கேட்டதை , அதன் ஆன்மா சிதைத்து ரீமிக்ஸ் செய்து கற்பழித்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இசையமைப்பாளர்கள்.   ரீமிக்ஸ் செய்வதில் இளையராஜாவின்  பெருமை என்னவெனில் தான் இசையமைத்த பாடல்களை தானே ரீமிக்ஸ் செய்து கொடுப்பதுதான் .  சமீபத்தில் ' மேகா '  என்ற படத்தில் 'புத்தம் புது காலை ', ஷமிதாப்  என்ற படத்தில் ' ஆசைய  காத்துல தூது விட்டு ' என்பதின் ஹிந்தி வடிவமும் எடுத்துக்காட்டுகள்.  இளையராஜாவே ஆனாலும் அந்தப்  பழைய பாடல்களில் இருந்த ஜீவன் இப்போது கொடுத்த பாடல்களில் இல்லாதது போல என் மனதில் பட்டது.  குரல்களும் இசைக் கருவிகளும் மாறியது காரணமாக இருக்கலாம் .  ' பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ' என்று அவரே  நமக்குச் சொன்னவர்தானே!  ' நான் கடவுள் ' படத்தில் பாடப்பட்ட 'மாதா உன் கோவிலில் ' என்ற பாடல் விதிவிலக்கு.


                                     கர்னாடக இசை புரியாத மக்கள் கூட்டம் மெல்லிசை என்ற சினிமா இசைக்கு அடிமையாகிப் போனதின் விளைவு , கர்னாடக இசை பண்ணவும் பேணவும் தெரிந்த சில மேல் தட்டு மேதைகளுக்கு எரிச்சலை மூட்டியதால் , இளையராஜாவிற்கு முந்தைய இசை அமைப்பாளர்களையும் 
இளையராஜாவையும் கீழ்மைப் படுத்தவே முனைந்தார்கள்.  பக்திக்காக மட்டுமே பயன்பட்டு வந்த கர்னாடக இசையை சினிமாவின் இசைக்குள்ளும் சிலர் புகுத்தியதை கடவுளுக்கு விரோதமாக பார்த்தார்கள். கர்னாடக இசை தனித்துவமிக்கதாகவும் மெல்லிசை சுயம் இழந்த தனித்துவமற்ற இசையாகவும் அவர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் கர்னாடக இசையே நாடோடிப் பாட்டுகளிலிருந்து திருடப்பட்டு உருமாற்றம் அடைந்ததாக பல இசை ஆய்வாளர்கள் உண்மை எடுத்தியம்புகிறார்கள்.  அது மறைக்கப்பட்டு வந்துள்ளது.


        மெல்லிசை ஒரு கலவை இசை என்பதில் ஐயமில்லை என்றாலும் , அதிலும் கர்நாடக இசையின் ராகத்தில் அமைத்து மேனாட்டு சங்கீதம் கலந்து அழகிய கலவையாக கொடுக்கப்படும்போது , மக்களுக்கு புரிந்த மொழியில் எளிய இசையாக அது போற்றப்படுகிறது.  மக்களின் மனசுக்குள் நர்த்தனமாடுகிறது. உணர்வுகளில் ஊறி கலந்து உற்சாகப்படுத்துகிறது.  இளையராஜாவின் இசை அதில் முக்கியப் பங்கெடுத்திருக்கிறது . ராகம் ஏதும் அறியாத ஜனங்கள் அவ்வளவு ரசிக்கையில் , ராகங்கள் புரிந்து தெளிந்த இசை வல்லுனர்கள் இளையராஜாவின் இசையின் அழகுகளை இன்னும் இன்னும் வியந்து ரசிக்கிறார்கள் . மேலோட்டமாக கேட்பவர்களே இன்புறும்போது  ஆழ்ந்து ரசிப்பவர்கள் பிரமிப்பதில் வியப்பில்லை. அவர்களுக்குத் தெரியும் ....'அவர்' யார் என்று?      

                                       உதாரணத்திற்கு ஒரு காணொளியில் , ஒரு இசைக் கலைஞர் ஒருவர்  ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த மொசார்ட் இசை வல்லுனரின் சிம்பொனி இசையிலிருந்து ஒரு பகுதியை வயலினில் வாசிக்க எல்லோரும் ரசிப்பதும் ,  வாசித்துக்கொண்டே அந்த சிம்போனியை அகத்தூண்டலாக எடுத்து இளையராஜா இசைத்திருக்கும் ஒரு பாடலை விடாமல் தொடர ,   அங்குள்ள எல்லோரும் அதைவிட உற்சாகமடைவதும் , மீண்டும் அவர் அந்த சிம்பொனிக்கு வருவதும் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.  இது இளையராஜாவின் படைப்பாற்றலுக்கு சரியான சான்று என்று எடுத்துக் கொள்ளலாம்.
                 
                                                   


                 'ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை ' என்று அவரே எழுதி இசையமைத்துப் பாடியது இங்கு நிரூபணமாகிறது.  ' ஏற்கனவே எங்கெங்கோ இருப்பதைத்தான் நான் மீண்டும் படைக்கிறேன். புதிதாய் இசைக்க ஒன்றுமில்லை '  என சொல்லாமல் சொல்கிறார் இளையராஜா.  ஆனால் நமக்கோ அவரின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொன்றாக தனித்துத் தெரிகிறது.


                                      சரி மீண்டும் 1979 க்கு வருவோம் . ' அன்பே சங்கீதா ' என்ற படத்தில் ' கீதா...சங்கீதா.. சங்கீதமே... சௌபாக்யமே .. ஜீவ அமுதம் உன் மோகனம் .. ' என்றொரு மனசு மயக்கும் காதல் கீதம் மோகன கல்யாணி ராகத்தில் இசைக்கப்பட்டிருக்கும். ஜெயச்சந்திரனும் ஜென்சியும் இணைந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள்.   ' லால..லலலா  லால..லலலா ' என்ற ஹம்மிங்குடன் ஜென்சி ஆரம்பிக்க மௌத் ஆர்கன் சப்தத்தில் அதே மெலடி ஒலிக்க , கேட்க ஆரம்பிக்கும்போதே உடலை விட்டு மனசு பறக்கும் சுகானுபவம் தோன்றும்.   மீண்டும் ஹம்மிங் மீண்டும் இசைப் பின்னணியோடு வயலின்களில் ஆலாபனை செய்து கிடாரை வீணை போல இசைத்து,  ஜெயச்சந்திரன் 'கீ..தா...' என்று பல்லவி ஆரம்பிக்க  மனசு இன்னும் உயர பறக்கும் .

                 
                                அப்போது படம் பார்க்கவில்லை. தயவு செய்து பார்த்து விடாதே என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு வாரம்தான் தியேட்டரில் ஓடியது. பாட்டு மட்டும் காதுகளில் அடிக்கடி ஒலித்தது. பாடல் கேட்கும்போதெல்லாம் மனசு கிடந்து தவிக்கும்.  இளையராஜாவின் பாட்டுக்காக  படம் பார்ப்போமா என்று நினைப்பேன் . அப்படி நிறைய படங்கள் பார்த்ததில் நொந்து போக வேண்டி வந்தது. இளையராஜாவின் சில பாடல்களுக்காக  படம் முழுவதும் உட்கார வேண்டியிருக்கும் . பாட்டு ரசிக்கலாம் ; படம் ரசிக்க முடியாது.  இளையராஜா அற்புதமாய் இசைக் கோர்வை செய்திருக்கும் இடங்களில் எல்லாம் படம் பிடித்திருக்கும் லட்சணம் கண்றாவியாக இருக்கும்.  அதை சகிக்க முடியாது.  அதனால் போகப் போக பாடல்கள் மட்டுமே கேட்டுப் பழகினேன் . இளையராஜாவின் இசைக்கு நான் செய்யும் கற்பனை எனக்கு திருப்தியாக இருந்தது.  


                                        முதல் இடையிசையில்  வயலினில் கேள்வி கேட்க குழலால் பதில் சொல்வது போல் ராஜா கொடுத்திருக்கும் இசைக்கோர்வை பிரமாதம் . கூடவே கிடாரிலும் அழகு மீட்டிக் கொடுக்க பின்னனியில் பாஸ் கிடாரின் இசைக் கோர்வையும் சேர  ,  ' பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் ...மதனோற்சவம் ' என ஸ்பஷ்டமாக ஜெயச்சந்திரன் சரணம் பாடும்போது வார்த்தைகளின் தெளிவில் கூடுதல் இனிமை சேர்த்தது போல இருக்கும்.  கூர்ந்து கேட்டால் இரண்டாம் இடையிசையிலும் பாஸ் கிடாரின் ஆட்சி தனித்துத் தெரியும் . பெண் குரலில் வார்த்தை சுத்தம் கொஞ்சம் குறைவே ! காட்சியை விட பாடல் கேட்பது சுகம்.


                                               

                                  அதே படத்தில் அடுத்த பாடல் சூப்பர் ஹிட் !  ரேடியோவில் ஒலி  பரப்பாத நாளே இல்லை என்று சொல்லுமளவிற்கு  அவ்வளவு பிரபலம். எஸ்.பி பி.யின் மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.  படத்தில் தேங்காய்  சீனிவாசன்   பாடுவது போல் காட்சி.  காட்சியை பார்த்தவுடன் அதிர்ச்சி .  உயிர் உருக பாடும் எஸ்.பி.பி யின் குரலுக்கு அவர் பொருத்தமானவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பாடலை அண்ணன் தங்கையான எஸ்.பி.பி மற்றும் சைலஜா சேர்ந்து பாடியிருப்பார்கள். சைலஜாவிற்கு முதல் பாடல். ஹம்மிங் மட்டுமே கொடுத்திருப்பார். பாட்டின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் சைலஜாவின் குரல் இனிக்கும்.


                                சிறு வயதில் இந்தப் பாட்டைக் கேட்டு நெக்குருகி போயிருக்கிறேன்.  பாட்டின் மெலடி மனசை பிசைவது போல ஒரு சிறு வலியை ஏற்படுத்தியது . பாட முயன்று தோற்றிருக்கிறேன் . பாட்டை கேட்டு பல சந்தர்ப்பங்களில் அசையாமல் நின்றிருக்கிறேன் . சில நேரங்களில் அழுதுமிருக்கிறேன் . ஒரு சில பாடல்கள் என்னை இம்சைக்கு உள்ளாக்கும் . அதில் இந்தப் பாடலும் ஒன்று என்பதை உளப்பூர்வமாக நான் சொல்ல வேண்டும்.  எஸ்.பி. பி யின் குரலில் இழையோடும் சோகம் கேட்பவர் யாரையும் தாக்கும் .  எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் இப்போதும் பசுமையாய் இருக்கும் இந்தப் பாடலுக்காக இளையராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

         
                              '  சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது ..... '  என்ற  வாலி அவர்கள்  எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது.  இப்போதும் அப்படியே ஒலிக்கிறது.     இரண்டு  சரணம் ,  இரண்டு  வேறுபட்ட  இடையிசையோடு  உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய்  எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின்  ஹம்மிங்  கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும் .  இது போன்ற பாடல்களை இளையராஜாவே மீண்டும் கொடுக்க இயலுமா என்று  சொல்ல முடியாது.  அந்த இசை வரம் அவருக்கு அவர் வணங்கும் இறைவனால் கொடுப்பட்டது.  அதை ராஜா நமக்குக் கொடுத்திருப்பது நமது பாக்கியம் என்றே கருதுகிறேன்.   


                                         

                                 இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பீதோவன், மொசார்ட், பாக் போன்ற மேனாட்டு இசை அறிஞர்களைப் பற்றி பேச்சு பரவலாயிற்று . அதற்கு முன்னர் ஒரு சிலரே அவர்களை அறிவர்.   அந்த இசை மேதைகளோடு ராஜாவின் இசையை ஒப்பீடு செய்யும் மன நிலையை இசை ரசிகர்கள் பலருக்கும் ஏற்படுத்தியதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். என்னுடைய இசை நண்பர் ஒருவர் இளையராஜாவின் இசை பற்றிய பேச்சு வந்தபோது , ' பல இசை அமைப்பாளர்களின்  இசை  RHYTHM  BASED ,  ராஜாவின் இசை INSTRUMENTAL BASED . மேனாட்டுக்காரன் இசையெல்லாம் அப்படிப்பட்டதே ! அதனால்தான் இளையராஜா அவர்களோடு ஒப்பிடப்படுகிறார்  '  என்றார்.  மேலே கண்ட பாடல்களை கேட்கின்றபோது அது உண்மை என்பதை அறிகிறேன்.


                              பாஸ் கிடாரின் உபயோகம் பெரும்பாலும் எல்லா இசை அமைப்பாளார்களின் பாடல்களிலும் இருக்கும் .  ஆனால்  இளையராஜாவின் பாஸ் கிடார் தனித்துவம் மிக்கது.  கூர்ந்து கேட்கும்போது நம்மை குதூகலத்தில் ஆழ்த்தும் . ஒரு ஆனந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அவர் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாஸ் கிடாரின் பங்களிப்பை அதன் நாதத்தை  எத்தனை பேர் கவனித்திருக்கப் போகிறார்கள்?  உண்மையான இசைக் கலைஞர்கள் அதன் மகத்துவத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அதில் ஒருவர் விக்கி என்ற இசைக் கலைஞர் . ' சொல்வனம் ' என்ற இணைய இதழில் ' பாஸ் கிடார் தில்லானா ' என்ற தலைப்பில் இளையராஜா பாஸ் கிடாரை  எந்தப் பாடல்களில் எல்லாம் பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார் என்பதையும் அதற்கு உடனுழைத்த இசைக் கலைஞர்கள்  பற்றிய விபரத்தையும் தன் இனிய இசை அனுபவங்களோடு அழகாக பரிமாறியிருக்கிறார்.  கீழ்க் கண்ட பதிவில் அதை பார்த்தீர்கள் என்றால் பாஸ் கிடார் இசையை சுகித்துச் செல்லும் இனிய  அனுபவம் கிட்டும். 

           
                                http://solvanam.com/?p=23134




..............................தொடர்வேன் .................................



                 




Wednesday, 27 May 2015

இசை ராட்சஷன் - 10 ( The Musical Legend )





                                             

                                           

                          ' எனக்கு இசை தெரியவில்லை என்று இளையராஜா கூறுகிறாரே?' என்ற ஒரு வாசகனின் கேள்விக்கு,   ' அறிவாகிய மாபெரும் கடலின் கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன் நான் என்றார் விஞ்ஞானிகளுக்கெல்லாம்  விஞ்ஞானியான  ஐசக்  நியூட்டன் . போலவே இளையராஜா மாதிரியான ஞானிகளுக்கே உரித்தான தன்னடக்கம் இது .
அவரது இசையைக்  கேட்டு ரசிக்காத தமிழனே உலகில் இல்லை என்பதுதான் உண்மை. '  என்பது ஒரு வார பத்திரிகையில் கொடுக்கப்பட்ட பதில்.

                       
                         எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச்சுவடிலும் சுவடுகள்  பதிக்கும் பாதைகளின் பயணங்களிலும்  கணக்கற்ற பாடங்கள் இருக்கும் . அந்தப் பாடங்களைப் படித்துக் கொண்டே இசைப் பயணம் தொடங்கி நம்மையெல்லாம் இன்ப உலாவிற்கு அழைத்துச் சென்றவர் இளையராஜா .
தொழில் நுட்பங்களும்  மென் பொருட்களும் மலிந்து பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்  யார் வேண்டுமென்றாலும் இசை அமைக்கலாம் . ஆனால் ஆன்மாவை  ஊடுருவும் இசையை உருவாக்க ,  வெறும் கருவிகளை விட ஆத்மார்த்தமான  ஈடுபாடு வேண்டும் . அது எந்த இசை அமைப்பாளரிடம் உளதோ அவரே சிறந்த இசை அமைப்பாளர் . அந்த வகையில் இந்தியாவில் பல இசை அமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என்பதை எந்த இசைக் கலைஞரும் ஏற்றுக் கொள்வர்.

                         
                          இசைக் கருவிகளிலும் மேனாட்டு இசை அறிவிலும் கர்னாடக இசையிலும் தேர்ச்சி பெற்ற பிறகே இளையராஜா அவர்கள் இசை உலகத்தில் புகுந்து தன் இசை ஆற்றலை ஊற்று போல ஓடச் செய்தார் . அந்தத் தீரா நதியில் முங்கிக் குளித்து குடித்து தேனுண்ட வண்டாய்  மயங்கிக் கிடந்த நாட்களை மறந்து போக முடியுமா!? திகட்டாத அமிர்தமாய் தேனோடையாய் பாய்ந்த இசை அமுதை அள்ளிப் பருகிய காலத்தை கடந்தும்தான் போக முடியுமா!?
   
                   
                        1979 இல் இளையராஜா அளித்த இசை விருந்து  இப்போதும்  என் நினைவுக் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டே இருக்கிறது.

                             
                   

No.
Film Name
# Songs
1.
Aaril irunthu arubathu varai
3
1979
2.
Agal vilakku
4
1979
3.
Amma evarikaina amma - Telugu
6
1979
4.
Anbe sangeethaa
4
1979
5.
Annai or aalayam
7
1979
6.
Azhage unnai aarathikkiren
7
1979
7.
Chakkalaththi
6
1979
8.
Dharma yuththam
4
1979
9.
Erra gulaabeelu - Telugu
2
1979
10.
Kadavul amaiththa medai
6
1979
11.
Kalyaana raaman
5
1979
12.
Kavari maan
7
1979
13.
Lakshmi
4
1979
14.
Mugaththil mugam paarkkalaam
3
1979
15.
Muthal iravu
5
1979
16.
Naan vaazhavaippen
5
1979
17.
Nallathoru kudumbam
6
1979
18.
Niram maaratha pookkal
5
1979
19.
Nuvve naa srimathi - Telugu
5
1979
20.
O inti katha - Telugu
3
1979
21.
Pagalil oru iravu
5
1979
22.
Pancha bhoothalu - Telugu
5
1979
23.
Pattaakkaththi bairavan
7
1979
24.
Ponnu oorukku puthusu
6
1979
25.
Poonthalir
5
1979
26.
Priya - Kannada
5
1979
27.
Puthiya vaarppukkal
4
1979
28.
Rosaappoo ravikkaikaari
4
1979
29.
Uthirip pookkal
6
1979
30.
Vetrikku oruvan
4
1979
31.
Yugandhar - Telugu
5
1979





                               ' ஆறிலிருந்து அறுபது வரை ' என்ற திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் தனி.  'ரஜினி படம் ' என்ற சந்தோசத்துடன்  'பைட்,  ஸ்டைல், சேசிங்' என்று பின்னி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன்   சென்று பார்த்தால் உள்ளே உட்கார வைத்து அழ வைத்துவிட்டார்கள் .  அந்த சமயத்தில் பாட்டை மட்டுமே ரசித்தேன் ; படம் ரசிக்கவில்லை. காலம் செல்லத்தான் ரஜினிக்கு அது ஒரு நல்ல திரைப்படம் , அவருடைய குணச்சித்திர நடிப்பாற்றலை வெளிக்கொணர்ந்த முக்கியமான திரைப்படம் என்பதை புரிந்து கொண்டேன் .


                                         

                            படத்தில் முதல் பாடல் ' ஆண்  பிள்ளை என்றாலும் ...சாண் பிள்ளைதானன்றோ ...' என்று  சசிரேகாவும் ஷைலஜாவும் இணைந்து  பாடியிருப்பர் .  படத்தின் பாடல்கள் அனைத்தும் பஞ்சு அருணாச்சலம் . இந்தப் பாடலில் எளிமையான வார்த்தைகளில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் குடும்பப் பொறுப்பையும்  சிறு வயதிலேயே சுமக்கும் மூத்த குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும்படி எழுதியிருப்பார்.  பாடலுக்குத்  தகுந்த இனிமையான இசை.  ' பரிதாபம் அந்தோ பரிதாபம் ' என்ற வார்த்தைகளுக்கு அழுத்தமாக  கொடுக்கப்பட்டிருக்கும் மெலடி சட்டென என்னை நெகிழ வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன் .  தந்தையை இழந்த சிறுவன் ஒருவன் தன் அம்மா தம்பி தங்கைகளை காப்பாற்ற ' குரங்கு பெடல் ' போட்டபடி சைக்கிள் ஓட்டி உழைத்து சம்பாதிக்கும் காட்சியை பார்த்தவுடன் என்னைக் கொண்டு கற்பனை செய்து பார்த்து கண் கலங்கிய ஞாபகம் இன்னும் மனசுக்குள் உட்கார்ந்து இருக்கிறது. காட்சியா நம்மை கலங்கடித்திருக்கும் என்று பின்னர் யோசித்தபோது,  இக்காட்சியின் பின்னணியில் படைக்கப்பட்ட இசையே காரணமென்பதை அதன் பிறகு அந்தப் பாடலை கேட்கும்போது புரிந்து கொண்டேன்.  இசைதான் என்னை அழ வைத்திருக்க முடியும் .
இளையராஜாவிற்கே அந்தப் பெருமை.


                                அதே படத்தில் அடுத்த பாடல் 'கண்மணியே ...காதல் என்பது கற்பனையோ..' என்ற  அன்றும் இன்றும் என்றும்  எவர் கிரீன் பாடல். எப்போது கேட்டாலும்  எங்கு கேட்டாலும் அதற்குக் காதைக் கொடுக்காமல் என்னால் இருக்கவே முடியாது . பாட்டைக் கேட்டு பரவசமடையாமல் போனதே கிடையாது. எஸ்.பி.பி யும் ஜானகியும் சேர்ந்து கனிந்துருகி பாடியிருப்பார்கள். நம்மையும் உருக வைத்துவிடுவார்கள் . மூச்சு விடாமல் பாடப்பட்ட நீண்ட பல்லவி  உள்ள  பாடல்  இது   என்பதை    இளையராஜாவே  சொல்லியிருக்கிறார்.  ஆனால் மூச்சு விடாமல் பாடப்பட்ட பாட்டாக ராஜாவின்  வேறொரு பாடலைச் சொல்லுவார்கள். மேலும்  எஸ்.பி.பி அவர்கள் மூச்சு விடாமல் பாடப்பட்டதாக தொழில்நுட்பம் கொண்டு காட்டப்பட்டது என்பார்.  மேனாட்டு இசைக் கலப்போடு மோகன ராகத்தில் பின்னப்பட்ட இதயம் தொடும் அழகான மெலடி.அந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.  என்னவிதமான கருவி இசைத்து ஆரம்பிக்கிறார் என்பதை சொல்ல முடியாத அளவிற்கு கிடாரோடு வேறு இசைக்கருவிகள் கலந்து டிரம்சில் ஜாஸ் இசையோடு பல்லவி ஆரம்பிக்கும் அழகே தனி.  கடைசி வரை ஜாஸ் இசையோடு பாடல் செல்லப் போகிறது என்று பார்த்தால் இரண்டாம் இடையிசையில் கொட்டு மேளத்தோடு நாதஸ்வரம் கலந்து கொடுத்து மீண்டும் மேற்கத்திய பாணியில் ஜானகியின் ஹம்மிங்கோடு இசையை தொடரும் அற்புதத்தை நான் அப்போதே ரசித்தேன்.  என் இசை நண்பர்களோடு சேர்ந்து அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றிப்  பேசிப் பேசி மாய்ந்து போயிருக்கிறேன் . அது  ராஜாவிற்கே உரிய படைப்பாற்றல்.

                                             
                           முதல் இடையிசையில் ஜானகியின் குரலில் ஹம்மிங் இரு வேறு  மெலடிகளாக பின்னிப் பிணைந்து வரும் . அது இரு வேறு கவிதை ஒரே நேரத்தில் சொல்லப்படுவது போல் உள்ள கவுண்டர் பாய்ன்ட் அழகு . அன்று கேட்டதை விட இன்று கேட்கும்போது இன்னும் பாடலுக்கு மெருகேறிய தோற்றம் ஏன் மனதுக்குள் தோன்றவேண்டும் ?  இப்போதுள்ள இசையமைப்பாளர்களால் அது சாத்தியமாகிறது. அவர்களின் இசையை கேட்டுவிட்டு மீண்டும் இது போன்ற இளையராஜாவின் பாடல்களுக்கு வந்தால்  அந்த அற்புதம் மனதுக்குள் நிகழ்வதை உணர முடிகிறது.  இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் இளையராஜாவை எனக்கு ஞாபகம் மூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
                                                       
                                                                                                                       
                                ' மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா ..'  என்று  சரணத்தில் மேல் ஸ்தாயில் எஸ்.பி.பி பாட அவருடைய குரலிலேயே, 'லாலல .. லாலலா ..' என்று ஹம்மிங் கீழ் ஸ்தாயில் சேர என்ன சுகானுபவம் !
போலவே ஜானகி பாடும்  வரிகளுக்கும் அதே மாதிரியான கலவை கொடுக்கப்பட்டிருக்கும் . ஏதோ பற்பல வண்ணங்கள் தெளித்து  புது ஓவியம் உருவாவதைப் போல் பாடல் படைக்கப்பட்ட அழகை இன்னும் விரித்துச் சொல்ல வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படுகிறது.


                                 '   வாழ்க்கையே வேஷம் ...இதில் பாசமென்ன நேசமென்ன..' என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். குடும்பத்திற்காக வாழ்ந்து கெட்டவனின்  தத்துவமாக பாடல் வரிகளில் சோகத்தை சுகமாக சேர்த்து இளையராஜா வழங்கிய பாடல்.  வித்தியாசமாய்  கிடாரில் சோகமாய் ஆரம்பித்து வயலின், குழல் போன்றவற்றை இழையோட விட்டு பல்லவி  ஆரம்பிக்கும் . இடையில் குழந்தையை தாலாட்டும் ஒரு பெண்ணின் குரலில் அந்த ஆரிராரோ  சோகத்திற்கு கூடுதலாக சுகம் சேர்த்திருக்கும் . இடையிசையில் கிடார் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு புதுமையான ஒன்று. பெரும்பாலும் வயலின், வீணை , குழல் போன்ற கருவிகளே அதிகமாக சோகத்திற்கு பயன்படுத்துவார்கள்.  கிடாரில் சோக கீதம் ரசனையானது.  அவரின் அபார இசைத் திறமைக்கு இது கூட சான்றே!

                                                   
                                              எழவு வீட்டில் 
                                              கவலையான பாவனையில்
                                              உம்மென்று அமர்ந்திருக்கையில்
                                              தூரத்திலிருந்து
                                              காற்றில் மிதந்து வரும்
                                              இளையராஜாவின்
                                              துள்ளலிசைப் பாடலைக் கேட்டு
                                              உதடுகள் பழக்கதோஷத்தில்
                                              முணுமுணுத்து விடாதிருக்க
                                              மேல் வரிசை பற்களால்
                                              கீழ் உதட்டை இறுகக் கடித்தபடியே
                                               இருக்க வேண்டியதாகிவிட்டது
                                               அந்தப் பாடல் காற்றில் கரைந்து
                                               கடந்து செல்லும்வரை!


                         
                                     மேற்கண்ட கவிதை விகடனில் ' சொல்வனம் ' என்ற பகுதியில் ஒரு பொதுஜனத்தின் கவிதை .  அதற்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு கூட  ' ஏய் ...பாடல் ஒன்று ' என்ற இளையராஜாவின் பாடலிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது.  நம் வாழ்வில் இது போன்ற கணங்களும் அனுபவங்களும் யதார்த்தமாய் நிகழ்ந்திருக்கலாம் .  ஒரு சாவு வீட்டில் அமர்ந்திருக்கும்போது காற்றில் மிதந்து வரும் இளையராஜாவின் பாடல் எந்த அளவிற்கு பாதித்திருக்க இப்படி தன் உணர்வினை கவிதையாகக் கொட்டியிருப்பார்.  யதார்த்த வாழ்க்கையில் மனிதனுக்குள் ஏற்படும் உள்ளார்ந்த உணர்வுகளை இசையினால் வெளிக்கொணரும் ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு  என்பதை தன் ஒவ்வொரு பாட்டிலும் நிரூபித்திருப்பார். ஒரு கதாபாத்திரம் குறிப்பிட்ட சூழலுக்கு வெளிப்படுத்தும் உணர்வினை தானே வாழ்ந்து பார்த்தது போல் அனுபவித்து இசையாக படைப்பது நமது உணர்வினையும் உயிரையும் ஊடுருவத்தானே  செய்யும் .
மனசு நோகும்போது, வேண்டாத எண்ணங்களால்  வேகும்போது  ஏற்படும் மனச்சலிப்பை  விரட்டி, மருந்து தடவி, பாடலினால் நம் உணர்வினைக் கூட்டி, இசையின் இனிமையால் கற்பனையில் எங்கோ கூட்டிச் செல்லும் பாதையைக் காட்டி , புதுப் புது தரிசனங்களை  உருவாக்கும் வல்லமை இசைஞானியின் பாடலுக்கும் இடையிசைக்கும் உண்டென்பது  அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.


                                அது போலவே    எல்லாவிதமான உணர்வுகளுக்கும் நடைமுறைகளுக்கும்  இளையராஜா பாடல் அமைத்திருக்கிறார் . சோகம், சுகம் , ஏக்கம், வெட்கம், துக்கம், நேசம், பாசம், பரிவு, காதல், மோதல், நக்கல், நய்யாண்டி, வீரம்,தீரம், தாலாட்டு , பாராட்டு, நீராட்டு விளையாட்டு,  இன்பம், துன்பம், தாய்மை, சகோதரத்துவம் , ஒப்பாரி, விரகம், கரகம் , ஒயிலாட்டம் , மயிலாட்டம் , சிலம்பாட்டம், தப்பாட்டம், குத்தாட்டம் ,  நட்பு, பயம், மிரட்டல், சவால், பக்தி, முக்தி, உல்லாசம் , உற்சாகம்  போன்ற விசயங்களுக்கும் சொல்ல மறந்த இன்னும் பல விசயங்களுக்கும் இளையராஜா படைத்திருக்கும் பாடல்கள் எண்ணிலடங்காதவை.  மக்களின்  மனசைப்  படித்து  இசையாய்  படைத்த இளையராஜா,  காலங்காலமாய் மக்களிடையே ஊறிக் கிடந்த இசை கேட்டு,  அதை தன்  கற்பனையையும் ஆற்றலையும் திறமையையும் கலந்து கட்டிக் கொடுத்ததை,  தமிழக மக்கள் தாங்கள் கேட்டுப் பழகிய நெருக்கமான இசையாக பார்த்தார்கள்.  வரவேற்றார்கள்; கொண்டாடினார்கள்.  மக்களின் இசை நாயகன் என்று சொன்னால் அது அவருக்குப்  பொருந்தும்.

                                     
                                       79 இல் இளையராஜா இசையமைத்த படங்கள் ஏராளம் . அதில் அமைந்த அற்புதமான பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை. ' அகல் விளக்கு  ' என்றொரு படத்தில்  ' ஏதோ நினைவுகள் ...கனவுகள் மனதிலே மலருதே ...' என்ற பாடல் நிச்சயம் ஒவ்வொரு இசை ரசிகனும் சந்தித்த ஏகாந்த ராகமாகத்தான் இருக்கும். என் மாமா மகன் ஒருவர் ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி குறிப்பிட்டுச் சொன்ன பிறகே நானும் உற்றுக் கவனித்தேன் . அப்போதே அந்தப் பாடலின் ராகம் என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது. ஜேசுதாசும் சைலஜாவும் இணைந்து பாடும் அந்தக் காதல் காவியப் பாடலில்தான் என்னவொரு ரம்மியம்.


                                             'ம்...ம்ம்....' என்ற ஜேசுதாசின் ஹம்மிங்கோடு பாடல் ஆரம்பிக்க பாஸ் கிடார் , செல்லோ , வயலின் கலந்து இசைக் கோர்வை சேர சைலஜா ஹம்மிங்கோடு நீட்டி ஆலாபனை செய்ய பல்லவி தொடரும் அழகு பேரானந்தம் தரக் கூடியது. முதல் இடையிசையில் எல்லா கருவிகளும் கலந்து ஒன்றோடொன்று மேவி தாலாட்டிச் செல்லும் . கிடார் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் . இரண்டாம் இடையிசையில் கிடாரோடு வயலின்களின் கவிதைத் தொகுப்பு மழைச்சாரல் போல் பொழியப்பட்டிருக்கும்.  பாடல் முழுமையும் மெளனமாக கேட்டு முடித்த பின்னரும் காதுகளில் அந்த இனிய கானத்தின் ரீங்காரம் இம்சை செய்வதை உணர முடியும் .

                                                     
                                          அந்தப் படத்தின் மற்ற பாடல்கள் பிரபலமாகவில்லை . ரேடியோக்களிலும் கேட்ட ஞாபகம் இல்லை . இப்போது கேட்டால் இசையின் தரத்தில் குறைவுமில்லை. ஏனோ மக்களைச் சேரவில்லை.ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியிருக்கும் இசைஞானியின்  பாடல்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் மக்களால் மிகப் பெரும் வரவேற்பு பெற்றவை . சில நூறு பாடல்கள் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் இளையராஜா ரசிகர்கள் எல்லா பாடல்களையும் கேட்டு ரசித்தவர்களாகவே இருப்பார்கள்.  அதில் நானும் ஒருவன்.



.......................தொடர்வேன்...............................




                                         
                                         
                                   



                              



படத்தில் 
படத்தில் முதல